Tuesday, July 1, 2025

T.207 - பழனம் - நிசிதனிற் பகலிற் பெயர்

2017-11-18

T.207 - பழனம் - நிசிதனிற் பகலிற் பெயர்

(திருவையாறு அருகே உள்ள தலம்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனத் தனனத் .. தனதான)

(இருவினைப் பிறவி - திருப்புகழ் - கொடுமுடி)


3)

நிசிதனிற் பகலிற் .. பெயரோதி

.. நினைநினைத் திடுதற் .. கருளாயே

சசிதனைக் குரவைக் .. குளிர்நீரைச்

.. சடையினிற் புனைவித் .. தகநாதா

கசிமனத் தினர்நற் .. றுணையாகிக்

.. கடுவினைத் தொடரைக் .. களைவோனே

பசியெனத் தலையிற் .. பலிதேர்வாய்

.. படர்பொழிற் பழனப் .. பெருமானே.


பதம் பிரித்து:

நிசிதனிற் பகலிற் பெயர் ஓதி

.. நினை நினைத்திடுதற்கு அருளாயே;

சசிதனைக் குரவைக் குளிர்-நீரைச்

.. சடையினிற் புனை வித்தக; நாதா;

கசி-மனத்தினர் நற்றுணை ஆகிக்

.. கடு-வினைத் தொடரைக் களைவோனே;

பசி எனத் தலையிற் பலிதேர்வாய்;

.. படர்-பொழிற் பழனப் பெருமானே.


நிசிதனிற் பகலிற் பெயர் ஓதி நினை நினைத்திடுதற்கு அருளாயே - நான் இரவும் பகலும் உன் திருப்பெயரைச் சொல்லி உன்னை எண்ணி வழிபடுவதற்கு அருள்வாயாக; (நிசி - இரவு); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின்");

சசிதனைக் குரவைக் குளிர்நீரைச் சடையினிற் புனை வித்தக நாதா - சந்திரனையும் குராமலரையும் குளிர்ந்த கங்கையையும் சடையில் அணிந்த வல்லவனே, நாதனே; (சசி - சந்திரன்); (குரவு - குராமலர்); (வித்தகன் - வல்லவன்);

கசி-மனத்தினர் நற்றுணை ஆகிக் கடு-வினைத்-தொடரைக் களைவோனே - கசிந்து உருகும் மனம் உடைய அன்பர்களுக்கு நல்ல துணைவன் ஆகி அவர்களுடைய கொடிய வினைகளைத் தீர்ப்பவனே;

பசி த் தலையிற் பலிதேர்வாய் - பசித்தவன் போலப் பிரமன் மண்டையோட்டில் பிச்சையேற்பவனே; (தலை - மண்டையோடு); (பலி - பிச்சை); (சம்பந்தர் தேவாரம் - 1.133.8 - "நகுதலையிற் பலிதேர்ந்து");

படர்-பொழிற் பழனப் பெருமானே - படர்ந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறையும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.206 - பழனம் - பிணி வினைத்தொடர்

2017-11-18

T.206 - பழனம் - பிணி வினைத்தொடர்

(திருவையாறு அருகே உள்ள தலம்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனத் தனனத் .. தனதான)

(இருவினைப் பிறவி - திருப்புகழ் - கொடுமுடி)


2)

பிணிவினைத் தொடரற் .. றிடுமாறு

.. பிரியமுற் றடியைத் .. தொழுவேனோ

அணிமலர்க் குழலிக் .. கிடமீவாய்

.. அரைமிசைப் பணிகட் .. டியநாதா

வெணிலவைத் தழுவிப் .. புனலோடும்

.. விரிசடைக் கருணைக் .. கடலேமுன்

பணிசுரர்க் கமுதைத் .. தருவோனே

.. படர்பொழிற் பழனப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பிணி-வினைத்-தொடர் அற்றிடுமாறு,

.. பிரியமுற்று அடியைத் தொழுவேனோ;

அணி-மலர்க் குழலிக்கு இடம் ஈவாய்;

.. அரைமிசைப் பணி கட்டிய நாதா;

வெணிலவைத் தழுவிப் புனல் ஓடும்

.. விரிசடைக் கருணைக் கடலே; முன்

பணி-சுரர்க்கு அமுதைத் தருவோனே;

.. படர்-பொழிற் பழனப் பெருமானே.


பிணி வினைத் தொடர் அற்றிடுமாறு பிரியமுற்று அடியைத் தொழுவேனோ - பந்தித்து உள்ள வினைத்தொகுதி தீரும்படி (/ பிணிகளும் வினைகளும் தீரும்படி) அன்போடு உன் திருவடியை நான் வழிபட அருள்வாயாக; (பிணித்தல் - கட்டுதல்); (பிணிவினைத்தொடர் - பிணித்தொடர் & வினைத்தொடர் என்று இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);

அணி-மலர்க்-குழலிக்கு இடம் ஈவாய் - அழகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய உமைக்கு இடப்பாகம் தந்தவனே;

அரைமிசைப் பணி கட்டிய நாதா - அரையில் நாகப்பாம்பைக் கட்டிய நாதனே; (பணி - நாகப்பாம்பு);

வெணிலவைத் தழுவிப் புனலோடும் விரிசடைக் கருணைக்-கடலே - வெண்மதியைத் தொட்டுக்கொண்டு கங்கை ஓடுகின்ற விரிந்த சடையை உடைய தயாசாகரமே; (வெணிலவை - வெண்ணிலவை);

முன் பணி சுரர்க்கு அமுதைத் தருவோனே - முன்பு தொழுத தேவர்களுக்கு அமுதத்தைத் தந்தவனே;

படர்-பொழிற் பழனப் பெருமானே - படர்ந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறையும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.205 - பழனம் - இனிய சொற்றொடை

2017-11-18

T.205 - பழனம் - இனிய சொற்றொடை

(திருவையாறு அருகே உள்ள தலம்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனத் தனனத் .. தனதான)

(இருவினைப் பிறவி - திருப்புகழ் - கொடுமுடி)


1)

இனியசொற் றொடையிட் .. டிருதாளை

.. இளகுளத் தொடுபற் .. றிடுவேனோ

கனியெனப் புகழப் .. படுவோனே

.. கரியுரித் துரியைப் .. புனைவோனே

தனியெனச் சொலுதற் .. குரியோனே

.. தனுவளைத் தெயிலைச் .. சுடுவோனே

பனிமதிச் சடையிற் .. புனலானே

.. பருமதிற் பழனப் .. பெருமானே.


பதம் பிரித்து:

இனிய சொற்றொடை இட்டு இருதாளை

.. இளகு-உளத்தொடு பற்றிடுவேனோ?

கனி எனப் புகழப்படுவோனே;

.. கரி உரித்து உரியைப் புனைவோனே;

தனி எனச் சொலுதற்கு உரியோனே;

.. தனு வளைத்து எயிலைச் சுடுவோனே;

பனி-மதிச் சடையிற் புனலானே;

.. பருமதிற் பழனப் பெருமானே.


இனிய சொற்றொடை இட்டு இருதாளை இளகு-உளத்தொடு பற்றிடுவேனோ - இனிய பாமாலைகளால் துதித்து உன் இரு-திருவடிகளை உருகும் மனத்தோடு பற்றுமாறு அருள்வாயாக; (சொற்றொடை - பாமாலை); (இளகுதல் - நெகிழ்தல்); (உளம் - மனம்); (பற்றுதல் - பிடித்தல்; மனத்துக்கொள்தல்);

கனி எனப் புகழப்படுவோனே - கனி என்று கற்றவர்களால் புகழப்படுபவனே; (அப்பர் தேவாரம் - 6.32.1 – "கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி"); (சேந்தனார் அருளிய திருவிசைப்பா - 9.5.2 - "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்");

கரி உரித்து உரியைப் புனைவோனே - யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தவனே; (உரி - தோல்);

தனி எனச் சொலுதற்கு உரியோனே - ஒப்பற்றவன் என்று சொல்லத் தக்கவனே; (தனி - ஒன்று; ஒப்பின்மை); (சொலுதற்கு - சொல்லுதற்கு - இடைக்குறை விகாரம்);

தனு வளைத்து எயிலைச் சுடுவோனே - வில்லை வளைத்து முப்புரங்களை எரித்தவனே; (தனு - வில்);

பனி-மதிச் சடையிற் புனலானே - குளிர்ந்த சந்திரன் இருக்கும் சடையில் கங்கையை உடையவனே;

பரு-மதிற் பழனப் பெருமானே - பெரிய மதில்கள் சூழ்ந்த திருப்பழனத்தில் உறையும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.204 - கழுக்குன்றம் - உனைக் கும்பிடு நினைப்பும்

2017-11-02

T.204 - கழுக்குன்றம் - (திருக்கழுக்குன்றம்) - உனைக் கும்பிடு நினைப்பும்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தந்தன தனத்தந்தன தனத்தந்தன .. தனதான)

(தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர - திருப்புகழ் - திருச்செந்தூர்)


உனைக்கும்பிடு நினைப்பும்புகழ் ஒலிக்குந்தமிழ் .. உரைநாவும்

.. உவர்ப்பும்பெரு விருப்புந்தவிர் உளப்பண்பையும் .. அருளாயே

முனைக்குஞ்சரம் உரிக்கும்பர முளைக்கும்பிறை .. அதனோடு

.. முகைக்கொன்றையும் எருக்கும்புனை முடிச்சங்கர .. படுகாலன்

தனைக்கொன்றிட உதைக்குங்கழல் தனக்கன்பினர் .. புகலேவான்

.. தழைக்கும்படி தகிக்குங்கணை தனைக்கொண்டெயில் .. எரியீசா

கனைக்குந்திரை தெறிக்கும்புனல் கரக்குஞ்சடை .. உடையானே

.. கறுக்கும்புயல் அணைக்குங்கிரி கழுக்குன்றுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

உனைக் கும்பிடு நினைப்பும், புகழ் ஒலிக்குந் தமிழ் .. உரை-நாவும்,

.. உவர்ப்பும் பெரு-விருப்புந் தவிர் உளப்-பண்பையும் .. அருளாயே;

முனைக் குஞ்சரம் உரிக்கும் பர; முளைக்கும் பிறை .. அதனோடு,

.. முகைக்-கொன்றையும், எருக்கும் புனை முடிச்-சங்கர; .. படு-காலன்

தனைக் கொன்றிட உதைக்குங் கழல் தனக்கு அன்பினர் .. புகலே; வான்

.. தழைக்கும்படி தகிக்குங் கணை தனைக்கொண்டு எயில் .. எரி-ஈசா;

கனைக்குந் திரை தெறிக்கும் புனல் கரக்குஞ் சடை .. உடையானே;

.. கறுக்கும் புயல் அணைக்குங் கிரி கழுக்குன்று உறை .. பெருமானே.


உனைக் கும்பிடு நினைப்பும், புகழ் ஒலிக்கும் தமிழ் உரை நாவும், - உன்னை வணங்கும் எண்ணத்தையும், உன் புகழ் ஒலிக்கின்ற தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் நாக்கையும்;

உவர்ப்பும் பெரு-விருப்பும் தவிர் உளப் பண்பையும் அருளாயே - விருப்பு-வெறுப்புகள் இல்லாத மனப்பக்குவத்தையும் எனக்கு அருள்வாயாக; (உவர்ப்பு - வெறுப்பு);

முனைக் குஞ்சரம் உரிக்கும் பர - முன்பு பகைமையோடு போர்செய்த யானையின் தோலை உரித்த பரனே; (முனை - முன்னை; "முனை - போர்; பகை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (குஞ்சரம் - யானை);

முளைக்கும் பிறை அதனோடு முகைக்-கொன்றையும் எருக்கும் புனை முடிச்-சங்கர - இளந்திங்களோடு மலர்கின்ற கொன்றை-அரும்பையும் எருக்கமலரையும் சூடுகின்ற திருமுடியை உடைய சங்கரனே; (முகை - அரும்பு); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.7 - "முகைநகைக் கொன்றை மாலை முன்னவன்");

படுகாலன்தனைக் கொன்றிட உதைக்கும் கழல் தனக்கு அன்பினர் புகலே - கொல்லும் கூற்றுவனை அழிக்க உதைத்த கழல் அணிந்த திருவடிக்கு அன்பு உடையவர்களுக்குப் புகலிடம் ஆனவனே; (படுத்தல் - கொல்லுதல்); (கழல் தனக்கு - கழலை அணிந்த திருவடிக்கு);

வான் தழைக்கும்படி தகிக்கும் கணைதனைக் கொண்டு எயில் எரி ஈசா - தேவலோகம் உய்யும்படி சுடுகின்ற ஒரு கணையைக் கையால் எடுத்து முப்புரங்களை எரித்த ஈசனே; (கொள்தல் - கையால் எடுத்தல்);

கனைக்கும் திரை தெறிக்கும் புனல் கரக்கும் சடை உடையானே - ஒலிக்கின்ற அலைகள் நீரைத் தெறிக்கின்ற நதியான கங்கையை ஒளித்த (அடைத்த) சடையை உடையவனே; (கனைத்தல் - ஒலித்தல்); (திரை - அலை); (தெறித்தல் - 3. துளி அல்லது பொறியாய்ச் சிதறுதல்); (கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்);

கறுக்கும் புயல் அணைக்கும் கிரி கழுக்குன்று உறை பெருமானே - கரிய மேகம் வந்து தழுவுகின்ற மலையான திருக்கழுக்குன்றத்தில் உறைகின்ற பெருமானே; (புயல் - மேகம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.410 - கள்ளில் - (திருக்கண்டலம்) - கூர்மழு வாளினன்

2017-10-30

P.410 - கள்ளில் - (திருக்கண்டலம்)

(சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

கூர்மழு வாளினன் கூவி ளங்குரா

நீர்மலி வேணியன் நெற்றிக் கண்ணினன்

கார்வயல் சூழ்திருக் கள்ளில் மேயவன்

ஊர்விடை யான்கழல் உன்னு நெஞ்சமே.


கூர் மழுவாளினன் - கூர்மையுடைய மழுவை ஏந்தியவன்;

கூவிளம் குரா நீர் மலி வேணியன் - வில்வம், குராமலர், கங்கை இவற்றைச் சடையில் தரித்தவன்;

நெற்றிக் கண்ணினன் - முக்கண்ணன்;

கார்வயல் சூழ் திருக் கள்ளில் மேயவன் - நீர்வளம் மிக்க பசிய வயல்கள் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கார் - மேகம்; மழை; நீர்; பசுமை);

ஊர்-விடையான் கழல் - இடபத்தை வாகனமாக உடையவன் திருவடியை; (ஊர்தல் - ஏறுதல்);

உன்னு நெஞ்சமே - நெஞ்சே நினைவாயாக; (உன்னுதல் - நினைதல்);


2)

மறையுரை நாவினன் மாது பங்கமர்

இறையவன் முப்புரம் எய்த வில்லினன்

கறையணி கண்டனம் கள்ளில் மேயவன்

பிறையணி அரனடி பேணு நெஞ்சமே.


மறை உரை நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

மாது பங்கு அமர் இறையவன் - உமையை ஒரு பங்கில் விரும்பிய இறைவன்;

முப்புரம் எய்த வில்லினன் - திரிபுரங்களை எரிக்க வில்லேந்தியவன்;

கறை அணி கண்டன் அம் கள்ளில் மேயவன் - நீலகண்டன்; அழகிய திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (அம் - அழகு); (கண்டனம் கள்ளில் மேயவன் = "கண்டன், நம் கள்ளில் மேயவன்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம்);

பிறை அணி அரன் அடி பேணு நெஞ்சமே - சந்திரனைச் சூடிய ஹரனது திருவடியைப் போற்று நெஞ்சே;


3)

கொடிமிசை ஏற்றினன் கொடிய கூற்றுதை

அடியினன் பாம்பினை அரையில் ஆர்த்தவன்

கடிமலர்ப் பொழிலணி கள்ளில் மேயவன்

பொடியணி கோன்கழல் போற்று நெஞ்சமே.


கொடிமிசை ஏற்றினன் - இடபச்-சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

கொடிய கூற்று உதை அடியினன் - கொடிய நமனைக் காலால் உதைத்தவன்;

பாம்பினை அரையில் ஆர்த்தவன் - நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

கடிமலர்ப் பொழில் அணி கள்ளில் மேயவன் - மணம் மிக்க பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கடி - வாசனை);

பொடி அணி கோன் கழல் போற்று நெஞ்சமே - திருநீற்றைப் பூசிய தலைவனது திருவடியைப் போற்று நெஞ்சே;


4)

மழவிடை ஊர்தியன் மார்பில் நூலினன்

தழலொரு கையினில் தாங்கி ஆடுவான்

கழனிகள் சூழ்தரு கள்ளில் மேயவன்

அழல்நிறத் தரனடி அடையென் நெஞ்சமே.


மழ விடை ஊர்தியன் - இளைய எருதை வாகனமாக உடையவன்;

மார்பில் நூலினன் - மார்பில் பூணூல் அணிந்தவன்;

தழல் ஒரு கையினில் தாங்கி ஆடுவான் - ஒரு கையில் தீயை ஏந்தி ஆடுபவன்;

கழனிகள் சூழ்தரு கள்ளில் மேயவன் - வயல்கள் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கழனி - வயல்); (தருதல் - ஒரு துணைவினை);

அழல் நிறத்து அரன் அடி அடை என் நெஞ்சமே - தீப் போல் செம்மேனி உடைய ஹரனது திருவடியை, என் நெஞ்சே, அடைவாயாக;


5)

விளித்துளம் நைபவர் வினைகள் தீர்த்துவான்

அளிப்பவன் கிளைகளில் ஆடி மந்திகள்

களித்திடு காவணி கள்ளில் மேயவன்

ஒளிச்சடை யான்கழல் உன்னு நெஞ்சமே.


விளித்துளம் நைபவர் வினைகள் தீர்த்து வான் அளிப்பவன் - வாயார ஈசன் திருநாமங்களைச் சொல்லி அழைத்து உள்ளம் உருகும் பக்தர்களது வினைகளையெல்லாம் தீர்த்து அவர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தருபவன்; (விளித்தல் - அழைத்தல்; சொல்லுதல்; பாடுதல்); (வான் - வானுலகம் - சிவலோகம்); (அப்பர் தேவாரம் - 6.31.1 - "ஆரமுதே ஆதீ என்றும், ஆரூரா என்றென்றே அலறா நில்லே");

கிளைகளில் ஆடி மந்திகள் களித்திடு கா அணி கள்ளில் மேயவன் - மரக்கிளைகளில் குரங்குகள் ஆடி மகிழும் சோலை சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கா - சோலை);

ஒளிச்சடையான் கழல் உன்னு நெஞ்சமே - பிரகாசிக்கும் சடையை உடைய சிவபெருமான் திருவடியை நினை நெஞ்சே; (ஒளிச்சடை - ஒளி உடைய சடை); (அப்பர் தேவாரம் - 4.76.10 - "கிளரொளிச் சடையினீரே");


6)

புவியினர் விண்ணவர் போற்று பூரணன்

அவிதலி லாச்சுடர் ஆய பெற்றியன்

கவினுறு வயலணி கள்ளில் மேயவன்

சிவனவன் அடியிணை சிந்தி நெஞ்சமே.


புவியினர் விண்ணவர் போற்று பூரணன் - மண்ணுலகோரும் விண்ணுலகோரும் போற்றுகின்ற முழுமுதற்பொருள்;

அவிதல் இலாச் சுடர் ஆய பெற்றியன் - என்றும் அவியாத ஜோதி என்ற பெருமை உடையவன்; (பெற்றி - இயல்பு; பெருமை); (அவிதல் - அணைந்துபோதல்; சாதல்);

கவின் உறு வயல் அணி கள்ளில் மேயவன் - அழகிய வயல் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கவின் - அழகு);

சிவன்அவன் அடியிணை சிந்தி நெஞ்சமே - சிவபெருமானது இரு-திருவடிகளை, நெஞ்சே, எண்ணுவாயாக;


7)

மாமணம் ஆர்மலர் வாளி ஐந்துடைக்

காமனைப் பொடிபடக் கண்ட கண்ணுதல்

காமரம் ஆர்பொழிற் கள்ளில் மேயவன்

தூமலர் அடியிணை துதியென் நெஞ்சமே.


மா-மணம் ஆர் மலர்-வாளி ஐந்துடைக் - அழகிய, மணம் நிறைந்த மலரம்புகள் ஐந்தினை உடைய; (வாளி - அம்பு);

காமனைப் பொடிபடக் கண்ட கண்ணுதல் - மன்மதனைச் சாம்பல் ஆக்கிய நெற்றிக்கண்ணன்;

காமரம் ஆர் பொழில் கள்ளில் மேயவன் - வண்டுகள் இசை பாடுகின்ற சோலை சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (காமரம் - ஒரு பண்ணின் பெயர்; இசை); (ஆர்த்தல் - ஒலித்தல்);

தூ-மலர் அடியிணை துதி என் நெஞ்சமே - அப்பெருமானது தூய மலர் போன்ற இரு-திருவடிகளை, என் நெஞ்சே, துதிப்பாயாக;


8)

திண்ணிய தசமுகன் சென்னி தோளவை

புண்ணுற ஒருவிரல் பொருப்பில் ஊன்றினான்

கண்ணியல் நெற்றியன் கள்ளில் மேயவன்

புண்ணியன் பொன்னடி போற்று நெஞ்சமே.


திண்ணிய தசமுகன் சென்னி தோளவை புண்ணுற ஒருவிரல் பொருப்பில் ஊன்றினான் - வலிமை மிக்க இராவணனது தலைகளும் புஜங்களும் புண்ணாகும்படி திருவடி-விரல் ஒன்றைக் கயிலைமலைமேல் ஊன்றியவன்;

கண் இயல் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்; (இயல்தல் - தங்குதல்; பொருந்துதல்);

கள்ளில் மேயவன் - திருக்கள்ளிலில் உறைகின்றவன்;

புண்ணியன் பொன்னடி போற்று நெஞ்சமே - புண்ணியமூர்த்தியான அப்பெருமானது பொன் போன்ற திருவடியை, நெஞ்சே, போற்றுவாயாக;


9)

கரியவன் நான்முகன் காணொ ணாதுயர்

எரியவன் அடியவர்க் கென்றும் எளியவன்

கரியுரி போர்த்தவன் கள்ளில் மேயவன்

புரிசடை யான்கழல் போற்று நெஞ்சமே.


கரியவன் நான்முகன் காணொணாதுயர் எரி அவன் - திருமால் பிரமன் இவர்களால் காண்பதற்கு அரிதாகி ஓங்கிய ஜோதி; (கரியவன் - திருமால்); (காணொணாது - காண ஒண்ணாது; தொகுத்தல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 3.33.9 - "அயனொடு மாலுக்கும் காணொணா வண்ணத்தான்");

அடியவர்க்கு என்றும் எளியவன் - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்;

கரி-உரி போர்த்தவன் - யானைத்தோலைப் போர்த்தவன்; (உரி - தோல்);

கள்ளில் மேயவன் - திருக்கள்ளிலில் உறைகின்றவன்;

புரிசடையான் கழல் போற்று நெஞ்சமே - முறுக்கிய சடையை உடைய அப்பெருமானது திருவடியை, நெஞ்சே, போற்றுவாயாக; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);


10)

பொய்யுரை வீணர்சொல் போற்றி டேன்மினீர்

மையணி மிடறினன் வன்னி மான்மறி

கையினில் ஏந்திய கள்ளில் மேயவன்

செய்யவன் அடிதொழச் சேரும் இன்பமே.


பொய் உரை வீணர் சொல் போற்றிடேன்மின் நீர் - பொய்களை உரைக்கின்ற வீணர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவற்பன்மை விகுதி);

மைணி மிடறினன் - நீலகண்டன்;

வன்னி மான்மறி கையினில் ஏந்திய - தீயையும் மான்கன்றையும் கையில் ஏந்திய; (வன்னி - நெருப்பு);

கள்ளில் மேயவன் - திருக்கள்ளிலில் உறைகின்றவன்;

செய்யவன் அடிதொழச் சேரும் இன்பமே - செம்மேனி உடைய சிவபெருமானது திருவடியை வழிபட்டால் இன்பமே வந்தடையும்; இன்பமே மிகும்; (செய் - சிவப்பு);


11)

புதியவன் பழையவன் புற்ற ராவணி

பதியவன் வெண்மழுப் படையை ஏந்தினான்

கதிர்மதி முடியினன் கள்ளில் மேயவன்

அதிர்கழல் தொழுதெழ ஆரும் இன்பமே.


புதியவன் பழையவன் - என்றும் புதியவன்; மிகத் தொன்மையானன்;

புற்று-அரா அணி பதி அவன் - புற்றில் வாழும் இயல்பை உடைய பாம்பை அணியும் தலைவன்;

வெண்மழுப் படையை ஏந்தினான் - கையில் ஒளி வீசும் மழுவாயுதத்தை ஏந்தியவன்; (படை - ஆயுதம்);

கதிர்மதி முடியினன் - கதிர் வீசும் சந்திரனை முடிமேல் அணிந்தவன்; (கதிர் - கிரணம்; ஒளி);

கள்ளில் மேயவன் - திருக்கள்ளிலில் உறைகின்றவன்;

அதிர்-கழல் அடி தொழ ஆரும் இன்பமே - அப்பெருமானது அதிர்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டால் இன்பமே மிகும்; (அதிர்தல் - முழங்குதல் - ஒலித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.203 - இடைமருதூர் (திருவிடைமருதூர்) - நெருக்கிடும் பழவினையவை

2017-10-28

T.203 - இடைமருதூர் (திருவிடைமருதூர்) - நெருக்கிடும் பழவினையவை

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன .. தனதான)

(உனைத்தினந் தொழுதிலன் – திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


நெருக்கி டும்பழ வினையவை தருமிடர்

.. .. .. நெருப்பி னுஞ்சுட அயர்வுறு நிலைதர

.. .. நிணக்கு ரம்பையை அடைவது முடிவில .. தெனவாகி

.. நிலத்து ழன்றிடு மிடியற மணமலர்

.. .. .. நிகர்த்த நின்கழல் இணைதனை அனுதின(ம்)

.. .. நினைத்தி டுஞ்செய லதுசெய ஒருவரம் .. அருளாயே

சுருக்கொ டுந்தொடர் நமன்விழ உதைதரு

.. .. .. துணைப்ப தம்புகழ் கவுணியர் குலபதி

.. .. சொலைக்க னிந்துரை அடியவர் விழைவன .. தருவோனே

.. துளக்கொ டுந்திரு வடிதொழு பிறையது

.. .. .. சுகிக்க அஞ்சடை மிசையணி இறையவ

.. .. சுரர்க்கி ரங்கிய அழகிய கறையணி .. மிடறானே

இருக்கும் அங்கமு(ம்) மொழிவட நிழலின

.. .. .. இமைத்தி டும்பொழு தளவினில் இகலரண்

.. .. எரித்தி டுங்கணை விடவொரு மலைவளை .. பெருவீரா

.. இடத்தி ளங்கொடி அனவுமை திகழ்பர

.. .. .. இரக்க வெண்டலை தரிகர அரிவையர்

.. .. இடத்தில் உண்பலி கொளவுழல் பெருமையும் .. உடையானே

எருக்கை யுந்தழை இலையையும் அடிதனில்

.. .. .. இடப்ப ரிந்துடன் அருள்புரி எளியவ

.. .. எவர்க்கும் உம்பரில் உறைதரு தலைமக .. கயிலாயம்

.. எடுத்த வன்றனை அடர்வுசெய் விரலின

.. .. .. இசைத்து வண்டினம் அடைமது மலிமலர்

.. .. இருக்கும் அம்பொழில் இடைமரு தினிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

நெருக்கிடும் பழவினையவை தரும் இடர்

.. .. நெருப்பினும் சுட, அயர்வுறு நிலை தர,

.. .. நிணக்-குரம்பையை அடைவது முடிவிலது எனவாகி,

.. நிலத்து உழன்றிடு மிடி அற, மணமலர்

.. .. நிகர்த்த நின் கழல்-இணைதனை அனுதின(ம்)

.. .. நினைத்திடும் செயலது செய ஒரு வரம் .. அருளாயே;

சுருக்கொடும் தொடர் நமன் விழ உதைதரு

.. .. துணைப்-பதம் புகழ் கவுணியர் குலபதி

.. .. சொலைக் கனிந்து உரை அடியவர் விழைவன .. தருவோனே;

.. துளக்கொடும் திருவடி தொழு பிறையது

.. .. சுகிக்க அஞ்சடைமிசை அணி இறையவ;

.. .. சுரர்க்கு இரங்கிய அழகிய கறை அணி மிடறானே;

இருக்கும் அங்கமு(ம்) மொழி வட-நிழலின;

.. .. இமைத்திடும்பொழுது அளவினில் இகல்-அரண்

.. .. எரித்திடும் கணை விட ஒரு மலை வளை .. பெரு-வீரா;

.. இடத்து இளங்கொடி அன உமை திகழ்-பர;

.. .. இரக்க வெண்-தலை தரி-கர; அரிவையர்

.. .. இடத்தில் உண்-பலி கொள உழல் பெருமையும் .. உடையானே;

எருக்கையும் தழை இலையையும் அடிதனில்

.. .. இடப், பரிந்து உடன் அருள்புரி எளியவ;

.. .. எவர்க்கும் உம்பரில் உறைதரு தலைமக; .. கயிலாயம்

.. எடுத்தவன்-தனை அடர்வுசெய் விரலின;

.. .. இசைத்து வண்டினம் அடை-மது மலி-மலர்

.. .. இருக்கும் அம்பொழில் இடைமருதினில் உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


நெருக்கிடும் பழவினை அவை தரும் இடர் நெருப்பினும் சுட, அயர்வுறு நிலை தர, நிணக் குரம்பையை அடைவது முடிவு இலது என ஆகி நிலத்து உழன்றிடு மிடி அற – என்னை நெருங்கித் தாக்குகின்ற பழைய வினைகள் தரும் கஷ்டம் நெருப்பைவிடத் தகித்து எனக்கு வருத்தத்தைத் தருவதோடன்றி, ஊனுடலை அடையும் பிறவிகள் முடிவற்றது என்று ஆகி மண்ணுலகில் உழலும் துன்பத்தையும் தரும்; இந்தத் துன்பம் நீங்கும்படி; (நெருக்குதல் - நசுக்குதல்; தாக்குதல்; வருத்துதல்); (அயர்வு - வருத்தம்; சோர்வு); (நிணம் - ஊன்; மாமிசம்); (குரம்பை - உடல்); (மிடி - துன்பம்)

மணமலர் நிகர்த்த நின் கழல்இணைதனை அனுதினம் நினைத்திடும் செயல் அது செய ஒரு வரம் அருளாயே - மணம் கமழும் மலர்போன்ற உன் இரு-திருவடிகளை நாள்தோறும் எண்ணி வழிபட எனக்கு ஒரு வரம் தருவாயாக;


சுருக்கொடும் தொடர் நமன் விழ உதைதரு துணைப்பதம் புகழ் கவுணியர் குலபதி சொலைக் கனிந்து உரை அடியவர் விழைவன தருவோனே - கையில் பாசத்தோடு துரத்துகின்ற இயமன் மாண்டு விழும்படி அவனை உதைத்து மார்க்கண்டேயருக்குத் துணையாக நின்ற திருவடியைப் புகழ்ந்து பாடிய கவுணியர்குலத் தலைவரான திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தை அன்போடு சொல்லும் பக்தர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் தருபவனே; (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்தவர்);

துளக்கொடும் திருவடி தொழு பிறையது சுகிக்க அம்-சடைமிசை அணி இறையவ – அஞ்சித் திருவடியைத் தொழுத பிறை இன்புறும்படி அதனை அழகிய சடையின்மேல் அணிந்த இறைவனே; (துளக்கு - நடுக்கம்; மனக்கலக்கம்); (பிறையது - பிறை - வளைந்த சந்திரன்; அது - பகுதிப்பொருள்விகுதி); (சுகித்தல் - சுகமாயிருத்தல்);

சுரர்க்கு இரங்கிய அழகிய கறை அணி மிடறானே - தேவர்களுக்கு இரங்கிய, அழகிய கறையை அணிந்த கண்டம் உடையவனே; (சுரர் - தேவர்); (மிடறு - கண்டம்);


இருக்கும் அங்கமும் மொழி வட-நிழலின – நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதிய, கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருந்தவனே; (இருக்கு - வேதம்); (அங்கம் - வேதத்தின் ஆறு அங்கங்கள்); (மொழிதல்- சொல்லுதல்); (வடம் - ஆலமரம்); (நிழல் - ஸ்தானம்; இடம்);

இமைத்திடும் பொழுது அளவினில் இகல் அரண் எரித்திடும் கணை விட ஒரு மலை வளை பெரு-வீரா - பகைத்த முப்புரங்களை ஒரு நொடிப்பொழுது அளவில் எரிக்கவல்ல கணையைச் செலுத்த மேருமலையை வில்லாக வளைத்த பெரிய வீரனே; (இகல்தல் - பகைத்தல்); (அரண் - கோட்டை);

இடத்து இளங்கொடி அன உமை திகழ் பர – இடப்பாகத்தில் இளம்-கொடி போன்ற உமை திகழ்கின்ற பரனே; (அன - அன்ன - போன்ற);

இரக்க வெண்-தலை தரி கர – யாசிப்பதற்கு ஒரு வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தியவனே; (தரித்தல் - தாங்குதல்); (கர – கரனே - கரத்தை உடையவனே);

அரிவையர்-இடத்தில் உண்பலி கொள உழல் பெருமையும் உடையானே - பெண்கள் இருக்கும் இல்லங்களில் (/ பெண்களிடம்) பிச்சையை ஏற்கத் திரியும் பெருமையையும் உடையவனே; (இடம் - வீடு; ஏழாம்வேற்றுமை உருபு);


எருக்கையும் தழை-இலையையும் அடிதனில் இடப் பரிந்து உடன் அருள்புரி எளியவ – எருக்கமலரையும் இலைகளையும் இட்டு வழிபட்டாலும் அவ்வடியார்களுக்கு இரங்கி உடனே அருள்புரியும் எளியவனே; அடியவர்களால் எளிதில் அடைப்பெறுபவனே; (தழை - இலை; தழைத்தல் - செழித்தல்); (தழை இலை - 1. ஒருபொருட்பன்மொழி; 2. தழைக்கின்ற இலை);

எவர்க்கும் உம்பரில் உறைதரு தலைமக – எத்தேவர்க்கும் மேலான இடத்தில் உறையும் தலைவனே; (உம்பர் - மேலிடம்); (தருதல் - ஒரு துணைவினை); (தலைமகன் - தலைவன்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.32.8 - "மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி");

கயிலாயம் எடுத்தவன்தனை அடர்வுசெய் விரலின – கயிலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கிய திருவிரலை உடையவனே; (அடர்வு - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.125.8 - "கரம் இருபது முடி ஒருபதும் உடையவன் உர(ம்) நெரிதர வரை அடர்வுசெய்தவன்");

இசைத்து வண்டினம் அடை மது மலி மலர் இருக்கும் அம்-பொழில் இடைமருதினில் உறை பெருமானே - வண்டுகள் இசைபாடி அடைகின்ற, தேன் நிறைந்த மலர்கள் இருக்கின்ற, அழகிய சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------