2019-05-31
P.471 - பொது
--------------------
(குறள்வெண்பா)
முற்குறிப்பு: அடியீற்றில் இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.
1)
தீவினை தீர்வழி சேவமர்ந்தான் பொற்கழல்
பூவினைத் தூவித் தொழல்.
தீவினை தீரும் வழி இடபவாகனனது பொன்னடியைப் பூக்களைத் தூவி வணங்குதல்;
(சே - எருது; அமர்தல் - விரும்புதல்; இருத்தல்; தொழல் - தொழுதல்);
2)
சேமமுற எண்ணில் தினந்தோறும் ஓரணங்கு
வாம(ம்)மகிழ்ந் தானை வணங்கு.
நற்கதி பெறவேண்டில் தினமும் உமைபங்கனை வணங்கு;
(சேமம் - க்ஷேமம்; அணங்கு - பெண்; வாமம் - இடப்பக்கம்);
3)
திண்ணிய தீவினை தீர்ந்துய்யச் செஞ்சடை
அண்ணல் அடியை அடை.
திண்ணிய - வலிய;
4)
கதிபெற வேண்டில் கரந்தை அரவு
மதிபுனைந் தானைப் பரவு.
கரந்தை - சிவகரந்தை என்ற மணமுள்ள பூண்டு; கதி - நற்கதி; பரவுதல் - துதித்தல்; (சுந்தரர் தேவாரம் - 7.76.6 - "கரந்தை கூவிளமாலை கடிமலர்க் கொன்றையும் சூடி");
5)
வாயார வாழ்த்தினார் வல்வினை தீர்ப்பவன்
பாயாறு சூடும் பவன்.
பாய் ஆறு - வானிலிருந்து பாய்ந்த கங்கை; பவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;
6)
ஆற்றா தழுசுரர்க்கா அம்மிடற்றில் ஓர்கறை
ஏற்றான் எருதூர் இறை.
ஆற்றாது அழு-சுரர்க்கா - (ஆலகாலத்தின் துன்பத்தைத்) தாங்க முடியாமல் அழுத தேவர்களுக்காக; (சுரர்க்கா - சுரர்க்காக; கடைக்குறை விகாரம்);
அம்-மிடற்றில் ஓர் கறை ஏற்றான் எருது ஊர் இறை - அந்த அழகிய கண்டத்தில் ஒப்பற்ற கறையை அணிந்தான் இடபவாகனம் உடைய இறைவன்; (அம் - அழகு); (அ - அந்த); (மிடறு - கண்டம்); (ஓர் - ஒரு; ஒப்பற்ற); (ஊர்தல் - ஏறுதல்);
7)
புகழ்பொருள் வேண்டில் புரிசடையன் தோடு
திகழ்செவியன் செவ்வியையே பாடு.
புரி-சடையன் - முறுக்கிய சடையை உடையவன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);
செவ்வி - அழகு; தகுதி; தன்மை; (சம்பந்தர் தேவாரம் - 3.22.9 - "கார்வணன் நான்முகன் காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி");
8)
அரக்கன் முடிபத் தடர்த்தவன் ஓர்மான்
கரத்தில் தரித்தபெம் மான்.
அரக்கன் - இராவணன்; அடர்த்தல் - நசுக்குதல்;
9)
மாலயன் நேடி வணங்கிட நின்றபரன்
காலனைக் காய்ந்த அரன்.
காய்தல் - கோபித்தல்; அழித்தல்; நேடுதல் - தேடுதல்; காய்தல் - கோபித்தல்;
10)
நீறணியார் சொல்பொய்கள் நீங்குமின் மெய்ப்பொருள்
ஆறணிந்தான் செய்வான் அருள்.
திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் பொய்களைப் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; மெய்ப்பொருள் ஆனவன், கங்காதரன் அருள்புரிவான்;
11)
வெண்டலை மாலையினான் மேருவில்லோர் வெங்கணை
கொண்டரண்சுட் டான்தாள் துணை.
வெண்-தலை-மாலையினான் - வெண்மையான மண்டையோட்டு-மாலையை அணிந்தவன்;
மேரு-வில் ஓர் வெங்கணை கொண்டு அரண் சுட்டான் தாள் துணை - மேருமலை என்ற வில், ஒரு சுட்டெரிக்கும் அம்பு, இவற்றால் முப்புரங்களை எய்து எரித்து அழித்த சிவபெருமானது திருவடி நம் துணை;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment