Thursday, November 9, 2023

07.17 - கொள்ளிக்காடு - செஞ்சொ லார்தமிழ்

07.17 - கொள்ளிக்காடு (திருக்கொள்ளிக்காடு)

2015-12-29

கொள்ளிக்காடு

---------------------------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா);

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்");

(சுந்தரர் தேவாரம் - 7.36.1 - "காருலாவிய நஞ்சை யுண்டிருள்");


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

செஞ்சொ லார்தமிழ் மாலை யாலுன செம்பொ னார்கழல் ஏத்தினேன்

அஞ்சி னோடொரு நான்கு கோள்களும் ஆசி லாநல(ம்) நல்குமே

பஞ்சின் மெல்லடி மாது பங்கமர் பண்ப னேஎரி போல்திகழ்

குஞ்சி மேல்நதி கூவி ளம்புனை கொள்ளிக் காடுறை கூத்தனே.


செஞ்சொல் ஆர் தமிழ் மாலையால் உன செம்பொன் ஆர் கழல் ஏத்தினேன் - சிறந்த சொற்கள் பொருந்திய தமிழ்ப் பாமாலைகளால் (தேவாரம், திருவாசகம் முதலியன) உன்னுடைய செம்பொன் போன்ற திருவடிகளைத் துதித்தேன்; (இலக்கணக் குறிப்பு - உன - உன்+- உன்னுடைய; "" ஆறாம் வேற்றுமை உருபு);

அஞ்சினோடு ஒரு நான்கு கோள்களும் ஆசு இலா நலம் நல்குமே - நவக்கிரகங்களும் குற்றமற்ற நன்மையே செய்யும்; (சம்பந்தர் தேவாரம் - கோளறு பதிகம் - 2.85.1 - "வேயுறு தோளி பங்கன் ... ஆசறு நல்ல நல்ல ...");

பஞ்சின் மெல்லடி மாது பங்கு அமர் பண்பனே - பஞ்சினும் மென்மையான பாதங்களை உடைய உமையை ஒரு பங்காக விரும்பிய பண்பு உடையவனே; (* பஞ்சின் மெல்லடியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

எரி போல் திகழ் குஞ்சி மேல் நதி கூவிளம் புனை - தீப்போன்ற செஞ்சடை மீது கங்கையையும் வில்வத்தையும் அணிந்த; (குஞ்சி - தலை; ஆண்களின் தலைமயிர்); (கூவிளம் - வில்வம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.25.4 - "தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்"); (சுந்தரர் தேவாரம் - 7.94.1 - "அழல்நீர் ஒழுகி யனைய சடையும்");

கொள்ளிக்காடு உறை கூத்தனே - திருக்கொள்ளிக்காடு என்ற தலத்தில் உறைகின்ற கூத்தப்பெருமானே; (கூத்தன் - திருநடம் செய்பவன்);


2)

நீல மாமணி கண்ட னேஉனை நித்த லுந்தொழு தேத்தினேன்

சூல னேமலை போன்ற வல்வினை தூள தாகிட நல்கிடாய்

ஏல வார்குழ லாளை ஓர்புடை ஏற்ற ஏறமர் ஏந்தலே

கோல வெண்பிறை சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


நீல மாமணி கண்டனே, உனை நித்தலும் தொழுது ஏத்தினேன் - அழகிய நீலமணியைக் கண்டத்தில் உடையவனே, உன்னை நாள்தோறும் போற்றி வணங்கினேன்;

சூலனே, மலை போன்ற வல்வினை தூளது ஆகிட நல்கிடாய் - சூலபாணியே, என்னுடைய மலைபோன்ற வலிய வினைகள் தூளாகும்படி அருள்புரியாய்;

ஏல வார் குழலாளை ஓர் புடை ஏற்ற, ஏறு அமர் ஏந்தலே - நீண்ட வாசக்கூந்தல் உடைய உமையைத் திருமேனியில் ஒரு பக்கம் ஏற்றவனே, இடபத்தை வாகனமாக விரும்பியவனே;

கோல வெண்பிறை சூடினாய் - அழகிய வெண்பிறைச்சந்திரனைச் சூடியவனே;

அணி கொள்ளிக்காடு உறை கூத்தனே - அழகிய திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற கூத்தப்பெருமானே;


3)

வம்பு நாண்மலர் தூவி நின்னடி வாழ்த்தி னேன்இடர் மாய்த்திடாய்

அம்பை ஏவிய மன்ம தன்றனை ஆகம் அற்றவன் ஆக்கினாய்

செம்பொ னேர்சடை மீது வெண்மதி சீற ராவொடு சேர்த்தினாய்

கொம்ப னாளொரு கூற னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வம்பு நாண்மலர் தூவி நின் அடி வாழ்த்தினேன் இடர் மாய்த்திடாய் - வாசம் மிக்க புதுமலர்களைத் தூவி உன் திருவடியை வாழ்த்திய என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக; (வம்பு - வாசனை); (நாண்மலர் - நாள் மலர் - அன்று பூத்த பூ);

அம்பை ஏவிய மன்மதன்தனை ஆகம் அற்றவன் ஆக்கினாய் - மலர்க்கணை ஏவிய காமனை உருவம் அற்றவன் ஆகுமாறு செய்தவனே; (அப்படி நெற்றிக்கண்ணால் நோக்கியவனே);

செம்பொன் நேர் சடை மீது வெண்மதி சீறு அராவொடு சேர்த்தினாய் - செம்பொன் போல் திகழும் சடைமேல் வெண்-திங்களைச் சீறுகின்ற பாம்போடு சேர்த்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.78.5 - "திங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்");

கொம்பு அனாள் ஒரு கூறனே - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;

அணி கொள்ளிக் காடுறை கூத்தனே - அழகிய திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற கூத்தப்பெருமானே;


4)

பொடிய ணிந்தடி போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

கொடிய கூற்றுதை கால னேஉமை கூற னேஒரு கையினில்

வடியி லங்கிய சூல னேமழு வாள னேவலம் ஆர்தரு

கொடியின் மேல்விடை காட்டி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பொடி அணிந்து அடி போற்றினேன் வினை போக்கி இன்பம் அளித்திடாய் - திருநீற்றைப் பூசி நான் உன் திருவடியை வணங்கினேன்; என் வினைகளைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;

கொடிய கூற்று உதை காலனே - கொடிய நமனை உதைத்தவனே;

உமை கூறனே - உமையை ஒரு கூறாக உடையவனே;

ஒரு கையினில் வடி இலங்கிய சூலனே மழுவாளனே - ஒரு கையில் கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவனே; மழுவாள் உடையவனே; (வடி - கூர்மை);

வலம் ஆர்தரு கொடியின் மேல் விடை காட்டினாய் - வெற்றி மிகுந்த கொடியின் மீது இடபச்சின்னம் உடையவனே; (வலம் - வெற்றி); (ஆர்தல் - மிகுதல்); (தருதல் - ஒரு துணைவினை);


5)

விமல னேஅடி வாழ்த்தி னேன்வினை வீட்டி இன்பம ளித்திடாய்

கமல மென்றொரு கண்ணை இட்டரி கைதொ ழப்படை நல்கினாய்

உமைய வட்கொரு கூறு கந்தளி உம்ப னேஉல குய்ந்திடக்

குமைவி டந்தரி கண்ட னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


விமலனே, அடி வாழ்த்தினேன் வினை வீட்டி இன்பம் அளித்திடாய் - தூயவனே, உன் திருவடியை வணங்கினேன்; என் வினைகளைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;

கமலம் என்று ஒரு கண்ணை இட்டு அரி கைதொழப் படை நல்கினாய் - (ஆயிரம் தாமரைப்பூக்களில் ஒரு பூக் குறையவும்) தன் மலர்க்கண்ணை இடந்து இட்டுத் திருமால் அர்ச்சிக்கவும், மகிழ்ந்து அவனுக்குச் சக்கராயுதத்தைத் தந்தவனே; (திருவீழிமிழலைத் தலவரலாறு காண்க); (படை - ஆயுதம்);

உமையவட்கு ஒரு கூறு உகந்து அளி உம்பனே - உமைக்கு ஒரு பங்கு விரும்பி அளித்த தேவனே; (உம்பன் - தேவன்);

உலகு உய்ந்திடக் குமை விடம் தரி கண்டனே - உலகுகள் உய்வதற்காகக் கண்டத்தில் கொல்லும் விடத்தைத் தரித்தவனே;


6)

பொங்கும் அன்பொடு போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

வெங்க ணேறமர் வேந்த னேபுரம் வேவ மேருவி லேந்தினாய்

அங்கி வாழ்த்திய அண்ண லேநதி ஆர்ந்த வேணிய தன்மிசைக்

கொங்கி லங்கிய கொன்றை யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வெங்கண் ஏறு அமர் வேந்தனே - (கொடிய) சினம் மிக்க இடபத்தை ஊர்தியாக விரும்பிய அரசனே;

(சம்பந்தர் தேவாரம் - 2.23.5 - "வெங்கண் விடையாய் எம் வெண்நாவலுளாய்"; வெம்கண் - கண்ணில் விளங்கும் சினக்குறிப்பை உணர்த்துவது);

புரம் வேவ மேரு வில் ஏந்தினாய் - முப்புரங்களும் வெந்து அழிய மேருமலையை வில்லாக ஏந்தியவனே;

அங்கி வாழ்த்திய அண்ணலே - அக்கினி தேவன் வழிபட்ட ஈசன்; (அங்கி - அக்னி); (* அக்கினிதேவன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதைத் தலவரலாற்றிற் காண்க);

நதி ஆர்ந்த வேணி அதன்மிசைக் கொங்கு இலங்கிய கொன்றையாய் - நதி பொருந்திய (கங்கையை உண்ட) சடையின்மேல் வாசம் மிக்க கொன்றையை அணிந்தவனே; (ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்; தங்குதல்); (மிசை - மீது); (கொங்கு - வாசனை; தேன்);


7)

வல்ல வாறுனை வாழ்த்தி னேன்எனை வாட்டு வல்வினை மாய்த்திடாய்

நல்ல நீறணி மார்பில் ஓர்விட நாக மும்புனை நாதனே

வெல்லு மாபடை பார்த்த னுக்கருள் வேட னேகரி காடனே

கொல்லை ஏறமர் கொற்ற வாஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வல்லவாறு உனை வாழ்த்தினேன் எனை வாட்டு வல்வினை மாய்த்திடாய் - இயன்ற அளவில் உன்னைப் போற்றினேன்; என்னை வாட்டுகின்ற வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக; (வல்லவாறு - இயன்றவாறு); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.70.7 - "கொண்டீச்சுரவனை வல்லவாறு தொழ வினை மாயுமே");

நல்ல நீறு அணி மார்பில் ஓர் விடநாகமும் புனை நாதனே - சிறந்த திருநீறு பூசிய மார்பில் மாலையாக ஒரு விஷப்பாம்பையும் அணிந்தவனே;

வெல்லு மா படை பார்த்தனுக்கு அருள் வேடனே - வெல்லும் சிறந்த படையான பாசுபதாஸ்திரத்தை அருச்சுனனுக்கு அருளிய வேடனே;

கரிகாடனே - சுடுகாட்டில் இருப்பவனே; (சுடலையில் திருநடம் செய்பவன்);

கொல்லை ஏறு அமர் கொற்றவா - முல்லை நிலத்திற்கு உரிய விடையை ஊர்தியாக விரும்பிய அரசனே; (கொல்லை - முல்லைநிலம்); (கொற்றவன் - அரசன்);


8)

பாவி னாலடி வாழ்த்தி னேன்வினை பாற வேஅருள் நல்கிடாய்

மாவி லங்கலை வீச வந்தவன் வாய்கள் பத்தழ ஊன்றினாய்

தேவி பங்கமர் செல்வ னேஒரு சேவ தேறிய சேவகா

கூவி ளந்திகழ் குஞ்சி யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பாவினால் அடி வாழ்த்தினேன் வினை பாறவே அருள் நல்கிடாய் - செந்தமிழ்ப் பாமாலைகளால் உன் திருவடியைப் போற்றினேன்; என் வினைகள் அழிய அருள்புரிவாயாக; (பாறுதல் - அழிதல்);

மா விலங்கலை வீச வந்தவன் வாய்கள் பத்து அழ ஊன்றினாய் - பெரிய மலையான கயிலையைப் பெயர்த்து எறிய வந்த இராவணனின் பத்து வாய்களும் அழும்படி (ஒரு விரலை மலைமேல்) ஊன்றியவனே; (விலங்கல் - மலை); (வீசுதல் - எறிதல்);

தேவி பங்கு அமர் செல்வனே - உமையை ஒரு பங்காக விரும்பியவனே;

ஒரு சேவது ஏறிய சேவகா - ஓர் இடபத்தின்மேல் ஏறிய வீரனே; (சே - இடபம்); (சேவகன் - வீரன்);

கூவிளம் திகழ் குஞ்சியாய் - உச்சிமேல் வில்வம் அணிந்தவனே; (கூவிளம் - வில்வம்); (குஞ்சி - தலை);


9)

மாண டிப்புகழ் பாடி னேன்நல(ம்) மல்க வேஅருள் நல்கிடாய்

ஆண வத்தொடு நேடு மாலயன் அஞ்சி ஏத்திட மாவொளித்

தூண தாகிய மூர்த்தி யேதிரி சூல னேபரி சுத்தனே

கோண லார்மதி சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


மாணடி - மாண் அடி - மாட்சிமை மிக்க திருவடி; (மாண் - மாட்சிமை);

மல்குதல் - மிகுதல்; நிறைதல்;

நேடு மால் அயன் - தேடிய திருமாலும் பிரமனும்; (நேடுதல் - தேடுதல்);

மா ஒளித்தூண் அது ஆகிய மூர்த்தியே - எல்லையில்லாத சோதி ஆகிய பெருமானே;

கோணல் ஆர் மதி சூடினாய் - வளைந்த பிறைச்சந்திரனைச் சூடியவனே; (கோணல் - வளைவு; கூன்);


10)

நன்று தானறி யாத தெண்ணர்சொல் நம்பி டேல்நலம் வேண்டினீர்

நின்று மாமலர் தூவி வாழ்த்திடு(ம்) நேய ருக்கிடர் நீக்குவான்

மன்றில் மாநடம் ஆடு மன்னவன் வன்னி கூவிள(ம்) மாசுணம்

கொன்றை சூடிய சென்னி யான்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


நன்றுதான் அறியாத தெண்ணர் சொல் நம்பிடேல், நலம் வேண்டினீர் - நன்மை பெற விரும்பும் நீங்கள், நல்லது எது என்று அறியாத அறிவிலிகள் சொல்லை நம்பவேண்டா; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (தெண்ணர் - அறிவிலிகள்); (இலக்கணக் குறிப்பு: "நலம் வேண்டினீர் நம்பிடேல்" - என்றது ஒருமை பன்மை மயக்கம்);

நலம் வேண்டினீர் நின்று மாமலர் தூவி வாழ்த்திடும் நேயருக்கு இடர் நீக்குவான் - நன்மை பெற விரும்பும் நீங்கள், ஈசன் திருமுன் நின்று சிறந்த பூக்களைத் தூவி வாழ்த்துங்கள்; அப்படி வழிபடும் அன்பர்களுக்கு இடர்களை நீக்கி ஈசன் அருள்வான்; ("நலம் வேண்டினீர்" என்ற சொற்றொடரை இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம் - இடைநிலைத்தீவகம்);

மன்றில் மா நடம் ஆடு மன்னவன் - தில்லை மன்றில் திருநடம் ஆடுகின்ற நடராஜன்;

வன்னி கூவிளம் மாசுணம் கொன்றை சூடிய சென்னியான் - வன்னி, வில்வம், பாம்பு, கொன்றை இவற்றையெல்லாம் முடிமேல் சூடியவன்; (கூவிளம் - வில்வம்); (மாசுணம் - பாம்பு);


11)

பரவி உன்னடி போற்றி னேன்வினை பாற்றி டாய்உமை பங்கனே

சிரம துண்கலம் ஆக ஊர்ப்பலி தேர்ந்து ழன்றிடு செல்வனே

அரவை மார்பினில் ஆர மாஅணி ஐய னேவட வாலமர்

குரவ னேமறை நாவ னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பரவி உன் அடி போற்றினேன் வினை பாற்றிடாய் - உன் திருவடியைப் பாடிப் பணிந்தேன்; என் வினையை அழித்தருள்வாயாக; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பாடுதல்); (பாற்றுதல் - அழித்தல்);

உமை பங்கனே - உமையொரு பாகம் உடையவனே;

சிரம் அது உண்கலம் ஆக ஊர்ப்பலி தேர்ந்து உழன்றிடு செல்வனே - (பிரமனது) மண்டையோட்டில் ஊரார் இடும் பிச்சையை ஏற்று உழலும் செல்வனே;

அரவை மார்பினில் ஆரமா அணி ஐயனே - பாம்பை மார்பில் மாலையாக அணியும் தலைவனே; (ஆரமா - ஆரமாக - கடைக்குறை விகாரம்);

வடவால் அமர் குரவனே - கல்லால மரத்தின்கீழ் இருந்த குருவே; (வடவால் - கல்லால மரம்);(குரவன் - குரு); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");

மறை நாவனே - வேதம் ஓதியவனே;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்;

முதற்சீர் "தனன" என்றும் சில பாடல்களில் வரலாம்;

சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்"


2) கொள்ளிக்காடு - இத்தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது.

பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, November 6, 2023

07.16 – பொது - "வினை மாய்த்தருள் ஈசன்" - பொற்பதம் ஏத்து

07.16 – பொது - "வினை மாய்த்தருள் ஈசன்"

2015-12-26

7.16 - பொது - "வினை மாய்த்தருள் ஈசன்"

------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தானன தானன தானன தானா - சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

"லிங்காஷ்டகம்" என்ற துதியின் சந்தத்தில்)


* சந்தம் கெடாத இடங்களில், படிப்போர் வசதி கருதிப், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

பொற்பதம் ஏத்துசு ரர்க்கருள் ஈசன்

வெற்பினை வில்லென ஏந்திய ஈசன்

நற்புனல் அஞ்சடை வைத்தருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பொற்பதம் ஏத்து சுரர்க்கு அருள் ஈசன் - பொன் போன்ற திருவடியைத் துதித்த தேவர்களுக்கு அருளிய ஈசன்;

வெற்பினை வில் என ஏந்திய ஈசன் - மேருமலையை வில்லாக ஏந்திய ஈசன்; - முப்புரம் எரித்ததைச் சுட்டியது; (வெற்பு - மலை);

நற்புனல் அஞ்சடை வைத்தருள் ஈசன் - கங்கையை அழகிய சடையில் தாங்கும் ஈசன்; (அம் - அழகு);

வாழ்த்திடுவோம் வினை மாய்த்து அருள் ஈசன் - நம் வினையையெல்லாம் அழித்து அருளும் ஈசனைப் போற்றுவோம்;


2)

தக்கனை முண்டம ரிந்தருள் ஈசன்

அக்கணி ஆரமெ னப்புனை ஈசன்

சக்கரம் அச்சுத னுக்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


தக்கனை முண்டம் அரிந்து அருள் ஈசன் - தக்கன் செய்த வேள்வியை அழித்து அவன் தலையை வெட்டி அருளிய ஈசன்; (முண்டம் - தலை); (அரிதல் - வெட்டுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.109.6 - "தக்கனைத் தலையரி தழலுருவர்");

அக்கு அணி ஆரம் எனப் புனை ஈசன் - எலும்பை அழகிய மாலை போலப் பூணும் ஈசன்;

சக்கரம் அச்சுதனுக்கு அருள் ஈசன் - திருமாலுக்க்ச் சக்கராயுதத்தை அருளிய ஈசன்;


3)

பொங்கெரி மேனியில் நீறணி ஈசன்

ஐங்கணை வேள்பட நோக்கிய ஈசன்

மங்கல மேவிர திக்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பொங்கு எரி மேனியில் நீறு அணி ஈசன் - பொங்குகின்ற தீப் போன்ற செம்மேனியில் திருநீற்றை அணிந்த ஈசன்; (எரி - நெருப்பு ); (மேனியினீறணி = மேனியில் நீறு அணி); (அப்பர் தேவாரம் - 4.112.5 - "முழுத்தழல் மேனித் தவளப் பொடியன்");

ஐங்கணை வேள் பட நோக்கிய ஈசன் - ஐந்து மலர்க்கணைகள் ஏவும் மன்மதன் அழியும்படி அவனை நெற்றிக்கண்ணால் பார்த்த ஈசன்; (வேள் - காமன்); (படுதல் - அழிதல்; சாதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று");

மங்கலமே இரதிக்கு அருள் ஈசன் - வழிபாடு செய்த இரதிக்கு இரங்கி அவளுக்கு நன்மை (/தாலி பாக்கியம்) அருளி, அவள் கணவனான மன்மதனுக்கு மீண்டும் உயிர் தந்த ஈசன்; (மங்கலமேவிரதிக்கருள் = 1. மங்கலமே இரதிக்கு அருள்; 2. மங்கலம் மேவு இரதிக்கு அருள்); (மங்கலம் - சுபம்; நன்மை; தாலி); (மேவுதல் - விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.60.9 - "காமனை ஈடழித்திட் டவன் காதலி சென்றிரப்பச் சேமமே உன்றனக்கென் றருள் செய்தவன்");


4)

போர்புரி வேழமு ரித்தருள் ஈசன்

நீர்புரி செஞ்சடை ஏற்றருள் ஈசன்

பேர்பல சொல்லடி யார்க்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


போர் புரி வேழம் உரித்தருள் ஈசன் - போர் செய்த யானையின் தோலை உரித்தருளிய ஈசன்;

நீர் புரி செஞ்சடை ஏற்றருள் ஈசன் - கங்கையை முறுக்கேறிய செஞ்சடையில் தாங்கியருளிய ஈசன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல் - To be twisted; to curl); (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "புரிசடையாய் புண்ணியனே");

பேர் பல சொல் அடியார்க்கு அருள் ஈசன் - பல திருநாமங்களையும் சொல்லி வணங்கும் அடியவர்களுக்கு அருள்கின்ற ஈசன்;


5)

வலியச லந்தர னைத்தடி ஈசன்

எலியையு(ம்) மாவலி ஆக்கிய ஈசன்

நலிவிலன் ஓர்விடை ஏறிய ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வலிய சலந்தரனைத் தடி ஈசன் - வலிமை மிகுந்த சலந்தராசுரனை அழித்தவன்; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

எலியையும் மாவலி ஆக்கிய ஈசன் - (திருமறைக்காட்டில், ஈசன் சன்னிதியில் இருந்த விளக்குத் திரியைத் தற்செயலாகத் தூண்டிய) ஓர் எலியைப் பின்னர் மகாபலியாகப் பிறப்பித்தவன்; (மாவலி - மகாபலி); (அப்பர் தேவாரம் - 4.49.8 - "நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக் கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட);

நலிவு இலன் ஓர் விடை ஏறிய ஈசன் - துன்பமும் அழிவும் இல்லாதவன், ஒப்பற்ற இடப வாகனம் உடைய ஈசன்; (நலிவு - துன்பம்; அழிவு); (ஓர் - ஒப்பற்ற; ஒரு);


6)

அந்தக னைச்செறு வேலுடை ஈசன்

மந்திர மாமறை ஓதிய ஈசன்

சந்திர னைத்தரி தாழ்சடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


அந்தகனைச் செறு வேல் உடை ஈசன் - அந்தகாசுரனை அழித்த சூலத்தை உடைய ஈசன்; (அந்தகன் - அந்தகாசுரன்); (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்); (வேல் - திரிசூலம்);

மந்திர மாமறை ஓதிய ஈசன் - மந்திரங்களையுடைய வேதங்களைப் பாடியருளியவன்; வேதமந்திரங்கள் பாடுகின்ற ஈசன்; (சம்பந்தர் தேவாரம் - 3.15.1 - "மந்திர மறையவை வானவரொடும் இந்திரன் வழிபட நின்ற எம்மிறை");

சந்திரனைத் தரி தாழ்சடை ஈசன் - சந்தரனை அணிந்த தாழும் சடையை உடையவன்; (தாழ்சடை - தொங்குகின்ற சடை);


7)

நான்முகன் ஓர்தலை கொய்தருள் ஈசன்

மான்மறி மாமழு ஏந்திய ஈசன்

தேன்மலி மாமலர் ஆர்சடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


நான்முகன் ஓர் தலை கொய்தருள் ஈசன் - பிரமனுடைய தலைகளில் ஒன்றைக் கிள்ளியருளிய ஈசன்; (சம்பந்தர் தேவாரம் - 1.105.7 - "பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே");

மான்மறி மாமழு ஏந்திய ஈசன் - கையில் மான்கன்றையும் பெரிய மழுவையும் ஏந்தியவன் ஈசன்; (மறி - கன்று);

தேன் மலி மாமலர் ஆர் சடை ஈசன் - தேன் நிறைந்த அழகிய மலர்களைச் சடையில் அணிந்த ஈசன்; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; அணிதல்);


8)

பத்துமு கன்தனை ஊன்றிய ஈசன்

மத்திடு மாகடல் நஞ்சணி ஈசன்

சத்தியை வாமமி ருத்திய ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பத்துமுகன்தனை ஊன்றிய ஈசன் - தசமுகனை (இராவணனை) நசுக்கிய ஈசன்; (ஊன்றுதல் - அமுக்குதல்);

மத்திடு மா கடல் நஞ்சணி ஈசன் - கடைந்த பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (மத்திடுதல் - கடைதல்); (மாகடனஞ்சணி = மா கடல் நஞ்சு அணி); (சம்பந்தர் தேவாரம் - 3.69.1 - "மாகடல்விடம் தானமுது செய்தருள் புரிந்தசிவன்");

சத்தியை வாமம் இருத்திய ஈசன் - உமையை இடப்பக்கம் விரும்பி ஏற்ற ஈசன்; (சத்தி - சக்தி - உமை); (வாமம் - இடப்பக்கம்); (இருத்துதல் - இருக்கச்செய்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.33.3 - "மலைமங்கையொரு பாகத் துளங்கொள இருத்திய ஒருத்தன்");


9)

ஏனமும் அன்னமு(ம்) நேடிய ஈசன்

கானக(ம்) மாநடம் ஆடிடும் ஈசன்

போனக மாவிடம் உண்டருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


ஏனமும் அன்னமும் நேடிய ஈசன் - பன்றியும் அன்னமுமாய்த் திருமலும் பிரமனும் அடியும் முடியும் தேடிய ஈசன்; (ஏனம் - பன்றி); (நேடுதல் - தேடுதல்);

கானகம் மா நடம் ஆடிடும் - சுடுகாட்டில் பெரிய திருநடம் செய்கின்ற; (கானகம் - காடு - இங்கே சுடுகாடு); (மா - அழகு; பெருமை);

போனகமா விடம் உண்டருள் ஈசன் - உணவாகக் ஆலகால விடத்தை உண்ட ஈசன்; (போனகம் - உணவு); (போனகமா - போனகமாக - கடைக்குறையாக வந்தது);


10)

புன்னெறி யார்க்கிலன் ஆகிய ஈசன்

தன்னடி யார்க்கொரு நற்றுணை ஈசன்

வன்னம னைக்கழ லாலுதை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


புன்னெறியார்க்கு இலன் ஆகிய ஈசன் - சிறுநெறியாளர்களுக்கு அருள் இல்லாத ஈசன்; சிறுநெறியாளர்களால் அறியப்படாத ஈசன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன்");

தன் அடியார்க்கு ஒரு நல் துணை ஈசன் - தன் பக்தர்களுக்கு ஒப்பற்ற நல்ல துணை ஆன ஈசன்;

வன் நமனைக் கழலால் உதை ஈசன் - கொடிய கூற்றுவனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்த ஈசன்;


11)

வெண்பொடி மார்பிலி லங்கிடும் ஈசன்

தண்புன லைச்சடை வைத்தருள் ஈசன்

பெண்புடை யில்திகழ் அன்புடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வெண் பொடி மார்பில் இலங்கிடும் ஈசன் - வெண்மையான திருநீறு மார்பில் திகழ்கின்ற ஈசன்;

தண் புனலைச் சடை வைத்து அருள் ஈசன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் வைத்த ஈசன்;

பெண் புடையில் திகழ் அன்பு உடை ஈசன் - உமாதேவி ஒரு பக்கத்தில் திகழும்படி அன்பு உடைய ஈசன்;


பிற்குறிப்புகள் :

1) இப்பதிகத்தில் சிவபெருமானின் அட்டவீரட்டச் செயல்களும் சுட்டப்பெறுகின்றன;

திரிபுரம் எரித்தது (திருவதிகை), ஜலந்தரனை வதம் செய்தது (திருவிற்குடி), தக்கன் வேள்வியை அழித்து (திருப்பறியலூர்), மன்மதனை எரித்தது (திருக்குறுக்கை), காலனை அழித்தது (திருக்கடவூர்), யானையை வதம் செய்தது (திருவழுவூர்), அந்தகனை அழித்தது (திருக்கோவலூர்), பிரமன் தலையைக் கொய்தது (திருக்கண்டியூர்) ஆகிய எட்டுத் தலங்களே வீரட்டத் தலங்களாகும்.


2) யாப்புக் குறிப்பு: மூவடிமேல் ஓரடி வைப்பு - இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் மூன்றடிகளால் அமைந்து அதன் மேல் ஓர் அடி (எல்லாப் பாடல்களிலும் அவ்வடியே) அமைந்து வருகின்றது. ஆகவே, "மூவடிமேல் ஓரடி வைப்பு";

எல்லா அடிகளும் "தானன தானன தானன தானா" என்ற சந்தம். வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

சில பாடல்களில் முதற்சீர் "தனதன" என்றும் வரலாம்.

தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின / மெல்லின ஒற்றுகள் அலகிடப்படா.

ஐகாரக் குறுக்கம் நிகழும் இடங்களில் அது குறில் போல அலகிடப்படும்.


3) திருமுறைகளில் நாலடிமேல் வைப்பு, ஈரடிமேல் வைப்பு, போன்ற அமைப்பு உடைய பதிகங்களைக் காணலாம். உதாரணமாக:

சம்பந்தர் தேவாரம் - 3.4.1 - "இடரினும் தளரினும் எனதுறுநோய்";

சம்பந்தர் தேவாரம் - 3.6.1 - "கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர்";

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்";

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.3.1 - "மாதர்ப் பிறைக்கண்ணி யானை";


4) சமஸ்கிருதத்தில் உள்ள லிங்காஷ்டகம் - அதன் யாப்பு :

Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்ம முராரி சுரார்சித லிங்கம்.

(Lingashtakam meter info provided by J.K. Mohana Rao):

brahma murAri surArchita liMgaM - taraMgaka / dOdhaka

dinakarakOTi prabhAkara liMgaM - kamalavilAsinI / tAmarasa / lalitapadA

suraguru suravara pUjita liMgaM - kamalalOchanA / kamalAkshI / chaMDI

parAtparaM paramAtmaka liMgaM - unknown

Some stanzas like 3, 5, 7 are mixtures of different metres. Such mixed metres are called upajAti in Sanskrit.

last one (phalasruthi) is SlOka


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


08.05.034 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

08.05.034 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )


08.05 – பலவகை

2015-12-25

8.5.34 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

--------------------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தானன தானன தானன தானா - சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.)

( Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)


* சந்தம் கெடாத இடங்களில், படிப்போர் வசதி கருதிப், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;


1)

நான்முகன் நாரணன் வான்தொழு லிங்கம்

ஊனமி லாஒளி யாய்த்திகழ் லிங்கம்

வான்பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


நான்முகன் - பிரமன்;

நாரணன் - விஷ்ணு;

வான் - தேவர்;

லிங்கம் - சிவபெருமானின் அருவுருவம்;

ஊனம் - குறைவு; குற்றம்;

வான்பிணி - பெரும்பிணி - பிறவிப்பிணி;

நாநித மேத்தும தேசிவ லிங்கம் - 1. (என்) நா நிதம் ஏத்தும் அதே சிவ லிங்கம்; 2. நாம் நிதம் ஏத்தும் அதே சிவலிங்கம்;

நாநிதம் - 1. நா + நிதம்; 2. நாம் + நிதம்; (இவ்விடத்தில் புணர்ச்சியில் முதற்சொல்லின் ஈற்றிலுள்ள ம் கெடும்);

நா - நாக்கு;

நிதம் - நித்தம் - தினமும்; எப்போதும்; அனவரதமும்; (சதா - எப்பொழுதும்);


குறிப்பு: "லிங்கம்" என்பது தமிழ் இலக்கணப்படி "இலிங்கம்" என்று வரும், ஆயின், மூலப்பாடலின் சந்த அமைப்பை ஒட்டி இம்மொழிபெயர்ப்பிலும் "லிங்கம்" என்றே கையாளப்பட்டுள்ளது.


2)

பன்முனி வான்அடி வாழ்த்திடு லிங்கம்

மன்மத னைப்பொடி ஆக்கிய லிங்கம்

முன்னம ரக்கனை ஊன்றிய லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


பன்முனி வான் - பல் முனி வான் - பல முனிவர்களும் தேவர்களும்;

பொடி - சாம்பல்;

முன்னம் அரக்கனை ஊன்றிய - முன்பு (தனது ஆணவத்தால் கயிலையைப் பெயர்த்த) இராவணனை நசுக்கி அவனது கர்வத்தை அழித்த; (ஊன்றுதல் - அமுக்குதல்; நசுக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.74.10 - "திரண்ட திண்டோள் அரக்கனை ஊன்றி");


3)

கந்தம லிந்திடு பூச்சணி லிங்கம்

சிந்தைம யக்கைஅ றுத்தருள் லிங்கம்

அந்தரர் சித்தரெ லாம்பணி லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


கந்தம் மலிந்திடு பூச்சு அணி - வாசனை மிகுந்த கலவைச்சாந்து முதலியவற்றை அணிந்தருளும்; (பூச்சு - smearing, anointing; தடவுதல்; பூசுதல்);

சிந்தை மயக்கை அறுத்து அருள் - மனமயக்கத்தைத் தீர்த்துத் தெளிவை அளித்து அருளும்;

அந்தரர் சித்தரெலாம் பணி - தேவர்கள், சித்தர்கள் முதலிய எல்லாரும் பணிகின்ற; (அந்தரர் - தேவர்கள்);


4)

பொன்மணி ஆகமி லங்கிடு லிங்கம்

பன்னக நாணைஅ ரைக்கணி லிங்கம்

முன்னொரு வேள்வித கர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


பொன் மணி ஆகம் இலங்கிடு - 1) பொன்னும் மணியும் மேனியில் விளங்குகின்ற; 2) பொன் போல் அழகிய மேனி விளங்குகின்ற (மணி - இரத்தினம்; அழகு); (ஆகம் - மேனி; மார்பு); (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே");

பன்னக நாணை அரைக்கு அணி - பாம்பை அரைநாணாக அணிகின்ற; (பன்னகம் - பாம்பு);

முன் ஒரு வேள்வி தகர்த்து அருள் - முன்னர் (தக்கன் செய்த) ஒரு யாகத்தை அழித்த;


5)

குங்கும சந்தனம் ஏற்றருள் லிங்கம்

பங்கய மாலை உகந்தருள் லிங்கம்

தங்கிய முன்வினை சாய்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


பங்கய மாலை உகந்து அருள் - தாமரைமாலையை விரும்பி ஏற்கின்ற;

தங்கிய முன்வினை - சஞ்சிதம்; (தங்குதல் - to remain; to exist); (சஞ்சிதம் - அனாதியாய் ஈட்டப்பட்டுள்ள கருமத்தில் அனுபவித்துத் தீர்ந்ததுபோக எஞ்சியது);

சாய்த்து அருள் - அழித்து அருள்கின்ற; (சாய்த்தல் - கெடுத்தல் - To destroy);


6)

பல்லிமை யோர்கணம் முன்பணி லிங்கம்

நல்லுளம் அன்பொடு நாடிடு லிங்கம்

எல்லியொர் கோடிநி கர்த்தொளிர் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


பல் இமையோர் கணம் முன் பணி - பல தேவகூட்டங்கள் வணங்குகின்ற; (உம்மைத்தொகையாகக் கொண்டு, "பல தேவர்களும் பூதகணங்களும் வணங்குகின்ற" என்றும் பொருள்கொள்ளலாம்);

நல் உளம் அன்பொடு நாடிடு - நல்ல உள்ளம் உடையோர் பக்தியோடு போற்றுகின்ற;

எல்லி ஒர் கோடி நிகர்த்து ஒளிர் - ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளிவீசுகின்ற; (எல்லி - சூரியன்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);


7)

எண்மல ரால்தொழு தேத்திடு லிங்கம்

எண்ணிலி அண்டமெ லாம்படை லிங்கம்

மண்ணினர் எண்கலி தீர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


எண்மலரால் தொழுது ஏத்திடும் - அஷ்டபுஷ்பங்களால் வழிபாடு செய்யப்பெறுகின்ற;

(அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு. அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி");

எண்ணிலி அண்டம் எலாம் படை - எண்ணற்ற அண்டசராசரங்களைப் படைக்கின்ற; (எண்ணிலி - எண்ணற்ற);

மண்ணினர் எண்கலி தீர்த்து அருள் - மனிதர்களுடைய எட்டு வகையான தரித்திரங்களைத் தீர்த்து அருள்கின்ற; (கலி - தரித்திரம்);

(தமிழில் "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்" என்று 16 பேறுகளைக் குறிப்பிடுவதுபோல், வடமொழியில் "அஷ்டைசுவரியம்" - எண்வகைச் செல்வம்; அந்த எட்டுச் செல்வங்களின் இன்மை - அஷ்டதரித்திரம்); (அஷ்டலக்ஷ்மி - இந்த எட்டுச் செல்வங்களை அளிக்கும் லக்ஷ்மிகள் என்று கருதலாம்போல்);


8)

வானவ ருங்குரு வுந்தொழு லிங்கம்

வானல ரால்அடி வாழ்த்திடு லிங்கம்

மானமி லங்கிய வான்பொருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


வானவரும் குருவும் தொழு - தேவர்களும் தேவகுருவும் தொழுகின்ற;

வான் அலரால் அடி வாழ்த்திடு - தேவலோகத்துப் புஷ்பங்களால் திருவடியைப் போற்றுகின்ற; (அலர் - பூ);

மானம் இலங்கிய வான் பொருள் - மேன்மை விளங்கிய பரம்பொருள்; (மானம் - உயர்வு; பெருமை); (வான் பொருள் - எட்டாத பொருள்) (திருவாசகம் - திருச்சாழல் - 10 - "தானந்தம் இல்லான் ... வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ");


"நூற்பயன் (பலசுருதி)" -- திருவாசகம் - சிவபுராணம் - ஈற்றடிகள் :

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்கச், சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலைபெறுவர்.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள்:

1) யாப்புக் குறிப்புகள் :

தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.


தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின / மெல்லின ஒற்றுகள் அலகிடப்படா.

ஐகாரக் குறுக்கம் நிகழும் இடங்களில் அது குறில் போல அலகிடப்படும்.


வடமொழிப் பாடல்களில் பொதுவாக எதுகை இராது. இந்தத் தமிழ்மொழிபெயர்ப்பில், தமிழில் எதுகையும் அமையப் பாடப்பெற்றுள்ளது.


2) Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)

Some English translations of Lingashtakam can be seen here:

a) https://sanskritdocuments.org/doc_shiva/lingashhMean.html

b) http://svbf.org/newsletters/wp-content/uploads/paramartha-tattvam-articles/vol3no1.pdf

c) word by word translation: https://greenmesg.org/stotras/shiva/lingashtakam.php


3) அஷ்டலக்ஷ்மி

Form of Lakshmi Form of Wealth

धन लक्ष्मी Dhana Lakshmi - Money, Gold, precious stones…

धाय्न्य लक्ष्मी DhAnya Lakshmi - Health, Grains, food, well-being…

आदि लक्ष्मी Adi Lakshmi - Agricultural lands, properties…

गज लक्ष्मी Gaja Lakshmi - Cattle, horses, vehicles…

विजय लक्ष्मी Vijaya Lakshmi - Victory, power, employees, subordinates, followers…

विद्या लक्ष्मी Vidya Lakshmi - Knowledge, intelligence, comprehension, power of speech…

संतान लक्ष्मी Santana Lakshmi - Family, kids, relatives, friends, relationships…

धैर्य लक्ष्मी Dhairya Lakshmi - Bravery, courage, entrepreneurial spirit…

-------------------------------- -------------------------------