Saturday, November 21, 2020

03.04.097 - சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-19

சென்னை ஸ்பெஷல்!

3.4.97 - சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை

-------------------------------------------------------

தண்ணீரைத் தாங்கிவரும் காணத் தவமிருப்போர்

உண்ணீர் எனவாகும் உண்மைதான் - பெண்ணாணாய்ச்

சேர்ந்துநிற்கக் கண்டதும் என்னண்டா என்றிடுமான்

ஏந்துமரன் நீர்வண்டி இங்கு.


சொற்பொருள்:

உண்ணீர் - 1. உண் நீர்; / 2. உள் நீர்;

உள் - மனம்;

தான் - 1. தேற்றச் சொல்; / 2. படர்க்கை ஒருமைப்பெயர் - இங்கே, அவன்;

உண்மைதான் - 1. மெய்யே; 2. மெய்ப்பொருள் அவன்;

அண்டா - 1. ஒரு பெரிய பாத்திரம்; (இங்கே ஆகுபெயராய் இனப்பொதுமையால் குடம், தோண்டி, முதலியவற்றையும் குறித்தது); / 2. அண்டனே; (அண்டன் - கடவுள்);

என்றிடுமான் ஏந்துமரன் - a. என்றிடும் மான் ஏந்தும் அரன்; / b. என்றிடும் ஆன் ஏந்தும் அரன்;

ஆன் - இடபம்;

நீர்-வண்டி - தண்ணீர் வினியோகிக்கும் லாரி;


நீர்வண்டி (தண்ணீர் லாரி):

தண்ணீரைத் தாங்கி வரும் - தண்ணீரைச் சுமந்து வரும்;

காணத் தவம் இருப்போர் உண் நீர் என ஆகும் உண்மைதான் - (அதன் வரவை) ஆவலோடு எதிர்பார்த்திருப்பவர்கள் பருகும் நீர் பெறுவதும் மெய்யே.

பெண் ஆணாய்ச் சேர்ந்து, நிற்கக் கண்டதும் "என் அண்டா" என்றிடும் - பெண்களும் ஆண்களும் கூடி, (அவ்வண்டி வந்து) நின்றவுடன், "என் அண்டா; என் அண்டா" என்று தத்தம் பாத்திரங்களில் நிரப்புமாறு சொல்கின்ற;

நீர்வண்டி - தண்ணீர் லாரி;


சிவன்:

தண்ணீரைத் தாங்கி வரும் - கங்கையை முடிமேல் தாங்குபவன்;

காணத் தவம் இருப்போர் உள் நீர் என ஆகும் - அவனைக் காணத் தவம் இருப்பவர்கள் மனம் நீர் போல உருகும்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-69 - "நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே");

உண்மை தான் பெண் ஆணாய்ச் சேர்ந்து நிற்கக் கண்டதும் "என் அண்டா" என்றிடும் - மெய்ப்பொருளான அவன் அர்த்தநாரீஸ்வரனாகத் தோன்றியதும் "என் அண்டனே" என்று பக்தர்கள் துதிக்கும்;

என்றிடுமான் ஏந்தும் அரன் - என்றிடும் மான் ஏந்தும் அரன் / என்றிடும் ஆன் ஏந்தும் அரன் - a. மானைக் கையில் ஏந்திய சிவன்; / b . இடபத்தால் தாங்கப்பெறும் சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment