Monday, December 13, 2021

T.119 - மயிலாப்பூர் - மலவிருளு(ம்) மூடி

2009-12-07

T.119 - மயிலாப்பூர் - மலவிருளு(ம்) மூடி

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தனதனன தான

தனதனன தான .. தனதான)

(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)


மலவிருளு(ம்) மூடி உளமதனில் ஆசை

.. .. வரையறையி லாது .. வரநாளும்

.. மடமையொடு பாவம் இடர்பெருகும் ஈன

.. .. வழியிலுழ லாது .. பவரோகம்

விலகவெளி தான வழியெனவு ளாயை

.. .. மிகவு(ம்)நினை நேய .. அடியாரை

.. விரவியவ ரோடு திருமுறைகள் ஓதி

.. .. வினைகளறு மாறு .. மதிதாராய்

அலைகடலில் நீல நிற(ம்)மலியும் ஆலம்

.. .. அதுவிளைய ஓலம் .. எனவானோர்

.. அவர்பணிய வேலை விட(ம்)மிடறு பூணும்

.. .. அருமணியும் ஆக .. அருள்வோனே

மலரவனு(,) மாலும் அடிமுடியை நேட

.. .. வளருமெரி யாகி .. வருவோனே

.. வலியதிரை மோது கரையினரு கேர்கொள்

.. .. மயிலைநகர் மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

மலவிருளு(ம்) மூடி, உளம்-அதனில் ஆசை

.. .. வரையறை இலாது வர, நாளும்

.. மடமையொடு பாவம் இடர் பெருகும் ஈன-

.. .. வழியில் உழலாது, பவரோகம்

விலக எளிதான வழி என உளாயை

.. .. மிகவு(ம்) நினை நேய அடியாரை

.. விரவி, அவரோடு திருமுறைகள் ஓதி,

.. .. வினைகள் அறுமாறு மதி தாராய்;

அலை-கடலில் நீலநிற(ம்) மலியும் ஆலம்

.. .. அது விளைய, "ஓலம்" என வானோர்

.. அவர் பணிய, வேலை-விட(ம்) மிடறு பூணும்

.. .. அருமணியும் ஆக அருள்வோனே;

மலரவனு(ம்) மாலும் அடிமுடியை நேட,

.. .. வளரும் எரியாகி வருவோனே;

.. வலிய திரை மோது கரையின் அருகு ஏர்கொள்

.. .. மயிலைநகர் மேவு பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

மல-இருளு(ம்) மூடி, உளம்-அதனில் ஆசை வரையறை இலாது வர - மும்மலங்கள் சூழ்ந்துகொள்ள, மனத்தில் அளவின்றி ஆசைகள் எழ; (வரையறை - அளவு; எல்லை);

நாளும் மடமையொடு பாவம் இடர் பெருகும் ஈன-வழியில் உழலாது - தினமும் அறியாமையால் பாவமும் துன்பமும் பெருகுகின்ற இழிந்த வழியில் சென்று வருந்தாமல்; (இடர் - துன்பம்); (ஈனம் - இழிவு);

பவரோகம் விலக எளிதான வழி என உளாயை மிகவு(ம்) நினை நேய அடியாரை விரவி - பிறவிப்பிணி தீரச் சுலபமான வழியாக இருக்கும் உன்னை மிகவும் எண்ணுகின்ற அன்புடைய பக்தர்களை அடைந்து; (பவம் - பிறப்பு; ரோகம் - நோய்); (உளாயை - உள்ளாயை - உள்ள உன்னை); (விரவுதல் - அடைதல்; கலத்தல்);

அவரோடு திருமுறைகள் ஓதி - அவர்களோடு திருமுறைகளைப் பாடி;

வினைகள் அறுமாறு மதி தாராய் - என் வினைகள் அறும்படி அறிவைத் தருவாயாக; (மதி - அறிவு);

அலை-கடலில் நீலநிற(ம்) லியும் ஆலம் அது விளைய, "ஓலம்" வானோர் அவர் பணிய - அலைவீசும் பாற்கடலில் கரியநிறம் மிக்க ஆலகாலம் தோன்றவும், அஞ்சி "ஓலம்" என்று தேவர்கள் தொழவும்; (ஓலம் - அபயம் வேண்டி ஓலமிடுதல்);

வேலை-விட(ம்) மிடறு பூணும் அருமணியும் ஆக அருள்வோனே - அந்தக் கடல்விஷத்தைக் கழுத்தில் அணியும் அரிய நீலமணியாகும்படி அதனை உண்டருளியவனே; (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);

மலரவனு(ம்) மாலும் அடி முடியை நேட, வளரும் எரியாகி வருவோனே - பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடும்படி ஓங்கிய ஜோதியே; (மலரவன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);

வலிய திரை மோது கரையின் அருகு ஏர்கொள் மயிலை நகர் மேவு பெருமானே - வலிமையான அலை மோதுகின்ற கடலின் கரையின் அருகே அமைந்த அழகிய மயிலாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (திரை - அலை); (ஏர் - அழகு);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment