2016-10-22
P.359 - பொது
---------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தானா தானதனா தன தானன தானதனா)
(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய்")
(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே")
1)
ஓயா துன்பெயரே உரை அன்புடை மாணியவர்
மாயா வாழ்வுபெற வரம் ஈந்த பரம்பரனே
தூயா செஞ்சடைமேல் துணி வெண்மதி வைத்தருளும்
நேயா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
ஓயாது உன் பெயரே உரை அன்புடை மாணி அவர் - எப்போதும் உன் திருநாமத்தையே சொல்லும் மார்க்கண்டேயர்;
மாயா வாழ்வுபெற வரம் ஈந்த பரம்பரனே - சிரஞ்சீவியாக வாழ வரம் தந்த பெருமானே; (மாயா - இறவாத);
தூயா - தூயவனே;
செஞ்சடைமேல் துணி வெண்மதி வைத்தருளும் நேயா - சிவந்த சடைமேல் வெண்திங்கள்-துண்டத்தை அணிந்த அன்பனே; (துணி - துண்டம்); (நே - நேயம் - அன்பு);
நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
2)
இமையோர் தாம்பணிய எரி நஞ்சினை உண்டவனே
உமையோர் கூறுடையாய் ஒரு வெள்விடை ஊர்தியினாய்
அமரா அந்தகனை அயில் வேல்கொடு செற்றவனே
நிமலா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
இமையோர் - தேவர்கள்;
எரி நஞ்சினை - சுட்டெரித்த விடத்தை;
ஒரு வெள்விடை ஊர்தியினாய் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவனே;
அமரா - இறவாதவனே; (சுந்தரர் தேவாரம் - 7.3.6 - "ஆலந்நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே");
அந்தகனை அயில் வேல்கொடு செற்றவனே - அந்தகாசுரனைச் கூரிய சூலத்தால் குத்தி அழித்தவனே; (அயில் - கூர்மை);
நிமலா - நிமலனே; தூயவனே;
3)
முத்தா முக்கணனே முதல் வாவென வாழ்த்தடியார்
சித்தா செம்பெருமான் திரு நீறணி மேனியினாய்
அத்தா பாம்புதனை அரை நாணென ஆர்த்தவனே
நித்தா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் - சிவன்;
முதல்வன் - தலைவன்; ஆதி;
அடியார் சித்தன் - அடியவர்களது சித்தத்தில் இருப்பவன்;
செம்பெருமான் - சிவந்த நிறத்தையுடைய பெருமான். (திருவாசகம் - திருத்தசாங்கம் - "ஆரூரன் செம்பெருமான்");
அத்தன் - தந்தை;
ஆர்த்தல் - கட்டுதல்;
நித்தன் - என்றும் அழியாது இருப்பவன்;
4)
சூலா போற்றிசெய்வார் துயர் ஆயின தீர்த்தருளும்
சீலா ஈரமிலாச் செறு காலனை அன்றுதைத்த
காலா கண்ணுதலே கடு நஞ்சினை உண்மிடற்றில்
நீலா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
சூலா - சூலனே;
போற்றிசெய்வார் துயர் ஆயின தீர்த்தருளும் சீலா - வழிபடுபவர்களது துயர்களைத் தீர்க்கும் சீலனே;
ஈரம் இலாச் செறு காலனை அன்று உதைத்த காலா - இரக்கமற்ற, கொலைத்தொழில் செய்யும், நமனைக் காலால் உதைத்தவனே; காலகாலனே;
கண்ணுதலே - நெற்றிக்கண்ணா;
கடு நஞ்சினை உண் மிடற்றில் நீலா - கொடிய விடத்தை உண்ட கண்டத்தில் நீலநிறம் உடையவனே; (கடுமை - கொடுமை); (அப்பர் தேவாரம் - 5.72.4 - "ஆலநஞ்சு உண்ட கண்டத்தமர் நீலன்");
5)
காற்றோ டொள்ளெரிமால் கணை ஆக வரைச்சிலையால்
மாற்றார் மாமதில்கள் வளர் தீப்புக எய்தவனே
ஏற்றாய் வெண்மழுவாள் இலை மூன்றுடை வேலுடையாய்
நீற்றாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
காற்றோடு ஒள்-எரி மால் கணை ஆக, வரைச்-சிலையால் மாற்றார் மா-மதில்கள் வளர் தீப் புக எய்தவனே - வாயு, ஒளியுடைய அக்னி, விஷ்ணு என்ற மூவரும் சேர்ந்து ஓர் அஸ்திரம் ஆக, மேருமலையை வில்லாக ஏந்திப், பகைவர்களது முப்புரங்களும் தீயில் புக்கு அழியும்படி எய்தவனே; (ஒள் - ஒளியுடைய); (வரை - மலை); (சிலை - வில்); (மாற்றார் - பகைவர்);
ஏற்றாய் - இடபவாகனனே;
வெண்மழுவாள் இலை மூன்றுடை வேல் உடையாய் - வெண்மையான மழுவாளையும் திரிசூலத்தையும் ஏந்தியவனே;
நீற்றாய் - திருநீறு பூசியவனே;
நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
6)
பதியே பாய்விடையாய் படர் புன்சடை மேலரவே
மதியே வானதியே மல ரேபுனை பிஞ்ஞகனே
புதியாய் தொன்மையனே புகல் என்றடை வார்க்குலவா
நிதியே நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
பதியே - தலைவனே;
பாய்விடையாய் - பாயும் இடபத்தை வாகனமாக உடையவனே;
படர் புன்சடைமேல் அரவே மதியே வானதியே மலரே புனை பிஞ்ஞகனே - படர்ந்த செஞ்சடைமேல் பாம்பையும் திங்களையும் கங்கையையும் மலரையும் அணிகின்ற தலைக்கோலம் உடையவனே; (வானதி - வான் நதி - கங்கை); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (ஏகாரம் - எண்ணேகாரம்); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.6 - "வானே நிலனே பிறவே அறிவரியான்");
புதியாய் தொன்மையனே - எல்லாவற்றினும் புதியவனே, எல்லாவற்றினும் பழையவனே; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.9 - "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"); (திருவிளையாடற்புராணம் - "பழையாய் புதியாய் சரணம்");
புகல் என்று அடைவார்க்கு உலவா நிதியே - உன்னைச் சரணடைந்தவர்களுக்கு என்றும் அழியாத நிதி ஆனவனே;
நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
7)
ஊரூர் உண்பலிதேர் ஒரு வாஉமை யாள்கணவா
காரார் வெற்புநிகர் கரி தன்னை உரித்தவனே
ஏரார் கொன்றையினாய் இள மாமதி சேர்சடையுள்
நீரா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
ஊர்-ஊர் உண்பலி தேர் ஒருவா - பல ஊர்களில் பிச்சை ஏற்கும் ஒப்பற்றவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.41.1 - "கருவார் கச்சித் திருவேகம்பத்து ஒருவா");
உமையாள் கணவா - பார்வதி மணவாளனே;
கார் ஆர் வெற்பு நிகர் கரி-தன்னை உரித்தவனே - கருமை பொருந்திய மலை போன்ற யானையின் தோலை உரித்தவனே;
ஏர் ஆர் கொன்றையினாய் - அழகிய கொன்றைமலரை அணிந்தவனே; (ஏர் - அழகு);
இள மாமதி சேர் சடையுள் நீரா - அழகிய இளந்திங்களை அணிந்த சடையுள் கங்கையை உடையவனே; (அப்பர் தேவாரம் - 4.64.5 - "சடையுள் நீரர்");
நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
8)
ஓரா வாளரக்கன் உயர் வெற்பை எடுக்கலுறச்
சீரார் தாள்விரலைச் சிறி தூன்றி நெரித்தவனே
தீரா நோய்மருந்தே சிவ னேவிரி செஞ்சடையுள்
நீரா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
ஓரா வாள்-அரக்கன் உயர் வெற்பை எடுக்கலுறச் - சிறிதும் எண்ணாமல், கொடிய அரக்கனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கியபொழுது; (ஓர்தல் - சிந்தித்தல்; ஆராய்தல்); (வாள் - கொடுமை);
சீர் ஆர் தாள்விரலைச் சிறிது ஊன்றி நெரித்தவனே - பெருமை மிக்க பாதத்து விரலைச் சற்றே ஊன்றி அவனை நசுக்கியவனே;
தீரா-நோய் மருந்தே சிவனே - தீராத நோயான பிறவிப்பிணிக்கு மருந்தே, சிவபெருமானே;
விரி செஞ்சடையுள் நீரா - விரிந்த சிவந்த சடையுள் கங்கையை உடையவனே;
நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
9)
பூண்டாய் பாம்புகளே பொலி சாந்தென மேனிமிசை
மாண்டார் வெண்பொடியே மகிழ் மாண்புடை மன்னவனே
ஆண்டான் யானெனுமால் அய னாரிடை அன்றழலாய்
நீண்டாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
பூண்டாய் பாம்புகளே - பாம்புகளை அணிந்தவனே;
பொலி சாந்து என மேனிமிசை மாண்டார் வெண்பொடியே மகிழ் மாண்புடை மன்னவனே - பொலிகின்ற சந்தனம் எனத் திருமேனிமேல் இறந்தவர் சாம்பலையே விரும்பிப் பூசும் பெருமை உடைய தலைவனே; (பொலிதல் - சிறத்தல்; விளங்குதல்); (சாந்து - சந்தனம்); (மாண்டார் - இறந்தவர்); (பொடி - சாம்பல்);
"ஆண்டான் யான்" எனும் மால்-அயனாரிடை அன்று அழலாய் நீண்டாய் - "நானே பரம்பொருள்" என்று வாதிட்ட பிரமன் விஷ்ணு இவர்களிடையே அன்று பெருஞ்சோதியாகி உயர்ந்தவனே; (ஆண்டான் - ஆண்டவன்);
நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
10)
நன்றே நாடகிலா நய வஞ்சகர் கட்கிலனே
மன்றாக் கானகமே மகிழ் கூத்த சலந்தரனைக்
கொன்றாய் கும்பிடுவார் குறை நீக்கி அருந்துணையாய்
நின்றாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
நன்றே நாடகிலா நயவஞ்சகர்கட்கு இலனே - தாம் நல்லவற்றை விரும்பாதவர்கள் ஆகிப் பிறரையும் ஏமாற்றுகின்றவர்களுக்கு இல்லாதவனே (/ அருள் இல்லாதவனே); (நயவஞ்சகம் - இனிமைகாட்டி ஏமாற்றுகை); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");
மன்றாக் கானகமே மகிழ் கூத்த - சுடுகாட்டை ஆடுகின்ற அரங்காக விரும்பும் கூத்தனே;
சலந்தரனைக் கொன்றாய் - ஜலந்தராசுரனை அழித்தவனே;
கும்பிடுவார் குறை நீக்கி அருந்துணையாய் நின்றாய் - வழிபடும் பக்தர்களது குறைகளைத் தீர்த்து அவர்களுக்கு அரிய துணை ஆகி நிற்பவனே;
நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
11)
இறைவா ஐங்கணையான் எழில் ஆகம் எரித்தவனே
மறையார் நாவினனே மழு ஏந்திய கையினனே
பிறையார் சென்னியனே பெரி யாய்உல கங்களெலாம்
நிறைவாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.
இறைவா - இறைவனே;
ஐங்கணையான் எழில் ஆகம் எரித்தவனே - ஐந்து மலர்க்கணைகளை உடைய மன்மதனுடைய அழகிய உடலை எரித்துச் சாம்பல் ஆக்கியவனே; (ஆகம் - உடல்);
மறை ஆர் நாவினனே - திருநாவால் வேதத்தை ஓதுபவனே;
மழு ஏந்திய கையினனே - கையில் மழுவை ஏந்தியவனே;
பிறை ஆர் சென்னியனே - திருமுடிமேல் சந்திரனைச் சூடியவனே;
பெரியாய் - பெரியவனே;
உலகங்கள் எலாம் நிறைவாய் - எல்லா உலகங்களிலும் வியாபித்து இருப்பவனே; (நிறைதல் - வியாபித்தல்);
நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:
சந்த விருத்தம் - "தானா தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.
இச்சந்தத்தைத் "தானா தானதனா தனதானன தானதனா" என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.
அடிகளின் முதற்சீர் - தானா - இது "தனனா" என்றும் வரலாம்;
அடிகளின் முதற்சீர் - நெடிலில் முடியும்;
"தானன" என்ற 4-ஆம் சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், 5-ஆம் சீர் "தனாதனனா" என்று அமைந்து அடியின் சந்தம் கெடாது வரும்.
(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து")
(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே")
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment