Wednesday, November 11, 2020

03.06.042 - அரிக்கும் - நிலவும் - மடக்கு

03.06 – மடக்கு

2009-05-02

3.6.42 - அரிக்கும் - நிலவும் - மடக்கு

-------------------------

அரிக்கும் அயற்கும் அரியவனை நம்மை

அரிக்கும் வினையை அறவே - அரிக்கும்

நிலவும் அரவும் நிமிர்சடைமேல் சேர்ந்து

நிலவும் அரனை நினை.


அரிக்கும் - 1. அரி - ஹரி; 2. அரித்தல் - வருத்துதல்; இமிசித்தல்; 3. அரித்தல் - அழித்தல்; நீக்குதல்;

அற - முழுதும்;

நிமிர்தல் - நீளுதல்; உயர்ந்ததாதல்; (நிமிர்சடை - நீண்ட சடை); (7.72.8 - "நீறணி நிமிர்சடை முடியினன்");

சேர்தல் - ஒன்றுகூடுதல்; நட்பாதல்

நிலவும் - 1. நிலவு - சந்திரன்; 2. நிலவுதல் - தங்குதல்; இருத்தல்;


அரிக்கும் அயற்கும் அரியவனை - விஷ்ணு பிரமன் இவர்களால் காண இயலாதவனை;

நம்மை அரிக்கும் வினையை அறவே அரிக்கும் (அரனை) - நம்மை வருத்துகின்ற வினைகளை முழுதும் அழிக்கும் ஹரனை; (பாடலில் ஈற்றடியில் வரும் "அரனை" என்ற சொல்லை இச்சொற்றொடரோடும் இயைத்துப் பொருள்கொள்க);

நிலவும் அரவும் நிமிர்-சடைமேல் சேர்ந்து நிலவும் அரனை நினை - சடையின்மீது சந்திரனும் பாம்பும் பகையின்றிச் சேர்ந்து ஒன்றாக இருக்கின்ற சிவபெருமானை நினைவாயாக.

("மனமே" என்ற விளி தொக்கு நின்றது).


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment