Monday, December 13, 2021

T.118 - மயிலாப்பூர் - உலகமிதில் நாளும்

2009-12-05

T.118 - மயிலாப்பூர் - உலகமிதில் நாளும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தனதனன தான

தனதனன தான .. தனதான)

(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)


உலகமிதில் நாளு(ம்) நிலையிலதில் ஆசை

.. .. உடையனென வாகி .. அதனாலே

.. உறுபிணிக ளோடு மிகுதுயரும் ஆகி

.. .. உழலுமடி யேனை .. மறவாதே

இலயமிடு தூய மலரனைய தாளை

.. .. இனியதமிழ் மாலை .. ணிநாவால்

.. இருபொழுதும் ஓதி இடர்களணு காமல்

.. .. இருநிலனில் வாழ .. அருளாயே

தலைமலியு(ம்) மாலை மணமலர்கள் ஆறு

.. .. தலையிலழ காக .. அணிவோனே

.. தலைகலனு மாக இடுபலியை நாடு

.. .. தலைவதிரு நீல .. மிடறானே

மலைமகளொர் பாதி எனமகிழும் ஈச

.. .. மழவிடைய தேறி .. வருவோனே

.. வலியவினை தீர எளியவழி யாகி

.. .. மயிலைநகர் மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

உலகம்-இதில் நாளு(ம்) நிலை இலதில் ஆசை

.. .. உடையன் என ஆகி அதனாலே,

.. உறு-பிணிகளோடு மிகு-துயரும் ஆகி

.. .. உழலும் அடியேனை மறவாதே;

இலயம் இடு தூய மலர் அனைய தாளை

.. .. இனிய தமிழ்-மாலை அணி-நாவால்

.. இருபொழுதும் ஓதி, இடர்கள் அணுகாமல்

.. .. இருநிலனில் வாழ அருளாயே;

தலை மலியு(ம்) மாலை, மண-மலர்கள், ஆறு,

.. .. தலையில் அழகாக அணிவோனே;

.. தலை கலனும் ஆக, இடுபலியை நாடு

.. .. தலைவ; திரு-நீல- மிடறானே;

மலைமகள் ஒர் பாதி என மகிழும் ஈச;

.. .. மழ-விடையது ஏறி வருவோனே;

.. வலிய வினை தீர எளிய வழி ஆகி,

.. .. மயிலைநகர் மேவு பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

உலகம் இதில் நாளும் நிலை இலதில் ஆசை உடையன் என ஆகி அதனாலே - இவ்வுலகில் நிலையில்லாதவற்றின்மேல் எப்பொழுதும் ஆசை கொண்டு, அதனால்; (இலதில் - இல்லாததில்);

உறு-பிணிகளோடு மிகு-துயரும் ஆகி உழலும் அடியேனை மறவாதே - மிகுந்த பந்தங்களும் (/ நோய்களும்) பெருந்துயரும் உண்டாகி வருந்தும் என்னை மறந்துவிடாதே; (உறு - மிகுந்த); (பிணி - பந்தம்/கட்டு; நோய்); (ஆதல் - உண்டாதல்; சம்பவித்தல்); (மறவாதே - மறந்துவிடாதே; மறவாமல்); (அப்பர் தேவாரம் - 5.57.1 - "திருக்கோளிலி மன்னனே அடியேனை மறவலே" - மறவல் = மறவாதே);

இலயம் இடு தூய மலர் அனைய தாளை இனிய தமிழ் மாலை அணி-நாவால் இருபொழுதும் ஓதி - கூத்தாடும் உன் தூய மலர் போன்ற திருவடிகளைக் காலையும் மாலையும் இனிய தமிழ்ப்-பாமாலைகளைத் தாங்கிய நாவால் போற்றிப் பாடி; (இலயம் - கூத்து);

இடர்கள் அணுகாமல் இருநிலனில் வாழ அருளாயே - எவ்விதத் துன்பமும் என்னை நெருங்காமல் இந்தப் பரந்த உலகில் வாழ்வதற்கு அருள்வாயாக! (இடர் - துன்பம்); (இருநிலன் - இருநிலம் - பரந்த உலகம்);

தலை மலியு(ம்) மாலை, மண-மலர்கள், ஆறு, தலையில் அழகாக அணிவோனே - மண்டையோடுகளால் ஆன மாலையையும், வாசம் கமழும் பூக்களையும், கங்கையையும் தலையில் அழகுறச் சூடியவனே; (மலிதல் - மிகுதல்); (தலை மலியும் மாலை - கரோடி - சிரமாலை);

தலை கலனும் ஆக, இடுபலியை நாடு தலைவ - மண்டையோடு பிச்சைப்பாத்திரமும் ஆக, இடும் பிச்சையை விரும்பும் தலைவனே; (இடுபலி - பிச்சை); (அப்பர் தேவாரம் - 4.9.1 - "தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந் தலைவனை");

திரு-நீல-மிடறானே - திருநீலகண்டனே; (மிடறு - கண்டம்);

மலைமகள் ஒர் பாதி என மகிழும் ஈச - பார்வதியை உடலில் ஓர் கூறாக உடைய ஈசனே; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

மழவிடையது ஏறி வருவோனே - ளைய எருதினை வாகனமாக உடையவனே; (மழ - இளைய);

வலிய வினை தீர எளிய வழி ஆகி, மயிலைநகர் மேவு பெருமானே - வலிய வினைகள் எல்லாம் தீர்வதற்கு ஓர் எளிய வழியாகி, மயிலாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment