Saturday, February 20, 2016

02.83 – பொது - "எரியடை பஞ்சு"

02.83 – பொது - "எரியடை பஞ்சு"


2013-04-11
பொது
----------------------
(கலிவிருத்தம் - "விளம் விளம் விளம் தேமா" - என்ற வாய்பாடு)



1)
கயம்புரி சடையனைக் கார்மிடற் றானைச்
சயம்புவைத் தலைமிசைத் தண்மதி யானை
அயம்பெற அயன்சிரம் ஏந்தியை அன்பால்
இயம்பிடு வார்வினை எரியடை பஞ்சே.



கயம் - நீர் - கங்கை;
புரிதல் - விரும்புதல் ( To desire); முறுக்குக்கொள்ளுதல் (To be twisted; to curl);
சயம்பு - சுயம்பு - தானாக உண்டானது (Self-existent being) – கடவுள்;
அயம் - ஐயம் (அகரப் போலி) - பிச்சை;
(சம்பந்தர் தேவாரம் - 1.89.6 - "நகுவெண் டலையேந்தி நானாவிதம் பாடிப் புகுவா னயம்பெய்யப்" - ஐயம் அயம் எனப் போலியாயிற்று);
அயன் - பிரமன்;


கங்கை விரும்பும் முறுக்கிய சடையினனை, நீலகண்டனைச், சுயம்பு மூர்த்தியைத், தலைமேல் குளிர்மதியம் சூடினானைப், பிச்சை ஏற்கக் கையில் பிரமனின் மண்டையோட்டை ஏந்தியவனை, அன்போடு துதிப்பவர்கள் வினைகள் எல்லாம் தீப்புக்க பஞ்சுபோல் இல்லாதொழியும்.



2)
கூவிள மாலையும் கொன்றையுஞ் சூடி
ஆவினில் அஞ்சுகந் தாடுமெம் மானை
மூவிலை வேலனை முத்தனை ஏத்திப்
பூவிடு வார்வினை பொறியடை பஞ்சே.



கூவிளம் - வில்வம்;
ஆவினில் அஞ்சு - பால், தயிர், நெய் முதலியன;
மூவிலை வேல் - திரிசூலம்;
முத்தன் - (இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்) - சிவபிரான்;
பொறி - தீப்பொறி; அனற்றுகள்;



3)
தினந்தினம் தொழுதெழு சிறுவனைக் கொல்லச்
சினந்தடை காலனைச் செற்றுகந் தானை
வனந்திரி மதகரி உரித்தவெம் மானை
நினைந்தெழு வார்வினை நெருப்படை பஞ்சே.



தினந்தினம் தொழுது எழு சிறுவனை - மார்க்கண்டேயரை;
சினந்து அடை காலனை - கோபித்து வந்தடைந்த கூற்றுவனை;
செற்று உகந்தானை - அழித்தவனை;
வனம் திரி மத கரி உரித்த எம் மான் - காட்டில் திரியும் மதம் பொருந்திய யானையின் தோலை உரித்த எம் தலைவன்;



4)
பிடிநடைத் துடியிடைப் பெண்ணொரு பங்க
முடியினிற் பிறையணி முதல்வவென் றேத்தி
விடியலிற் கொய்ம்மலர் விருப்பொடு தூவி
அடிதொழு வார்வினை அழலடை பஞ்சே.



பிடிநடைத் துடியிடைப் பெண் - பெண்யானை போன்ற நடையையும் உடுக்குப் போன்ற இடையையும் உடைய உமை; (பிடி - பெண்யானை); (துடி - உடுக்கு);
பெண்ணொரு பங்க - உமை பங்கனே;
முடியினிற் பிறை அணி முதல்வ - சந்திரனைச் சூடிய முதல்வனே;
விடியல் - விடிகாலை;
கொய்ம்மலர் - (கொய்+மலர்) - பறித்த பூக்கள்;
அழல் - தீ;



5)
நெய்தயிர் ஆடியை நீர்ச்சடை யானை
மைதிகழ் கண்டனை மலைமகள் கோனைக்
கைதவம் அற்றிரு கைகளால் தொண்டு
செய்துகப் பார்வினை தீயடை பஞ்சே.



நெய்தயிர் ஆடியை - நெய்யாலும் தயிராலும் அபிஷேகம் செய்யப்பெறுபவனை;
நீர்ச்சடையானை - சடையில் கங்கையை உடையவனை;
மைதிகழ் கண்டனை - நீலகண்டனை; (மை - கருமை);
மலைமகள் கோனை - உமைகோனை;
கைதவம் அற்று - வஞ்சனை இன்றி;
ரு கைகளால் தொண்டு செய்து உகப்பார் வினை - விரும்பி இருகரங்களால் கைங்கரியம் செய்யும் அன்பர்களுடைய வினைகள்;
தீடை பஞ்சே - தீ அடைந்த பஞ்சுபோல் இல்லாதொழியும்;



6)
கூத்திடு வாய்நறுங் கொன்றைந யந்தாய்
நேத்திரம் ஒன்றுடை நெற்றியி னானே
காத்திடு வாயெனக் கழலிணை தன்னை
ஏத்திடு வார்வினை எரியடை பஞ்சே.



"கூத்தனே; மணங்கமழும் கொன்றையை விரும்பி அணிபவனே; நெற்றிக்கண்ணனே; காத்தருளாய்" என்று இருதிருவடிகளைப் போற்றும் பக்தர்களின் வினைகள் தீப்புக்க பஞ்சுபோல் இல்லாதொழியும்.



7)
கூற்றினைக் குமைத்தருள் குரைகழ லானை
ஆற்றினை அஞ்சடை அடைத்தருள் வானை
ஏற்றனை நீறணி ஏந்தலை எண்ணிப்
போற்றிடு வார்வினை பொறியடை பஞ்சே.



கூற்றினைக் குமைத்து அருள் குரைகழலானை - எமனை உதைத்து அழித்த, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியினனை; (குமைத்தல் - கொல்லுதல்);
அஞ்சடை - அம் சடை - அழகிய சடை;
ஏற்றன் - இடப வாகனன்;
ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்; அரசன்;



8)
வெஞ்சினத் தசமுகன் வீரிட அன்று
மஞ்சடை மலைமிசை ஓர்விரல் வைத்த
நஞ்சடை கண்டனை நம்பனை நாடும்
நெஞ்சுடை யார்வினை நெருப்படை பஞ்சே.



வெஞ்சின வெம் சின - மிகுந்த கோபம் உடைய;
தசமுகன் - பத்துத்தலைகள் உடைய இராவணன்;
வீரிடுதல் - திடீரெனக் கத்துதல்;
மஞ்சு அடை மலைமிசை - மேகங்கள் பொருந்தும் கயிலாயமலைமேல்;
நஞ்சு அடை கண்டன் - விடத்தை அடைத்த கண்டத்தை உடையவன்;
நம்பன் - விரும்புபவன்/விரும்பப்படுபவன் - சிவன்;



9)
முன்பது மத்தவன் முகில்வணன் நேடிப்
பின்பதம் போற்றிடும் பேரொளி யானை
இன்பனை இடைவிடா தேத்திவ ணங்கும்
அன்புடை யார்வினை அழலடை பஞ்சே.



முன் - முன்னம்;
பதுமத்தவன் - தாமரைமேல் இருக்கும் பிரமன்; (பதுமம் - தாமரை);
முகில்வணன் - மேக வண்ணன் - திருமால்;
நேடுதல் - தேடுதல்;
பதம் - திருவடி;
அழல் - நெருப்பு;



10)
மந்தையைப் பெருக்கிட வஞ்சனை பேசி
அந்தகர் போலுழல் வார்க்கரு ளானைச்
செந்தழல் வண்ணனைச் சேவமர்ந் தானைச்
சிந்தைசெய் வார்வினை தீயடை பஞ்சே.



அந்தகர் போல் உழல்வார்க்கு அருளானை - குருடர்களைப் போல் திரிகின்றவர்களுக்கு அருள்புரியாதவனை;
சே அமர்ந்தானை - இடபத்தை வாகனமாக விரும்பியவனை;



11)
பன்மணி முடியிமை யோர்பணிந் தேத்தும்
நன்மணி மிடறுடை நம்பனை நாளும்
தென்மணி மலர்களைச் சேவடிச் சாத்தி
என்மணி எனவினை எரியடை பஞ்சே.



மணிமுடி - மணிகள் பதித்த கிரீடம்;
இமையோர் - தேவர்;
மணி மிடறு - நீலகண்டம்;
தென் மணி மலர்கள் - தேன் பொருந்திய அழகிய பூக்கள்; (தென் - தேன் என்பது எதுகை நோக்கிக் குறுக்கல் விகாரம் பெற்றது); (தென் - அழகு; மணி - சிறந்தது - என்று கொண்டு, அழகிய சிறந்த பூக்கள் என்றும் பொருள்கொள்ளலாம்);
சேவடிச் சாத்தி - சிவந்த திருவடியிற் சாத்தி; (சாத்துதல் - அணிதல் - To put on, adorn);
என் மணி - என் மாணிக்கமே; (சுந்தரர் தேவாரம் - 7.83.7 - "... நன்மணியைத் தென்திரு வாரூர்புக் கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே ...");


இலக்கணக் குறிப்புகள்:
1. என் மணி - என் மணியே - அண்மைவிளி;
உதாரணம் - அப்பர் தேவாரம் - 5.23.9 -
"அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ....."
இதில் - நெஞ்சம் - மனமே ; அண்மைவிளி .
2. சேவடிச் சாத்தி - ஏழாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகும். (சம்பந்தர் தேவாரம் - 3.8.11 - "... சந்தமெல் லாம்அடிச் சாத்தவல் லமறை ஞானசம் பந்தன ..." - அழகிய சந்தப் பாடல்களையெல்லாம் திருவடிக்குச் சாத்தவல்ல ஞானசம்பந்தனது);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
கலிவிருத்தம் - "விளம் விளம் விளம் தேமா" - என்ற வாய்பாடு;
2) இவ்வாய்பாட்டில் தேவாரம் உள்ளதா என்று அறியேன். இதனை ஒட்டிய அமைப்பை அரையடி வாய்பாடாகக் கொண்ட எண்சீர் விருத்தங்கள் உள்ளன.
a) சம்பந்தர் தேவாரம் - இலம்பையங்கோட்டூர்ப் பதிகம் - 1.76.1 -
"மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு
.. மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்")


b) திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.1 - "போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே")

-------------- --------------

No comments:

Post a Comment