2012-06-04
N.020 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2012
--------------
1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
குறைமலிந்த மொழிகளையே கூறியுழல் மதியீனர்
மறைவழியைப் பழித்தலைவார் வஞ்சனையை முறியடித்துப்
பிறைமதியம் சூடியுமை பிரியாத சிவபெருமான்
கறைமிடறன் புகழ்பாடு காழியர்கோன் கழல்போற்றி.
குற்றம் மிகுந்த பேச்சையே பேசி உழலும் அறிவீனர்கள் வேதநெறியைப் பழித்து அலைபவர்கள். அவர்களது வஞ்சனையை வென்று, சந்திரமௌலியும் அர்த்தநாரீஸ்வரனும் நீலகண்டனும் ஆன சிவபெருமான் புகழைப் பாடியருளிய சீகாழிப் பிள்ளையார் திருஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்குகின்றேன்.
2) --- (அறுசீர் விருத்தம் -- 5 மா + காய் - வாய்பாடு) --
கையைப் பிசைந்து கலங்கி அழுது காழி நகர்தன்னில்
ஐயன் ஆகம் பாகம் உடையாள் அளித்த பாலுண்டு
கையில் தாளம் பெற்று நாளும் காதல் மிகப்பாடி
வையம் தன்னிற் சைவம் தழைக்க வந்தார் கழல்போற்றி.
சீகாழியில் கைகளைப் பிசைந்து கலங்கி அழுது ஈசனது திருமேனியில் ஒரு பாகம் உடைய உமாதேவி தந்த திருமுலைப்பாலை உண்டு, பின்னர்க் கைகளில் பொற்றாளம் வரப்பெற்றுத், தினமும் பேரன்போடு பாமாலைகள் பாடி, உலகில் சைவநெறி தழைக்க அவதரித்தவரான திருஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்குகின்றேன்.
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment