Tuesday, November 17, 2020

03.08.011 – முருகன் - பொது - தினமாசை யுற்ற வங்கள் - (வண்ணம்)

03.08.011 – முருகன் - பொது - தினமாசை யுற்ற வங்கள் - (வண்ணம்)

2007-03-25

3.8.11 - முருகன் - தினமாசை யுற்ற வங்கள் - (பொது)

----------------------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தத்த தந்த .. தனதான தத்த தந்த

தனதான தத்த தந்த .. தனதான)

(தனனா தனத்த தந்த .. தனனா தனத்த தந்த

.. தனனா தனத்த தந்த .. தனதான) - என்றும் கருதலாம்;

(விழியால்ம ருட்டி நின்று - திருப்புகழ் - சுவாமிமலை)

(கடிமா மலர்க்கு ளின்ப - திருப்புகழ் - சுவாமிமலை)


தினமாசை யுற்ற வங்கள் .. தமைநாடி நற்ற வங்கள்

.. .. தெரியாது மிக்கு ழன்று .. வயதாகித்

.. திரைநோய்கள் உற்றி றந்து .. சுடுகான கத்தெ ரிந்து

.. .. திரையேக ரைக்க வெந்த .. பொடியா(ம்)முன்

இனமாம லர்ச்ச ரங்கள் .. மணமேறு சொற்ச ரங்கள்

.. .. இணையார்ப தத்த ணிந்து .. மகிழ்வேனோ

.. இபமாமு கத்தன் அன்று கரியாய்வெ ருட்ட அஞ்சும்

.. .. எழிலார்கு றத்தி வந்து .. புணர்மார்பா

வனமாமு லைத்த டங்கண் .. உமைகோன்ந யக்க முன்பு

.. .. மறையோது வித்த கந்த .. அழகான

.. மயில்வாக னக்க டம்ப .. வடிவேல பத்தர் அன்ப

.. .. வரதாவெ னப்ப ணிந்து .. துதிபாடி

உனையேவ ழுத்தும் உம்பர் .. கலிதீர்க ருத்த இன்பம்

.. .. உலவாத முத்த தந்தி .. மகள்நாதா

.. ஒருசேவ லைப்பு னைந்த .. உயர்கேத னத்த தொண்டர்

.. .. உள(ம்)மேவி நிற்கும் எந்தை .. பெருமானே.


பதம் பிரித்து:

தினம் ஆசை உற்று, அவங்கள் .. தமை நாடி, நற்றவங்கள்

.. .. தெரியாது, மிக்கு உழன்று, .. வயதாகித்,

.. திரை நோய்கள் உற்று, இறந்து, .. சுடு-கானகத்து எரிந்து,

.. .. திரையே கரைக்க வெந்த .. பொடி ஆ(ம்)முன்,

இன-மா-மலர்ச்சரங்கள் .. மணம் ஏறு- சொற்சரங்கள்

.. .. இணை-ஆர்-பதத்து அணிந்து .. மகிழ்வேனோ?

.. இபமாமுகத்தன் அன்று கரியாய் வெருட்ட அஞ்சும்

.. .. எழில் ஆர்-குறத்தி வந்து .. புணர்-மார்பா;

வன-மா-முலைத் தடங்கண் .. உமைகோன் நயக்க முன்பு

.. .. மறை ஓதுவித்த கந்த; .. "அழகான

.. மயில்வாகனக் கடம்ப; .. வடிவேல; பத்தர் அன்ப;

.. .. வரதா" எனப் பணிந்து .. துதி பாடி

உனையே வழுத்தும் உம்பர் .. கலி தீர்-கருத்த; இன்பம்

.. .. உலவாத முத்த; தந்தி-மகள் நாதா;

.. ஒரு சேவலைப் புனைந்த .. உயர்-கேதனத்த; தொண்டர்

.. .. உள(ம்) மேவி நிற்கும் எந்தை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


தினம் ஆசை ற்று, வங்கள்தமை நாடி, நற்றவங்கள் தெரியாது, மிக்குழன்று - நாள்தோறும் ஆசையால் அவச்செயல்களையே விரும்பி, நல்ல தவங்கள் செய்ய அறியாமல், மிக உழன்று வருந்தி;

வயதாகித், திரை நோய்கள் உற்று - முதுமை அடைந்து, தோற்சுருக்கமும் வியாதிகளும் அடைந்து; (திரை - 1. தோற்சுருக்கம்; 2. அலை; கடல்); (திரை நோய்கள் - திரையும் நோய்களும் - உம்மைத்தொகை; "அலை போல நோய்கள்" என்று உவமைத்தொகையாகவும் பொருள்கொள்ளல் ஆம்);

இறந்து, சுடு-கானகத்து எரிந்து, திரையே கரைக்க வெந்த பொடி ஆ(ம்)முன் - செத்துச், சுடுகாட்டில் (இந்த உடலானது) எரிந்து, கடலில் (/நதியில்) கரைக்கச் சாம்பல் ஆவதன் முன்னமே; (திரை - அலை; கடல்; நதி); (பொடி - சாம்பல்);

இன-மா-மலர்ச்சரங்கள், மணம் ஏறு- சொற்சரங்கள் இணை-ஆர்-பதத்து அணிந்து மகிழ்வேனோ - நல்ல அழகிய பூமாலைகளையும் வாசனை மிக்க பாமாலைகளையும் உன் இரு-திருவடிகளில் சூட்டி மகிழ அருள்வாயாக; (பதம் - பாதம்); (அணிதல் - அலங்கரித்தல்); (ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திர வெண்பா - 11.5.6 - "மாலை தலைக்கணிந்து மையெழுதி")

இபமாமுகத்தன் அன்று கரியாய் வெருட்ட அஞ்சும் எழில் ஆர்-குறத்தி வந்து புணர்-மார்பா - கஜமுகத்துக் கணபதி அன்றொ யானை வடிவில் வந்து அச்சுறுத்தவும், அந்த யானையைக் கண்டு அஞ்சிய அழகிய குறத்தி (வள்ளி) வந்து கட்டிக்கொண்ட திருமார்பினனே; (இபம் - யானை); (வெருட்டுதல் - பயமுறுத்துதல்); (புணர்தல் - பொருந்துதல்);

வன-மா-முலைத் தடங்கண் உமைகோன் நயக்க முன்பு மறை ஓதுவித்த கந்த - அழகிய பெரிய முலையும் விசாலமான கண்ணும் உடைய உமைக்குக் கணவனான சிவபெருமான் விரும்ப முன்பு பிரணவத்தை விளக்கிய கந்தனே; (வனம் - அழகு); (தடம் - விசாலம்); (கோன் - கணவன்); (தடங்கணுமை - தடங்கண்ணுமை என்பது சந்தம் கருதி ணகர ஒற்று மிகாது வந்தது);

"அழகான மயில்வாகனக் கடம்ப; வடிவேல; பத்தர் அன்ப; வரதா" எனப் பணிந்து துதி பாடி உனையே வழுத்தும் உம்பர் கலி தீர்-கருத்த - "அழகிய மயிலை வாகனமாக உடைய கடம்பனே! கூரிய வேலை ஏந்தியவனே! அன்பர்க்கு அன்பனே! வரதனே!" என்று வணங்கித் துதிகள் பாடி உன்னையே வாழ்த்திய தேவர்களது துன்பத்தைத் தீர்த்த கடவுளே; (கடம்பன் - கடப்பமலர்களால் ஆன மாலையை அணிந்தவன்); (கருத்தன் - கர்த்தா - கடவுள்; தலைவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.134.1 - "கருத்தன் கடவுள் கனலேந்தி ஆடும் நிருத்தன்");

இன்பம் உலவாத முத்த - பேரின்ப முக்திநிலையில் இருப்பவனே; பேரின்ப முக்தியை அருள்பவனே; (உலத்தல் - குறைதல்; அழிதல்); (முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்);

தந்தி-மகள் நாதா - தெய்வயானை கணவனே; (தந்தி - யானை; தந்திமகள் - தெய்வயானை); (கந்தபுராணம் - வள்ளி திருமணப்படலம் - 261 - "யானைதன் அணங்கு வாழ்க");

ஒரு சேவலைப் புனைந்த உயர்-கேதனத்த - சேவல் திகழும் உயர்ந்த கொடியை உடையவனே; (கேதனம் - கொடி);

தொண்டர் உள(ம்) மேவி நிற்கும் எந்தை பெருமானே - அடியார் உள்ளத்தில் விரும்பிக் குடிகொள்ளும் எந்தையாகிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment