Monday, November 16, 2020

03.04.094 - சிவன் - தேனீ - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-03

3.4.94 - சிவன் - தேனீ - சிலேடை

-------------------------------------------------------

மலரகத்துத் தங்கி மகிழும்தே னாடி

நலம்செய்யு மாறடிகள் காட்டும் - வலங்கொண்டோர்

கூடடையா வண்ணம் கொடுக்கு மிருக்குமிசை

பாடும்தே னீயேகம் பன்.


சொற்பொருள்:

மலரகத்து - 1. மலரினுள்; / 2a. மலர்ந்த மனத்துள்; (வினைத்தொகை) / 2b. அகத்தாமரையில்;

தேனாடி - 1. தேன் நாடி; / 2. தேன் ஆடி (தேன் அபிஷேகம் உடையவன்);

நலம்செய்யு மாறடிகள் - 1. நலம்செய்யும் ஆறு அடிகள்; / 2a. நலம்செய்யும் மாறு-அடிகள்; / 2b. நலம்செய்யுமாறு அடிகள்;

மாறு அடிகள் - வினைத்தொகை - வேறுபட்ட அடிகள் (அர்த்தநாரீஸ்வரக் கோலம்);

(அப்பர் தேவாரம் - திருமுறை 6.6.6 - "உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி" - வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன);

வலங்கொண்டோர் - 1. வலியவர்கள்; / 2. பிரதட்சிணம் செய்பவர்கள்;

கூடு - 1. தேன்கூடு; / 2. உடல்;

கொடுக்கு மிருக்குமிசை பாடும் - 1. கொடுக்கும் இருக்கும்; இசை பாடும்; / 2. கொடுக்கும்; இருக்கும் இசை பாடும்;

கொடுக்கு - தேனீயின் கொட்டும் உறுப்பு;

இருக்கும் - 1. உண்டு; / 2. வேதமும்;

இருக்கு - ரிக்வேதம்; வேதம்;

இசை - 1. சங்கீதம்; / 2. புகழ்;

ஏகம்பன் - கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளிய சிவபெருமான்;


தேனீ:

மலரகத்துத் தங்கி மகிழும் தேன் நாடி - மதுவை விரும்பி மலர்களுள் சென்றிருந்து களிக்கும்;

நலம் செய்யும் - (மகரந்தச் சேர்க்கைக்கு உதவி) நன்மை செய்யும்;

ஆறு அடிகள் காட்டும் - ஆறு கால்கள் இருக்கும்;

வலங்கொண்டோர் கூடு அடையா வண்ணம் கொடுக்கும் இருக்கும் - வலியவர்கள் (தன்) கூட்டை நெருங்காதபடி அவர்களைக் கொட்டி விரட்டக் கொடுக்கு இருக்கும்;

இசை பாடும் தேனீ - ரீங்காரம் செய்யும் தேனீ.


சிவன்:

மலர்-அகத்துத் தங்கி மகிழும் தேன்-ஆடி - (அடியவர்களின்) மலர்ந்த மனத்துள் (அகத்தாமரையில்) உறைந்து மகிழ்பவன்; தேன் அபிஷேகம் உடையவன்;

நலம் செய்யும் மாறு [/செய்யுமாறு] அடிகள் காட்டும் - நன்மை செய்பவனாக, அர்த்தநாரீஸ்வரனாக (ஆண் பெண் என) வேறுபட்ட பாதங்களை உடையவன்; [/திருவடிகளைக் காட்டி நன்மை செய்பவன்];

வலங்கொண்டோர் கூடு அடையா வண்ணம் கொடுக்கும் - (தன்னைப்) பிரதட்சிணம் செய்யும் அடியவர்கள் மீண்டும் ஓர் உடலை அடையாதவாறு (பிறப்பை அறுத்து) அருள்செய்பவன்;

இருக்கும் இசை பாடும் ஏகம்பன் - வேதமும் புகழ் பாடுகின்ற கச்சி ஏகம்பன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment