Wednesday, November 4, 2020

03.04.089 - சிவன் - இராமன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-04-03 (இராமநவமியை ஒட்டி)

3.4.89 - சிவன் - இராமன் - சிலேடை

-------------------------------------------------------

கோதண்ட பாணிதந்தை சொல்கடந்தா னல்லனே

மாதரையாள் வான்புகழ் மன்னியவன் - வேதனை

தீர இராவணனை அன்றடர்த்தான் சீதைகோன்

ஆரமெனப் பாம்பார் அரன்.


சொற்பொருள்:

கோதண்டம் - வில்;

பாணி - கை; கையில் ஏந்தியவன்;

சொல்கடந்தானல்லனே - 1. சொல் கடந்தான்; நல்லனே; / 2. சொல் கடந்தான் அல்லனே;

கடத்தல் - 1. மேற்படுதல்; / 2. மீறுதல்;

மாதரையாள்வான்புகழ்மன்னியவன் - 1. மாதரை ஆள், வான் புகழ் மன்னியவன்; / 2. மா தரை ஆள்வான்; புகழ் மன்னியவன்;

வேதனை - 1. வேதன்; ; / 2. வேதனை;

- தலைவன்;

தீர - 1. வலிமையுள்ள; வீரமுள்ள; (தீரம் - தைரியம்; வலிமை); / 2. தீரும்படி;

அடர்த்தல் - 1. அமுக்குதல்; நசுக்குதல் / 2. தாக்குதல்; கொல்லுதல்;

ஆரம் - மாலை; ஆபரணம்;

ஆர்தல் - அணிதல்;


இராமன்:

கோதண்டபாணி - வில்லை ஏந்தியவன்;

தந்தை சொல் கடந்தான் அல்லனே - தன் தந்தையின் சொல்லை என்றும் மீறாதவன்;

மா தரை ஆள், வான் புகழ் மன்னியவன் - பெரிய மண்ணுலகை ஆண்ட, பெரும்புகழ் நிலைபெற்றவன்; (ஆள் வான்புகழ் - வினைத்தொகை);

வேதனை தீர இராவணனை அன்று அடர்த்தான் - (உலகின், தேவர்களின், சீதையின்) இடர்கள் தீருமாறு, இராவணனைப் போரிட்டு அழித்தவன்;

சீதைகோன் - சீதைக்குக் கணவனான இராமன்;


சிவன்:

கோ - அரசன்;

தண்டபாணி தந்தை - முருகனுக்குத் தந்தை;

சொல் கடந்தான் - சொல்லைக் கடந்தவன் - மொழியால் முற்றும் விளக்க ஒண்ணாதவன்;

நல்லனே - நன்மை அளிப்பவன் (சங்கரன்);

மாதரை ஆள், வான் புகழ் மன்னியவன் - பார்வதி, கங்கை என இருவரின் நாயகன்; அழியாத பெரும்புகழ் உடையவன்;

வேதன் - வேதத்தின் பொருளாக இருப்பவன்;

- தலைவன்;

தீர இராவணனை அன்று அடர்த்தான் - வலிமையுள்ள இராவணனை முன்பு (அவன் கயிலையைப் பெயர்க்க முயன்றபொழுது அம்மலையின் கீழ்) நசுக்கியவன்;

ஆரம் எனப் பாம்பு ஆர் அரன் - மார்பில் மாலைபோல் பாம்பை அணிந்த சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment