Tuesday, July 1, 2025

P.413 - கழுக்குன்றம் - வில்லேர் புருவத்து

2017-12-04

P.413 - கழுக்குன்றம் - (திருக்கழுக்குன்றம்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப்")

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி");

முற்குறிப்புகள்: திருக்கழுக்குன்றம் - தாழக்கோயில் - ஊரின் நடுவே உள்ள "பக்தவத்ஸலேஸ்வரர் கோயில்";

* அன்பர்க்கு அன்பன் = "பக்தவத்ஸலேஸ்வரன்" - இத்தலத்துத் தாழக்கோயிலில் இறைவன் திருநாமம்;


1)

வில்லேர் புருவத் துமைபங்கா .. விண்ணோர் தலைவா அருளென்று

சொல்லார் தமிழ்இன் தொடைபாடித் .. தொண்டர் பரவும் துணைப்பாதன்

அல்லார் கண்டத் தருளாளன் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கல்லார் மதில்கள் புடைசூழக் .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"வில்ர் புருவத்துமைபங்கா - "வில் போன்ற புருவம் உடைய உமையைப் பங்கில் உடையவனே; (ஏர்தல் - ஒத்தல்);

விண்ணோர் தலைவா, அருள்" என்று - தேவர் தலைவனே, அருள்க" என்று;

சொல் ஆர் தமிழ் இன்-தொடை பாடித் தொண்டர் பரவும் துணைப்-பாதன் - செஞ்சொல் நிறைந்த இனிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடிப் பக்தர்கள் துதிக்கின்ற, (அவர்களைக் காக்கின்ற) இரு-திருவடிகளை உடையவன்; (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்); (துணை - இரண்டு; உதவி; காப்பு);

அல் ஆர் கண்டத்து அருளாளன் - இருள் பொருந்திய கண்டம் உடையவன்; (அல் - இருள்);

அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தவத்ஸலன் விரும்பி உறையும் தலம்;

கல் ஆர் மதில்கள் புடைசூழக் கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - கல்லால் ஆன மதிலால் சூழப்பெற்ற, அழகிய திருக்கழுக்குன்றம்; (கவின் - அழகு);


2)

நீரார் கின்ற நீள்சடைமேல் .. நிலவைப் புனைந்த பிஞ்ஞகனே

சேரார் புரங்கள் செற்றவனே .. செல்வா என்பார்க் கென்றென்றும்

ஆரா அமுதாய் அண்ணிப்பான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

காரார் கின்ற கோபுரஞ்சூழ் .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"நீர் ஆர்கின்ற நீள்-சடைமேல் நிலவைப் புனைந்த பிஞ்ஞகனே - "கங்கையை அணிந்த நீண்ட சடைமேல் சந்திரனை அணிந்த பிஞ்ஞகனே; (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

சேரார் புரங்கள் செற்றவனே - பகைத்த அசுரர்களது முப்புரங்களை அழித்தவனே; (சேரார் - பகைவர்);

செல்வா" என்பார்க்கு - செல்வனே" என்று துதிக்கும் பக்தர்களுக்கு;

என்றென்றும் ஆரா அமுதாய் அண்ணிப்பான் - எந்நாளும் தெவிட்டாத அமுதம் ஆகி இனிமை பயப்பவன்; (ஆரா - ஆராத - தெவிட்டாத); (அண்ணித்தல் - தித்தித்தல்; இனிமை தருதல்);

அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் (= பக்தவத்ஸலன்) விரும்பி உறையும் தலம்;

கார் ஆர்கின்ற கோபுரம் சூழ், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - மேகம் தீண்டும் (உயர்ந்த) கோபுரம் சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கார் - மேகம்); (கவின் - அழகு);


3)

ஒலியார் அலைசேர் கங்கைதனை .. ஒளித்த சடையன் தலைகலனாப்

பலிதேர் செல்வன் பூதங்கள் .. பாட நட்டம் பயில்பரமன்

அலியாய்ப் பெண்ணாய் ஆணானான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கலியார் வீதி அதனயலே .. கவினார் கின்ற கழுக்குன்றே.


ஒலி ஆர் அலை சேர் கங்கைதனை ஒளித்த சடையன் - ஒலி மிகுந்த அலைகளை உடைய கங்கையைச் சடையில் மறைத்தவன்;

தலை கலனாப் பலிதேர் செல்வன் - பிரமனது மண்டையோட்டையே பிச்சைப்பாத்திரமாக ஏந்திப் பிச்சையெடுக்கும் செல்வன்; (தலை - மண்டையோடு);

பூதங்கள் பாட நட்டம் பயில்-பரமன் - பூதகணங்கள் பாடக் கூத்து ஆடும் பரமன்; (நட்டம் - கூத்து);

அலியாய்ப் பெண்ணாய் ஆண் ஆனான் - ஆணும், பெண்ணும், அலியும் ஆனவன்;

அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தவத்ஸலன் விரும்பி உறையும் தலம்;

கலி ஆர் வீதி அதன் அயலே, கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - ஒலி மிக்க வீதியின் அருகே உள்ள, அழகிய திருக்கழுக்குன்றக் கோயில்; (கலி - ஒலி); (கவின் - அழகு);


4)

வெந்த நீறு திகழ்மார்பா .. வெற்றிக் கொடிமேல் விடையுடையாய்

வந்தம் பெய்த மதியில்லா .. மதனை எரித்த கண்ணுதலாய்

அந்தம் இல்லாய் அருளென்னும் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கந்தம் கமழும் பூக்கடைசூழ் .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"வெந்த நீறு திகழ்-மார்பா - "சுட்ட திருநீற்றை மார்பில் பூசியவனே;

வெற்றிக் கொடிமேல் விடை உடையாய் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனே;

வந்து அம்பு எய்த மதி இல்லா மதனை எரித்த கண்ணுதலாய் - பக்கத்தில் வந்து மலர்க்கணையை ஏவிய, அறிவில்லாத காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவனே; (மதன் - மன்மதன்); (நுதல் - நெற்றி);

அந்தம் இல்லாய் அருள்" என்னும் - அந்தம் இல்லாதவனே (என்றும் சாவு இல்லாதவனே), அருள்க" என்று துதிக்கின்ற; (அந்தம் - முடிவு);

அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கந்தம் கமழும் பூக்கடை சூழ், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - வாசனை கமழும் பூக்கடைகள் சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கந்தம் - வாசனை); (கவின் - அழகு);


5)

சமயம் ஆறும் ஆக்கியவன் .. தனிவேற் படையைத் தாங்குகின்ற

குமரன் தாதை முடிமீது .. கொக்கின் இறகும் புனைபெம்மான்

அமலன் அடியைத் தொழுதேத்தும் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கமழும் பூவார் பொழில்சூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


சமயம் ஆறும் ஆக்கியவன் - சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என்ற ஷண்மதங்களை ஆக்கியவன்;

தனி வேற்படையைத் தாங்குகின்ற குமரன் தாதை - ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்திய முருகனுக்குத் தந்தை; (தனி - ஒப்பற்ற); (தாதை - தந்தை);

முடிமீது கொக்கின் இறகும் புனை-பெம்மான் - திருமுடிமேல் கொக்கிறகு சூடிய பெருமான்; (கொக்கிறகு - ஒரு பூ; கொக்கு வடிவில் இருந்த குரண்டாசுரனை அழித்த அடையாளமான அதன் இறகு);

அமலன் - தூயன்;

அடியைத் தொழுது ஏத்தும் அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கமழும் பூ ஆர் பொழில் சூழ்ந், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - வாசனை கமழும் மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கந்தம் - வாசனை); (கவின் - அழகு);


6)

முடிமேல் கொன்றை கூவிளமும் .. முளைவெண் மதியும் புனைந்தவரே

துடிபோல் இடையாள் பங்குகந்தீர் .. சூலப் படையீர் தோலுடையீர்

அடிகேள் அருளீர் என்றேத்தும் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கடியார் பொழில்கள் புடைசூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"முடிமேல் கொன்றை கூவிளமும் முளை-வெண்-மதியும் புனைந்தவரே - "திருமுடிமேல் கொன்றைமலரையும், வில்வத்தையும், இள-வெண்திங்களையும் அணிந்தவரே; (கூவிளம் - வில்வம்);

துடி போல் இடையாள் பங்கு உகந்தீர் - உடுக்கையைப் போன்ற இடை உடைய உமையை ஒரு பங்கில் மகிழ்ந்தவரே;

சூலப்-படையீர் - சூலாயுதத்தை ஏந்தியவரே;

தோல்-உடையீர் - புலித்தோல் உடை உடையவரே;

அடிகேள் அருளீர்" என்று ஏத்தும் அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - சுவாமியே, அருள்வீராக" என்று வழிபடும் பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கடி ஆர் பொழில்கள் புடைசூழ்ந், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - வாசனை கமழும் சோலை சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கந்தம் - வாசனை); (கவின் - அழகு);


7)

தாம மாகப் பாம்பணிந்தாய் .. சலமார் சடையாய் அருளென்று

நாம ணக்கத் தமிழ்பாடி .. நற்றாள் இணையைத் தொழுவார்தம்

ஆம யந்தீர்த் தருள்செய்வான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

காமர் சோலை புடைசூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"தாமமாகப் பாம்பு அணிந்தாய் - "மாலை போலப் பாம்பை அணிந்தவனே; (தாமம் - மாலை);

சலம் ஆர் சடையாய் அருள் என்று - கங்கையைச் சடையில் அணிந்தவனே, அருள்க" என்று; (சலம் - ஜலம் - கங்கை);

நா மணக்கத் தமிழ் பாடி, நற்றாள்-இணையைத் தொழுவார்தம் - வாய் மணக்கத் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி, நல்ல திருவடி இரண்டை வழிபடுபவர்களது;

ஆமயம் தீர்த்து அருள் செய்வான் - நோயைத் தீர்த்து அருள்பவன்; (ஆமயம் - நோய்); (அப்பர் தேவாரம் - 6.96.1 - "ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்");

ன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

காமர் சோலை புடைசூழ்ந்த, கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - அழகிய சோலை சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (காமர் - அழகு); (கவின் - அழகு);


8)

நண்ணி வெற்பை இடந்தானை .. நசுக்க விரலொன் றூன்றியவன்

உண்ணற் கரிய நஞ்சுதனை .. உகந்த ருந்தி வானோர்கட்(கு)

அண்ணிக் கின்ற அமுதீந்தான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கண்ணுக் கினிய வயல்சூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


நண்ணி வெற்பை இடந்தானை நசுக்க விரல் ஒன்று ஊன்றியவன் - வந்து கயிலைமலையைப் பேர்த்த இராவணனை நசுக்க ஒரு விரலை ஊன்றியவன்; (வெற்பு - மலை); (இடத்தல் - பேர்த்தல்);

உண்ணற்கு அரிய நஞ்சுதனை உகந்து அருந்தி வானோர்கட்கு அண்ணிக்கின்ற அமுது ஈந்தான் - உண்ணலாகா விடத்தை விரும்பி உண்டு, தேவர்களுக்கு இனிக்கின்ற அமுதத்தைத் தந்தவன்; (அண்ணித்தல் - தித்தித்தல்);

ன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கண்ணுக்கு இனிய வயல் சூழ்ந்த, கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - அழகிய வயல் சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கவின் - அழகு);


9)

மயலி னாலே முன்னொருநாள் .. வாது செய்த நாரணனும்

அயனும் பன்றி அன்னமென .. ஆகிக் கீழ்மேல் நேடிமிக

அயரு மாறு வளர்சோதி .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கயமும் வயலும் புடைசூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


மயலினாலே முன்னொருநாள் வாது செய்த நாரணனும் அயனும் - முன்பு ஆணவத்தால் (தம்மில் யார் தலைவன் என்று) வாதிட்ட திருமாலும் பிரமனும்; (மயல் - மயக்கம்; ஆணவம்);

பன்றி அன்னம் என ஆகிக் கீழ் மேல் நேடி மிக அயருமாறு வளர் சோதி - பன்றி அன்னப்பறவை என்ற வடிவங்களில் அடியும் முடியும் தேடி மிகவும் தளரும்படி ஓங்கிய ஜோதி; (நேடுதல் - தேடுதல்);

ன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கயமும் வயலும் புடைசூழ்ந்த, கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - குளங்களும் வயலும் சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கயம் - நீர்நிலை); (கவின் - அழகு);


10)

புரியும் தவமாப் பொய்யுரைக்கும் .. புல்லர் சொல்லில் மயங்காதீர்

கரியை உரித்த காபாலி .. கால காலன் கல்லால்கீழ்

அரிய மறையை விரித்தபிரான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கரிய வண்டு பண்ணார்க்கும் .. கவினார் கின்ற கழுக்குன்றே.


புரியும் தவமாப் பொய் உரைக்கும் புல்லர் சொல்லில் மயங்காதீர் - பொய் பேசுவதையே தாம் செய்யும் தவமாகக் கொண்ட கீழோர்களது வார்த்தையில் நீங்கள் மயங்கவேண்டா;

கரியை உரித்த காபாலி - யானையின் தோலை உரித்தவன், காபாலி என்ற திருநாமம் உடையவன்;

கால காலன் - காலனுக்குக் காலன்;

கல்லால்கீழ் அரிய மறையை விரித்த பிரான் - கல்லாலமரத்தின்கீழ் அரிய வேதப்பொருளை உபதேசித்த பெருமான்;

ன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கரிய வண்டு பண் ஆர்க்கும் கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - கருவண்டுகள் இனிய இசையை ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த), அழகிய திருக்கழுக்குன்றம்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (கவின் - அழகு);


11)

புள்ளூர் மாலோர் கணையாகப் .. பொருப்பை வில்லா வளைவித்து

நள்ளார் புரங்கள் மூன்றெரிய .. நக்க பெருமான் நாள்தோறும்

அள்ளூ றிச்சீர் பரவுகின்ற .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கள்ளார் மலரார் பொழில்சூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


புள் ஊர் மால் ஓர் கணையாகப் பொருப்பை வில்லா வளைவித்து - கருடனை ஊர்தியாக உடைய திருமால் ஓர் அம்பு ஆக, மேருமலையை வில்லாக வளைத்து; (புள் - பறவை - இங்கே, கருடன்); (பொருப்பு - மலை); (வில்லா - வில்லாக; கடைக்குறை விகாரம்);

நள்ளார் புரங்கள் மூன்று எரிய நக்க பெருமான் - பகைத்த அசுரர்களது முப்புரங்களும் எரியும்படி சிரித்த பெருமான்; (நள்ளார் - பகைவர்); (நகுதல் - சிரித்தல்);

நாள்தோறும் அள்ளூறிச் சீர் பரவுகின்ற அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - தினமும் அன்பு பெருகி வாயினிக்கப் புகழ்பாடும் பக்தர்களுக்கு அன்பு உடைய பெருமான் விரும்பி உறையும் தலம்; (அப்பர் தேவாரம் - 6.86.3 - "அள்ளூறி எம்பெருமான் என்பார்க் கென்றும் திரு ஈன்ற" - அள் ஊறி - அன்புமிகப் பெருகி);

கள் ஆர் மலர் ஆர் பொழில் சூழ்ந், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - தேன் நிறைந்த மலர்கள் மிகுந்த சோலை சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம் ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.412 - கன்றாப்பூர் - முறைமுறை ஏத்தும்

2017-11-24

P.412 - கன்றாப்பூர்

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")


1)

முறைமுறை ஏத்தும் அன்பர் .. முன்வினை நீக்கி இன்பம்

நிறையருள் நீல கண்டர் .. நெற்றியிற் கண்ணர் பூதம்

பறைமுழ வார்க்க ஆடும் .. பரமனார் சோலை சூழ்ந்து

நறைகமழ் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


முறைமுறை ஏத்தும் அன்பர் முன்வினை நீக்கி இன்பம் நிறை அருள் நீலகண்டர் - முறைப்படி நாள்தோறும் வழிபடும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து இன்பமும் நிறைவும் அருளும் நீலகண்டர்; (நிறை - மாட்சிமை; மனவடக்கம்); (நிறையருள் - 1. நிறை அருள்; / 2. "நிறைய அருள்" - நிறைய என்பதில் ஈற்று அகரம் தொக்குப் புணர்ந்தது என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 6.56.1 - "நிறையுடைய நெஞ்சினிடையாய் போற்றி");

நெற்றியில் கண்ணர் - முக்கண்ணர்;

பூதம் பறை முழவு ஆர்க்க ஆடும் பரமனார் - பூதகணங்கள் பறைகளையும் முழவுகளையும் ஒலிக்கத் திருநடம் செய்யும் பரமர்;

சோலை சூழ்ந்து நறை கமழ் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர், பொழில்களால் சூழப்பெற்று மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (நறை - வாசனை);


2)

குறைகளைக் கூறி நின்று .. குரைகழல் வாழ்த்தி னார்க்குக்

குறைவறக் கொடுக்கும் வள்ளல் .. குஞ்சரத் துரிவை போர்த்தார்

சிறையளி நாடு கொன்றைச் .. சென்னியர் தேவ தேவர்

நறைகமழ் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


குறைகளைக் கூறி நின்று குரைகழல் வாழ்த்தினார்க்குக் குறைவறக் கொடுக்கும் வள்ளல் - தம் குற்றங்களைச் சொல்லி அருள்வேண்டி நின்று, ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் அவர்;

குஞ்சரத்து உரிவை போர்த்தார் - யானைத்தோலைப் போர்த்தவர்; (குஞ்சரம் - யானை); (உரிவை - தோல்);

சிறை-அளி நாடு கொன்றைச் சென்னியர் தேவ தேவர் - சிறகுடைய வண்டுகள் அடையும் கொன்றைமலரைத் தலையில் சூடியவர், தேவர்க்கெல்லாம் தேவர் (மகாதேவர்); (சிறை - சிறகு); (அளி - வண்டு);

நறை கமழ் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர், (பொழில்களால் சூழப்பெற்று) மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


3)

கறையணி கண்ட என்று .. கைதொழும் அன்பர்க் கன்பர்

மறையது பாடு நாவர் .. வந்தடி போற்றி செய்த

பிறைதனைச் சூடு பண்பர் .. பிடிநடை மங்கை பங்கர்

நறைகமழ் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


"கறை அணி கண்ட" என்று கைதொழும் அன்பர்க்கு அன்பர் - "நீலகண்டனே" என்று கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவர்;

மறையது பாடு நாவர் - வேதத்தைப் பாடியருளியவர்; (மறையது - மறை; அது - பகுதிப்பொருள்விகுதி);

வந்து அடி போற்றிசெய்த பிறைதனைச் சூடு பண்பர் - வந்து திருவடியை வணங்கிய தேய்ந்த சந்திரனைத் திருமுடிமேல் சூடிய அருளாளர்;

பிடி-நடை மங்கை பங்கர் - பெண்யானை போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்காக உடையவர்; (பிடி - பெண்யானை);

நறை கமழ் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர், (பொழில்களால் சூழப்பெற்று) மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


4)

மறையவன் உயிரைக் காத்து .. மறலியைச் செற்றார் பாலைத்

துறையணி அன்பில் ஆலந் .. துறைதவத் துறைய மர்ந்த

இறையவர் ஓடொன் றேந்தி .. இடுபலிக் குழலும் செல்வர்

நறைகமழ் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


மறையவன் உயிரைக் காத்து மறலியைச் செற்றார் - மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் கூற்றுவனை உதைத்தவர்; (மறலி - நமன்; மறலுதல் - கொல்லுதல்); (செறுதல் - அழித்தல்);

பாலைத்துறை, அணி அன்பில் ஆலந்துறை, தவத்துறை அமர்ந்த இறையவர் - திருப்பாலைத்துறை, அழகிய அன்பில் ஆலந்துறை, திருத்தவத்துறை முதலிய தலங்களில் விரும்பி எழுந்தருளிய இறைவர்; (திருப்பாலைத்துறை (பாபநாசம் - காவிரித் தென்கரைத் தலம்), அன்பில் ஆலந்துறை (அன்பில்), திருத்தவத்துறை (லால்குடி) - தலங்கள் பெயர்கள்);

ஓடு ஒன்று ஏந்தி இடுபலிக்கு உழலும் செல்வர் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரியும் செல்வர்;

நறை கமழ் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர், (பொழில்களால் சூழப்பெற்று) மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


5)

எறும்பியூர் திருவா னைக்கா .. எனப்பல தலங்கள் மேயார்

உறும்பெரு விடங்கண் டஞ்சும் .. உம்பரைக் காத்து நீலம்

பெறும்திரு மிடற்றர் நாகம் .. பிறையொடும் சூடு பித்தர்

நறும்பொழிற் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


எறும்பியூர் திருவானைக்கா எனப் பல தலங்கள் மேயார் - திருவெறும்பூர், திருவானைக்கா எனப் பல தலங்களில் உறைகின்றவர்;

உறும் பெரு-விடம் கண்டு அஞ்சும் உம்பரைக் காத்து நீலம் பெறும் திரு-மிடற்றர் - தோன்றிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சிய தேவர்களைக் காத்து நீலநிறம் பெற்ற கண்டத்தை உடையவர்; (உறுதல் - நிகழ்தல்; மிகுதல்);

நாகம் பிறையொடும் சூடு பித்தர் - பாம்பைப் பிறைச்சந்திரனோடு சூடியவர், பித்தர் எனப்படும் பேரருளாளர்;

நறும்-பொழில் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - மணம் கமழும் சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


6)

குளிர்புனல் ஆட்டும் அன்பர் .. கோரிய எல்லாம் ஈவார்

மிளிர்விட நாகத் தாரர் .. மேருவில் ஏந்து வீரர்

தளிர்மதி தாங்கு கின்ற .. சடையிடைக் கங்கை ஆற்றர்

நளிர்பொழிற் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


குளிர்-புனல் ஆட்டும் அன்பர் கோரிய எல்லாம் ஈவார் - குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபடும் பக்தர்கள் வேண்டும் வரங்களையெல்லாம் அருள்வார்;

மிளிர்-விட-நாகத் தாரர் - ஒளியுடைய விஷப்பாம்பை மாலையாக அணிந்தவர்; (மிளிர்தல் - பிரகாசித்தல்); (தார் - மாலை);

மேரு-வில் ஏந்து வீரர் - மேருமலையை வில்லாக ஏந்திய வீரர்;

தளிர்-மதி தாங்குகின்ற சடையிடைக் கங்கை ஆற்றர் - தளிர் போன்ற இளந்திங்களைச் சூடிய சடையில் கங்கையாற்றை அடைத்தவர்;

நளிர்-பொழில் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (நளிர்தல் - குளிர்தல்);


7)

ஓடிடு பலிக்கென் றேந்தி .. ஊர்பல சென்றி ரப்பார்

பாடிடு பத்தர்க் கின்பம் .. பயப்பவர் சுடலை தன்னில்

ஆடிடு செம்பொற் பாதர் .. அஞ்சிறை வண்டி னங்கள்

நாடிடு கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


ஓடு இடுபலிக்கு என்று ஏந்தி ஊர் பல சென்று இரப்பார் - பிச்சைக்கு என மண்டையோட்டை ஏந்திப் பல ஊர்களுக்குச் சென்று யாசிப்பவர்;

பாடிடு பத்தர்க்கு இன்பம் பயப்பவர் - தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இன்பம் தருபவர்; (பயத்தல் - கொடுத்தல்);

சுடலை-தன்னில் ஆடிடு செம்பொற்-பாதர் - சுடுகாட்டில் கூத்தாடும் அழகிய பொற்பாதம் உடையவர்;

ஞ்சிறை வண்டினங்கள் நாடிடு கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் நாடுகின்ற (சோலை சூழ்ந்த) கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (அஞ்சிறை - அம் சிறை; அம் - அழகு; சிறை - சிறகு);


8)

மற்புயம் நாலைந் துன்னி .. நனிசின நெஞ்ச னாகி

வெற்பினைப் பெயர்த்தான் தன்னை .. விரலிறை வைத்த டர்த்தார்

பற்பல பெயர்கள் பாடிப் .. பரவிட வாளும் ஈந்தார்

நற்பொழிற் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


மல்-புயம் நாலைந்து உன்னி, நனி சின நெஞ்சன் ஆகி வெற்பினைப் பெயர்த்தான்-தன்னை விரல் இறை வைத்து அடர்த்தார் - தனது வலிய புஜங்கள் இருபதை எண்ணி, மிகுந்த சினத்தோடு கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை, ஒரு விரலைச் சிறிதளவு ஊன்றி நசுக்கினார்; (மல் - வலிமை); (நாலைந்து = 4 x 5 = 20); (நனி - மிகுந்த); (வெற்பு - மலை); (இறை - சிறிதளவு); (அடர்த்தல் - நசுக்குதல்);

பற்பல பேர்கள் பாடிப் பரவிட வாளும் ஈந்தார் - (பிறகு) அவன் ஈசனாரின் திருநாமங்கள் பலவற்றைப் பாடி அழுது தொழக் கண்டு அவனுக்கு இரங்கி (நீண்ட ஆயுளும், இராவணன் என்ற பெயரும்,) சந்திரஹாஸம் என்ற வாளும் கொடுத்தவர்; (வாளும் - உம் - எச்சவும்மை);

நற்பொழில் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - நல்ல சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (நல்ல – நன்மையான; சிறந்த; பெரிய); (அப்பர் தேவாரம் - 6.33.7 - "இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத் தினிதமரும் பெருமானை");


9)

நேடரி பிரமன் அன்று .. நிலம்விசும் போடி வாட

நீடெரி ஆன நாதர் .. நித்தியர் முடிமேல் திங்கள்

மாடெறி புனலர் ஏற்றர் .. மாதுமை யாளோர் பங்கர்

நாடறி கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


நேடு அரி பிரமன் அன்று நிலம் விசும்பு ஓடி வாட நீடு எரி ஆன நாதர் - தேடுகின்ற விஷ்ணுவும் பிரமனும் முன்பு மண்ணை அகழ்ந்தும் வானில் பறந்து சென்றும் அடிமுடி காணாமல் வாடும்படி நீண்ட ஜோதி ஆன தலைவர்; (நேடுதல் - தேடுதல்); (விசும்பு - ஆகாயம்); (நீடுதல் - நீள்தல்);

நித்தியர் - அழிவற்றவர்;

முடிமேல் திங்கள் மாடு எறி புனலர் - திருமுடிமேல் சந்திரன் பக்கத்தில் அலைமோதும் கங்கையை உடையவர்; (மாடு - பக்கம்); (எறிதல் - அலையெறிதல்);

ஏற்றர் - இடபவாகனம் உடையவர்;

மாதுமையாள் ஓர் பங்கர் - உமையை ஒரு பங்கில் உடையவர்; (* மாதுமை - திருக்கன்றாப்பூர் இறைவி திருநாமம்);

நாடு அறி கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - புகழுடைய கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


10)

புன்மையார் சொல்லே பேசும் .. பொய்ந்நெறி யோர்கட் கெட்டாத்

தன்மையார் நீறு பூசித் .. தாள்தொழு வாரைத் துன்பம்

இன்மையார் ஆக்கும் இன்பர் .. எருதுகந் தேறும் ஈசர்

நன்மையார் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


புன்மை ஆர் சொல்லே பேசும் பொய்ந்நெறியோர்கட்கு எட்டாத் தன்மையார் - குற்றமுடைய இழிந்த பேச்சே பேசும் பொய்ந்நெறியோர்களால் அடைய ஒண்ணாதவர்; (புன்மை - குற்றம்; இழிவு; சிறுமை); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (நெறி - மார்க்கம்; வழி; சமயம்);

நீறு பூசித் தாள் தொழுவாரைத் துன்பம் இன்மையார் ஆக்கும் இன்பர் - திருநீற்றைப் பூசி அன்போடு திருவடியை வணங்கும் பக்தர்களைத் துன்பம் அற்றவர்கள் ஆக்கி அருள்பவர், இன்பவடிவினர்;

எருது உகந்து ஏறும் ஈசர் - இடபவாகனத்தை விரும்பிய ஈசர்;

நன்மையார் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - நன்மையுடையவர்; நன்மை மிக்க கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (நன்மையார் - 1. நன்மையுடையவர்; 2; நன்மை + ஆர் = நன்மை மிக்க); (ஆர் - மரியாதைப் பன்மை விகுதி); (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்);


11)

பலமலர் தூவி நாளும் .. பைங்கழல் ஏத்து பத்தர்

நிலமிசைப் பிறவா வண்ணம் .. நீள்விசும் பாள வைப்பார்

சலமலி சடையர் வெண்ணூல் .. தாங்கிய பவள மார்பர்

நலமலி கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.


பல மலர் தூவி நாளும் பைங்கழல் ஏத்து பத்தர் நில(ம்)மிசைப் பிறவா வண்ணம் நீள்-விசும்பு ஆளவைப்பார் - தினமும் பல பூக்களைத் தூவி அழகிய கழல் அணிந்த திருவடியை வழிபடும் பக்தர்கள் மீண்டும் இப்பூமியில் பிறவிகள் அடையாதபடி (அவர்களது வினைகளை அழித்து), அவர்களைச் சிவலோகத்தில் இருக்கும்படி அருள்பவர்; (பைங்கழல் - பசிய கழலை அணிந்த திருப்பாதம்); (பைம்மை - பசுமை - அழகு); (விசும்பு - விண்ணுலகம்); (அப்பர் தேவாரம் - 4.49.6 - "சாக்கியனார் நெல்லினார் சோறுணாமே நீள்விசும் பாள வைத்தார்");

சல(ம்) மலி சடையர் - சடையில் கங்கையை உடையவர்; (சலம் - ஜலம் - நீர்);

வெண்ணூல் தாங்கிய பவள-மார்பர் - பவளம் போன்ற செந்நிறம் திகழும் திருமார்பில் பூணூல் தரித்தவர்;

நல(ம்) மலி கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - நன்மை மிக்க கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (மலிதல் - மிகுதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.411 - ஆரூர் (திருவாரூர்) - பிணிநீள் புரிபற்றி

2017-11-18

P.411 - ஆரூர் (திருவாரூர்)

---------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

பிணிநீள் புரிபற்றிப் பணிசெய் தண்டிக்குக்

கணிலே ஒளிதந்த கண்ணார் நுதலானை

அணியார் மதில்சூழ்ந்த ஆரூர் மேயானை

மணியார் மிடறானை மறவேல் மடநெஞ்சே.


பிணி-நீள்-புரி பற்றிப் பணிசெய் தண்டிக்குக் கணிலே ஒளி தந்த கண் ஆர் நுதலானை - கட்டிய நீண்ட கயிற்றைப் பற்றி நடந்து திருக்குளத் தொண்டு செய்த தண்டியடிகளுக்குக் கண்ணில் பார்வையைக் கொடுத்த நெற்றிக்கண்ணனை; (பிணித்தல் - கட்டுதல்); (புரி - கயிறு); (கணிலே - கண்ணிலே - இடைக்குறையாக வந்தது);

அணி ஆர் மதில் சூழ்ந்த ஆரூர் மேயானை - அழகிய மதில் சூழ்ந்த திருவாரூரில் உறைகின்றவனை;

மணி ஆர் மிடறானை மறவேல் மடநெஞ்சே - நீலமணி திகழும் கண்டனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மிடறானை - மிடற்றானை; இடைக்குறை விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.19.2 - "மணிபடு கறைமிடறனை"); (ஏல் - எதிர்மறை ஏவல்-ஒருமை விகுதி);


2)

துளக்கில் நமிநந்தி தூய புனலூற்று

விளக்கில் ஒளிநின்று வீச அருள்வானை

அளப்பில் புகழானை ஆரூர் மேயானை

வளத்தைத் தருவானை மறவேல் மடநெஞ்சே.


துளக்கு இல் நமிநந்தி தூய புனல் ஊற்று விளக்கில் ஒளி நின்று வீச அருள்வானை - அசையாத திட-பக்தி உடைய ( / வருத்தம் தீர்ந்த) நமிநந்தி அடிகள் (கமலாலயக் குளத்தின்) தூய நீரை ஊற்றி எரித்த விளக்கில் நீடு ஒளிவீசும்படி அருளியவனை; (துளக்கு - அசைவு; வருத்தம்);

அளப்பு இல் புகழானை - அளவற்ற புகழ் உடையவனை; (அளப்பு - அளத்தல்; எல்லை);

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

வளத்தைத் தருவானை மறவேல் மடநெஞ்சே - எல்லா நலங்களையும் தருபவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக;


3)

மகனைத் தேரூர்ந்த மனுவுக் கருள்வானைக்

குகனைத் தருவானைக் கொடிய அரவத்தை

அகலத் தணிவானை ஆரூர் மேயானை

மகரக் குழையானை மறவேல் மடநெஞ்சே.


மகனைத் தேர் ஊர்ந்த மனுவுக்கு அருள்வானை - கன்றை இழந்து வருந்திய பசுவைக் கண்டு தன் மகன் மீது தேரை ஓட்டி நீதியை நிலைநிறுத்திய மனுநீதிச் சோழனுக்கு அருளியவனை;

குகனைத் தருவானைக் - முருகனைத் தந்தவனை;

கொடிய அரவத்தை அகலத்து அணிவானை - கொடிய பாம்பை மார்பில் அணிபவனை; (அகலம் - மார்பு);

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மகரக்-குழையானை மறவேல் மடநெஞ்சே - மகரமீன் போன்ற குழையை அணிந்த பெருமானை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.84.9 - "தாழ்மகரக்குழையுந் தோடும் அணிந்த திருக்காதனை");


4)

ஓடு தனையேந்தி ஊணுக் குழல்வானைப்

பாடு வன்றொண்டர் தேடு பொன்னீந்த

ஆடும் பெருமானை ஆரூர் மேயானை

மாடும் தருவானை மறவேல் மடநெஞ்சே.


ஓடுதனை ஏந்தி ஊணுக்கு உழல்வானைப் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரிபவனை; (ஓடு - கபாலம்); (ஊண் - உணவு);

பாடு வன்தொண்டர் தேடு பொன் ஈந்த ஆடும் பெருமானை - புகழ்பாடி இறைஞ்சிய சுந்தரருக்குக் குளத்தில் அவர் தேடிய பொன்னைத் தந்த கூத்தனை; (சுந்தரர் தேவாரம் - 7.25.9 - "கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளங் கெடவே");

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மாடும் தருவானை மறவேல் மடநெஞ்சே - வீடு (முக்தி) அருள்வதோடு இம்மையில் செல்வமும் தருபவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மாடு - செல்வம்; உம் - எச்சவும்மை);


5)

கண்டங் கரியானைக் கங்கைச் சடையானைத்

தொண்டர் அவர்வேண்டத் தூது சென்றானை

அண்டர் பெருமானை ஆரூர் மேயானை

மண்டன் புடையானை மறவேல் மடநெஞ்சே.


கண்டம் கரியானைக் - நீலகண்டனை;

கங்கைச் சடையானைத் - கங்காதரனை;

தொண்டர்-அவர் வேண்டத் தூது சென்றானை - சுந்தரர் வேண்டியவாறே பரவை மனைக்குத் தூது நடந்தவனை; (தொண்டர் - இங்கே வன்தொண்டர் - ஏகதேசமாக வந்ததாகக் கொள்ளல் ஆம்);

அண்டர் பெருமானை - தேவர்கள் பெருமானை;

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மண்டு அன்பு உடையானை மறவேல் மடநெஞ்சே - (அடியவர்களுக்கு) மிகுந்த அன்பு உடையவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மண்டுதல் - அதிகமாதல்);


6)

எழுது மறையான இனிய தமிழ்பாடித்

தொழுத அடியார்க்குத் துணையாய் வருவானை

அழிவில் பெருமானை ஆரூர் மேயானை

மழவெள் விடையானை மறவேல் மடநெஞ்சே.


எழுது மறையான இனிய தமிழ் பாடித் தொழுத அடியார்க்குத் துணையாய் வருவானை - எழுதப்படும் வேதமான இனிய தேவாரத்தைப் பாடி வழிபடும் பக்தர்களுக்குக் காவலாகி வருபவனை;

அழிவு இல் பெருமானை - என்றும் அழிவில்லாத பெருமானை;

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மழ-வெள்-விடையானை மறவேல் மடநெஞ்சே - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மழ - இளமை);


7)

திங்கள் இளநாகம் சேர்ந்து நிலையாகத்

தங்கும் சடையானைச் சங்கக் குழையானை

அங்கை அழலானை ஆரூர் மேயானை

மங்கை பிரியானை மறவேல் மடநெஞ்சே.


திங்கள் இளநாகம் சேர்ந்து நிலையாகத் தங்கும் சடையானைச் - பிறையும் இளம்-பாம்பும் ஒன்றாக என்றும் திகழும் சடையை உடையவனை;

சங்கக்-குழையானை - சங்கினால் ஆன குழையை அணிந்தவனை; (அப்பர் தேவாரம் - 6.98.9 - "சங்கக் குழையோர் காதன்");

அங்கை அழலானை - கையில் நெருப்பை ஏந்தியவனை;

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மங்கை பிரியானை மறவேல் மடநெஞ்சே - உமைபங்கனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக;


8)

இலங்கைக் கிறைதன்னை இறையே விரலூன்றி

மலங்க வைத்தானை வாசம் கமழ்கொன்றை

அலங்கல் அணிவானை ஆரூர் மேயானை

வலங்கொள் விடையானை மறவேல் மடநெஞ்சே.


இலங்கைக்கு இறைதன்னை இறையே விரல் ஊன்றி மலங்க வைத்தானை - இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலைமேல் விரலைச் சிறிதளவே ஊன்றிக் கலங்கவைத்தவனை; (இறை - 1 அரசன்; 2; சிறிதளவு); (மலங்குதல் - மனங்கலங்குதல்);

வாசம் கமழ் கொன்றை-அலங்கல் அணிவானை - மணம் கமழும் கொன்றைமாலையை அணிந்தவனை; (அலங்கல் - பூமாலை);

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

வலங்கொள் விடையானை மறவேல் மடநெஞ்சே - வெற்றியுடைய இடப-வாகனனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (வலம் - வலிமை; வெற்றி);


9)

மடலார் மலரான்மால் மண்விண் மிகநேடச்

சுடராய் எழுவானைத் தொண்டர்க் கெளியானை

அடலே றுடையானை ஆரூர் மேயானை

வடவால் நிழலானை மறவேல் மடநெஞ்சே.


மடல் ஆர் மலரான் மால் மண் விண் மிக நேடச் சுடராய் எழுவானைத் - இதழ்கள் மிக்க தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் விண்ணில் பறந்து சென்றும் மண்ணை அகழ்ந்து சென்றும் தேடும்படி எல்லையில்லாத ஜோதியாகி உயர்ந்தவனை; (மடல் - பூவிதழ்); (நேடுதல் - தேடுதல்); (மலரான் மால் - மண் விண் - எதிர்நிரல்நிறையாக வந்தன);

தொண்டர்க்கு எளியானை - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவனை;

அடல்-ஏறு உடையானை - வலிமைமிக்க எருதை வாகனமாக உடையவனை; (அடல் - வலிமை; போர்; வெற்றி);

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

வடவால் நிழலானை மறவேல் மடநெஞ்சே - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (வடவால் - கல்லாலமரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");


10)

நிழலார் மழுவாளன் நீற்றைப் புனையாதார்

பிழையே புரிகேடர் பேச்சை மதியாதீர்

அழலார் சடையானை ஆரூர் மேயானை

மழையார் மிடறானை வாழ்த்த வருமின்பே.


நிழல் ஆர் மழுவாளன் நீற்றைப் புனையாதார் பிழையே புரி கேடர் பேச்சை மதியாதீர் - ஒளி பொருந்திய மழுவை ஏந்திய சிவபெருமானது திருநீற்றைப் பூசாதவர்களும் குற்றமே செய்யும் கேடர்களும் சொல்லும் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (நிழல் - ஒளி);

அழல் ஆர் சடையானை - தீப் போன்ற செஞ்சடையை உடையவனை; (அழல் - நெருப்பு); (ஆர்தல் - ஒத்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.94.1 - "அழல்நீர் ஒழுகி யனைய சடையும்");

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மழை ஆர் மிடறானை வாழ்த்த வரும் இன்பே - மேகம் ஒத்த நீலநிறம் பொருந்திய கண்டனை வாழ்த்தினால் இன்பமே வந்தடையும்; (மழை - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்); (மிடறு - கண்டம்); (மிடறானை - மிடற்றானை - இடைக்குறையாக வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");


11)

ஊழி பலகண்ட ஒப்பில் பெருமானை

ஆழி உமிழ்நஞ்சை அமுதா உண்டானை

ஆழித் தேரூரும் ஆரூர் மேயானை

வாழி எனநாளும் வாழ்த்த வருமின்பே.


ஊழி பல கண்ட ஒப்பு இல் பெருமானை - பல ஊழிக்காலங்களைக் கண்டவனும் ஒப்பற்றவனுமான பெருமானை; (ஊழி - உலகம் தோன்றி ஒடுங்கும் காலஅளவு ); (அப்பர் தேவாரம் - 6.28.10 - "ஊழி பலகண் டிருந்தார் போலும்");

ஆழி உமிழ் நஞ்சை அமுதா உண்டானை - கடல் கக்கிய ஆலகாலத்தை அமுதம்போல் உண்டவனை; (ஆழி - கடல்); (அமுதா - அமுதாக; கடைக்குறை விகாரம்);

ஆழித்தேர் ஊரும் ஆரூர் மேயானை - "ஆழித்தேர்" என்ற தேர் ஓடுகின்ற திருவாரூரில் உறைகின்றவனை; (ஆழித்தேர் - திருவாரூர்த் தேரின் பெயர்); (ஊர்தல் - செல்லுதல்; ஏறுதல்); (அப்பர் தேவாரம் - 4.19.7 - "ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே");

வாழி என நாளும் வாழ்த்த வரும் இன்பே - "வாழ்க" என்று தினந்தோறும் பக்தியோடு வாழ்த்தினால் இன்பமே வந்தடையும்; (வாழி - வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோட்சொல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------