Friday, February 28, 2025

P.356 - வான்மியூர் - ஏகமாகி நின்றவன்

2016-09-24

P.356 - வான்மியூர்

---------------------------------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா - அரையடி)

(சம்பந்தர் தேவாரம் - 3.52.1 - "வீடலால வாயிலாய்")


1)

ஏக மாகி நின்றவன் ஏல(ம்) நாறும் ஓதியாள்

பாக மாய பண்பினான் பாலு(ம்) நெய்யும் ஆடினான்

வாக னங்கள் மல்கிய வான்மி யூரில் மேயவன்

நாக நாண னைத்தொழ நன்மை நம்மை நண்ணுமே.


ஏகம் ஆகி நின்றவன் - ஒருவனாகியவன்;

ஏலம் நாறும் ஓதியாள் பாகம் ஆய பண்பினான் - மயிர்ச்சாந்து மணம் கமழும் கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (ஓதி - பெண்களின் கூந்தல்);

பாலும் நெய்யும் ஆடினான் - பாலாலும் நெய்யாலும் அபிஷேகம் செய்யப்படுபவன்;

வாகனங்கள் மல்கிய வான்மியூரில் மேயவன் - வாகனங்கள் நிறைந்த திருவான்மியூரில் உறைகின்றவன்; (மல்குதல் - அதிகமாதல்; நிறைதல்);

நாக நாணனைத் தொழ நன்மை நம்மை நண்ணுமே - பாம்பை அரைநாணாக (& மேருவில்லில் நாணாக) உடைய சிவபெருமானைத் தொழுதால், நம்மை நன்மைகள் வந்தடையும்; (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "பாம்பரை நாணனை");


2)

மானை ஏந்து கையனை மார்பில் நீறு பூசியைத்

தேனெய் ஆடும் ஈசனைச் சேவ தேறு செல்வனை

வானை எட்டு கட்டடம் மல்கு வான்மி யூர்தனில்

கோனை நாளும் வாழ்த்தினால் குற்ற மற்ற இன்பமே.


நீறு பூசி - திருநீற்றைப் பூசியவன்;

தேனெய் ஆடும் - தேன் நெய் ஆடும் - தேனாலும் நெய்யாலும் அபிஷேகம் செய்யப்படுகின்ற;

சேவது ஏறு செல்வனை - இடபத்தை ஊர்தியாக உடைய செல்வனை; (சே - இடபம்);

வானை எட்டு கட்டடம் - வானளாவிய கட்டடங்கள்;

கோன் - தலைவன்;


3)

வேலை நஞ்சு கண்டுவான் வேண்டி நிற்க உண்டருள்

நீல கண்டன் எம்பிரான் நெற்றி மேலொர் கண்ணினான்

மாலை வான்நி றத்தினான் வான்மி யூரில் மேயவன்

சூல பாணி தாள்தொழும் தொண்டர் துன்பம் நீங்குமே.


வேலை-நஞ்சு - கடல்-விடம்;

வான் - தேவர்கள்;

மாலை-வான் நிறத்தினான் - அந்திப்பொழுதில் விளங்கும் செவ்வானம் போன்ற நிறமுடையவன்;


4)

வெங்க ளிற்றைப் போரினில் வென்று தோலு ரித்தவன்

பொங்க ராவை மாலையாப் பூணு கின்ற மார்பினான்

வங்கம் ஆர்க டற்கரை வான்மி யூரில் மேயவன்

அங்க ணன்ப தந்தொழும் அன்பர் அல்லல் தீருமே.


வெங்களிற்றை - கொடிய யானையை;

பொங்கு அராவை மாலையாப் பூணுகின்ற மார்பினான் - சீறும் பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவன்;

வங்கம் ஆர் கடற்கரை - அலை மிகுந்த (& படகுகள் நிறைந்த) கடலின் கரையில்; (வங்கம் - அலை; படகு; மரக்கலம்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவபெருமான்;

பதம் - பாதம்; திருவடி;


5)

மண்டு காத லாலொரு மங்கை பங்கன் ஆயினான்

அண்டர் போற்றும் ஓரிறை அண்டி னார்க்கு நற்றுணை

வண்டி மல்கு வீதிசூழ் வான்மி யூரில் மேயவன்

தொண்டர் தங்கள் வாழ்வினில் துன்பம் என்ப தில்லையே.


மண்டு காதலால் ஒரு மங்கைபங்கன் ஆயினான் - மிகுந்த அன்பினால் தன் மேனியில் ஒரு பாதியை உமைக்குத் தந்தவன்; (மண்டுதல் - அதிகமாதல்; மிகுதல்);

அண்டர் போற்றும் ஓர் இறை - தேவர்கள் வணங்கும் ஒப்பற்ற தலைவன்; (அண்டர் - தேவர்); (ஒரு - ஒப்பற்ற);

அண்டினார்க்கு நற்றுணை - தன்னைச் சரண்-அடைந்தவர்களுக்கு நல்ல துணை; (அண்டுதல் - சரண்புகுதல்; ஆசிரயித்தல்);

வண்டி மல்கு வீதி சூழ் வான்மியூரில் மேயவன் - வாகனங்கள் நிறைந்த வீதிகள் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்றவன்;

தொண்டர்-தங்கள் வாழ்வினில் துன்பம் என்பது இல்லையே - அப்பெருமானுக்குத் திருத்தொண்டு செய்பவர்களது வாழ்க்கையில் துன்பமே இல்லை;


6)

ஆட வல்ல நாயகன் அங்கொர் ஓட்டில் உண்பலி

நாட வல்ல நம்பிரான் நக்க ரண்கள் சுட்டவன்

மாடம் ஓங்கு வீதிசூழ் வான்மி யூரில் மேயவன்

ஆட கப்ப தந்தொழும் அன்பர் பீடை நீங்குமே.


ஆட வல்ல நாயகன் - கூத்தப்பெருமான்;

அங்கு ஒர் ஓட்டில் உண்பலி நாட வல்ல நம் பிரான் - ஒரு மண்டையோட்டில் பிச்சை ஏற்கின்ற நம் தலைவன்; (அங்கு - அசை); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

நக்கு அரண்கள் சுட்டவன் - சிரித்து முப்புரங்களை எரித்தவன்;

மாடம் ஓங்கு வீதி சூழ் வான்மியூரில் மேயவன் - உயர்ந்த மாடங்கள் விளங்கும் திருவான்மியூரில் உறைகின்றவன்;

ஆடகப்-பதம் தொழும் அன்பர் பீடை நீங்குமே - அப்பெருமானின் பொற்பாதத்தை வணங்கும் பக்தர்களது கஷ்டங்கள் நீங்கும்; (ஆடகம் - பொன்);


7)

கோடி நாமம் உள்ளவன் கூற்று தைத்த தாளினான்

ஈடி லாத பெற்றியான் ஈரம் மிக்க வேணியான்

மாடி வீடு மல்கிய வான்மி யூரில் மேயவன்

தோடி லங்கு காதினான் தொண்டர் அண்டம் ஆள்வரே.


கோடி நாமம் உள்ளவன் - எண்ணற்ற திருப்பெயர்கள் உடையவன்;

கூற்று உதைத்த தாளினான் - காலனைக் காலால் உதைத்தவன்;

ஈடு இலாத பெற்றியான் - ஒப்பற்ற பெருமை உடையவன்; (பெற்றி - பெருமை; இயல்பு);

ஈரம் மிக்க வேணியான் - அருள் மிக்கவன், சடையில் கங்கையை உடையவன்; (ஈரம் - நீர்ப்பற்று; அருள்); (வேணி - சடை); (சம்பந்தர் தேவாரம் - 3.53.3 - "ஈரமாய புன்சடை");

மாடி வீடு மல்கிய வான்மியூரில் மேயவன் - மாடிவீடுகள் நிறைந்த திருவான்மியூரில் உறைகின்றவன்;

தோடு இலங்கு காதினான் தொண்டர் அண்டம் ஆள்வரே - ஒரு காதில் தோடு அணிந்தவனான அர்த்தநாரீஸ்வரனுடைய அடியவர்கள் வானம் ஆளும் நன்னிலை பெறுவார்கள்;


8)

ஈசர் வெற்பெ டுத்தவன் ஏழி ரண்டொ டாறுதோள்

நாசம் ஆக ஓர்விரல் நாகம் மீது வைத்தவர்

வாசக் கொன்றை சூடினார் வான்மி யூரில் மேயவர்

தேச னார்ப தந்தனைச் சிந்தை செய்ய நன்மையே.


ஈசர் வெற்பு எடுத்தவன் ஏழிரண்டொடு ஆறு தோள் - ஈசனார் உறையும் கயிலைமலையைப் பெயர்க்கமுயன்ற இராவணனுடைய இருபது புஜங்களும்; (ஏழிரண்டொடு ஆறு = 7x2 + 6 = 20);

நாசம் ஆக ஓர் விரல் நாகம் மீது வைத்தவர் - அழியும்படி அம்மலையின்மேல் ஒரு விரலை ஊன்றியவர்; (நாகம் - மலை);

வாசக்-கொன்றை சூடினார் - நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவர்;

வான்மியூரில் மேயவர் - திருவான்மியூரில் உறைகின்றவர்;

தேசனார் பதந்தனைச் சிந்தை செய்ய நன்மையே - ஒளியுருவினர் ஆன அப்பெருமானாரின் திருவடியைத் தியானித்தால் நன்மை உண்டாகும்; (தேசன் - ஒளி வடிவினன்);


9)

அம்பு யத்தன் அச்சுதன் அன்று நேடி வாடியே

எம்பி ரானெ மக்கருள் என்ன நின்ற சோதியான்

வம்பு நாறு கொன்றையான் வான்மி யூரில் மேயவன்

அம்பொ னார்ப தந்தொழும் அன்பர் இன்பர் ஆவரே.


அம்புயத்தன் அச்சுதன் அன்று நேடி வாடியே - தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் முன்பு அடிமுடியைத் தேடி வாடி; (அம்புயத்தன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);

"எம்பிரான் எமக்கு அருள்" என்ன நின்ற சோதியான் - "எம் தலைவனே! எமக்கு அருள்வாயாக" என்று துதிக்கும்படி ஜோதிவடிவில் நின்றவன்;

வம்பு நாறு கொன்றையான் - மணம் கமழும் கொன்றைமலரைச் சூடியவன்; (வம்பு - வாசனை); (நாறுதல் - மணம் வீசுதல்);

வான்மியூரில் மேயவன் அம்பொன் ஆர் பதம் தொழும் அன்பர் இன்பர் ஆவரே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுடைய அழகிய பொன் போன்ற திருவடியை வழிபடும் பக்தர்கள் இன்பம் அடைவார்கள்; (அம் - அழகு); (ஆர்தல் - ஒத்தல்);


10)

மிண்டர் பேசு பொய்வலை வீழ்ந்து துன்பு றேன்மினீர்

இண்டை யாக வெண்மதி ஏறு கின்ற சென்னிமேல்

வண்ட மர்ந்த கொன்றையான் வான்மி யூரில் மேயவன்

தொண்ட மர்ந்த நெஞ்சரைச் சூழும் இன்பம் என்றுமே.


மிண்டர் பேசு பொய்வலை வீழ்ந்து துன்புறேன்மின் நீர் - கல்நெஞ்சர்கள் பேசுகின்ற பொய்கள் என்ற வலையில் விழுந்து நீங்கள் துன்பம் அடையாதீர்கள்; (மிண்டர் - கல்நெஞ்சம் உடையவர்கள்; அறிவில்லாதவர்கள்);

இண்டையாக வெண்மதி ஏறுகின்ற சென்னிமேல் - இண்டைமாலை போல வெண்பிறை இருக்கும் திருமுடிமேல்; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

வண்டு அமர்ந்த கொன்றையான் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலரைச் சூடியவன்; (அமர்தல் - விரும்புதல்);

வான்மியூரில் மேயவன் தொண்டு அமர்ந்த நெஞ்சரைச் சூழும் இன்பம் என்றுமே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுக்குத் தொண்டு செய்ய விரும்பிய மனம் உடையவர்களை என்றும் இன்பமே சூழும்;


11)

காண லற்ற தன்மையைக் காம னுக்க ளித்தவன்

பூண லாஅ ராக்களைப் பூண்க ளாக ஏற்றவன்

வாணி லாவ ணிந்தவன் வான்மி யூரில் மேயவன்

தாணி லாவு நெஞ்சரைச் சாரும் இன்பம் என்றுமே.


காணல் அற்ற தன்மையைக் காமனுக்கு அளித்தவன் - மன்மதனை யார் கண்ணுக்கும் புலப்படாதபடி செய்தவன் (= அவனை எரித்துப், பின் உருவமின்றி வாழுமாறு அவனை உயிர்ப்பித்தவன்);

பூண் அலா அராக்களைப் பூண்களாக ஏற்றவன் - யாராலும் ஆபரணமாக அணிய ஆகாத பாம்புகளை அணிந்தவன்; (பூண் - ஆபரணம்); (அலா - அல்லா); (அரா - பாம்பு); (அப்பர் தேவாரம் - 6.11.6 - "பூணலாப் பூணானை");

வாள்-நிலா அணிந்தவன் - ஒளி பொருந்திய சந்திரனை அணிந்தவன்; (வாள் - ஒளி); (வாணிலா = வாள் நிலா);

வான்மியூரில் மேயவன் தாள் நிலாவு நெஞ்சரைச் சாரும் இன்பம் என்றுமே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுடைய திருவடிகளைத் தியானிக்கும் மனம் உடையவர்களை என்றும் இன்பமே அடையும்; (தாணிலாவு - தாள் நிலாவு); (நிலாவுதல் - தியானித்தல்; நிலைத்திருத்தல்); (சார்தல் - சென்றடைதல்; பொருந்தியிருத்தல்);


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4 சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5 சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6 சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment