2009-11-15
S.102 - சிவன் - பேனா (Fountain pen) - சிலேடை
------------------
உண்மை வழிஒழுக ஓரக் கரங்காட்டும்
எண்ணெழுத் தேறு விடைகாட்டும் - வண்ணம்
இருக்குமிங் கெம்மையும் ஏற்குமொரு பேனா
எருக்குமதி சூடும் இறை.
சொற்பொருள்:
உண்மை - 1. உண் + மை - உண்ட மை; / உள் + மை - உள்ள மை; 2. மெய்;
ஒழுகுதல் - 1. கசிதல்; சொட்டுதல்; 2. முறைப்படி நடத்தல்;
அக்கரம் - அக்ஷரம் - அழிவில்லாதது; எழுத்து;
ஓரக்கரம் - 1. ஓரக் கரம் - விரல் நுனி; 2. ஓர் அக்கரம் - ஒப்பற்ற அழிவற்ற வஸ்து;
ஏறுதல் - 1. மிகுதல்; 2. மேலேறுதல் (to mount, climb);
விடை - 1. பதில் (Answer); 2. இடபம்;
வண்ணம் - 1. நிறம்; வகை; 2. தன்மை; குணம்;
மை - 1. மசி (ink); 2. கருநிறம்; கறை; (விடம்);
எம்மையும் - 1. எந்த மையையும்; 2. எங்களையும்; எந்த விடத்தையும்;
எருக்கு - எருக்கமலர்;
("ink" நிரப்பி எழுதும்) பேனா (Fountain pen):
உண் மை வழி ஒழுக ஓரக் கரம் காட்டும் - (அது) உண்ட மை வழியில் ஒழுக, (அதன் கறையை) விரல் நுனி காட்டும்; ("உண்மை= உள் + மை = உள்ளே இருக்கும் மை" என்றும் பொருள்கொள்ளலாம்);
எண் எழுத்து ஏறு விடை காட்டும் வண்ணம் இருக்கும் - (பரீட்சை வினாக்களுக்கு) எண்ணும் எழுத்தும் மிகுகின்ற விடையைக் (காகிதத்தில்) காட்டும்படி இருக்கும்;
இங்கு எம்-மையும் ஏற்கும் - எவ்வித மையையும் ஏற்கும்; (பல நிறங்களில் உள்ள மைகள்);
ஒரு பேனா - ("ink" நிரப்பி எழுதும்) பேனா (Fountain pen);
சிவன்:
உண்மை வழி ஒழுக ஓர் அக்கரம் காட்டும் எண் எழுத்து - மெய்ந்நெறியில் ஒழுகினால் ஒப்பற்ற அழிவற்ற பொருள் எண்ணும் எழுத்துமாய் இருப்பதைக் காட்டும்; (ஒப்பற்ற அழிவற்ற பொருளான சிவன், நாம் மெய்ந்நெறியில் ஒழுகுவதற்கு எண்ணும் ஐந்தெழுத்தைக் காட்டும் - என்றும் பொருள்கொள்ளலாம்); (அப்பர் தேவாரம் - 6.55.7 - "எண்ணும் எழுத்தும்சொல் ஆனாய் போற்றி");
ஏறு விடை காட்டும் - (தான்) ஏறுகின்ற இடபத்தைக் காட்டும்;
வண்ணம் இருக்கும் - குணம் உடைய பொருளாக இருக்கும்; (அப்பர் தேவாரம் - 5.28.4 - "இருளின் வண்ணமும் ஏழிசை வண்ணமும் .... ஆவர் ஐயாறரே");
இங்கு எம்மையும் ஏற்கும் - எங்களையும் (பக்தர்களாக) ஏற்றுக்கொள்ளும்;
எருக்கு மதி சூடும் இறை - எருக்கமலரையும் திங்களையும் சூடும் இறைவனான சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment