2009-12-14
S.106 - சிவன் - வில்வீரன் - சிலேடை
------------------
சிலையதன் நாணரவஞ் செய்யும் பகைவர்
அலையுமதில் மாயும் அபயம் - நிலவிடும்
கையில் வளையும் தனுக்காட்டும் ஓர்வீரன்
மையணி கண்டத்தெம் மான்.
சொற்பொருள்:
சிலை - 1. வில்; 2. மலை;
அரவம் - 1. ஒலி; 2. பாம்பு;
அலையுமதில் - 1. அலையும் அதில்; 2. அலையும் மதில்;
வளையும் - 1. வளைகின்ற; 2. வளையலும்;
தனு - 1. வில்; 2. உடல்;
மை - கருமை;
வில்வீரன்:
சிலையதன் நாண் அரவம் செய்யும் - வில்லினது நாண் ஒலி எழுப்பும்;
பகைவர் அலையும் அதில் மாயும் - அலைபோல் வரும் பகைவர் படையும் அந்த வில்லால் அழியும்; (அதில் - அதனால்; உருபுமயக்கம் என்று கருதலாம்);
அபயம் நிலவிடும் - அச்சம் இல்லாத நிலை இருக்கும்;
கையில் வளையும் தனுக் காட்டும் - கையில் வளையும் வில்லைக் காட்டுகின்ற;
ஓர் வீரன் - ஒரு (விற்போர் வல்ல) வீரன்; (ஓர் - ஒரு; ஒப்பற்ற);
சிவன்:
சிலையதன் நாண் அரவம் செய்யும் - மேருமலை என்ற வில்லினது நாண் பாம்பு ஆகும்;
பகைவர் அலையும் மதில் மாயும் - அசுரர்களது திரிகின்ற மும்மதில்களும் (அந்த வில்லால்) அழியும்;
அபயம் நிலவிடும் - (தேவர்களுக்கு) அச்சமின்மை கிட்டும்;
கையில் வளையும் தனுக் காட்டும் - கையில் வளையலையும் திருமேனி காட்டும்; (அர்த்தநாரீஸ்வரக் கோலம்);
மை அணி கண்டத்து எம்மான் - கருமையைக் கண்டத்தில் அணிந்த எம்பெருமான்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment