Tuesday, February 23, 2016

02.85 – திருந்துதேவன்குடி - ("கற்கடேஸ்வரர் கோயில்")

02.85 – திருந்துதேவன்குடி - ("கற்கடேஸ்வரர் கோயில்")

2013-05-01
திருந்துதேவன்குடி (இக்காலத்தில் "கற்கடேஸ்வரர் கோயில்" - "திருவிசநல்லூர்" அருகுள்ளது)
----------------------
(பன்னிரண்டு பாடல்கள்)
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.1.1 - “அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற் றம்பலம்)


1)
வேலன் தாதை விடமுண் மிடற்றினில்
நீலன் கண்ணமர் நெற்றியன் நீறணி
சீலன் செய்சூழ் திருந்துதே வன்குடிச்
சூலன் தாள்தொழு வார்க்கிலை துன்பமே.


வேலன் தாதை - முருகனுக்குத் தந்தை;
விடம் உண் மிடற்றினில் நீலன் - விடத்தை உண்ட கழுத்தில் நீலநிறம் உடையவன்;
கண் அமர் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;
நீறு அணி சீலன் - திருநீறு பூசியவன்;
செய் சூழ் திருந்துதேவன்குடிச் சூலன் - வயல் சூழ்ந்த திருந்துதேவன்குடியில் உறைகின்ற சூலபாணி; (செய் - வயல்);
தாள் தொழுவார்க்கு இலை துன்பமே - அப்பெருமானுடை திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்குத் துன்பம் இல்லை;


2)
மெய்யன் வெண்பொடி மேனியன் மான்மறிக்
கையன் கண்டத்தில் மையன் எரிபுரை
செய்யன் செய்சூழ் திருந்துதே வன்குடி
ஐயன் தாள்தொழு வார்க்கிலை அல்லலே.


மெய்யன் - மெய்ப்பொருள்;
வெண்பொடி - திருநீறு;
மான்மறி - மான்கன்று;
மை - கருமை;
எரி புரை செய்யன் - தீப்போல் சிவந்தவன்;
(புரைதல் என்ற வினைச்சொல் இங்கே வினைத்தொகையாக வருகின்றது);
(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8 - "முந்திய முதல்நடு இறுதியு மானாய் ..... செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி....);
ஐயன் - தலைவன்;


3)
பார்த்தன் செய்தவம் கண்டு பரிந்தவன்
ஆத்தன் ஆரழல் நேத்திரன் அஞ்சடைத்
தீர்த்தன் செய்சூழ் திருந்துதே வன்குடிக்
கூத்தன் தாள்தொழு வார்க்கின்பம் கூடுமே.


பார்த்தன் செய் தவம் கண்டு பரிந்தவன் - அருச்சுனன் செய்த தவத்தைக் கண்டு இரங்கி அருள்புரிந்தவன்;
ஆத்தன் - ஆப்தன் - இஷ்டன்; நம்பத்தக்கவன்;
ர் அழல் நேத்திரன் - அரிய தீப் பொருந்திய நெற்றிக்கண் உடையவன்;
அம் சடை - அழகிய சடை;
தீர்த்தன் - பரிசுத்தன்; தூயவன்; ('தீர்த்தம் - கங்கை' என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்);
கூடுதல் - பொருந்துதல்; மிகுதல்;


4)
விருத்தன் வேயன தோளி விரும்பிய
ஒருத்தன் சென்னியில் ஒண்மதி சூடிய
திருத்தன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நிருத்தன் தாள்தொழு வார்வினை நீங்குமே.


விருத்தன் - பழையவன்;
வேய் அன தோளி - மூங்கில் போன்ற புஜங்களை உடைய பார்வதி;
ஒருத்தன் - ஒருவன்; ஒப்பற்றவன்;
ஒண் மதி - ஒளி வீசும் பிறைச்சந்திரன்;
திருத்தன் - அழகியவன்; தூயவன்;
நிருத்தன் - கூத்தன்;


5)
தூயன் தொன்மறை நாலும் துதிசெயும்
நாயன் பங்கினில் நாரியன் அங்கையில்
தீயன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நேயன் தாள்தொழு வார்வினை நீங்குமே.


தொன்மறை - பழமையான வேதங்கள்;
நாயன் - தலைவன்; கடவுள்; (இச்சொல்லின் அடிப்படையில்தான் அடியவர்களை 'நாயன்மார்' என்று வழங்குவதும்);
பங்கினில் நாரியன் - ஒரு பங்கில் பெண்ணை உடையவன்;
அங்கை - உள்ளங்கை;
தீயன் - தீயை ஏந்தியவன்;
நேயன் - விரும்பியவன்; அன்புடையவன்;


6)
கலையொன் றேந்திய கையன் கயிலாய
மலையன் மாமதில் மூன்றை எரித்தவெஞ்
சிலையன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நிலையன் தாள்தொழு வார்வினை நீங்குமே.


கலை - மான்;
வெம் சிலை - கொடிய வில்;
நிலையன் - நிலைத்து இருப்பவன்; உறைபவன்;


7)
கொல்வன் கூற்றைக் குமைத்தவன் சென்னிமேல்
வில்வன் வெல்வெள் விடையன் பலிதிரி
செல்வன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நல்லன் தாள்தொழு வார்வினை நாசமே.


கொல் வன் கூற்று - கொல்லும், கொடிய எமன்;
குமைத்தல் - கொல்லுதல்;
வில்வன் - வில்வம் புனைந்தவன்; (உதாரணங்கள்: மத்தம் - மத்தன்; அரவம் - அரவன்;
அப்பர் தேவாரம் - 5.4.3 - "மத்தனை மதிசூடியை" - மத்தன் - ஊமத்த மலரை அணிந்தவன்;
சுந்தரர் தேவாரம் - 7.81.6 - "....படமுடைய அரவன்" - படமுடைய பாம்பை உடையவன்);
வெல் வெள் விடையன் - வெற்றி உடைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்;
பலி திரி செல்வன் - பிச்சைக்கு உழலும் செல்வன்;
நல்லன் - நல்லவன்; நன்மையுடையவன்;


8)
வரையின் கீழிலங் கைக்கிறை வாய்பத்தும்
பரவிப் பாடப் பரிந்தவன் செஞ்சடைத்
திரையன் செய்சூழ் திருந்துதே வன்குடி
அரையன் தாள்தொழு வார்க்கிலை அல்லலே.


வரை - மலை; கயிலைமலை;
இலங்கைக்கு இறை - இலங்கைக்கு மன்னன் - இராவணன்;
பரவுதல் - துதித்தல்;
செஞ்சடைத் திரையன் - செஞ்சடையில் கங்கையை உடையவன்; (திரை - அலை; நதி);
அரையன் - அரசன்;


9)
பாசன் மார்பில் உதைத்தவன் பார்வதி
நேசன் மாலயன் நேடு முடிவிலாத்
தேசன் செய்சூழ் திருந்துதே வன்குடி
ஈசன் தாள்தொழு வார்க்கிலை இன்னலே.


பாசன் - பாசம் வீசும் எமன்;
மால் அயன் நேடு - திருமாலும் பிரமனும் தேடிய;
முடிவு இலாத் தேசன் - எல்லையற்ற ஒளியுருவினன்;


10)
மற்றோர் மார்க்கமுண் டென்று மயங்குவார்
கற்றார் அல்லர் கடிமதில் மூன்றினைச்
செற்றான் செய்சூழ் திருந்துதே வன்குடி
உற்றான் தாள்தொழு வார்வினை ஓடுமே.


பதம் பிரித்து:
மற்று ஓர் மார்க்கம் உண்டு என்று மயங்குவார்
கற்றார் அல்லர்; கடி மதில் மூன்றினைச்
செற்றான், செய் சூழ் திருந்துதேவன்குடி
உற்றான் தாள் தொழுவார் வினை ஓடுமே.


கடி மதில் மூன்று - காவலுடைய முப்புரங்கள்;
செற்றான் - அழித்தவன்; (செறுதல்- அழித்தல்);
உற்றான் - உற்றவன் - நண்பன்; உறைபவன்; (உறுதல் - தங்குதல் (To dwell, reside));
ஓடுதல் - நீங்குதல்; (சம்பந்தர் தேவாரம் - 2.76.2 - "துன்னங்கொண்ட டையான் ... அகத்தியான் பள்ளியை உன்னஞ்செய்த மனத்தார்கள் தம் வினையோடுமே.");


11)
அட்ட மூர்த்தி அரண்மூன்றை அட்டவன்
நட்டன் ஆலின்கீழ் நால்வர்க் கறமுரை
சிட்டன் செய்சூழ் திருந்துதே வன்குடி
இட்டன் தாள்தொழு வார்க்கிலை இன்னலே.


அட்டமூர்த்தி - ஐம்பூதங்களும் ஞாயிறும் மதியும் உயிருமாகிய எண்வகை வடிவு.
அரண்மூன்றை அட்டவன் - முப்புரங்களை அழித்தவன்; (அடுதல் - அழித்தல்);
நட்டன் - நடனமாடுபவன்;
ஆலின்கீழ் நால்வர்க்கு அறம் உரை சிட்டன் - கல்லால மரத்தின்கீழ்ச் சனகாதியர் நால்வருக்கு மறைப்பொருள் விரித்த தட்சிணாமூர்த்தி; (சிட்டன் - சிஷ்டன்; உயர்ந்தவன்);
இட்டன் - இஷ்டன் - விருப்பம் உடையவன்;
(அப்பர் தேவாரம் - 5.4.1 - "வட்ட னைம்மதி சூடியை ... இட்டனை..." - இட்டம் உடையோன் இட்டன் ; முதல்வன் உயிர்களுக்குச் சிவத்துவத்தை வழங்கும் விருப்பம் உடையான் ஆதல்பற்றி இட்டன் எனப்பட்டான்.);
(சுந்தரர் தேவாரம் - 7.48.7 - "விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன்...பாண்டிக் கொடுமுடி விரும்பனே" - விரும்பப்படுபவனே - 'நம்பன்' என்பதனை, 'விரும்பன்' என்று அருளினார்);


12)
முன்னன் முக்கணன் முப்புரி நூலினன்
மின்னன் மெல்லிடை மாதமர் மேனியன்
தென்னன் செய்சூழ் திருந்துதே வன்குடி
மன்னன் தாள்தொழு வார்வினை மாயுமே.


முன்னன் - முன்னவன் - எல்லாவற்றிற்கும் முன் இருப்பவன்; (திருவாசகம் - திருச்சதகம் - 99: "மன்ன எம்பிரான் வருக .... யாரினும் முன்ன எம்பிரான் வருக ...");
மின்னன் மெல்லிடை = மின்னல் + மெல் + இடை;
மின்னல் மெல்லிடை மாது - மின்னல் போல் மெலிந்த இடையை உடைய உமையம்மை;
தென்னன்செய் - தென் நன்செய் - அழகிய நன்செய் வயல்; (நன்செய் - நெற்பயிர் உண்டாம் கழனி - Wet lands);
("தென்னன் + செய்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம்; தென்னன் - அழகியவன்; தென்னாடுடையவன்; என்றும் பொருள்கொள்ளலாம்);


அன்போடு,
வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
  • கலிவிருத்தம் - 4 அடிகள்; அடிக்கு 4 சீர்கள்;
  • முதற்சீர் மாச்சீர்;
  • இரண்டாம் சீர் நேர்சையில் தொடங்கும்;
  • 2-3-4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.
  • அடி நேரசையில் தொடங்கினால் அடிக்குப் 11 எழுத்துகள்; அடி நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் 12 எழுத்துகள்;
2) அப்பர் தேவாரம் - 5.90.1 - (திருக்குறுந்தொகை) -
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.


3) திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=386
திருந்துதேவன்குடி தலக்குறிப்பு: http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=357
'திருமுறைத் தலங்கள்' என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:
திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. ‘கோயிலைச் சுற்றி அகழியுள்ளது.’.

-------------- --------------

No comments:

Post a Comment