04.62 - தோணிபுரம் (சீகாழி) - தெண்டிரை வாரியில்
2014-05-19
தோணிபுரம் (சீகாழி)
-----------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமார் அகிலொடு")
(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள்")
1)
தெண்டிரை வாரியில் பண்டெழு நஞ்சினை
உண்டமி டற்றினன் உமையொரு பங்கினன்
தண்டமிழ் மாலைகள் சாத்திவ ணங்கிடும்
தொண்டரைப் புரப்பவன் தோணிபு ரத்தனே.
தெண்-திரை வாரியில் பண்டு எழு நஞ்சினை உண்ட மிடற்றினன் - தெளிந்த அலைகளை உடைய கடலில் முற்காலத்தில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட நீலகண்டன்;
உமை ஒரு பங்கினன் - அர்த்தநாரீஸ்வரன்;
தண்-தமிழ் மாலைகள் சாத்தி வணங்கிடும் - குளிர்ந்த தமிழ்ப்-பாமாலைகளைச் சூட்டி வணங்குகின்ற; (சாத்துதல் - அணிதல்);
தொண்டரைப் புரப்பவன் தோணிபுரத்தனே - அடியவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (புரத்தல் - காத்தல்); (தோணிபுரம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);
2)
அழும்புக லியர்க்குயர் அடிசில ளித்தவன்
செழும்புது மலர்பல செஞ்சடை அணிந்தவன்
எழும்பொழு தஞ்செழுத் தியம்பிவ ணங்கிடும்
தொழும்பரைப் புரப்பவன் தோணிபு ரத்தனே.
அழும் புகலியர்க்கு உயர் அடிசில் அளித்தவன் - அழுத திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தவன்; (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று); (அடிசில் - உணவு); (சம்பந்தர் தேவாரம் - 3.24.2 -"போதையார் பொற்கிண்ணத்து அடிசில்");
செழும்-புதுமலர் பல செஞ்சடை அணிந்தவன் - அன்று பூத்த செழுமையான மலர்களைச் சிவந்த சடையில் சூடியவன்;
எழும்பொழுது அஞ்செழுத்து இயம்பி வணங்கிடும் - துயிலெழும்பொழுதே திருவைந்தெழுத்தைச் சொல்லி வழிபடுகின்ற;
தொழும்பரைப் புரப்பவன் தோணிபுரத்தனே - அடியவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (தொழும்பர் - அடியவர்);
3)
கொல்புலித் தோலினன் கோவிலன் சேமிசைச்
செல்பவன் தேன்மொழிச் சேயிழை பங்கினன்
தொல்பவ நோயறத் துணையெழுத் தஞ்சினைச்
சொல்பவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.
கொல்புலித் தோலினன் - கொல்லும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;
கோவிலன் - தனக்குத் தலைவன் இல்லாதவன்; கோவிலில் இருப்பவன் என்றும் பொருள்கொள்ளலாம்; (கோவிலன் - 1. கோ இலன்; கோ - தலைவன்; 2. கோவில் - கோயில்);
சேமிசைச் செல்பவன் - எருதின்மேல் செல்பவன் (இடபவாகனன்); (சே - எருது); (சுந்தரர் தேவாரம் - 7.68.3 - "சேவின்மேல் வருஞ் செல்வனை");
தேன்மொழிச் சேயிழை பங்கினன் - இனிய மொழி பேசும் உமையை ஒரு பங்கில் உடையவன்; (சேயிழை - பெண்);
தொல்-பவநோய் அறத் துணை எழுத்து அஞ்சினைச் சொல்பவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - தொன்மையான பிறவிப்பிணி தீரும்படி துணையான திருவைந்தெழுத்தைச் சொல்பவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (சொல்பவர்ப் புரப்பவன் - "சொல்பவரைக் காப்பவன்" என்று பொருள்படும்; பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம்-வேற்றுமைத்-தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு);
4)
ஆழ்கடல் நஞ்சினை அருமணி ஆக்கினான்
தாழ்சடை யிற்புனல் தரித்ததன் அயலொரு
போழ்மதி யும்புனை புண்ணியன் கோயிலைச்
சூழ்பவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.
ஆழ்கடல் நஞ்சினை அருமணி ஆக்கினான் - ஆழம் மிக்க கடலில் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டத்தில் அரிய நீலமணி ஆக்கியவன்;
தாழ்சடையில் புனல் தரித்து அதன் அயல் ஒரு போழ்-மதியும் புனை புண்ணியன் - தாழும் சடையில் கங்கையைத் தாங்கி அதன் அருகே பிறையையும் அணியும் புண்ணியமூர்த்தி; (போழ் - துண்டம்);
கோயிலைச் சூழ்பவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - திருக்கோயிலை வலம்செய்யும் அன்பர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (சூழ்பவர்ப் புரப்பவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலி மிகுந்தது);
5)
நதித்தலை அண்ணலை நண்ணிய நம்பிபால்
கொதித்தடை கூற்றினைக் குமைத்தவன் முன்னமே
உதித்தவன் நித்தலும் உள்குளிர்ந் தடியிணை
துதித்தவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.
நதித்-தலை அண்ணலை நண்ணிய நம்பிபால் - கங்கையைத் தலையில் தாங்கிய பெருமானைச் சரணடைந்த மார்க்கண்டேயரிடம்; (நதித்தலை அண்ணல் - கங்காதரன்); (நம்பி - ஆணிற் சிறந்தவன்);
கொதித்து அடை கூற்றினைக் குமைத்தவன் - கோபித்து வந்தடைந்த காலனை உதைத்து அழித்தவன்; (குமைத்தல் - அழித்தல்);
முன்னமே உதித்தவன் - என்றும் இருப்பவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.55.9 - "முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி");
நித்தலும் உள் குளிர்ந்து அடியிணை துதித்தவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - தினமும் மனம் குளிர்ந்து இரு-திருவடிகளை வணங்குபவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (துதித்தவர்ப் புரப்பவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலி மிகுந்தது);
6)
வெல்விடை ஊர்தியன் வேலைநஞ் சுண்டவன்
கல்வியும் காவலும் அஞ்செழுத் தாமெனப்
பல்விதத் தொண்டுசெய் பத்தர்கள் இன்புறத்
தொல்வினை துடைப்பவன் தோணிபு ரத்தனே.
வெல்-விடை ஊர்தியன் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;
வேலை-நஞ்சு உண்டவன் - கடலில் எழுந்த விடத்தை உண்டவன்; (வேலை - கடல்);
கல்வியும் காவலும் அஞ்செழுத்து ஆம் எனப் - கல்வி, காவல் எல்லாம் திருவைந்தெழுத்தே என்று; (அப்பர் தேவாரம் - 5.90.2 - "நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்");
பல்விதத் தொண்டுசெய் பத்தர்கள் இன்புறத் - பலவாறு தொண்டுசெய்யும் பக்தர்கள் இன்புறும்படி;
தொல்வினை துடைப்பவன் தோணிபுரத்தனே - அவர்களது பழவினையை அழித்துக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (துடைத்தல் - அழித்தல்);
7)
காமனைப் பொடிபடக் காய்ந்தமுக் கண்ணினன்
பூமலி தொடைகொடு போற்றிடும் அடியவர்
சேமம டைந்திடத் திருவருள் செய்பவன்
தூமதிச் சடையினன் தோணிபு ரத்தனே.
காமனைப் பொடிபடக் காய்ந்த முக்கண்ணினன் - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் எரித்தவன்;
பூ மலி தொடைகொடு போற்றிடும் அடியவர் - பூக்கள் நிறைந்த மாலைகளால் வழிபடும் பக்தர்கள்;
சேமம் அடைந்திடத் திருவருள் செய்பவன் - நன்மை அடையும்படி அருள்பவன்; (சேமம் - க்ஷேமம்);
தூ-மதிச் சடையினன் - தூய திங்களைச் சடையில் அணிந்தவன்;
தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;
8)
அடல்மட அரக்கனின் ஐயிரு வாயழத்
தடவரை மேல்மலர்த் தாள்விரல் ஊன்றினான்
படர்சடை மேலிளம் பாம்பைய ணிந்தவன்
சுடர்மழுக் கரத்தினன் தோணிபு ரத்தனே.
அடல்-மட-அரக்கனின் ஐயிரு-வாய் அழத் - வலிமையும் அறியாமையும் உடைய இராவணனது பத்து வாய்களும் அழும்படி;
தட-வரைமேல் மலர்த்தாள்-விரல் ஊன்றினான் - பெரிய கயிலைமலைமேல் மலர் போன்ற திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றியவன்;
படர்-சடைமேல் இளம் பாம்பை அணிந்தவன் - படரும் சடையின்மேல் இளம்-பாம்பை அணிந்தவன்;
சுடர்-மழுக் கரத்தினன் - சுடர்கின்ற (ஒளிவீசுகின்ற) மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;
தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;
9)
வேலையின் மேலவன் விரைமல ரானிவர்
மேலடி நேடிட வீங்கெரி ஆனவன்
காலனைக் காய்ந்தவன் கருமலை போற்கரித்
தோலையு ரித்தவன் தோணிபு ரத்தனே.
வேலையின்-மேலவன் விரை-மலரான் இவர் - பாற்கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் மணம் கமழும் தாமரைமேல் இருக்கும் பிரமனும்; (வேலை - கடல்); (விரை - வாசனை);
மேல் அடி நேடிட வீங்கு எரி ஆனவன் - முடியையும் அடியையும் தேடுமாறு ஓங்கிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்); (வீங்குதல் - வளர்தல்); (எரி - ஜோதி);
காலனைக் காய்ந்தவன் - இயமனை உதைத்து அழித்தவன்;
கரு-மலை போல் கரித்-தோலை உரித்தவன் - கரிய மலை போன்ற யானையின் தோலை உரித்தவன்;
தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;
10)
நெற்றியில் நீறணி யாக்கலர் நெஞ்சினில்
குற்ற(ம்)ம லிந்தவர் கூறிடு சொல்விடும்
அற்றவர்க் கற்றவன் அழற்கணை ஒன்றினால்
சுற்றெயில் எரித்தவன் தோணிபு ரத்தனே.
நெற்றியில் நீறு அணியாக் கலர் - நெற்றியில் திருநீற்றைப் பூசாத கீழோர்; (கலர் - கீழோர்);
நெஞ்சினில் குற்றம் மலிந்தவர் - நெஞ்சில் குற்றங்கள் மிகுந்தவர்கள்;
கூறிடு சொல் விடும் - அவர்கள் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா; (கூறு இடு சொல் - மக்களைப் பிரிப்பதற்காகச் சொல்லும் வஞ்சக வார்த்தைகள்); (கூறிடுதல் - 1. சொல்லுதல்; 2. துண்டாக்குதல்);
அற்றவர்க்கு அற்றவன் - அன்பர்களுக்கு அன்பு உடையவன்; (அறுதல் - நட்புக்கொள்ளுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "அற்றவர்க்கு அற்ற சிவன்");
அழற்கணை ஒன்றினால் சுற்று-எயில் எரித்தவன் - எங்கும் சுற்றித் திரிந்த முப்புரங்களைத் தீயம்பு ஒன்றால் எரித்தவன்;
தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;
11)
சொன்மலி தொடைகொடு துணையடி போற்றிட
முன்வினை மாய்ப்பவன் முளைமதிச் சடையினன்
நன்மைகள் செய்பவன் நால்வருக் காலடித்
தொன்மறை விரித்தவன் தோணிபு ரத்தனே.
சொல் மலி தொடைகொடு - சொற்கள் நிறைந்த பாமாலைகளால்; (சொன்மலி - சொல் மலி);
துணையடி போற்றிட முன்வினை மாய்ப்பவன் - துணையாக உள்ள இரு-திருவடிகளைப் போற்றினால் பழவினையை அழிப்பவன்; (துணை - உதவி; காப்பு; இரண்டு);
முளை-மதிச் சடையினன் - பிறையைச் சடையில் அணிந்தவன்;
நன்மைகள் செய்பவன் - சங்கரன்;
நால்வருக்கு ஆல்-அடித் தொன்மறை விரித்தவன் - சனகாதியர்களுக்கு ஆலமரத்தின்கீழே பழமைமிக்க வேதங்களை உபதேசித்தவன்; (தொன்மறை - தொல் மறை);
தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment