2009-11-21
M.044 - பாலை - மகிழும் - மடக்கு
--------------
பாலை வழிபோய்ப் படும்மனமே தேன்கலந்த
பாலை நிகர்த்தானைப் பத்தரிசை - பாலை
மகிழும் பரமனை வார்சடைமேல் வாச
மகிழும் புனைவானை வாழ்த்து.
சொற்பொருள்:
பாலை - 1. பாலைவனம்; வறண்ட பிரதேசம்; 2. பசுவின் பாலை; 3. பாலை என்ற பண்;
மகிழும் - 1. விரும்பும்; 2. மகிழம்பூவும்;
படுதல் - அழிதல்; துன்பம் அடைதல்;
பாலை வழிபோய்ப் படும் மனமே - (நல்ல வழியில் போகாமல்) வினையின் வெப்பம் மிகும் வழியில் போய்த் துன்புறுகின்ற மனமே;
தேன் கலந்த பாலை நிகர்த்தானை - தேன் கலந்த பால் போன்றவனை (= மிகவும் இனிமை பயப்பவனை);
பத்தர் இசை பாலை மகிழும் பரமனை - பக்தர்கள் இசைக்கும் பாலை என்ற பண்ணில் அமைந்த பாடல்களைக் கேட்டு மகிழ்கின்ற பரம்பொருளை; (சம்பந்தர் தேவாரம் - 1.108.10 - "பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே");
வார்-சடைமேல் வாச-மகிழும் புனைவானை வாழ்த்து - நீள்சடைமேல் மணம் கமழும் மகிழம்பூவையும் அணிகின்ற சிவபெருமானைத் துதிப்பாயாக. (உம் - எச்சவும்மை; ஈசன் சடைமேல் கங்கை, நாகம், பிறை, என வேறு பலவும் சூடியவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.77.7 - "எருக்கொடு முருக்கு மகிழ்இள வன்னியும் இவைநலம் பகர ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்");
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment