Saturday, March 1, 2025

P.357 - பைஞ்ஞீலி - புயலார் கண்டனை

2016-09-30

P.357 - பைஞ்ஞீலி

---------------------------------

(வஞ்சித்துறை - மா கூவிளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.90.1 - "அரனை உள்குவீர்")


1)

புயலார் கண்டனை

வயலார் ஞீலியில்

அயரா தேத்தினால்

துயர்போய் இன்பமே.


புயல் ஆர் கண்டனை - மேகம் போன்ற நீலகண்டம் உடையவனை;

வயல் ஆர் ஞீலியில் - வயல்கள் நிறைந்த திருப்பைஞ்ஞீலியில்; (ஞீலி - திருப்பைஞ்ஞீலி); (அப்பர் தேவாரம் - 5.41.10 - "எம்மான் இடம் இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே");

அயராது ஏத்தினால் - மறவாது தொழுதால்; (அயர்தல் - மறத்தல்; தளர்தல்);

துயர் போய் இன்பமே - துன்பங்கள் நீங்கி இன்பம் வந்தடையும்;


2)

மழையார் கண்டனே

அழகார் ஞீலியிற்

குழகா என்றடி

தொழலே இன்பமே.


மழை ஆர் கண்டனே - மேகம் போன்ற நீலகண்டம் உடையவனே;

அழகு ஆர் ஞீலியில் குழகா - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும் இளைஞனே; (குழகன் - இளைஞன்; அழகன்);

என்று அடி தொழலே இன்பமே - என்று திருவடியை வணங்குவதே இன்பம்; (சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே");


3)

மையார் கண்டனே

செய்யார் ஞீலியில்

ஐயா என்பவர்

எய்யார் என்றுமே.


மை ஆர் கண்டனே - நீலகண்டனே;

செய் ஆர் ஞீலியில் ஐயா என்பவர் - வயல் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் உறையும் தலைவனே என்று வாழ்த்துபவர்கள்; (செய் - வயல்);

எய்யார் என்றுமே - எந்நாளும் வருத்தம் அடையார்; (எய்த்தல் - இளைத்தல்; குறைவுறுதல்);


4)

செவியோர் தோடனே

கவினார் ஞீலியிற்

சிவனே என்பவர்

தவியார் மண்ணிலே.


செவி ஓர் தோடனே - ஒரு காதில் தோடு அணிந்தவனே - அர்த்தநாரீஸ்வரனே; (சம்பந்தர் தேவாரம் - 3.78.4 - "உடல் செய்யர் செவியில் தோடர்");

கவின் ஆர் ஞீலியில் சிவனே என்பவர் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும் சிவனே என்று வாழ்த்துபவர்கள்; (கவின் - அழகு);

தவியார் மண்ணிலே - இவ்வுலகில் துன்புறமாட்டார்கள்;


5)

நீரார் வேணியான்

ஏரார் ஞீலியான்

சீரே செப்பினால்

தீரா இன்பமே.


நீர் ஆர் வேணியான் - கங்கைச்சடையான்; (வேணி - சடை);

ஏர் ஆர் ஞீலியான் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறைபவன்; (ஏர் - அழகு);

சீரே செப்பினால் - புகழையே பாடினால்;

தீரா இன்பமே - வற்றாத இன்பமே;


6)

எழுதா ஓத்தினார்

உழவார் ஞீலியார்

மழுவார் தாளிணை

தொழுவார் தொண்டரே.


எழுதா ஓத்தினார் - எழுதா மறைகளை ஓதியவர்; எழுதா மறைகளின் பொருள் ஆனவர்; (ஓத்து - வேதம்);

உழவு ஆர் ஞீலியார் - வேளாண்மை நிறைந்த திருப்பைஞ்ஞீலியில் உறைபவர்;

மழுவார் - மழுவை ஏந்தியவர்;

தாளிணை தொழுவார் தொண்டரே - அப்பெருமானாரின் இரு-திருவடிகளைத் தொழுபவர்கள் தொண்டர்கள்;


7)

மானை ஏந்திய

கோனை ஞீலியெம்

மானை வாழ்த்தினார்

வானை ஆள்வரே.


மானை ஏந்திய கோனை - கையில் மானை ஏந்திய தலைவனை;

ஞீலி எம்மானை வாழ்த்தினார் - திருப்பைஞ்ஞீலியில் உறையும் எம்பெருமானை வாழ்த்தியவர்கள்;

வானை ஆள்வரே - மறுமையில் வானுலகை ஆள்வார்கள்;


8)

பத்துச் சென்னியான்

கத்த ஊன்றினார்

நித்தர் ஞீலியார்

பத்தர் வாழ்வரே.


பத்துச்-சென்னியான் கத்த ஊன்றினார் - பத்துத்-தலைகள் உடைய இராவணன் அலறும்படி விரலை மலைமேல் ஊன்றியவர்;

நித்தர் ஞீலியார் - அழிவற்றவர், திருப்பைஞ்ஞீலியில் உறைபவர்; (நித்தர் - என்றும் இருக்கும் சிவபெருமானார்);

பத்தர் வாழ்வரே - அப்பெருமானாரின் அடியவர்கள் இன்புற்று வாழ்வார்கள்;


9)

அரிவே தன்தொழும்

எரியே ஞீலியாய்

பெரியாய் என்பவர்

பிரியார் இன்பமே.


அரி வேதன் தொழும் எரியே - திருமாலும் பிரமனும் போற்றும் ஜோதியே;

ஞீலியாய் - திருப்பைஞ்ஞீலியில் உறைபவனே;

பெரியாய் என்பவர் பிரியார் இன்பமே - மகாதேவனே என்று வாழ்த்தும் அன்பர்கள் என்றும் இன்பத்தை நீங்கமாட்டார்கள்; (பெரியாய் - பெரியவனே);


10)

பொய்யர் சொல்விடும்

ஐயன் ஞீலியிற்

செய்யன் தாள்தொழல்

உய்யும் மார்க்கமே.


பொய்யர் சொல் விடும் - பொய்யர்களின் பேச்சை மதியாது நீங்குங்கள்;

ஐயன் ஞீலியிற் செய்யன் - தலைவன், திருப்பைஞ்ஞீலியில் உறையும் செம்மேனியன்; (செய் - சிவப்பு);

தாள் தொழல் உய்யும் மார்க்கமே - அப்பெருமானின் திருவடிகளை வணங்குவதே உய்தி பெறும் வழி ஆகும்;


11)

மணியார் கண்டனை

அணியார் ஞீலியில்

பணியார் மார்பனைப்

பணிவார் நல்லரே.


மணி ஆர் கண்டனை - நீலமணி போன்ற கண்டம் உடையவனை;

அணி ஆர் ஞீலியில் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும்;

பணி ஆர் மார்பனைப் - மார்பில் பாம்பை (மாலையாக) அணிந்தவனை; (பணி - நாகம்);

பணிவார் நல்லரே - எப்பெருமானைப் பணிந்து போற்றும் அன்பர்கள் நல்லவர்கள் (புண்ணியச் செல்வர்கள்) ஆவர்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.41.2 - "பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment