Wednesday, November 11, 2020

03.04.092 - சிவன் - கரும்பு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-05-19

3.4.92 - சிவன் - கரும்பு - சிலேடை

-------------------------------------------------------

பல்லோர்கை யேந்திப் பரவசம் கொள்ளஅங்கே

மெல்ல விளையும் மிகஇனிமை - நல்லஒரு

தோகையுண் டுச்சியில் பாகங் களிக்கின்ற

ஏகன் கரும்பென் றியம்பு.


சொற்பொருள்:

பல்லோர் - 1. பல் உடையவர்கள்; 2. பலர்;

கையேந்தி - 1. கையில் ஏந்தி; / 2. இரந்து; யாசித்து;

பரவசம் - மிகு களிப்பு;

மெல்ல - 1. கடித்து மெல்லும்பொழுது; / 2. மெதுவாக;

இனிமை - 1. தித்திப்பு; / 2. இன்பம்;

தோகை - 1. நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள் (Sheath, as of sugarcane); / 2. பெண்;

உச்சி - 1. மேல் பகுதி; / 2. தலை;

பாகங்களிக்கின்ற - 1. பாகு அங்கு அளிக்கின்ற; 2. பாகம் களிக்கின்ற;

பாகு - இளகக் காய்ச்சிய வெல்லம் (molasses, sugar syrup);

பாகம் - கூறு; பாதி;

ஏகன் - ஒருவன் - ஒப்பற்றவன்;


கரும்பு:

பல்லோர் கை ஏந்திப் பரவசம் கொள்ள அங்கே மெல்ல விளையும் மிக இனிமை - பல் உள்ளவர்கள் கையில் பிடித்துக் கடித்து மெல்லும்பொழுது அவர்கள் மகிழும்படி மிகவும் தித்திப்புத் தோன்றும்.

நல்ல ஒரு தோகை உண்டு உச்சியில் - கரும்பின் உச்சியில் தோகை என்று சொல்லப்படும் இலை இருக்கும்;

பாகு அங்கு அளிக்கின்ற - (காய்ச்சுவதால்) வெல்லப் பாகைத் தருகின்ற;

கரும்பு என்று இயம்பு - கரும்பு என்று சொல்;


சிவன்:

பல்லோர் கையேந்திப் பரவசம் கொள்ள அங்கே மெல்ல விளையும் மிக இனிமை - (பக்தர்கள்) பலரும் தம் கைகளை ஏந்தி (அவன் அருளை இரந்து) மகிழ்ந்து தொழும்பொழுது மெதுவாக அவர்களுக்கு மிகவும் இன்பம் தோன்றும்;

நல்ல ஒரு தோகை உண்டு உச்சியில் - திருமுடிமேல் கங்கை என்ற நங்கை உண்டு;

பாகம் களிக்கின்ற - திருமேனியில் ஒரு கூறு (பார்வதிக்கு அளித்து) மகிழ்கின்ற;

ஏகன் என்று இயம்பு - ஒருவன், ஒப்பற்ற சிவபெருமான் என்று சொல்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment