Saturday, February 6, 2016

02.74 – சிவபுரம் - (திருமுக்கால்)

02.74சிவபுரம் - (திருமுக்கால்)



2013-01-16
சிவபுரம் (இத்தலம் கும்பகோணத்தை அடுத்துச் சாக்கோட்டைக்கு அருகுள்ளது)
---------------
(திருமுக்கால் அமைப்பில்)
(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி சிறுகுடி மேவிய")



1)
கைப்புடை நஞ்சமு துண்டருள் கண்ணுதல்
முப்புரம் படநகைத் தானே
முப்புரம் படநகைத் தான்பதி முகில்பொழி
அப்படை சிவபுரம் அதுவே.



பதம் பிரித்து:
கைப்பு உடை நஞ்சு அமுது உண்டு அருள் கண்ணுதல்;
முப்புரம் பட நகைத்தானே;
முப்புரம் பட நகைத்தான் பதி முகில் பொழி
அப்பு அடை சிவபுரம் அதுவே.


கைப்பு - கசப்பு;
கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்;
படுதல் - அழிதல்;
நகைத்தான் - நகைத்தவன்; (நகைத்தல் - சிரித்தல்;)
பதி - தலம்;
அப்பு - நீர்;



2)
மினலிடை யாளொரு கூறமர் மேனியன்
கனல்திகழ் கண்ணுடை யானே
கனல்திகழ் கண்ணுடை யான்பதி காவிரிப்
புனலடை வண்சிவ புரமே.



மினல் - மின்னல்; (இடைக்குறை விகாரம்);
கூறு - பாகம்;
கனல் திகழ் கண் - நெருப்பு இருக்கும் நெற்றிக்கண்;
வண் சிவபுரம் - வளமையான சிவபுரம்; (வண்மை - வளப்பம்; அழகு);



3)
மாமதி சூடிய மன்னவன் அருகணை
காமனைக் காய்ந்தகண் ணானே
காமனைக் காய்ந்தகண் ணான்பதி காவிரி
ஆமடை சிவபுரம் அதுவே.



மா மதி - அழகிய சந்திரன்;
அருகு அணை காமனை - பக்கத்தில் வந்த மன்மதனை;
ஆம் - நீர்; (6.28.6 - "காமனையும் கரியாகக் காய்ந்தார் போலுங் ...ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்"); (சேந்தனார் அருளிச் செய்த திருவிசைப்பா - 9.6.6 - "வேந்தன் வளைத்தது மேருவில் ... ஆந்தண் திருவா வடுதுறை யான்செய்கை யார்அறி கிற்பரே" - ஆம் - நீர். 'அதனால் உண்டாகிய தண்மையை உடைய திருவாவடுதுறை' என்க. );



4)
படமணி பாம்பொடு பால்மதி சேர்த்தவன்
விடமணி மிளிர்மிடற் றானே
விடமணி மிளிர்மிடற் றான்பதி விரிபொழில்
புடையணி வண்சிவ புரமே.



படம் அணி பாம்பு - நாகப்பாம்பு;
பால் மதி - வெண்திங்கள்;
மிளிர்தல் - பிரகாசித்தல்;
விட மணி மிளிர் மிடற்றான் - விஷம் நீலமணி போல் திகழும் கண்டத்தன்;
விரிபொழில் புடை அணி வண் சிவபுரம் - விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமையான சிவபுரம்;



5)
கூறணி மாதமர் கொள்கையன் நூலொடு
நீறணி நெஞ்சுடை யானே
நீறணி நெஞ்சுடை யான்பதி நீள்வயல்
சேறணி சிவபுரம் அதுவே.



கூறு அணி மாது அமர் கொள்கையன் - பங்காக அழகிய உமாதேவியாரை விரும்புபவன்;
நூலொடு நீறு அணி நெஞ்சு உடையான் - பூணூலும் திருநீறும் திகழும் மார்பினன்;
நீள்வயல் சேறு அணி சிவபுரம் - சேறு திகழும் நீண்ட வயல்கள் சூழ்ந்த சிவபுரம்;



6)
மண்புனல் விண்ணனல் வளியென வருபவன்
கண்புனை நெற்றியி னானே
கண்புனை நெற்றியி னான்பதி கார்தொடு
திண்பொழிற் சிவபுரம் அதுவே.



மண் புனல் விண் அனல் வளி என வருபவன் - நிலம், நீர், ஆகாயம், தீ, காற்று என ஐம்பூதங்கள் ஆனவன்; (ஐம்பூதங்களின் வரிசை யாப்பிற்காக முறை மாறி வந்தன);
புனைதல் - அணிதல்;
கார் தொடு - மேகம் தீண்டுகின்ற;
திண் பொழில் - அடர்ந்த சோலை;



7)
வெங்கரி உரியுடல் மிசையணி சங்கரன்
பங்கினிற் பாவையி னானே
பங்கினிற் பாவையி னான்பதி பைம்பொழில்
தெங்குயர் சிவபுரம் அதுவே.



வெம் கரி - கொடிய யானை;
உரி - தோல்;
வெங்கரி உரி உடல் மிசை அணி சங்கரன் - கொடிய யானையின் தோலைத் திருமேனிமேல் அணியும் சங்கரன்;
பைம்பொழில் - பசிய சோலைகள்;
தெங்கு - தென்னைமரம்;



8)
நகமது பெயர்தச முகனழ நகமிடு
புகழ்மலி பொற்சடை யானே
புகழ்மலி பொற்சடை யான்பதி பூம்பொழில்
திகழ்திருச் சிவபுரம் அதுவே.



நகம் அது பெயர் தசமுகன் அழ நகம் இடு - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழுமாறு பாதவிரல் ஒன்றின் நகத்தை ஊன்றிய; (நகம் - 1. மலை; 2. உகிர்); 
புகழ் மலி பொற்சடையானே - புகழ் மிக்க பொற்சடையினன்;
பூம்பொழில் - பூஞ்சோலை;



9)
நான்முகன் நாரணன் நண்ணுதற் கரியவன்
வான்மதி வாழ்சடை யானே
வான்மதி வாழ்சடை யான்பதி வண்டுகள்
தேன்மகிழ் சிவபுரம் அதுவே.



நண்ணுதல் - அணுகுதல்; அடைதல்; ( To draw near, approach, reach);
நான்முகன் நாரணன் நண்ணுதற்கு அரியவன் - பிரமனாலும் விஷ்ணுவாலும் அடைய ஒண்ணாதவன்;
வான்மதி - வான் + மதி / வால் + மதி;
வான் - வானம்; அழகு;
வால் - வெண்மை; தூய்மை; இளமை;
வான் மதி வாழ் சடையான் - அழகிய வெண்பிறை வாழும் சடையினன்;
வண்டுகள் தேன் மகிழ் சிவபுரம் - வண்டுகள் தேனை உண்டு களிக்கும் (மலர் மலிந்த பொழில் சூழ்ந்த) சிவபுரம்;


(பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம்- #93:
"நாமார்க்குங் குடியல்லோம் என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்....");



10)
புறனுரை புல்லர்கள் போதனை அறிகிலர்
அறனுரை அடிகளெம் மானே
அறனுரை அடிகளெம் மான்பதி அளியிசை
அறைபொழிற் சிவபுரம் அதுவே.



புறனுரை - பழிச்சொல்; வெற்றுரை (Meaningless utterance);
புறன் உரைத்தல் - பொருந்தாத புறம்பான உரைகளைச் சொல்லுதல்;
புல்லர்கள் - அறிவீனர்; கீழோர்;
போதன் - ஞானவடிவினன்;
போதனை - ஞானம்;
அறன் உரைத்தல் - தர்மோபதேசம் செய்தல்;
அடிகள் - கடவுள்;
அறன் உரை அடிகள் - கல்லால மரத்தின்கீழ்த் தர்மோபதேசம் உரைக்கும் தட்சிணாமூர்த்தி;
எம்மான் - எம் சுவாமி;
அளி இசை அறை பொழில் சிவபுரம் - வண்டுகள் இசை ஒலிக்கும் சோலை சூழ்ந்த சிவபுரம்;
(பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.186 - "பண்பயில்வண் டறைசோலை சூழுங் காழிப் பரமர்..." - இசை பாடுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழி இறைவர்...);
(சம்பந்தர் தேவாரம் - 2.46.3 -
கல்லா னிழன்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா வறனுரையும் இன்னருளால் சொல்லினான்...);



11)
வரையென வருகரி அதனுரி போர்த்தவன்
அரையினில் அரவசைத் தானே
அரையினில் அரவசைத் தான்பதி அரிசிலின்
திரைபொரு சிவபுரம் அதுவே.



வரை - மலை;
என - ர் உவமருபு (A sign of comparison);
கரி - யானை;
உரி - தோல்;
அசைத்தல் - கட்டுதல்;
அரிசில் - காவிரியின் கிளைநதிகளுள் ஒன்றின் பெயர்; (Name of a distributary of the Kaveri river)
அரிசிலின் திரை பொரு சிவபுரம் - அரிசில் ஆற்றின் அலை மோதுகின்ற சிவபுரம்;


(சம்பந்தர் தேவாரம் - 1.112.1
இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரனகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.


சம்பந்தர் தேவாரம் - 1.112.3
மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க உரிசெய்த குழகனகர்
அலைமல்கும் அரிசிலின் அதனயலே
சிலைமல்கு மதிளணி சிவபுரமே.)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம்.
முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி.



திருமுக்கால் பாடல் அடிகளின் அமைப்பு:
தானன தானன தானன தானன
தானன தானன தானா
தானன தானன தானன தானன
தானன தானன தானா



தானன வரும் இடத்தில் தனதன வரலாம். அதேபோல் தானா வரும் இடத்தில் தனனா வரலாம்.
தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்.
1, 3-ஆம் அடிகளின் ஈற்றில் உள்ள தானன என்பது தானனா என்றும் ஒரோவழி (சில சமயம்) வரலாம்.



இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).



2) சம்பந்தர் தேவாரம் - 3.97.1 -
திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி ரவுடை யீரே
படமலி ரவுடை யீருமைப் பணிபவர்
அடைவதும் அமருல கதுவே.



3) சிவபுரம் - சிவகுருநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=958

----------- --------------

No comments:

Post a Comment