திருவெம்பாவை ஸ்பெஷல்!
2009-12-28
S.109 - சிவன் - குளம் - சிலேடை
------------------
தன்னடைந்தார் தாகந் தணிவிக்கும் மேலும்நீர்
மன்னி யிருக்கும் மலர்களுந் - துன்னுமே
ஆடவரும் பெண்களு மங்கே படியடைவர்
கோடனிலாச் சூடி குளம்.
சொற்பொருள்:
அடைதல் - 1. சேர்தல்; 2. சரண்புகுதல்;
தாகம் - 1. நீர்வேட்கை; 2. ஆசை;
தணிவித்தல் - 1. நீக்குதல்; தீர்த்தல்; 2. பூர்த்திசெய்தல்; நிறைத்தல்; (11.20.5 - "விநாயகனே வேட்கை தணிவிப்பான்");
மேலும் - 1. பின்னும்; 2. மேலே; (உம் - அசை);
மன்னுதல் - 1. நிலைபெறுதல்; 2. தங்குதல்; 3. மிகுதல்;
துன்னுதல் - செறிதல்; பொருந்துதல்; நெருங்குதல்;
ஆடுதல் - நீராடுதல்;
ஆடவரும் - 1. நீராட வருகின்ற; 2. ஆண்களும்;
படி - 1. படிக்கட்டு (steps); 2. நிலம்;
கோடனிலா - கோடல் நிலா - 1. வளைவுடைய சந்திரன்; 2. காந்தள்மலரும் சந்திரனும்;
கோடல் - 1. கோடுதல்; வளைதல்; - வளைவு; (சம்பந்தர் தேவாரம் - 3.23.11 - "கோடல்வெண் பிறையனை"); 2. காந்தள்மலர்; (சம்பந்தர் தேவாரம் - 2.29.9 - "கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்");
குளம்:
தன் அடைந்தார் தாகம் தணிவிக்கும் - தன்னை அடைந்தவர்களின் தாகத்தைத் தீர்க்கும்;
மேலும், நீர் மன்னியிருக்கும் - அதன்பின்னும், நீர் மிகுந்திருக்கும்;
மலர்களும் துன்னுமே - தாமரை முதலிய பூக்கள் செறிந்திருக்கும்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.13 - "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்");
ஆட வரும் பெண்களும் அங்கே படி அடைவர் - நீராட வருகிற பெண்களும் அங்கே படிக்கட்டைச் சேர்வார்கள்;
குளம் - ஒரு குளம்;
சிவன்:
தன் அடைந்தார் தாகம் தணிவிக்கும் - தன்னைச் சரணடைந்தவர்களின் ஆசைகளைத் தீர்ப்பான்; (அவர்கள் வேண்டும் வரங்கள் தருவான்);
மேலும் நீர் மன்னியிருக்கும்; மலர்களும் துன்னுமே - அவன் உச்சிமேல் கங்கை என்றும் தங்கியிருக்கும்; பூக்களும் பொருந்தியிருக்கும்;
ஆடவரும் பெண்களும் அங்கே படி அடைவர் - ஆண்களும் பெண்களும் நிலத்தில் வீழ்ந்து வணங்குவார்கள்;
கோடல்-நிலாச் சூடி - காந்தள்மலரையும் வளைந்த திங்களையும் சூடிய சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment