Friday, September 9, 2022

V.024 - திருமால் - கண்ணப்பன் - சிலேடை

2012-07-05

V.024 - திருமால் - கண்ணப்பன் - சிலேடை

-------------

கரிய திருமேனி கையில்வில் ஏந்தி

திரிதரு பன்றியு மானான் - அரிநாடி

வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்

கான்வதிகண் ணப்பன்மால் காண்.


சொற்பொருள்:

அரி - 1. சிங்கம்; / 2. சக்கரம் (Wheel, discus); ஆயுதம் (Weapon);

ஏந்தி - ஏந்துபவன்;

தருதல் - ஒரு துணைவினை;;

பன்றியுமானான் - 1. பன்றியும் மான் ஆன்; / 2. பன்றியும் ஆனான்;

நாடி - 1. நாடுபவன்; / 2. "விரும்பி" என்ற வினையெச்சம்;

வான்மதிசூடி - வானில் விளங்கும் அழகிய வெண்பிறையைச் சூடியவன்;

இடத்தல் - தோண்டுதல்;

கான் - காடு;

வதிதல் - உறைதல்; தங்குதல்;

காண் - முன்னிலை அசை;


திருமால்:

கரிய திருமேனி - கரிய நிறம் திகழும் திருமேனி உடையவன்;

கையில் வில் ஏந்தி, திரிதரு பன்றியும் ஆனான் - கையில் வில்லை ஏந்தியவனான இராமனும், திரியும் பன்றியும் ஆனவன்; (பன்றி - வராஹ அவதாரம்; அடிமுடி தேடியபொழுது பன்றிவடிவம் கொண்டவன்);

அரி நாடி வான்மதிசூடி மகிழ்வண்ணம் தன் கண்டந்தான் - சக்கராயுதத்தைப் பெற விரும்பிச், சந்திரனைச் சூடிய சிவன் மகிழுமாறு தாமரைமலர் போலத் தன் கண்ணைப் பெயர்த்து இட்டு அர்ச்சித்தவன்; (* திருவீழிமிழலைத் தலவரலாற்று நிகழ்ச்சி);

மால் - விஷ்ணு;


கண்ணப்பன்:

கரிய திருமேனி - கரிய மேனியன்;

கையில் வில் ஏந்தி - கையில் வில் ஏந்தியவன் (வேடன்);

திரிதரு பன்றியும் மான் ஆன் அரி நாடி - திரிகின்ற பன்றியையும், மானையும், ஆனினத்தையும், சிங்கத்தையும் (வேட்டைக்கு) நாடியவன்;

வான்மதிசூடி மகிழ்வண்ணம் தன் கண்டந்தான் - வான்பிறை சூடிய ஈசன் மகிழுமாறு தன் கண்ணை இடந்து அப்பியவன்;

கான் வதி கண்ணப்பன் - காட்டில் வாழ்ந்த கண்ணப்பன்;


பிற்குறிப்பு:

கண்ணப்பரின் நிறத்தையும் அவர் வில்லேந்தி யானை சிங்கம் முதலியவற்றை வேட்டையாடியதையும் வர்ணிக்கும் பெரியபுராணப் பாடல்:

பெரியபுராணம் - கண்ணப்பநாயனார் புராணம் - பாடல் 82

கருவரையொரு தனுவொடுவிசை கடுகியதென முனைநேர்

குரிசில்முன்விடும் அடுசரமெதிர் கொலைபயில்பொழு தவையே

பொருகரியொடு சினவரியிடை புரையறவுடல் புகலால்

வருமிரவொடு பகலணைவன எனமிடையுமவ் வனமே.


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment