Saturday, November 11, 2023

07.22 – நெல்வாயில் (சிவபுரி) - தழலார் மேனி

07.22 – நெல்வாயில் (சிவபுரி)

2016-01-21

நெல்வாயில் (இக்காலத்தில் - சிவபுரி)

(இத்தலம் சிதம்பரம் அருகே உள்ளது)

------------------

(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப்")


1)

தழலார் மேனிச் சங்கரனே .. தாதாய் காவாய் என்றடியைத்

தொழுமார்க் கண்டர்க் கருள்புரிந்து .. சூல மேந்தி வருநமனைக்

கழலால் உதைத்த கண்ணுதலான் .. கள்ளுண் டளிகள் இசைபாடும்

நிழலார் சோலை நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


* திருநெல்வாயில் ஈசன் திருநாமம் - உச்சிநாதர்;


"தழல் ஆர் மேனிச் சங்கரனே; தாதாய்; காவாய்" என்று அடியைத் தொழு மார்க்கண்டர்க்கு அருள்புரிந்து - "தீப் போன்ற செம்மேனி உடைய சங்கரனே; தந்தையே; காத்தருளாய்" என்று திருவடியை வணங்கிய மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்து; (ஆர்தல் - ஒத்தல்);

சூலம் ஏந்தி வரு நமனைக் கழலால் உதைத்த கண்ணுதலான் - கையில் சூலத்தை ஏந்தி அவரை அணுகிய காலனைத் திருவடியால் உதைத்த நெற்றிக்கண்ணன்;

கள் உண்டு அளிகள் இசை பாடும் நிழல் ஆர் சோலை நெல்வாயில் - பூக்களில் மது உண்டு வண்டுகள் இசை செய்யும், நிழல் மிக்க பொழில்கள் சூழ்ந்த திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும்; (அளி - வண்டு);

நீர் ஆர் உச்சிப் பெருமானே - தலையில் கங்கையை உடைய பெருமான், உச்சிநாதன்; (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்); (உச்சி - தலை; நடுப்பகல்); (சம்பந்தர் தேவாரம் - 2.26.5 - "நெல்வாயில் மேவிய ஒருத்தனார் எமதுச்சியாரே");


2)

எல்லா ருக்கும் ஒருதலைவன் .. இமையோர்க் கிரங்கி மேருமலை

வில்லால் எயில்கள் மூன்றுமுடன் .. வேவ எரியார் கணையேவ

வல்லான் மார்பில் வாளரவ .. மாலை தாங்கு மாதேவன்

நெல்லார் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


எல்லாருக்கும் ஒரு தலைவன் - எல்லார்க்கும் தலைவன், ஒப்பற்றவன்; (ஒரு - ஒன்று; ஒப்பற்ற);

இமையோர்க்கு இரங்கி மேருமலை வில்லால் எயில்கள் மூன்றும் உடன் வேவ எரிர் கணை வல்லான் - தேவர்களுக்கு இரங்கி, மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களும் ஒருங்கே வெந்து அழிய தீப் பொருந்திய கணையை எய்தவன்; (எயில் - கோட்டை);

மார்பில் வாள்-ரவ மாலை தாங்கு மாதேவன் - மார்பில் கொடிய பாம்பை மாலையாக அணிந்த மகாதேவன்; (வாள் - கொடிய); (அரவம் - பாம்பு);

நெல்ர் வயல் சூழ் நெல்வாயில் - நெற்பயிர் விளையும் வயல் சூழ்ந்த திருநெல்வாயிலில் எழுந்தருளிய;

நீர் ஆர் உச்சிப் பெருமானே - தலையில் கங்கையை உடைய பெருமான், உச்சிநாதன்;


3)

ஆற்று கின்ற செயலெல்லாம் .. அரன்தொண் டாகச் செய்கின்ற

ஏற்றம் உடையார் உள்ளத்தில் .. இனிதே உறையும் எம்மீசன்

ஏற்றன் ஏனக் கொம்பணிந்த .. இறைவன் நூலார் மார்பில்வெண்

நீற்றன் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


ஆற்றுகின்ற செயல் எல்லாம் அரன் தொண்டாகச் செய்கின்ற - செய்வதெல்லாம் சிவன் பணியாகச் செய்கின்ற; (திருவெம்பாவை - 8.7.19 - "எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க");

ஏற்றம் உடையார் உள்ளத்தில் இனிதே உறையும் எம் ஈசன் - மேன்மை உடையவர்களது நெஞ்சில் குடிகொள்ளும் எம் ஈசன்; (ஏற்றம் - மேன்மை);

ஏற்றன் - இடப வாகனன்;

ஏனக் கொம்பு அணிந்த இறைவன் - பன்றியின் கொம்பை அணிந்த இறைவன்; (சுந்தரர் தேவாரம் - 7.18.4 - "ஏனக்கொம்பும் இள ஆமையும் பூண்டங்கோர் ஏறும் ஏறிக்");

நூல் ஆர் மார்பில் வெண் நீற்றன் - முப்புரிநூல் திகழும் மார்பில் வெண்-திருநீறு அணிந்தவன்;

வயல் சூழ் நெல்வாயில் - வயல் சூழ்ந்த திருநெல்வாயிலில் எழுந்தருளிய;

நீர் ஆர் உச்சிப் பெருமானே - தலையில் கங்கையை உடைய பெருமான், உச்சிநாதன்;


4)

அமரர் இறைஞ்ச அவர்க்கிரங்கி .. அருநஞ் சுண்ட அருளாளன்

சமரை விரும்பு சலந்தரனைச் .. சாய்த்த ஆழி தனைவிரும்பிக்

கமலம் போலக் கண்ணிட்டுக் .. கழல்ப ணிந்த அரிக்கீந்த

நிமலன் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


அமரர் இறைஞ்ச அவர்க்கு இரங்கி அரு-நஞ்சுண்ட அருளாளன் - தேவர் வேண்ட, அவர்களுக்கு இரங்கிக் கொடிய விடத்தை உண்ட அருளாளன்;

சமரை விரும்பு சலந்தரனைச் சாய்த்த ஆழிதனை விரும்பிக் - போரை விரும்பிய சலந்தராசுரனைக் கொன்ற சக்கரத்தை அடைய விரும்பி; (சமர் - போர்);

கமலம் போலக் கண்ட்டுக் கழல் பணிந்த அரிக்கு ஈந்த நிமலன் - தாமரைப்பூவைப் போலத் தன் கண்ணைத் தோண்டி இட்டுத் திருவடியை வணங்கிய திருமாலுக்கு அதனை அருளிய தூயன்;


5)

தாயின் நல்லன் அடியார்க்குத் .. தாளை வணங்க நினையார்க்குச்

சேயன் நுதலில் திகழ்கண்ணில் .. தீயன் வெள்ளை எருதேறும்

தூயன் தோற்றம் அந்தமிலான் .. துடிபோல் இடையாள் மலைமங்கை

நேயன் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


தாயின் நல்லன் அடியார்க்கு - அன்பர்களுக்குத் தாயினும் மிக நல்லவன்;

தாளை வணங்க நினையார்க்குச் சேயன் - திருவடியை வணங்காதவர்களுக்குத் தொலைவில் இருப்பவன்;

நுதலில் திகழ் கண்ணில் தீயன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்;

வெள்ளை எருது ஏறும் தூயன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய தூயவன்;

தோற்றம் அந்தம் இலான் - முதலும் முடிவும் இல்லாதவன்;

துடி போல் இடையாள் மலைமங்கை நேயன் - உடுக்கைப் போன்ற சிற்றிடை உடைய உமைக்கு அன்பன்; (துடி - உடுக்கு); (நேயம் - அன்பு);

வயல் சூழ் நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - வயல் சூழ்ந்த திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன்;


6)

சூலம் மழுவாள் இவையேந்திச் .. சுடுநீ றணிந்த கோலத்தன்

ஏலம் ஆர்ந்த குழலாளை .. இடப்பால் உகந்த எம்மீசன்

ஓலம் என்ற வானவர்கள் .. உய்ய அருள்செய் கண்டத்தில்

நீலன் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


சூலம் மழுவாள் இவைந்திச் சுடுநீறு அணிந்த கோலத்தன் - சூலத்தையும் மழுவையும் கையில் ஏந்தி, வெந்த திருநீற்றைப் பூசிய திருமேனியன்;

ஏலம் ஆர்ந்த குழலாளை - மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தல் உடைய உமை; (சம்பந்தர் தேவாரம் - 3.32.4 - "ஏலமார் தருகுழல் ஏழையோடு" - மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தலையுடைய உமாதேவியோடு);

இடப்பால் உகந்த எம்சன் - இடப்பக்கம் பாகமாக விரும்பிய எம் ஈசன்;

ஓலம் என்ற வானவர்கள் உய்ய அருள்செய் கண்டத்தில் நீலன் - ஓலம் என்று சரண்புகுந்த தேவர்கள் உய்யுமாறு அருளிய நீலகண்டன்; (ஓலம் - அபயம்வேண்டுங் குறிப்பு மொழி);


7)

பசியென் றோட்டைக் கையேந்திப் .. பலமுன் றில்போய்ப் பலிதேர்வான்

இசையும் தமிழும் கலந்துவரும் .. இனிய பாடல் பலபாடிக்

கசியும் மனத்தால் தொழுவாரைக் .. காக்கும் பெருமான் கணம்சூழ

நிசியில் ஆடி நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


பசி என்று ஓட்டைக் கை ஏந்திப் பல முன்றில் போய்ப் பலிதேர்வான் - பசி என்று பிரமனின் மண்டையோட்டைக் கையில் தாங்கிப் பல வீட்டுவாயில்களை அடைந்து பிச்சை இரப்பவன்; (முன்றில் - வீட்டின் முன்னிடம்); (போதல் - அடைதல்);

இசையும் தமிழும் கலந்து வரும் இனிய பாடல் பல பாடிக் - இசையும் தமிழும் இணைந்த தேவாரப் பாடல்கள் பலவும் பாடி;

கசியும் மனத்தால் தொழுவாரைக் காக்கும் பெருமான் - உருகும் மனத்தோடு வணங்கும் அடியவர்களைக் காக்கின்ற பெருமான்;

கணம் சூழ நிசியில் ஆடி - பூதகணங்கள் சூழ இருளில் ஆடுபவன்;

நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;


8)

போரில் லாத இராவணனைப் .. பொருப்பின் கீழே அடர்த்தபிரான்

தேரில் ஏறி மேருவெனும் .. சிலையை ஏந்திப் புரமெய்தான்

பேரில் லாதான் நாம்சொல்லப் .. பேர்கள் ஓரா யிரமுடையான்

நேரில் லாதான் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


போர் இல்லாத இராவணனைப் பொருப்பின் கீழே அடர்த்த பிரான் - எதிர்த்துப் போர் செய்வார் எவரும் இல்லாத இராவணனைக் கயிலைமலையின் கீழே நசுக்கிய தலைவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே" - செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன்);

தேரில் ஏறி மேரு எனும் சிலையை ஏந்திப் புரம் எய்தான் - தேரில் ஏறி மேருமலை என்ற வில்லை ஏந்தி முப்புரங்களை ஒரு கணையால் அழித்தவன்; (சிலை - வில்);

பேர் இல்லாதான் நாம் சொல்லப் பேர்கள் ஓர் ஆயிரம் உடையான் - ஒரு நாமமும் இல்லாதவன்; நாம் போற்றித் துதிக்க ஆயிரம் பெயர்கள் உடையவன்; (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.1 - "ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ");

நேர் இல்லாதான் - ஒப்பற்றவன்; உவமிக்க ஒண்ணாதவன்; (நேர் - ஒப்பு; உவமை);

நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;


9)

கோல மலர்மேல் உறைவானும் .. குன்றைக் குடையாப் பிடித்தானும்

மால தாகி மிகநேடி .. வாடி ஏத்து வளர்சோதி

கால காலன் அடியார்க்குக் .. கரவில் லாது வரமருளும்

நீல கண்டன் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


கோல மலர்மேல் உறைவானும் - அழகிய தாமரையில் இருக்கும் பிரமனும்;

குன்றைக் குடையாப் பிடித்தானும் - (கிருஷ்ணாவதாரத்தில்) மலையைக் குடைபோலப் பிடித்த திருமாலும்;

மாலது ஆகி மிக நேடி வாடி ஏத்து வளர்சோதி - மனமயக்கத்தால் மிகவும் தேடி, அடிமுடியைக் காணாது வாடிப், போற்றிய எல்லையற்ற சோதி ஆனவன்; (மால் - மயக்கம்); (நேடுதல் - தேடுதல்);

கால காலன் - காலனுக்குக் காலன்;

அடியார்க்குக் கரவு இல்லாது வரம் அருளும் நீலகண்டன் - பக்தர்களுக்கு வஞ்சமின்றி வரங்களை வாரி வழங்குகின்ற நீலகண்டன்; (கரவு - ஒளித்தல்; வஞ்சனை);

நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;


10)

தகவில் லாத புன்மொழியைத் .. தத்து வம்போல் எடுத்துரைப்பார்

பகலும் இரவும் வழியறியாப் .. பளகர் சொல்லை மதியேன்மின்

புகழும் அடியார் வினைதீர்த்துப் .. போகம் வீடு புரக்குமரன்

நிகரில் லாதான் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


தகவு இல்லாத புன்மொழியைத் தத்துவம் போல் எடுத்து உரைப்பார் பகலும் இரவும் - பொருந்தாத புன்சொற்களையே சிறந்த தத்துவம் போல இராப்பகலாக எப்போதும் பேசுவார்கள்; (தகவு - தகுதி; அறிவு);

பகலும் இரவும் வழி அறியாப் பளகர் சொல்லை மதியேன்மின் - இரவிலும் பகலிலும் செல்லும் மார்க்கத்தை அறியாத மூடர்கள் சொல்லும் சொற்களை நீங்கள் மதிக்கவேண்டா; (பளகர் - மூடர் - குற்றமுடையவர்; பாவிகள்); ("பகலும் இரவும்" - என்ற சொற்றொடர் இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது); (பகலும் இரவும் வழி அறியா - சில ஜீவராசிகள் இரவில் இயங்குவன; அவை இருளில் நன்கு காணவல்லன; ஆனால் இந்த மூடர்கள் முழுக்குருடர்கள் - பகலிலும் காணமாட்டார்கள், இரவிலும் காணமாட்டார்கள்); (சம்பந்தர் தேவாரம் - 3.32.10 - "பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்");

புகழும் அடியார் வினை தீர்த்துப் போகம் வீடு புரக்கும் அரன் - திருப்புகழைப் பாடி வணங்கும் அடியவர்களுடைய வினைகளைத் தீர்த்து அவர்களுக்கு இம்மை மறுமை இன்பங்களைத் தரும் ஹரன்; (புரத்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);

நிகர் இல்லாதான் - ஒப்பற்றவன்;

நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;


11)

கருப்புச் சிலையைக் கையேந்து .. காமன் தன்னைப் பொடிசெய்தான்

பொருப்பு மன்னன் பொற்கொடியைப் .. புடையில் உகந்த புரிசடையான்

விருப்பு மிக்குப் பணிதொண்டர் .. வேண்டு வரங்கள் அளிக்கின்ற

நெருப்பு வண்ணன் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.


* கனகாம்பிகை - திருவேட்களத்து இறைவி திருநாமம்;


கருப்புச் சிலையைக் கை ஏந்து காமன் தன்னைப் பொடி செய்தான் - கரும்பை வில்லாகக் கையில் ஏந்தும் மன்மதனது உடலைச் சாம்பல் ஆக்கியவன்; (கருப்புச் சிலை - கரும்பால் ஆன வில்); (ஆகம் - உடல்);

பொருப்பு மன்னன் பொற்கொடியைப் புடையில் உகந்த புரி-சடையான் - மலையான் மகளும் பொற்கொடி போன்றவளும் ஆன உமையை ஒரு பக்கத்தில் விரும்பியவன், முறுக்கேறிய சடையை உடையவன்; (பொருப்பு - மலை); (புடை - பக்கம்); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல் -To be twisted; to curl);

விருப்பு மிக்குப் பணி தொண்டர் வேண்டு வரங்கள் அளிக்கின்ற நெருப்பு வண்ணன் - அன்பு மிகுந்து வழிபடும் அடியவர்கள் விரும்பும் வரங்களையெல்லாம் அளிக்கின்றவன்; தீப்போன்ற செம்மேனி உடையவன்; (விருப்பு - விருப்பம் - அன்பு);

நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


07.21 – வேட்களம் (திருவேட்களம்) - இசைமலி தாளிணை

07.21 – வேட்களம் (திருவேட்களம்)

2016-01-19

வேட்களம் (திருவேட்களம்) (சிதம்பரத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(வஞ்சி விருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(யாப்புக் குறிப்பைக் கீழே காண்க)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.2 - "அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்")

(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


1)

இசைமலி தாளிணை ஏத்துமதி

அசைவறச் சடைமிசை அணியரனூர்

விசைமலி கணைதொடு வேட்டுவனாய்

விசயனுக் கருளிய வேட்களமே.


இசை மலி தாள் இணை ஏத்து மதி - புகழ் மிக்க இரு-திருவடிகளை வணங்கிய சந்திரனுடைய; (இசை - புகழ்);

அசைவு அறச் சடைமிசை அணி அரன் ஊர் - கலக்கம் தீரும்படி சடையின்மேல் அணிந்த சிவபெருமான் உறையும் இடம்; (அசைவு - சலனம்; தளர்ச்சி; வருத்தம்);

விசை மலி கணை தொடு வேட்டுவன் ஆய் - விரைந்து செல்லும் அம்பை ஏவும் வேடன் ஆகி; (விசை - வேகம்);

விசயனுக்கு அருளிய வேட்களமே - அருச்சுனனுக்கு அருளிய திருவேட்களம் ஆகும்;


2)

கானிடை ஆடிடு கழல்தொழுத

கூனிள மதியணி குஞ்சியினான்

மானிணை நோக்குடை மங்கையுறை

மேனியன் ஊர்திரு வேட்களமே.


கானிடை ஆடிடு கழல் தொழுத கூன் இள மதி அணி குஞ்சியினான் - சுடுகாட்டில் திருநடம் செய்யும் திருவடியை வணங்கிய வளைந்த இளம்பிறைச்சந்திரனை அணிந்த சென்னி உடையவன்; (கான் - காடு - சுடுகாடு); (கூன் - வளைவு); (குஞ்சி - தலைமயிர்; தலை);

மான் இணை நோக்குஉடை மங்கை உறை மேனியன் ஊர் திருவேட்களமே - மான் போன்ற பார்வை உடைய உமையை இடப்பக்கம் தாங்கிய திருமேனியன் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


3)

இடைமெலி மங்கையை இடமுடையான்

உடையெனக் கொல்புலி உரிவையினான்

சடையிடை ஆறணி சங்கரனோர்

விடையினன் ஊர்திரு வேட்களமே.


இடைமெலி மங்கையை இடம் உடையான் - மெலிந்த இடையுடைய உமையை இடப்பக்கம் உடையவன்;

உடை எனக் கொல்-புலி உரிவையினான் - கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை உடையாகக் கொண்டவன்; (உரிவை - தோல்);

சடையிடை ஆறு அணி சங்கரன் - கங்காதரன், சங்கரன்;

ர் விடையினன் ஊர் திருவேட்களமே - ஒப்பற்ற இடப வாகனம் உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (ஓர் - ஒப்பற்ற);


4)

கண்ணமர் நெற்றியன் கதிர்மதியக்

கண்ணியன் இடமொரு காரிகையான்

தண்ணதி தங்கிய சடையுடைய

விண்ணவர் கோனிடம் வேட்களமே.


கண் அமர் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

கதிர்-மதியக் கண்ணியன் - கதிர்கள் உடைய திங்களைக் கண்ணி போல முடிமேல் அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

இடம் ஒரு காரிகையான் - அர்த்தநாரீஸ்வரன்; (காரிகை - பெண்);

தண் நதி தங்கிய சடை உடைய விண்ணவர் கோன் இடம் வேட்களமே - குளிர்ந்த கங்கை தங்கிய சடையை உடையவனும் தேவர்கள் தலைவனுமான சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


5)

காருரு மாகரி கதறவுரி

சீருறு விறலினன் சீறரவம்

நீருறு சடையினன் நீள்மதிலெய்

மேருவில் லானிடம் வேட்களமே.


கார் உரு மா கரி கதற உரி சீர் உறு விறலினன் - கரிய உருவம் உடைய பெரிய ஆனை கதறும்படி அதன் தோலை உரித்த புகழ் உடைய வெற்றி உடையவன்; (சீர் - புகழ்; பெருமை); (விறல் - வெற்றி; வீரம்; வலிமை);

சீறு அரவம் நீர் உறு சடையினன் - சீறுகின்ற நாகமும் கங்கையும் இருக்கும் சடையை உடையவன்;

நீள் மதில் எய் மேருவில்லான் இடம் வேட்களமே - பெரிய முப்புரங்களையும் எய்த மேருவில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


6)

பூவன பொன்னடி போற்றியவர்

காவலன் நெற்றியிற் கண்ணுடையான்

தேவருக் கிடர்புரி திரிபுரங்கள்

வேவவெய் தானிடம் வேட்களமே.


பூ அன பொன்னடி போற்றியவர் காவலன் - மலர் போன்ற பொற்பாதத்தை வணங்கிய பக்தர்களைக் காப்பவன்; (அன - அன்ன);

நெற்றியிற் கண் உடையான் - நெற்றிக்கண்ணன்;

தேவருக்கு இடர்புரி திரிபுரங்கள் வேவ எய்தான் இடம் வேட்களமே - தேவர்களுக்கு இன்னல் விளைத்த முப்புரங்களும் வெந்து அழியும்படி ஓர் கணை எய்த சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


7)

கொள்ளியை ஏந்திய கூளிபாட

நள்ளிரு ளில்திரு நடமிடுவான்

தெள்ளிய புனலணி செஞ்சடையான்

வெள்விடை யானிடம் வேட்களமே.


கொள்ளியை ஏந்திய கூளி பாட நள்ளிருளில் திருநடம் இடுவான் - கொள்ளியை ஏந்திப் பேய்கள் பாடிச் சூழ்ந்திருக்க, நள்ளிருளில் கூத்தாடுபவன்; (கூளி - பேய்; பூதம்);

தெள்ளிய புனல் அணி செஞ்சடையான் - தெளிந்த நீரை உடைய கங்கையைச் செஞ்சடையில் ஏற்றவன்;

வெள்விடையான் இடம் வேட்களமே - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


8)

வெல்விடை ஊர்தியன் வெற்பிடந்த

வல்லரக் கன்தன வாய்களழ

மெல்விரல் ஊன்றிய விமலனிடம்

வில்விச யற்கருள் வேட்களமே.


வெல்விடை ஊர்தியன் வெற்பு இடந்த வல்-அரக்கன்தன வாய்கள் அழ - வெற்றியுடைய இடபவாகனனது கயிலைமலையைப் பெயர்த்த வலிய அரக்கனான இராவணனுடைய வாய்கள் அழும்படி; (இடத்தல் - பெயர்த்தல்); (தன = தன் + ; - ஆறாம் வேற்றுமை உருபு);

மெல்விரல் ஊன்றிய விமலன் இடம் - மென்மையான திருப்பாத விரலை ஊன்றிய தூயனான சிவபெருமான் உறையும் தலம்;

வில்விசயற்கு அருள் வேட்களமே - வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உடைய அருச்சுனனுக்கு அருள்புரிந்த திருவேட்களம் ஆகும்;


9)

வாதிடு நான்முகன் மாலறியா

ஆதியில் அந்தமில் ஆரழலன்

மாதிணை மேனியன் மாமறைசொல்

வேதியன் ஊர்திரு வேட்களமே.


வாதிடு நான்முகன் மால் அறியா - வாது செய்த பிரமன் திருமால் இவர்களால் அறியப்படாத;

ஆதி இல் அந்தம் இல் ஆர் அழலன் - ஆதியும் அந்தமும் இல்லாத அரிய சோதி வடிவினன்;

மாது இணை மேனியன் - உமை ஒரு பாகமாக இணைந்த திருமேனியை உடையவன்;

மாமறை சொல் வேதியன் - சிறந்த பெரிய வேதங்களால் சொல்லப்படும் வேதியன்; வேதங்களைப் பாடியருளிய வேதியன்;


10)

மெய்யுரை யாதுழல் வீணர்களின்

பொய்களை நீங்குமின் புந்தியுளீர்

செய்வினை தீரிறை செம்பவள

மெய்யினன் ஊர்திரு வேட்களமே.


மெய் உரையாது உழல் வீணர்களின் பொய்களை நீங்குமின் புந்தி உளீர் - அறிவுடையவர்களே! உண்மையைச் சொல்லாமல் திரிகின்ற துஷ்டர்கள் சொல்லும் பொய்களை நீங்குங்கள்; (வீணன் - பயனற்றவன்; துன்மார்க்கன்); (புந்தி - புத்தி - அறிவு);

செய்வினை தீர் இறை - முன்பு செய்த வினைகளைத் தீர்க்கும் இறைவன்;

செம்பவள மெய்யினன் ஊர் திரு வேட்களமே - செம்பவளம் போல் செம்மேனி உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (மெய் - மேனி); (சம்பந்தர் தேவாரம் - 1.61.7 - "மலைமகளோர் பாகமாம் மெய்யினான்");


11)

சுடலையின் நீறணி தூயனொரு

புடையணி மாதமர் பொற்புடையான்

அடல்விடை ஊர்தியன் ஆலமணி

மிடறுடை யானிடம் வேட்களமே.


சுடலையின் நீறு அணி தூயன் - சுடுகாட்டுச் சாம்பலை அணியும் தூயவன்;

ஒரு புடை அணி மாது அமர் பொற்பு உடையான் - ஒரு பக்கம் அழகிய மங்கை இருக்கும் குணம் உடையவன்; (பொற்பு - அழகு; தன்மை);

அடல் விடை ஊர்தியன் - வலிய எருதை வாகனமாக உடையவன்;

ஆலம் அணி மிடறு உடையான் இடம் வேட்களமே - விடத்தைக் கண்டத்தில் அணிந்த சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (ஆலம் - நஞ்சு); (மிடறு - கண்டம்);

(ஆலமணிமிடறு - 1. ஆலம் அணி மிடறு; 2. ஆல மணி மிடறு);


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ('விளம் விளம் விளங்காய்');

  • தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா / தானதானா / தனனதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.112.5 -

வீறுநன் குடையவள் மேனிபாகம்

கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்

தேறலுண் டெழுதரு சிவபுரமே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


07.20 – சிக்கல் - கானிலலை ஆனையுரி

07.20 – சிக்கல்

2016-01-17

சிக்கல்

----------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்) (திருவிராகம் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருவிராகம் - "முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்")


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

கானிலலை ஆனையுரி போர்த்தவிறை கையில்

மானிலகு சூல(ம்)மழு வாளுடைய மைந்தன்

தேனிலவு சோலையணி சிக்கலுறை செல்வன்

வானிலவு சூடிகழல் வாழ்த்தவரும் இன்பே.


பதம் பிரித்து:

கானில் அலை ஆனை உரி போர்த்த இறை; கையில்

மான் இலகு சூலம் மழுவாள் உடைய மைந்தன்;

தேன் நிலவு சோலை அணி சிக்கல் உறை செல்வன்;

வான் நிலவு சூடி கழல் வாழ்த்த வரும் இன்பே.


கானில் அலை ஆனை உரி போர்த்த இறை - காட்டில் திரியும் யானையின் தோலைப் போர்வையாக அணிந்த இறைவன்;

கையில் மான், இலகு சூலம், மழுவாள் உடைய மைந்தன் - கையில் மானையும் ஒளி திகழும் சூலத்தையும் மழுவையும் உடைய வீரன்; (இலகுதல் - விளங்குதல்);

தேன் நிலவு சோலை அணி சிக்கல் உறை செல்வன் - வண்டுகள் இருக்கும் சோலை திகழும் சிக்கலில் உறையும் செல்வன்; (தேன் - வண்டு, தேனீ); (நிலவுதல் - தங்குதல்; நிலைத்து இருத்தல்); (செல்வன் - வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான்);

வான் நிலவு சூடி கழல் வாழ்த்த வரும் இன்பே - வானில் விளங்கும் அழகிய வெண்பிறைச் சந்திரனை அணிந்தவன் திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்; (வானிலவு - வான் நிலவு / வால் நிலவு); (வான் - வானம்; அழகு); (வால் - இளமை; வெண்மை); (நிலவு - சந்திரன்)


2)

அங்கியினை ஏந்திநடம் ஆடுமரன் நாகம்

அங்கமணி ஆரழகன் அஞ்சடையில் நீரன்

தெங்குமலி சோலையணி சிக்கலுறை செல்வன்

மங்கையொரு பங்கனடி வாழ்த்தவரும் இன்பே.


அங்கியினை ஏந்தி நடம் ஆடும் அரன் - தீயைக் கையில் ஏந்தித் திருநடம் செய்யும் ஹரன்; (அங்கி - நெருப்பு);

நாகம் அங்கம் அணி ஆரழகன் - பாம்பையும் எலும்பையும் அணியும் அரிய அழகன்; (அங்கம் - எலும்பு);

அம் சடையில் நீரன் - அழகிய சடையில் கங்கையை உடையவன்;

தெங்கு மலி சோலை அணி சிக்கல் உறை செல்வன் - தென்னஞ்சோலை சூழ்ந்த சிக்கலில் உறையும் செல்வன்;

மங்கை ஒரு பங்கன் அடி வாழ்த்த வரும் இன்பே - அர்த்தநாரீஸ்வரன் திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்;


3)

வென்றிவிடை ஊர்தியுடை வேந்தனடி யாரைக்

கொன்றுவிட எண்ணிவரு கூற்றையுதை கோமான்

தென்றலினில் வாசமலி சிக்கலுறை செல்வன்

கொன்றையணி கூத்தனடி கூறவரும் இன்பே.


வென்றி விடை ஊர்தி உடை வேந்தன் அடியாரைக் - வெற்றியுடைய இடப ஊர்தி உடைய சிவபெருமானுடைய அடியவரான மார்க்கண்டேயரை;

கொன்றுவிட எண்ணி வரு கூற்றை உதை கோமான் - கொல்லக் கருதி அவரிடம் வந்த காலனை உதைத்த தலைவன்; (கோமான் - தலைவன்);

தென்றலினில் வாசம் மலி சிக்கல் உறை செல்வன் - தென்றலில் மணம் கமழும் சிக்கலில் உறையும் செல்வன்;

கொன்றை அணி கூத்தன் அடி கூற வரும் இன்பே - கொன்றையை அணிந்த கூத்தப்பெருமானுடைய திருவடியைப் புகழ்ந்தால் இன்பம் வந்தடையும்;


4)

வந்தடியில் வீழ்மதியை வாழமுடி வைத்தான்

கந்தமலர் அம்புதொடு காமனையெ ரித்தான்

செந்தமிழின் ஆரமொலி சிக்கலுறை செல்வன்

நந்தியவன் நாமமணி நாவர்மகிழ் வாரே.


வந்து அடியில் வீழ் மதியை வாழ முடி வைத்தான் - திருவடியில் வீழ்ந்து வணங்கிய சந்திரனைக் காத்துத் தன் தலைமேல் அணிந்தவன்;

கந்தமலர் அம்பு தொடு காமனை எரித்தான் - வாசமலரை அம்பாகத் தொடுக்கும் மன்மதனை எரித்தவன்;

செந்தமிழின் ஆரம் ஒலி சிக்கல் உறை செல்வன் - செந்தமிழ்ப் பாமாலைகள் ஒலிக்கின்ற சிக்கலில் உறையும் செல்வன்; (ஆரம் - மாலை);

நந்திஅவன் நாமம் அணி நாவர் மகிழ்வாரே - நந்தி என்ற பெயர் உடைய சிவபெருமானின் திருப்பெயர்களை நாவில் அணிந்தவர்கள் இன்புறுவார்கள்;


5)

துன்றியிமை யோர்தொழுது தூமலர்கள் தூவ

அன்றினவர் மூவரணம் அட்டபரன் அன்பர்

தென்றமிழி னால்பரவு சிக்கலுறை செல்வன்

என்றுமுள ஈசனடி ஏத்தவரும் இன்பே.


துன்றி இமையோர் தொழுது தூ மலர்கள் தூவ - நெருங்கித் தேவர்கள் தூய மலர்களைத் தூவி வணங்கவும் அவர்களுக்கு இரங்கி; (துன்றுதல் - நெருங்குதல்);

அன்றினவர் மூ அரணம் அட்ட பரன் - பகைவர்களது முப்புரங்களை அழித்த பரமன்; (அன்றினவர் - பகைவர்); (அடுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 6.88.4 - "அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ");

அன்பர் தென் தமிழினால் பரவு சிக்கல் உறை செல்வன் - பக்தர்கள் இனிய தமிழான தேவாரம் பாடிப் போற்றும் சிக்கலில் உறையும் செல்வன்; (தென்றமிழ் - தென் தமிழ்); (தென் - இனிமை);

என்றும் உள ஈசன் அடி ஏத்த வரும் இன்பே - அழிவற்றவனான சிவபெருமான் திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;


6)

மங்கலமெ லாமருளு(ம்) மன்னனரு நஞ்சை

நுங்கிமணி ஆக்கியவன் நூல்திகழு(ம்) மார்பன்

திங்களணி சென்னியிறை சிக்கலுறை செல்வன்

எங்களரன் அங்கழலை ஏத்தவரும் இன்பே.


மங்கலம் எலாம் அருளும் மன்னன் - எல்லா நலங்களையும் அருளும் தலைவன்;

அரு-நஞ்சை நுங்கி மணி ஆக்கியவன் - உண்ணற்கு அரிய கொடிய விடத்தை உண்டு கண்டத்தில் மணியாகச் செய்தவன்; (நுங்குதல் - விழுங்குதல்); (சுந்தரர் தேவாரம் - 7.51.11 - "வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய நுங்கி");

நூல் திகழும் மார்பன் - மார்பில் முப்புரி நூல் அணிந்தவன்;

திங்கள் அணி சென்னி இறை - சந்திரனை முடிமேல் அணிந்த இறைவன்;

சிக்கல் உறை செல்வன் - சிக்கலில் உறையும் செல்வன்;

எங்கள் அரன் அம் கழலை ஏத்த வரும் இன்பே - எம் சிவபெருமானுடைய அழகிய திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;


7)

கூறரிவை ஆகியவன் நீறணிகு ணத்தன்

ஆறரவம் ஆர்சடையன் ஆரமென மார்பில்

சீறரவம் ஆருமிறை சிக்கலுறை செல்வன்

ஏறமரும் எந்தையடி ஏத்தவரும் இன்பே.


கூறு அரிவை ஆகியவன் - ஒரு பாகம் பெண் ஆகியவன்; (அரிவை - பெண்);

நீறு அணி குணத்தன் - (சந்தனம் முதலியன பூசாமல்) திருநீற்றைப் பூசும் குணம் உடையவன்;

ஆறு அரவம் ஆர் சடையன் - கங்கையும் பாம்பும் பொருந்திய சடையை உடையவன்; (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்);

ஆரம் என மார்பில் சீறு அரவம் ஆரும் இறை - மாலைபோல மார்பில் சீறும் பாம்பை அணியும் இறைவன்;

சிக்கல் உறை செல்வன் - சிக்கலில் உறையும் செல்வன்;

ஏறு அமரும் எந்தை அடி ஏத்த வரும் இன்பே - இடப வாகனனான எம் தந்தையின் திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;


8)

தண்மதியி லாதுமலை தன்னையசை மூடன்

புண்மிகவும் ஆகவிரல் ஊன்றியபு ராணன்

திண்மதில்கள் அட்டவிறை சிக்கலுறை செல்வன்

வெண்மதியன் நற்கழலை வேண்டவரும் இன்பே.


தண் மதி இலாது மலைதன்னை அசை மூடன் - (தணிந்த சிந்தை இல்லாமல்) கடும் சினத்தோடு கயிலையை அசைத்த அறிவற்ற இராவணனை;

புண் மிகவும் ஆக விரல் ஊன்றிய புராணன் - அவன் மிகவும் புண்ணாகும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கிய பழையவன்; (இலக்கணக்குறிப்பு: "மூடற் புண்....ஊன்றிய புராணன்" - உயர்திணையில் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள "ன்" ஒற்று "ற்" என்று திரியும்; இப்பாடலில் அந்த முதற்சொல் அடி ஈற்றில் உள்ளதால், படிப்போர் வசதி கருதி "மூடன்" என்றே காட்டப்பெற்றது);

திண் மதில்கள் அட்ட இறை - வலிய முப்புரங்களை அழித்த இறைவன்;

சிக்கல் உறை செல்வன் - சிக்கலில் உறையும் செல்வன்;

வெண்மதியன் நற்கழலை வேண்ட வரும் இன்பே - வெண்திங்களை அணிந்த சிவபெருமானுடைய நல்ல திருவடியைப் பணிந்து பிரார்த்தித்தால் இன்பம் வந்தடையும்;


9)

போதனரி காண்பரிய பொங்கழல தானான்

ஓதமுமிழ் நஞ்சுதனை உண்டமணி கண்டன்

சீதமலி சோலையணி சிக்கலுறை செல்வன்

போதமுரை ஆலனடி போற்றவரும் இன்பே.


போதன் அரி காண்பு அரிய பொங்கு அழல்அது ஆனான் - தாமரைப்பூவில் இருக்கும் பிரமனாலும் திருமாலாலும் காண்பதற்கு அரிய, எல்லையில்லாத சோதி ஆனவன்; (போது - பூ; போதன் - பூவில் இருக்கும் பிரமன்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.9 - "போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்");

ஓதம் உமிழ் நஞ்சுதனை உண்ட மணிகண்டன் - கடல் கக்கிய விடத்தை உண்ட நீலகண்டன்; (ஓதம் - கடல்);

சீதம் மலி சோலை அணி சிக்கல் உறை செல்வன் - குளிர்ச்சி மிக்க சோலை சூழ்ந்த சிக்கலில் உறையும் செல்வன்; (சீதம் - குளிர்ச்சி)

போதம் உரை ஆலன் அடி போற்ற வரும் இன்பே - ஞானம் உரைத்த கல்லாலின்கீழ் அமர்ந்த தட்சிணாமூர்த்தி ஆன சிவபெருமான் திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்; (போதம் - ஞானம்); (ஆல் - ஆலமரம்; ஆலன் - ஆலமரத்தின்கீழ் இருப்பவன்); (அப்பர் தேவாரம் - 4.88.1 - "பூந்துருத்திம் மகிழும் ஆலனை ஆதிபுராணனை நாமடி போற்றுவதே");


10)

வீணருரை வெற்றுமொழி விட்டொழிமின் வில்லின்

நாணரவ மாகநகர் மூன்றவிய எய்தான்

சேணணவு சோலையணி சிக்கலுறை செல்வன்

பூணரவன் நம்பனடி போற்றவரும் இன்பே.


வீணர் உரை வெற்று மொழி விட்டு ஒழிமின் - வீணர்கள் சொல்லும் பொருளற்ற வார்த்தைகளை மதிக்கவேண்டா;

வில்லின் நாண் அரவம் ஆக, நகர் மூன்று அவிய எய்தான் - ஏந்திய மேருவில்லின் நாண் பாம்பு ஆக, முப்புரங்களும் அழியக் கணை எய்தவன்;

சேண் அணவு சோலை அணி சிக்கல் உறை செல்வன் - வானளாவு சோலை சூழ்ந்த சிக்கலில் உறையும் செல்வன்; (சேண் - ஆகாயம்); (அணவுதல் - அணுகுதல்);

பூண் அரவன் நம்பன் அடி போற்ற வரும் இன்பே - நாகாபரணனும் விரும்பத்தக்கவனும் ஆன சிவபெருமான் திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்; (பூண் - ஆபரணம்; பூண்தல் - அணிதல்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);


11)

பூவரவம் ஆறுபிறை பொற்சடையில் ஏற்றான்

மூவரணம் ஆரழலில் மூழ்கநகை செய்து

தேவரிடர் தீர்த்தவிறை சிக்கலுறை செல்வன்
சேவடியை வாழ்த்துமவர் செல்வமுடை யோரே.


பூ அரவம் ஆறு பிறை பொற்சடையில் ஏற்றான் - பொன் போன்ற சடையில் மலர்களையும், பாம்பையும், கங்கையையும், பிறைச்சந்திரனையும் அணிந்தவன்;

மூ அரணம் ஆர் அழலில் மூழ்க நகைசெய்து - முப்புரங்களும் தீயில் மூழ்கி அழியுமாறு சிரித்து;

தேவர் இடர் தீர்த்த இறை - தேவர்களின் துன்பத்தைத் தீர்த்த கடவுள்;

சிக்கல் உறை செல்வன் - சிக்கலில் உறையும் செல்வன்;

சேவடியை வாழ்த்தும்அவர் செல்வம் உடையோரே - சிவபெருமான் சேவடியை வாழ்த்தும் அன்பர்கள் செல்வம் உடையவர்களே; (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "சிற்றம் பலமேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------