Wednesday, November 18, 2020

03.05.115 – பராய்த்துறை - புலாற்குடில் இதுபேண - (வண்ணம்)

03.05.115 – பராய்த்துறை - புலாற்குடில் இதுபேண - (வண்ணம்)

2009-08-27

3.5.115 - நாமம் நினைய ருள் (பராய்த்துறை - திருப்பராய்த்துறை)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனாத்தன .. தனதான )


புலாற்குடில் .. இதுபேணப்

.. பொலாச்செயல் .. புரியாமல்

எலாப்பிணி .. அறுநாமம்

.. இராப்பகல் .. நினைவேனோ

பலாக்கனி .. உகுதேனே

.. பராய்த்துறை .. உறைவோனே

நிலாப்புனல் .. அரவோடு

.. நிலாப்புனை .. பெருமானே.


பதம் பிரித்து:

புலாற்-குடில் இது பேணப்

.. பொலாச்-செயல் புரியாமல்,

எலாப் பிணி அறு நாமம்

.. இராப்பகல் நினைவேனோ;

பலாக்கனி உகு தேனே;

.. பராய்த்துறை உறைவோனே.

நிலாப்-புனல் அரவோடு

.. நிலாப் புனை பெருமானே.


புலாற்-குடில்இது பேணப் பொலாச் செயல் புரியாமல் - ஊனால் ஆகிய இந்த உடம்பை வளர்ப்பதற்காகத் தீவினைகளைச் செய்து கெடாமல்; (புலால் - மாமிசம்); (குடில் - உடம்பு); (பொலா - பொல்லா - தீய);

எலாப் பிணி அறு நாமம் இராப்பகல் நினைவேனோ - எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் உன் திருநாமத்தை இரவுபகலாக நினைக்க அருள்வாயாக; (எலா - எல்லா); (பிணி - பந்தம்; நோய்); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்; நீக்குதல்);

பலாக்கனி உகு தேனே - பலாப்பழத்திலிருந்து சொரியும் இனிய தேன் போன்றவனே; (மிகவும் இனிமை பயப்பவனே); (உகுதல் / உகுத்தல் - சுரத்தல்; சொரிதல்); (தேன் - இரசம்; இனிய சாறு); (சம்பந்தர் தேவாரம் - 1.54.3 - "ஒள்வாழைக்கனி தேன்சொரி ஓத்தூர்");

பராய்த்துறை உறைவோனே - திருப்பராய்த்துறையில் எழுந்தருளியவனே;

நிலாப் புனல் அரவோடு நிலாப் புனை பெருமானே - நில்லாது ஓடி வந்த கங்கையையும், பாம்பையும், பிறைச்சந்திரனையும் சூடிய பெருமானே; (நிலாப் புனல் - நில்லாப் புனல் - சடையிடை ஓடுகின்ற கங்கையாறு); (நிலா - பிறைச்சந்திரன்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment