Saturday, February 27, 2016

02.89 – எதிர்கொள்பாடி ("மேலைத் திருமணஞ்சேரி")

02.89எதிர்கொள்பாடி ("மேலைத் திருமணஞ்சேரி")



2013-06-29
எதிர்கொள்பாடி (இக்காலத்தில் "மேலைத் திருமணஞ்சேரி")
---------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா கூவிளம்' - அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 2.100.1 - "படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம் விட்ட போதின்கண்")



1)
தாரத் தோடு மக்களும் தவிக்கத் தழல்பு காமுனம்
வாரத் தோடு வார்கழல் வணங்கச் சேரென் நெஞ்சமே
தேரச் சிறத்தாள் இட்டவன் திரியும் புரங்கள் சுட்டவன்
ஈரச் சடையன் மேவுமூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



தாரத்தோடு மக்களும் தவிக்கத் தழல் புகாமுனம் - மனைவியும் மக்களும் தவிக்கும்படி, (உன் உயிர் பிரிந்து இவ்வுடல்) தீயில் புகுவதன் முன்னமே;
வாரம் - அன்பு;
வார்கழல் - வினைத்தொகை - நீண்ட கழல்கள் - திருவடி;
தேர் அச்சு இறத் தாள் இட்டவன் - தேவர்கள் செய்த தேரின் அச்சு முரியுமாறு ஏறியவன்;
ஈரச் சடையன் மேவும் ஊர் - கங்காதரன் உறைகின்ற தலம்;
எழில்கொள் எதிர்கொள்பாடியே - அழகிய எதிர்கொள்பாடி;



2)
கயலொண் கண்ணி மாரழக் கால னூர்செ லாமுனம்
புயல்மி டற்றன் பொன்னடி போற்றச் சேரென் நெஞ்சமே
வெயிலில் நிழல்போல் காப்பவன் வெள்ளச் சடையன் மேவலர்
எயில்கள் எரித்த ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



கயல் ஒண் கண்ணிமார் அழக் - கயல்மீன் போன்ற கண் உடைய பெண்கள் - மனைவியும் மற்ற சுற்றத்தினரும் அழும்படி;
காலனூர் செலாமுனம் - எமபுரத்திற்குச் செல்வதன்முன்னம்;
புயல் மிடற்றன் - மேகம் போன்ற கண்டம் உடையவன்;
(திருக்கோவையார் - 23 வேந்தற்குற்றுழிப்பிரிவு - # 10 - "தேன்றிக் கிலங்கு .... திண்டோட் கொண்டற் கண்டன்..." - திண்ணிய தோள்களையுங் கொண்டல்போலுங் கண்டத்தையும் உடையான்; கொண்டல் = மேகம்);
மேவலர் - பகைவர்;
எயில் - கோட்டை;



3)
ஊரார் தொடரப் பாடைமேல் ஊர்வ லம்செ லாமுனம்
பேரா அன்பால் வார்கழல் பேணச் சேரென் நெஞ்சமே
வாரார் முலையாள் பங்கினன் வானோர் தம்மைக் காத்தருள்
ஏரார் கண்டன் மேவுமூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



ஊரார் தொடரப் பாடைமேல் ஊர்வலம் செலாமுனம் - ஊரில் உள்ளோர் எல்லாம் தொடர்ந்து வர, இவ்வுடல் பாடைமேல் ஊர்வலம் போவதன் முன்னமே;
பேரா அன்பால் - மாறாத பக்தியோடு;
வார்கழல் பேணச் சேரென் நெஞ்சமே - (சிவபெருமானின்) நீண்ட திருவடிகளை வணங்குவதற்கு அடை என் மனமே; (பேணுதல் - போற்றுதல்);
வார் ஆர் முலையாள் - வார் அணிந்த முலைமங்கை - உமையம்மை;
ஏர் ஆர் கண்டன் - அழகிய கண்டத்தன் - நீலகண்டன்;



4)
கூற வொண்ணா வாதைசெய் கூற்றத் தாரி ழாமுனம்
நீற ணிந்து நீள்கழல் நினைந்து சேரென் நெஞ்சமே
ஆற ணிந்த செஞ்சடை அண்ணல் ஆலம் உண்டவன்
ஏற தேறும் ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



கூற ஒண்ணா வாதைசெய் கூற்றத்தார் இழாமுனம் - சொல்ல இயலாத துன்பத்தைத் தரும் எமதூதர்கள் வந்து இழுத்துச்செல்வதன் முன்னமே; (வாதை - துன்பம்);



5)
திரளாய்ச் சுற்றம் ஆர்த்தழத் தீயி னுட்பு காமுனம்
பொருளா வதுபொற் றாளெனப் போற்றிச் சேரென் நெஞ்சமே
அருளார் கண்ணன் ஆதியாய் அந்த மான சங்கரன்
இருளார் கண்டன் மேவுமூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



திரள் ஆய்ச் சுற்றம் ஆர்த்து அழத் தீயினுள் புகாமுனம் - கூட்டம் ஆகி உறவினர்கள் ஒலித்து அழ, இவ்வுடல் தீயில் புகுவதன் முன்னமே; (ஆர்த்து அழ - கூவி அழ);
பொருள் ஆவது பொற்றாள் எனப் - மெய்ப்பொருள் ஆவது பொன்னடி என்று;
அருள் ஆர் கண்ணன் - அங்கணன்;
ஆதி ஆய் அந்தம் ஆன சங்கரன் - முதல் ஆகி முடிவும் ஆன சங்கரன்; (சங்கரன் - நன்மை செய்பவன);
இருள் ஆர் கண்டன் - நீலகண்டன்;



6)
நேற்றி ருந்தார் இன்றவர் நீறா னாரெ னாமுனம்
நாற்ற மலர்க ளால்தொழ நாடு வாயென் நெஞ்சமே
தோற்றம் அந்தம் அற்றவன் துண்டத் திங்கள் சென்னிமேல்
ஏற்று கந்த ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



நேற்று இருந்தார் இன்று அவர் நீறு ஆனார் எனாமுனம் - நேற்று உயிரோடு இருந்தார், இன்று அவர் சாம்பல் ஆகிவிட்டார் என்று பிறர் சொல்வதன் முன்னமே; (நீறு - சாம்பல்);
நாற்றம் - வாசனை; (நாற்ற மலர்கள் - மணம் பொருந்திய மலர்கள்);
தோற்றம் அந்தம் - முதலும் முடிவும்;
துண்டத் திங்கள் - பிறைச்சந்திரன்;
ஏல்தல்/ஏற்றல் - சுமத்தல்; தாங்குதல்;
உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்;



7)
சுமையாய் நால்வர் தோள்மிசைத் தூக்கும் நாளெய் தாமுனம்
கமையார் எந்தை வார்கழல் கருதிச் சேரென் நெஞ்சமே
உமையாள் கூறன் உண்பலி ஓர்சி ரத்தில் ஏற்பவன்
இமையா முக்கண் ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



சுமையாய் நால்வர் தோள்மிசைத் தூக்கும் நாள் எய்தாமுனம் - இவ்வுடலை நான்குபேர் தோளில் சுமக்கும் தினம் வந்தடைவதன்முன்;
கமை ஆர் எந்தை வார்கழல் - நம் குற்றங்களை எல்லாம் பொறுத்து அருளும் தந்தையாகிய சிவபெருமானுடைய கழல் அணிந்த திருவடியை; (கமை - க்ஷமை - பொறுமை; அருள்; (क्षमा - Patience, forbearance, forgiveness);
கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்;
உமையாள் கூறன் - உமைபங்கன்;
உண் பலி ஓர் சிரத்தில் ஏற்பவன் - பிரமகபாலத்தில் ஐயம் தேர்பவன்;
இமையா முக்கண் ஈசன் - இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய இறைவன்;



8)
சுருக்கை வீசும் தூதுவர் துன்னி இடர்செய் யாமுனம்
இருக்கு நாவர் தாளிணை ஏத்திச் சேரென் நெஞ்சமே
தருக்கி மலைய சைத்தவன் தலைகள் பத்த டர்த்தவர்
எருக்கும் சூடும் ஈசரூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



சுருக்கு - கண்ணி (Noose, snare, trap) - காலபாசம் (Yama's noose, as an instrument of death);
துன்னுதல் - நெருங்குதல்; அடைதல்;
இருக்கு நாவர் - வேதநாவர் - வேதங்களை ஓதிய நாவை உடையவர் - சிவபெருமான்;
தாளிணை - இரு திருவடிகள்;
தருக்குதல் - அகந்தைகொள்ளுதல் (To be proud, vain, arrogant);
தலைகள் பத்து அடர்த்தவர் - பத்துத் தலைகளையும் நசுக்கியவர்; (அடர்த்தல் - நசுக்குதல்);
எருக்கும் சூடும் ஈசர் - (தலையில் சந்திரன், கங்கை, பாம்பு, கொன்றை,,, இவற்றோடு) எருக்கம்பூவும் அணியும் இறைவர்;
(சம்பந்தர் தேவாரம் - 2.85.9 "பலபல வேடமாகும் பரன்.... சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்.....");



9)
அண்டித் தூதர் வந்ததால் ஆவி போய்வி ழாமுனம்
தண்ட மிழ்ப்பா மாலைகள் சாத்திச் சேரென் நெஞ்சமே
கொண்டல் வண்ண னோடயன் கோவென் றேத்த ஓங்கினான்
இண்டை வேணி ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



அண்டித் தூதர் வந்ததால் - எமதூதர்கள் நெருங்கி வந்து அடைந்ததால்;
ஆவி போய் விழாமுனம் - உயிர் நீங்கி இவ்வுடல் விழுவதன் முன்னமே;
தண் தமிழ்ப் பாமாலைகள் - தேவாரம் திருவாசகம் முதலியன;
சாத்துதல் - அணிதல் (To put on, adorn);
கொண்டல் வண்ணன் - மேக நிறத்தினன் - திருமால்;
அயன் - பிரமன்;
கோ - தலைவன்;
ஓங்குதல் - உயர்தல்;
இண்டை வேணி ஈசன் ஊர் - சடையில் இண்டையை அணியும் ஈசன் உறையும் தலமான;
(இண்டை - தலையில் அணியும் மாலைவகை; வேணி - சடை);



10)
உளறல் தன்னைத் தத்துவம் உய்யும் நெறியென் றோதுவார்
அளவில் பொய்கள் சொல்லுவார் அவர்சொல் நீங்கி வம்மினீர்
வளைவில் கொண்டு முப்புரம் மாயக் கணையை எய்தவன்
இளவெள் ளேற தேறியூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



உளறல் தன்னைத் தத்துவம், உய்யும் நெறின்று ஓதுவார் - பொருளற்ற வார்த்தைகளையெல்லாம் பெரிய தத்துவம் என்றும், உய்கின்ற மார்க்கம் என்றும் பேசுவார்கள்;
அளவு இல் பொய்கள் சொல்லுவார் - பல பொய்களைச் சொல்வார்கள்;
அவர் சொல் நீங்கி வம்மினீர் - அவர்கள் பேச்சை நீங்கி வாருங்கள்;
வளை வில் கொண்டு முப்புரம் மாயக் கணையை எய்தவன் - வளைத்த வில்லால் முப்புரங்களும் அழியக் கணை தொடுத்தவன்; (மாய்தல் - அழிதல்);
இள வெள் றுஅது ஏறி ஊர் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம்;



11)
வாழ வேண்டில் நெஞ்சமே வணங்கி ஒல்லை சேர்திநீ
போழம் மதிபு னைந்தவன் பூவைத் தூவி வானவர்
வேழம் வந்து போற்றிய விகிர்தன் பவள மேனியன்
ஏழை கூறன் மேவுமூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



வாழ வேண்டில் நெஞ்சமே வணங்கி ஒல்லை சேர்தி நீ - மனமே, நீ நற்கதி பெற விரும்பினால், ஈசனை வணங்கி விரைந்து அடைவாயாக;
(ஒல்லை - சீக்கிரம்; விரைவாக;
சேர்தி - சேர்; (இகர ஈற்று ஏவல் வினைமுற்று);
போழ் அம் மதி புனைந்தவன் - பிளவுபட்ட அழகிய பிறைச்சந்திரனை அணிந்தவன்; (போழ்தல் - பிளவுபடுதல்/பிளத்தல்; போழ் - துண்டம்);
பூவைத் தூவி வானவர் வேழம் வந்து போற்றிய - மலர் தூவி ஐராவதம் வழிபட்ட; ('வானவரும் வேழமும்' என்று உம்மைத்தொகையாகவும் கொள்ளலாம்);
விகிர்தன் - மாறுபட்ட செயலினன்; கடவுள்;
பவள மேனியன் - பவளம் போல் செம்மேனியன்;
ஏழை கூறன் மேவும் ஊர் - உமைபங்கனான சிவபெருமான் உறையும் தலமான; (ஏழை - பெண் - உமை);


* ஐராவதம் வணங்கியதால் இத்தலத்து ஈசன் திருநாமம் 'ஐராவதேசுவரர்'. தலபுராணத்திற் காண்க.


இலக்கணக் குறிப்பு :
இகர ஈற்று ஏவல் வினைமுற்று.
தகரம் ஊர்ந்து வருதல் பெரும்பான்மை. உதாரணம்: கொணர்தி, நாடுதி, எண்ணுதி.
சிறுபான்மை தகரம் ஊராதும் வரும். உதாரணம்: ஏத்தி, நாடி;
(11.22.2 - சிவபெருமான் திருவந்தாதி: "மாலை ஒருபால் மகிழ்ந்தானை ... நஞ் சுண்டற் கொளியானை ஏத்தி உளம்" - 'ஏத்தி' என்பது தகர ஒற்றுப் பெறாது வந்த இகர ஈற்று ஏவல் வினைமுற்று. 'துதிப்பாயாக' என்பது பொருள்.)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - 'மா மா கூவிளம்' - என்ற அரையடி வாய்பாடு;
(சம்பந்தர் பதிகம் 2.100 அமைப்பை ஓரளவு ஒத்தது)
2) சம்பந்தர் தேவாரம் - 2.100.1 - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்
படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம் விட்ட போதின்கண்
இடைகொள் வாரெ மக்கிலை யெழுக போது நெஞ்சமே
குடைகொள் வேந்தன் மூதாதை குழகன் கோவ லூர்தனுள்
விடைய தேறுங் கொடியினான் வீரட் டானஞ் சேர்துமே.
3) எதிர்கொள்பாடி - ஐராவதேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=505
எதிர்கொள்பாடி - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=45

----------- --------------

No comments:

Post a Comment