04.64 - துருத்தி (குத்தாலம்) - நிழலார் மழுவினர்
2014-05-22
துருத்தி (குத்தாலம்)
(இத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது)
----------------------------------
(வஞ்சித்துறை - மா விளம் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")
1)
நிழலார் மழுவினர்
பொழிலார் துருத்தியைத்
தொழவல் வினைத்தொடர்
கழலும் திண்ணமே.
நிழல் ஆர் மழுவினர் - ஒளி பொருந்திய மழுவை ஏந்திய சிவபெருமானார் உறைகின்ற; (நிழல் - ஒளி);
பொழில் ஆர் துருத்தியைத் தொழ - சோலை நிறைந்த திருத்துருத்தியைத் தொழுதால்;
வல்வினைத்தொடர் கழலும் திண்ணமே - நம் வலிய வினைத்தொடர் நீங்குவது உறுதி; (கழலுதல் - விலகுதல்);
2)
மங்கை பங்கினர்
தங்கும் துருத்தியை
அங்கை யால்தொழப்
பொங்கும் இன்பமே.
மங்கை பங்கினர் தங்கும் துருத்தியை - உமைபங்கனார் உறைகின்ற திருத்துருத்தியை;
அங்கையால் தொழப் பொங்கும் இன்பமே - கைகூப்பித் தொழுதால் இன்பம் மிகும்;
3)
சிவனார் மேவிய
கவினார் துருத்தியைக்
குவிகை யால்தொழ
அவியும் வினைகளே.
சிவனார் மேவிய கவின் ஆர் துருத்தியைக் - சிவபெருமானார் உறைகின்ற அழகிய திருத்துருத்தியை; (கவின் - அழகு);
குவி-கையால் தொழ அவியும் வினைகளே - குவிந்த கைகளால் தொழுதால் வினைகள் அழியும்; (அவிதல் - அழிதல்; வேதல்);
4)
கண்ணார் நுதலினர்
தண்ணார் துருத்தியை
எண்ணா ஏத்திட
நண்ணா நடலையே.
கண் ஆர் நுதலினர் - நெற்றிக்கண்ணர் உறைகின்ற;
தண் ஆர் துருத்தியை - குளிர்ச்சி பொருந்திய திருத்துருத்தியை;
எண்ணா ஏத்திட - எண்ணி ஏத்தினால்; (எண்ணா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);
நண்ணா நடலையே - துன்பம் அணுகமாட்டா;
5)
இமையா முக்கணர்
உமைகோன் துருத்தியை
அமர்வார் அடிதொழக்
குமையும் வினைகளே.
இமையா முக்கணர் - இமைத்தல் இல்லாத முக்கண் உடையவர்; (அப்பர் தேவாரம் - 5.47.4 - "இமையா முக்கணர் என்நெஞ்சத்து உள்ளவர்");
உமைகோன் - உமைமணாளன்;
துருத்தியை அமர்வார் அடிதொழக் குமையும் வினைகளே - திருத்துருத்தியை விரும்பி அங்கே உறைகின்ற பெருமானார் திருவடியை வழிபட்டால் வினைகள் அழியும்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்); (குமைதல் - அழிதல்);
6)
சூலப் படையினர்
சோலைத் துருத்தியைக்
கோலத் தாற்சொல
ஞாலத் தின்பமே.
சூலப் படையினர் சோலைத் துருத்தியைக் - சூலாயுதத்தை ஏந்திய சிவபெருமானார் உறைகின்ற சோலை சூழ்ந்த திருத்துருத்தியை;
கோலத்தால் சொல – பக்திப்பாமாலைகளை அழகுறச் சொல்லி வழிபட்டால்;
ஞாலத்து இன்பமே - இவ்வுலக வாழ்வில் இன்பம் எய்தும்;
7)
நீரார் சடையினர்
ஊராம் துருத்தியை
ஆரா அன்பினால்
ஓர்வார் உய்வரே.
நீர் ஆர் சடையினர் ஊர் ஆம் துருத்தியை - கங்கையைச் சடையில் உடைய சிவபெருமானார் உறைகின்ற திருத்துருத்தியை;
ஆரா அன்பினால் ஓர்வார் உய்வரே - மிகுந்த பக்தியோடு எண்ணுபவர்கள் உய்வார்கள்; (ஓர்வார் - எண்ணுவார்);
8)
பத்துத் தலைநெரி
அத்தன் துருத்தியைப்
பத்தி செய்திடச்
சித்தம் தெளியுமே.
பத்துத்-தலை நெரி அத்தன் துருத்தியைப் - இராவணனுடைய பத்துத்தலைகளை நசுக்கிய நம் தந்தையான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை;
பத்தி செய்திடச் சித்தம் தெளியுமே - பக்தியோடு வணங்கினால் தெளிந்த அறிவு கிட்டும்;
9)
கரியான் அயன்தொழும்
எரியான் துருத்தியைப்
பரிவோ டேத்திடப்
பிரிவாம் பிணிகளே.
கரியான் அயன் தொழும் எரியான் துருத்தியைப் - திருமால் பிரமன் இவர்கள் தொழும் ஜோதி-உருவினனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை;
பரிவோடு ஏத்திடப் பிரிவு ஆம் பிணிகளே - அன்போடு துதித்தால் பந்தங்களும் நோய்களும் நீங்கும்; (பரிவு - அன்பு; பக்தி); (பிணிகள் - பந்தங்கள்; நோய்கள்);
10)
நீற்றைப் பூசிடார்
கூற்றைப் பேணிடேல்
ஏற்றன் துருத்தியைப்
போற்ற இன்பமே.
நீற்றைப் பூசிடார் கூற்றைப் பேணிடேல் - திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் வார்த்தைகளை மதிக்கவேண்டா;
ஏற்றன் துருத்தியைப் போற்ற இன்பமே - இடப-வாகனனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியைப் போற்றினால் இன்பம் கிட்டும்;
11)
கேழில் சுந்தரர்
தோழன் துருத்தியைச்
சூழ வல்லவர்
வாழ வல்லரே.
கேழ் இல் சுந்தரர் தோழன் துருத்தியைச் - ஒப்பற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தோழனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை; (கேழ் இல் - ஒப்பு இல்லாத); (திருவெம்பாவை - 8.7.8 - "கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை");
சூழ வல்லவர் வாழ வல்லரே - வலம்செய்து வழிபடுபவர்கள் சிறந்து வாழ்வார்கள்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment