Saturday, February 6, 2016

02.73 – ஆப்பாடி - ('திருவாய்ப்பாடி')

02.73 – ஆப்பாடி - ('திருவாய்ப்பாடி')



2012-12-30
திரு-ஆப்பாடி (இக்காலத்தில் 'திருவாய்ப்பாடி')
--------------------------------
(அறுசீர் விருத்தம் - திருநேரிசை அமைப்பு - 'விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.)
(அப்பர் தேவாரம் - 4.48.1 - "கடலக மேழி னோடும் பவனமுங் கலந்த விண்ணும்")



1)
சேனையின் தலைவ னாகச் சேந்தனைப் பெற்று கந்தார்
கானையும் ஆடு கின்ற கவினரங் காகக் கொண்டார்
மானையும் கையில் ஏந்தி மதியினைச் சடையிற் சூடி
ஆனையின் உரிவை போர்த்தார் ஆப்பாடி அப்ப னாரே.



சேனையின் தலைவன் - தேவர்கள் படைக்குத் தலைவன் - தேவசேனாபதி;
சேந்தன் - முருகன்;
கான் - சுடுகாடு;
கவின் அரங்கு - அழகிய மன்றம்;
மானையும் கையில் ஏந்தி - 'உம்' எச்சவும்மை - சூலம், மழு, முதலியவற்றையும் ஈசன் கையில் ஏந்துவதைக் குறிக்கின்றது;
உரிவை - தோல்;


இலக்கணக் குறிப்பு: பசுபதியாரின் 'கவிதை இயற்றிக் கலக்கு' நூலில் அறுசீர் விருத்தப் பகுதியில் காய்ச்சீர் /விளச்சீர் பற்றிய குறிப்பு : "விருத்தங்களில், அருகி , விளத்திற்குப் பதிலாகக் காயோ, காய்க்குப் பதிலாக விளமோ வரும். பொதுவாக, விளத்திற்குப் பதிலாகக் காய் வந்தால், மாங்காய் தான் வரும். காய்ச் சீருக்குப் பதிலாக விளம் வருவதும் உண்டு. பல விருத்தங்களில் 'விளாச்'சீர் ( நெடிலில் முடியும் விளச்சீர்) காய்ச் சீருக்குப் பதிலாக வருவதையும் பார்க்கலாம்."



2)
பாலினால் போற்றக் கண்டு பதைத்தெழு தாதை அங்குக்
காலினால் சிதைக்கக் கண்டு கணத்தினில் அருகி ருந்த
கோலினால் தாளை வெட்டும் குமரனுக் கத்தன் ஆனார்
ஆலினால் இருண்ட கண்டர் ஆப்பாடி அப்ப னாரே.



* சண்டேசுர நாயனார் வரலாற்றைச் சுட்டியது. இவ்வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க;
தாதை - தந்தை;
கோல் = கம்பு ; மரக்கொம்பு ;
குமரனுக்கு அத்தன் - விசாரசருமருக்குச் சண்டீசர் பதம் அளித்து அவருக்குச் சிவபெருமானார் தாமே தந்தையும் ஆயினார்;
ஆலினால் இருண்ட கண்டர் - விஷத்தால் கருமை பெற்ற கண்டத்தை உடையவர்; (ஆல் - நஞ்சு - ஆலகால விஷம்);



3)
தந்தையின் தாள்து ணித்த தனயனுக் குயர்தா னத்தைத்
தந்தவர் தாதை ஆனார் தந்தையும் தாயும் இல்லார்
சிந்தையிற் சிவனி ருந்தாற் செய்வன எல்லாம் ஏற்பார்
அந்தியின் வண்ண மேனி ஆப்பாடி அப்ப னாரே.



* சண்டேசுர நாயனார் வரலாற்றைச் சுட்டியது. இவ்வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க;
துணித்தல் - வெட்டுதல்;
உயர் தானம் - சிறந்த பதவி - இங்கே, சண்டீசர் என்ற பதவி;;
தானத்தைத் தந்து அவர் தாதை ஆனார் - பெரியபுராணத்திலிருந்து: சிவபெருமான், தம் திருவடிகளில் வீழ்ந்த விசாரசருமரைத் திருக்கரத்தால் எடுத்து நோக்கி, 'எம்பொருட்டால் உன்னைப் பெற்ற தந்தை வீழ வெட்டினாய். அடுத்த தந்தை இனி உனக்கு நாம்' என்று கூறி, அருள் செய்து, மகனாரை அணைத்தருளினார்.
அந்தியின் வண்ண மேனி ஆப்பாடி அப்பனாரே - அந்திப்பொழுதில் விளங்கும் செவ்வானம் போன்ற செம்மேனி உடையவரும் நம் தந்தையும் ஆன, திருவாப்பாடியில் உறைகின்ற சிவபெருமானார்;



4)
களத்தினில் விடத்தை வைத்தார் கதிர்மதி முடியில் வைத்தார்
உளத்தினில் அன்பு மாறா உத்தமர்க் கூனம் இல்லா
வளத்தினை மல்க வைத்தார் மாணியை வாழ வைத்தார்
அளப்பருங் கருணை யாளர் ஆப்பாடி அப்ப னாரே.



களம் - கழுத்து;
ஊனம் - குறைவு;
மல்குதல் - மிகுதல்; நிறைதல்;
மாணி - அந்தணச் சிறுவன்;
அளப்பு அருங் கருணையாளர் - எல்லையற்ற பெருங்கருணை உடையவர்;



5)
ஆர்கழல் போற்றி னாலும் அவர்களுக் கருள்கள் செய்வார்
வார்குழ லாளோர் பங்கர் மணிதிகழ் மாமி டற்றர்
நீருழல் சடையின் மீது நிலவையும் திகழ வைத்தார்
ஆரழல் போலச் செய்யர் ஆப்பாடி அப்ப னாரே.



ஆர் கழல் போற்றினாலும் - எத்தகையவர் ஆயினும் தம் திருவடியை வணங்குவார்களே ஆயின்;
வார் குழலாள் - நீண்ட கூந்தலை உடைய பார்வதி;
மா மிடற்றர் - அழகிய கண்டம் உடையவர்;
நீர் உழல் சடை - கங்கை உலவும் சடை;
ஆர் அழல் போலச் செய்யர் - தீப்போன்ற செம்மேனியர்;



6)
ஆழியில் எழுந்த நஞ்சை அழகுற மிடற்றில் வைத்தார்
போழிள மதியம் தன்னைப் பொற்சடை மீது வைத்தார்
வாழியென் றேத்து வார்க்கு வல்வினை தீர வைத்தார்
ஆழியை மாலுக் கீந்த ஆப்பாடி அப்ப னாரே.



ஆழி - 1) கடல்; 2) சக்கராயுதம்;
போழ் இள மதியம் - பிறைச்சந்திரன்; (போழ்தல் - பிளத்தல்);
"வாழி" என்று ஏத்துவார்க்கு வல்வினை தீர வைத்தார் - வாழ்த்துகின்ற அடியவர்களுடைய வல்வினைகளைத் தீர்ப்பவர்;
ஆழியை மாலுக்கு ஈந்த - திருமாலுக்குச் சக்கரத்தைத் தந்தருளிய;



7)
மல்லிகை மாலை கட்டி மலரடி போற்றி நின்று
கொல்லியும் பாடு வார்க்குக் குறைவிலா தருள்கள் செய்வார்
வில்லினிற் கணையைக் கோத்து மேவலர் புரமெ ரித்தார்
அல்லினில் ஆடல் செய்யும் ஆப்பாடி அப்ப னாரே.



கொல்லி - ஒரு பண்ணின் பெயர்; (தேவாரப் பண்களுள் ஒன்று);
வில்லினிற் கணையைக் கோத்து - மேருவை வில்லாக வளைத்து அதில் நெருப்பாகிய அம்பினைக் கோத்து;
மேவலர் - பகைவர்;
அல் - இரவு;



8)
மஞ்சணை மலைய சைத்த மதியிலா அரக்கன் வாடி
அஞ்செழுத் தோதிப் பாடி அழும்படி விரலை வைத்தார்
நஞ்சினைக் கண்டம் வைத்தார் நம்புவார்க் கின்பம் வைத்தார்
அஞ்சனக் கண்ணி பங்கர் ஆப்பாடி அப்ப னாரே.



மஞ்சு அணை மலை அசைத்த - மேகம் வந்து பொருந்தும் கயிலை மலையை ஆட்டிய;
மதி இலா அரக்கன் - அறிவு இல்லாத இராவணன்;
நம்புதல் - விரும்புதல்;
அஞ்சனம் - கண்ணிடு மை;
அஞ்சனக் கண்ணி பங்கர் - மை தீட்டிய கண்ணை உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;



9)
கரியவன் பிரமன் நேடிக் கைதொழு தேத்த நின்ற
எரியவர் மணலி லிங்கம் எழுப்பிவ ணங்கு பாலற்
கரியநற் பதம ளித்தார் அடியவர்க் கெளியர் ஆவார்
அரிவையொர் கூறு கந்தார் ஆப்பாடி அப்ப னாரே.



கரியவன் - திருமால்;
நேடுதல் - தேடுதல்;
எரி அவர் - சோதி வடிவினர்;
மணல் இலிங்கம் எழுப்பி - ஆற்று மணலில் சிவலிங்கம் செய்து;
பாலற்கு - பாலன் + கு;
வணங்கு பாலற்கு அரிய நற்பதம் அளித்தார் - வழிபட்ட மறைச்சிறுவனான விசார சருமனுக்குச் சண்டீசர் பதவி கொடுத்தார்;
அரிவை - பெண்;
ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்;






10)
உருவினை மறுத்து ரைப்பார் உண்மையை உணர மாட்டார்
திருவினைச் சேர கில்லாச் சிதடர்சொல் மதிக்க வேண்டா
கருவினைக் கழிக்க வேண்டிக் கண்ணுதல் கழல்ப ணிந்தால்
அருவினை தீர்த்த ருள்வார் ஆப்பாடி அப்ப னாரே.



உரு - வடிவம்;
மறுத்தல் - ஆட்சேபித்தல்; இல்லையென்னுதல் (To refuse, deny, disown);
திரு - நன்மை; பாக்கியம்; செல்வம்; புண்ணியம்; (அப்பர் தேவாரம் - 6.47.1 - "திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே...");
சேரகில்லா - சேரமாட்டாத;
சிதடர் - அறிவிலிகள்; குருடர்கள்;
சொல் மதிக்க வேண்டா - சொற்களை மதியாதீர்கள்;
கரு - பிறப்பு;
கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்;
அருவினை - நீக்குதற்கரிய இருவினைகள்;



11)
சோதியில் ஒளியும் ஆனார் சொல்மறை நாலும் ஆனார்
பாதியிற் பெண்ணும் ஆனார் பார்க்கிற வண்ணம் ஆனார்
பூதியைப் பூசி நின்று போற்றுவார்க் கன்பர் ஆனார்
ஆதியும் அந்தம் ஆனார் ஆப்பாடி அப்ப னாரே.



பூதி - திருநீறு;
(சுந்தரர் தேவாரம் - 7.73.5 - "... சோதியிற் சோதிஎம் மானை ..." - ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும், எங்கட்கு யானை போல்பவனும்...);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
திருநேரிசை அமைப்பு -
  • அறுசீர் விருத்தம்;
  • 'விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு;
  • விளம் வரும் இடத்தில் மாங்காய்ச்சீரும் ஒரோவழி வரக்கூடும்;
2) திருநாவுக்கரசர் தேவாரம் - 4.41.1 -
பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்தன் அல்லேன் வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.
3) ஆப்பாடி - ('திருவாய்ப்பாடி') - பாலுகந்தநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=372
ஆப்பாடி - ('திருவாப்பாடி') - கோயில் தகவல்கள் - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=20

----------------- ----------------

No comments:

Post a Comment