Wednesday, September 7, 2022

T.169 - தவத்துறை (லால்குடி) - தனத்தை நித்தலும்

2012-05-12

T.169 - தவத்துறை (லால்குடி) - தனத்தை நித்தலும்

(லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில்)

--------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தத்தன தனதன தனதன

தனத்த தத்தன தனதன தனதன

தனத்த தத்தன தனதன தனதன .. தனதான)

(சினத்தி லத்தினை சிறுமண லளவுடல் - திருப்புகழ் - திருத்தணிகை)


தனத்தை நித்தலு(ம்) நினைமட மனமிது

.. .. தருக்கி இத்தரை மிசையிடர் உறவரு

.. .. சழக்கர் நட்பினில் விழுவண(ம்) மயலுறு .. வதனாலே

.. தவத்தி னைச்சிறி தளவிலு(ம்) முயல்வது

.. .. தடுத்தி டக்கடல் அனவினை யதுதரு

.. .. சனிப்பி றப்பினில் உழல்வுறு நிலையுடை .. அடியேனும்

அனத்தை ஒத்திடு நடையுடை மலைமகள்

.. .. அவட்கி டத்தினை அளியொடு தருமுன

.. .. தடித்த லத்தினில் நறுமண(ம்) மலிதரும் .. எழிலாரும்

.. அலர்ச்ச ரத்தொடு விதவித ஒலிமலி

.. .. அமைப்பில் உற்றிடும் அழகிய தமிழினை

.. .. அருத்தி மிக்கிடும் அறிவினை உறவருள் .. புரியாயே

கனைத்த லைத்திடு கடலுமிழ் விடமது

.. .. கறுத்த அற்புத மணியென அணிதிகழ்

.. .. களத்தில் வைத்தமு தமரர்கள் அவருண .. அருள்வோனே

.. கணைக்கு மட்டலர் தொடுமதன் உடலது

.. .. கணத்தி னிற்பொடி படமுனி இறையவ

.. .. கருத்த கற்சிலை கொடுதிரி புரமவை .. எரிவீரா

சினப்பொ ருப்பென வருமத களிறது

.. .. செகுத்து ரித்திடு விறலின துடியொடு

.. .. திருக்க ரத்தினில் ஒளிமழு மறியிவை .. உடையானே

.. சிரைத்த லைக்கலன் இடுபலி மகிழ்பவ

.. .. தெருக்க ளிற்கலி மிகுபரு மதிலணி

.. .. திருத்த வத்துறை தனிலெழு முனிதொழு .. பெருமானே.


பதம் பிரித்து:

தனத்தை நித்தலு(ம்) நினை மட-மனமிது,

.. .. தருக்கி, இத்தரைமிசை இடர் உற வரு

.. .. சழக்கர் நட்பினில் விழுவண(ம்) மயல் உறுவதனாலே,

.. தவத்தினைச் சிறிது-அளவிலு(ம்) முயல்வது

.. .. தடுத்திடக், கடல் அன வினையது தரு

.. .. சனிப்பு இறப்பினில் உழல்வுறு நிலையுடை அடியேனும்,

அனத்தை ஒத்திடு நடையுடை மலைமகள்

.. .. அவட்கு இடத்தினை அளியொடு தரும் உனது

.. .. அடித்தலத்தினில் நறுமண(ம்) மலிதரும் எழில் ஆரும்

.. அலர்ச்சரத்தொடு, விதவித ஒலி மலி

.. .. அமைப்பில் உற்றிடும் அழகிய தமிழினை

.. .. அருத்தி மிக்கு இடும் அறிவினை உற அருள் புரியாயே;

கனைத்து அலைத்திடு கடல் உமிழ் விடமது

.. .. கறுத்த அற்புத மணி என அணி திகழ்

.. .. களத்தில் வைத்து, அமுது அமரர்கள் அவர் உண அருள்வோனே;

.. கணைக்கு மட்டு-அலர் தொடு மதன் உடலது

.. .. கணத்தினிற் பொடிபட முனி இறையவ;

.. .. கருத்த; கற்சிலை கொடு திரிபுரம்-அவை எரி வீரா;

சினப்-பொருப்பு என வரு மத-களிறது

.. .. செகுத்து உரித்திடு விறலின; துடியொடு

.. .. திருக்கரத்தினில் ஒளி-மழு மறி இவை உடையானே;

.. சிரைத்தலைக்கலன் இடுபலி மகிழ்-பவ;

.. .. தெருக்களிற் கலி மிகு, பரு-மதில் அணி

.. .. திருத்-தவத்துறைதனில் எழு-முனி தொழு பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

தனத்தை நித்தலு(ம்) நினை மட மனமிது, தருக்கி, இத்தரைமிசைடர் உ வரு சழக்கர் நட்பினில் விழுவண(ம்) மயல் உறுவதனாலே - பணத்தைத் தினமும் நினைக்கின்ற இந்தப் பேதைமனம், இப்பூமியில் துன்புறுமாறு வருகின்ற தீயோர் நட்பில் விழும்படி மயங்குவதால்; (மடமை - பேதைமை); (தருக்குதல் - ஆணவம்/கர்வம் கொள்ளுதல்); (சழக்கன் - தீயவன்); (மயல் - மயக்கம்);

தவத்தினைச் சிறிது அளவிலு(ம்) முயல்வது தடுத்திடக் - சிறிதளவும் தவம்செய்யவிடாமல் தடுப்பதால்;

கடல் அன வினையது தரு சனிப்பு இறப்பினில் உழல்வுறு நிலையுடை அடியேனும் - கடல் போன்ற வினை தருகின்ற பிறப்பு-இறப்பில் சுழல்கின்ற நிலையை உடைய நானும்; (சனிப்பு - ஜனிப்பு - பிறப்பு); (உழல்வுறுதல் - சுழல்தல்);

அனத்தை ஒத்திடு நடையுடை மலைமகள் அவட்கு இடத்தினை அளியொடு தரும் உது டித்தலத்தினில் - அன்னம் போன்ற நடையை உடைய உமைக்கு இடப்பாகத்தை அன்போடு தரும் உன்னுடைய திருவடியில்; (அனம் - அன்னம்); (அவட்கு - அவள்+கு - அவளுக்கு); (அளி - அன்பு);

நறுமண(ம்) மலிதரும் எழில் ஆரும் அலர்ச்சரத்தொடு, விதவித ஒலி மலி அமைப்பில் உற்றிடும் அழகிய தமிழினை - வாசனையும் அழகும் மிக்க பூமாலைகளோடு, பலவிதச் சந்தநயம் மிக்க அழகிய தமிழ்ப்பாமாலைகளையும்; (அலர் - பூ);

அருத்தி மிக்கு இடும் அறிவினை உறருள் புரியாயே - அன்பு மிகுந்து இட்டு வழிபடும் அறிவைப் பெற அருள்வாயாக; (அருத்தி - அன்பு);

கனைத்து அலைத்திடு கடல் உமிழ் விடமது கறுத்த அற்புத மணின அணி திகழ் த்தில் வைத்து, முது அமரர்கள் அவர் உஅருள்வோனே - ஒலித்து அலைக்கின்ற பாற்கடல் கக்கிய ஆலகாலத்தைக் கரிய அற்புதமான மணியாக அழகிய கண்டத்தில் வைத்து, அமுதினைத் தேவர்கள் உண்ண அருளியவனே; (கனைத்தல் - ஒலித்தல்); (அணி - அழகு); (களம் - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 3.115.1 - "ஆலநஞ்சு அமுதுண்ட களத்தனே");

கணைக்கு மட்டு-லர் தொடு மதன் உடலது கணத்தினிற் பொடிபட முனி இறையவ - அம்புகளாக வாசமலர்களை ஏவும் மன்மதனது உடம்பு ஒருநொடியளவில் சாம்பலாகுமாறு கோபித்து எரித்த இறைவனே; (கணை - அம்பு); (மட்டு - தேன்; வாசனை); (மதன் - காமன்); (பொடி - சாம்பல்); (இறையவன் - இறைவன்); (முனிதல் - கோபித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.41.7 - "காமனைப் பொடிபட நோக்கிப்");

கருத்த - கடவுளே; (கருத்தன் - கர்த்தா - கடவுள்)

கற்சிலைகொடு திரிபுரம்-வை எரி வீரா - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எரித்த வீரனே; (கல் - மலை); (சிலை - வில்);

சினப்-பொருப்பு என வரு மத-களிறது செகுத்து ரித்திடு விறலின - கோபம் மிக்க மலை போல வந்த மதயானையைக் கொன்று அதன் தோலை உரித்த வெற்றியுடையவனே; (பொருப்பு - மலை); செகுத்தல் - கொல்லுதல்); (விறல் - வெற்றி; வலிமை); ("சினப்-பொருப்பு என வரு மத-களிறு" - இல்பொருளுவமை);

துடியொடு திருக்கரத்தினில் ஒளி-மழு மறிவை உடையானே - கையில் உடுக்கை, ஒளியுடைய மழுவாள், மான்கன்று, இவற்றையெல்லாம் ஏந்தியவனே; (துடி - உடுக்கை); (மறி - கன்று - மான்கன்று);

சிரைத்தலைக்கலன் இடுபலி மகிழ்-பவ - மயிர் இல்லாத மண்டையோடு என்ற உண்கலனில் இடும் பிச்சையை விரும்பும் பவனே; (சிரை - மயிர்நீக்கம்); (பலி - பிச்சை); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்); (அப்பர் தேவாரம் - 6.5.3 - "சிரைத்தலையில் ஊணா போற்றி");

தெருக்களிற் கலி மிகு, பரு-மதில் அணி திருத்-தவத்துறைதனில் எழு-முனி தொழு பெருமானே - தெருக்களில் ஆரவாரம் மிகுந்த, பெரிய மதில் சூழ்ந்த திருத்தவத்துறை என்ற தலத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட பெருமானே; (கலி - ஒலி); (திருத்தவத்துறை - லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில்); (எழுமுனி - ஏழு முனிவர்கள் - அத்ரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி - Athri, Bhrigu, Pulasthya, Vasishta, Gauthama, Angeerasa, and Mareechi worshiped Siva here. Hence, Saptharisheeswarar);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment