Saturday, February 20, 2016

02.84 – குடவாயில் (குடவாசல்)

02.84குடவாயில் (குடவாசல்)



2013-04-15
திருக்குடவாயில் (இக்காலத்தில் 'குடவாசல்')
----------------------
(12 பாடல்கள்)
(எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்")



1)
துயிலாத போது துயில்கின்ற போது துணையான தாளை நினைவார்
மயல்தீர முன்னை வினைதீர இன்னல் வலியின்றி வாழ அருள்வான்
மயிலேறு மைந்தன் மலர்தூவி ஏத்தி வழிபாடு செய்யும் உமைகோன்
குயில்கூவு கின்ற குளிர்சோலை சூழ்ந்த குடவாயில் மேவு சிவனே.



துயிலாத போது துயில்கின்ற போது - உம்மைத்தொகை - துயிலாத போதும் துயில்கின்ற போதும்; (போது - பொழுது - காலம் / சமயம்; துயிலாத போது = பகல்; துயில்கின்ற போது = இரவு);
மயல் - மயக்கம்;


துயிலாத போது துயில்கின்ற போது துணையான தாளை நினைவார் - (தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும்) இரவும் பகலும் இணையடியை எண்ணும் பக்தர்கள்;
மயல் தீர, முன்னை வினை தீர, இன்னல் வலி இன்றி வாழ அருள்வான் - அவர்களுடைய அறியாமை நீங்கவும், பழவினைகள் தீரவும், இன்னல்களும் வலியும் இன்றி அவர்கள் வாழவும் அருள்புரிவான்;
மயில் ஏறு மைந்தன், மலர் தூவி ஏத்தி வழிபாடு செய்யும் உமைகோன் - மயில்வாகனனான முருகன் மலர்கள் தூவிப் போற்றி வழிபடுகின்ற உமாபதி;
குயில் கூவுகின்ற குளிர் சோலை சூழ்ந்த குடவாயில் மேவு சிவனே - குயில்கள் கூவும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த குடவாயில் என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்.


(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் ....")



2)
கலையாத அன்பு கழல்மீது கொண்டு கவிபாடி ஏத்தும் அடியார்
தொலையாத தொல்லை வினையைத்து ரந்து சுகவாழ்வு தன்னை அருள்வான்
அலையாரும் ஆறு நிலையான சென்னி அளிநாடு கொன்றை அணிவான்
குலையாரும் வாழை தலையால்வ ணங்கு குடவாயில் மேவு சிவனே.



திருவடிமேல் மாறாத காதல்கொண்டு தமிழ்பாடித் துதிக்கும் பக்தர்களுடைய நீங்கற்கரிய பழவினைகளைப் போக்கி, அவர்களுக்கு இன்பவாழ்வை அருள்பவன்; அலை பொருந்திய கங்கை நிலையாகத் தங்கும் திருமுடியில் வண்டுகள் நாடும் கொன்றைமலரை அணிபவன்; குலையைத் தாங்கிய வாழைமரங்கள் தலையைச் சாய்த்து வணங்கும் குடவாயில் என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்.


துரத்தல் - போக்குதல்; விரட்டுதல்; (அப்பர் தேவாரம் - 4.1.2 - "நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்");



3)
செவிகொண்டு நன்மை திகழ்கின்ற எந்தை திருநாம மட்டு மகிழ்வார்
புவியிங்கு மீண்டு தவியாத வாறு பொலிவான ளிக்கும் ஒருவன்
அவிர்கின்ற வேணி அதன்மீது திங்கள் அரவம்பு னைந்த அழகன்
குவிகின்ற நெஞ்சர் குழுமிப்ப ராவு குடவாயில் மேவு சிவனே.



திருநாம மட்டு மகிழ்வார் - 1) திருநாம மட்டு மகிழ்வார் (திருநாமத் தேனைக் கேட்டு மகிழ்பவர்) / 2) திருநாமம் மட்டும் மகிழ்வார் (திருநாமம் மட்டுமே விரும்பிக் கேட்பார்);
மட்டு - தேன்;
பொலி வான் அளிக்கும் ஒருவன் - அழகிய வானுலகைத் தரும் ஒப்பற்றவன்;
அவிர்கின்ற வேணி - ஒளிரும் சடை;
குவிகின்ற நெஞ்சர் - ஒருமுகப்படும் மனத்தை உடையவர்;
பராவுதல் - பரவுதல் - புகழ்தல்; வணங்குதல்;



4)
எங்கெங்கும் ஓடி இமையோர்கள் வாடி இடர்தீர வந்து தொழவும்
அங்கந்த நஞ்சை அமுதாக உண்ட அருளாளன் ஆகம் அதனில்
பங்குண்டு கோதை சடையுண்டு கங்கை பணிமாலை கொண்ட பரமன்
கொங்குண்டு வண்டு களிசோலை சூழ்ந்த குடவாயில் மேவு சிவனே.



கொங்கு - தேன்;
பணி - பாம்பு;


பாற்கடலில் ஆலகால விடம் எழுந்தபோது அஞ்சிய தேவர்கள் பல இடங்களுக்கும் ஓடி வருந்திப் பின் சிவபெருமானை அண்டி, 'எம் துன்பத்தைத் தீர்த்தருளாய்' என்று வேண்டியபோது, உடனே அந்த நஞ்சை அமுதம்போல் உண்டு காத்த அருளாளன்; திருமேனியில் ஒரு பங்காக உமையம்மையைக் கொண்டவன்; கங்கையைச் சடையிற் கொண்டவன்; பாம்பை மாலையாக அணிந்தவன்; வண்டுகள் தேன் உண்டு மகிழும் சோலைகள் சூழ்ந்த குடவாயில் என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்.



5)
பொங்கார்வ மாகி மலர்தூவி நின்று புகழ்பாடும் அன்பர் அவர்தம்
மங்காத பண்டை வினையாவும் மாய வழியாகி நிற்கும் வரதன்
கங்காளன் அங்கை மழுவாளன் மங்கை மணவாளன் அங்கண் அடிகள்
கொங்கார்ந்த வண்டு களிசோலை சூழ்ந்த குடவாயில் மேவு சிவனே.



கங்காளன் - Šiva who wears garlands of bones;


பொங்கி எழும் அன்பினால் பூக்கள் தூவித் துதித்து வணங்கும் பக்தர்களின் தீராத பழவினைகள் எல்லாம் தீரும் வழியாக இருப்பவன்; வரங்கள் அருள்பவன்; எலும்பை அணிந்தவன்; கையில் மழுவை ஏந்தியவன்; உமை மணவாளன்; அருட்கண் உடைய கடவுள்; வண்டுகள் தேன் உண்டு மகிழும் சோலைகள் சூழ்ந்த குடவாயில் என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்.



6)
தீதில்த மிழ்கள் தினமோது கின்ற திருநாவர் ஆரும் அவனி
மீதில்பி றந்து தவியாத வண்ணம் மிகவேவ ழங்கும் அருளன்
வாதில்த ராய்மன் இடுமேடு வாகை கொளுமாறு வைகை வருவான்
கோதில்சு ரங்கள் அளிபாடு கின்ற குடவாயில் மேவு சிவனே.



தீது இல் தமிழ்கள் - தேவாரம் திருவாசகம்;
திருநாவர் - தேவாரம் திருவாசகம் ஓதுவதால் திரு உடைய நாவை உடையவர்கள்;
திரு - அழகு; சிறப்பு;
அவனி - பூமி;
அருளன் - அருளுடையவன்;
தராய் மன் - பூந்தராய் என்ற நகரின் தலைவன் - பூந்தராய் (சீகாழி) நகரில் அவதரித்த திருஞான சம்பந்தர்;
வாகை - வெற்றி;
கோது இல் சுரங்கள் - குற்றமற்ற இன்னிசை;
அளி - வண்டு;


* மதுரையில் சமணர்களோடு செய்த புனல்வாதத்தைச் சுட்டியது.


(சம்பந்தர் தேவாரம் - 3.113.12 -
"பருமதில் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே ...." - திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை நதியின் மீது செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான்.)



7)
சடைமீது திங்கள் தனையேற்ற எந்தை சரணார விந்த இணையே
அடைவார்கள் அல்லல் அவைதீர நின்ற அருளாளன் அன்பின் உருவன்
இடமாது பங்கன் அடலேற தேறி முடைநாறு கின்ற தலையில்
மடவார்கள் ஐயம் இடவாயில் நாடு குடவாயில் மேவு சிவனே.



அடல் ஏறு - வலிய இடபம்;
முடை - புலால் நாற்றம்;
ஐயம் - பிச்சை;


சடையின்மேல் சந்திரனை அணிந்த எம் தந்தை அவன் இரு தாமரைப் பாதங்களைச் சரண்புகுந்தவர்கள் அல்லல்கள் எல்லாம் தீர்த்து அருள்பவன்; அன்பே உரு ஆனவன்; இடப்பக்கம் உமையை ஒரு பங்காக உடையவன்; வலிய இடபத்தின்மேல் ஏறுபவன்; ஊன் நாறும் பிரமனின் சிரத்தில் பெண்கள் பிச்சை இட இல்லங்களின்வாயிலை நாடுபவன்; குடவாயில் என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்.



8)
பாட்டும்பு னைந்து பரவிப்ப ணிந்து விரவுங்க ருத்தர் அவர்தம்
வாட்டந்து டைத்து மகிழ்வானும் ஈயும் மணிகண்டன் எந்தை பெருமான்
ஆட்டும்பொ ருப்பின் அடிவாள ரக்கன் அழவூன்றி வாளும் அருள்வான்
கோட்டில்ம லர்ந்த மலர்நாறு கின்ற குடவாயில் மேவு சிவனே.



புனைதல் - அலங்கரித்தல்; செய்யுள் இயற்றுதல்; ('பாட்டும் புனைந்து' என்றதால் பூமாலை புனைதலும் உணர்த்தப்பெற்றது);
விரவுதல் - பொருந்துதல்; அடைதல்;
கருத்தர் - கருத்து ஒன்றியவர்கள்; (அப்பர் தேவாரம் - 4.23.2 - "கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா");
மகிழ் வானும் - இன்புறுகின்ற வானுலகும்;
பொருப்பு - மலை;
வாள் அரக்கன் - கொடிய அரக்கன் - இராவணன்;
கோட்டில் மலர்ந்த - மரக்கிளைகளில் பூத்த; (கோடு - மரக்கொம்பு - Branch of a tree);



9)
தீதற்ற தான வழிகாட்டு நால்வர் திருவாய்ம லர்ந்த தமிழால்
மாதுக்கம் நீங்க வழிபாடு செய்ய மறவார்க்கு நன்மை புரிவான்
வாதிட்ட மாலும் மலர்மேலி னானும் நிலம்வானும் நேட வளர்தீ
கோதற்ற தேனை அளியுண்டு பாடு குடவாயில் மேவு சிவனே.



தீது அற்றதான வழி காட்டு நால்வர் திருவாய் மலர்ந்த தமிழால் - குற்றமற்ற நன்னெறியைக் காட்டுகின்ற சமயக்குரவர்கள் நால்வர் பாடியருளிய தேவாரம் திருவாசகம் இவற்றால்;
மாதுக்கம் - பிறவித் துன்பம்;
மலர்மேலினான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
நேட - தேட;
கோது அற்ற - குற்றமற்ற;
அளி - வண்டு;



10)
கறைகொண்ட நெஞ்சர் அறைகின்ற தல்லல் நிறைகின்ற மார்க்கம் இருளிற்
பறைமொந்தை கொண்டு பலபாரி டங்கள் இசைபாட ஆடு பரமன்
பிறைகொண்ட சென்னி மறைசொல்லு நாவன் இறைவன்சு கங்கள் அருள்வான்
குறைவின்றி வண்டு நறையுண்டு பாடு குடவாயில் மேவு சிவனே.



கறை - குற்றம்; விஷம்;
அறைகின்றது - சொல்வது;
அல்லல் நிறைகின்ற மார்க்கம் - துன்பத்தில் ஆழ்த்தும் மார்க்கம்;
பறை மொந்தை - பறை, மொந்தை முதலிய வாத்தியங்கள்;
பாரிடங்கள் - பூதங்கள்;
நறை - தேன்;



11)
அளிகின்ற நெஞ்சர் அளியென்று வேண்டும் அவையாவும் நல்கும் வரதன்
தளியென்று பத்தர் உளமேம கிழ்ந்த தயைமிக்க எங்கள் தலைவன்
நெளிகின்ற பாம்பு நிரைகொன்றை யோடு நிலவும்பு னைந்த நிமலன்
குளிர்திங்கள் உச்சி தொடுசோலை சூழ்ந்த குடவாயில் மேவு சிவனே.



அளிதல் - குழைதல்;
அளித்தல் - கொடுத்தல்;
தளி - கோயில்;


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.2.1 -
"பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் .....")



12)
படமாடு பாம்பு சடைமீது பூண்டு மடமாது பங்கில் உடையான்
நடமாடு நாதன் முடையார்சி ரத்தில் இடுமூண்ந யக்கும் விடையான்
வடநாகம் மத்து வரையாக வாரி கடைநாளெ ழுந்த வலிய
விடநாடு கண்டன் அடர்சோலை சூழ்ந்த குடவாயில் மேவு சிவனே.



ஊண் - உணவு;
நயத்தல் - விரும்புதல்;
வடம் - கயிறு;
வரை - மலை;
வாரி - கடல்;
நாடுதல் - விரும்புதல்;


படம் ஆடு பாம்பு சடைமீது பூண்டு மட மாது பங்கில் உடையான் - நாகப்பாம்பைச் சடைமீது அணிந்து, அழகிய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன்;
நடம் ஆடு நாதன் - கூத்தன்;
முடை ஆர் சிரத்தில் இடும் ஊண் நயக்கும் விடையான் - புலால் நாற்றம் பொருந்திய பிரமன் மண்டையோட்டில் இடும் உணவை ஏற்பவன், இடப வாகனன்;
வடம் நாகம் மத்து வரை ஆக வாரி கடைநாள் எழுந்த வலிய விடம் நாடு கண்டன் - பாம்பைக் கயிறாகவும் மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்த நாளில் விளைந்த கொடிய நஞ்சை விரும்பிய கண்டத்தை உடையவன்;
அடர் சோலை சூழ்ந்த குடவாயில் மேவு சிவனே - செறிந்த பொழில்கள் சூழ்ந்த குடவாயில் என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்.


அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள்:
1) யாப்புக்குறிப்பு:
  • எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்.
  • சில பாடல்களில் முதற்சீர் 'தானான' என்றும் வரும்;
2) சம்பந்தர் தேவாரம் - 2.88.1 -
துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி உம்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்
தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.
3) குடவாயில் - குடவாசல் - கோணேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=312
குடவாயில் - தேவாரம் ஆர்க தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=97

---- --------

No comments:

Post a Comment