2014-06-15
P.239 - பந்தணைநல்லூர்
---------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தனதன தனதானா தனதன தனதானா)
(விளம் மாங்காய் விளம் மாங்காய்)
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")
1)
அசுரரும் இமையோரும் அலைகடல் கடைநாளில்
விசுவம தழிநஞ்சே வெளிவர அதுவுண்டான்
பசுமயில் உமைபங்கன் பசுபதி பதியென்பர்
பசிதணி வயல்சூழ்ந்த பந்தணை நல்லூரே.
அசுரரும் இமையோரும் அலைகடல் கடை-நாளில் விசுவமது அழி-நஞ்சே வெளிவர அது உண்டான் - அசுரர்களும் தேவர்களும் அலைமோதும் பாற்கடலைக் கடைந்த அன்று இந்தப் பிரபஞ்சத்தையே அழிக்கும் ஆலகாலமே பொங்க, அதனை உண்டருளியவன்; (விசுவம் - அகிலம்; அது - பகுதிப்பொருள்விகுதி);
பசுமயில் உமைபங்கன் - பசிய மயில் போன்ற உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்;
பசுபதி பதி என்பர் - பசுபதி உறையும் தலம் ஆவது; (* பசுபதீசுவரர் - திருப்பந்தணைநல்லூர் ஈசன் திருநாமம்);
பசி தணி- வயல் சூழ்ந்த பந்தணைநல்லூரே - உலகின் பசியைத் தணிக்கும் வயல் சூழ்ந்த பந்தணைநல்லூர்;
2)
சுடரெரி கரமேந்தி சுடலையில் நடமாடி
இடர்புரி எயில்மூன்றும் நொடியினில் எரிமூழ்கிப்
படவொரு கணையெய்த பசுபதி பதியென்பர்
படர்பொழில் புடைசூழ்ந்த பந்தணை நல்லூரே.
சுடர்-எரி கரம் ஏந்தி - சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியவன்;
சுடலையில் நடமாடி - சுடுகாட்டில் கூத்தாடுபவன்;
இடர்புரி எயில் மூன்றும் நொடியினில் எரி-மூழ்கிப் பட ஒரு கணை எய்த - துன்பம் செய்த முப்புரங்களும் கணப்பொழுதில் தீப்பற்றி அழியும்படி ஓர் அம்பை எய்த;
பசுபதி பதி என்பர் - பசுபதி உறையும் தலம் ஆவது;
படர்-பொழில் புடைசூழ்ந்த பந்தணைநல்லூரே - படர்ந்த சோலை சூழ்ந்த பந்தணைநல்லூர்;
3)
நிலவினைச் சடைமீது நிலவிட அருளண்ணல்
நிலைபெறத் தமிழ்பாடி நிரைகழல் தொழுவார்க்குப்
பலவினின் பழமொக்கும் பசுபதி பதியென்பர்
பலசுரம் அளிபாடும் பந்தணை நல்லூரே.
நிலவினைச் சடைமீது நிலவிட அருள் அண்ணல் - சந்திரனைச் சடைமேல் வாழ அருளிய பெருமான்; (நிலவுதல் - நிலைத்திருத்தல்; தங்குதல்);
நிலைபெறத் தமிழ் பாடி நிரை-கழல் தொழுவார்க்குப் பலவின் இன்-பழம் ஒக்கும் - நற்கதி பெறத் தமிழ்ப்பாமாலைகள் பாடி வரிசையாகக் கழல் அணிந்த திருவடியை வணங்கும் அன்பர்களுக்கு இனிய பாலாப்பழம் ஒக்கும் (= மிகவும் இனிமை பயக்கின்ற); (நிலைபெறுதல் - துன்பமற்ற நிலையை அடைதல்); (நிரைகழல் - வரிசையாகக் கழல் அணிந்த திருவடி); (பலவு - பலா);
பசுபதி பதி என்பர் - பசுபதி உறையும் தலம் ஆவது;
பல சுரம் அளி பாடும் பந்தணைநல்லூரே - ஏழிசையை வண்டுகள் பாடும் (சோலை சூழ்ந்த) பந்தணைநல்லூர்;
4)
அங்கமும் மறைநாலும் அருளிய திருநாவன்
அங்கமும் அணியீசன் அணிமயில் உமைபங்கன்
பங்கமில் புகழாளன் பசுபதி பதியென்பர்
பைங்கிளி பயில்சோலைப் பந்தணை நல்லூரே.
அங்கமும் மறை-நாலும் - நால்வேதமும் ஆறங்கமும்;
அங்கமும் அணி ஈசன் - எலும்பையும் பூணுகின்ற தலைவன்;
அணி மயில் உமை பங்கன் - அழகிய மயில் போன்ற உமாதேவியை ஒரு பங்காக உடையவன்;
பங்கம் இல் புகழாளன் - குற்றமற்ற புகழை உடையவன்;
பைங்கிளி பயில் சோலை - பசிய கிளிகள் ஒலிக்கும் சோலை; (பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்);
5)
துணிமதி புனைதூயன் சுடுபொடி துதைமார்பன்
அணியிழை ஒருபாகன் அருவிடம் அடைகண்டன்
பணியினை அரையார்த்த பசுபதி பதியென்பர்
பணிபவர் பவம்நீக்கும் பந்தணை நல்லூரே.
துணிமதி - திங்களின் துண்டம்; (துணி - துண்டம்);
சுடுபொடி - சுடுநீறு - திருநீறு;
துதைதல் - படிதல் (To be steeped);
அணியிழை - பெண் (Woman, as adorned with jewels);
அருவிடம் அடைகண்டன் - கொடிய நஞ்சை அடைத்த கண்டத்தை உடையவன்;
பணியினை அரை ஆர்த்த - நாகப்பாம்பை அரையில் நாணாகக் கட்டிய; (பணி - நாகம்); (ஆர்த்தல் - கட்டுதல்);
பவம் - பிறவி; பாவம்;
6)
சுறவமர் கொடியானைச் சுடுநுதற் கணனெந்தை
இறவொடு பிறவில்லான் இணையிலி இடுகானிற்
பறையொலி தரவாடும் பசுபதி பதியென்பர்
பறவைகள் பயில்சோலைப் பந்தணை நல்லூரே.
சுறவு அமர் கொடியானைச் சுடு-நுதற்கணன் - மகரக்கொடி உடைய காமனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணன்; (சுற / சுறவு - சுறா - மகரமீன் (Shark)); (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 - "சுறவக்கொடி கொண்டவன் நீறதுவாய் உற நெற்றிவிழித்த எம் உத்தமனே");
எந்தை - எம் தந்தை;
இறவொடு பிறவு இல்லான் - இறப்பும் பிறப்பும் இல்லாதவன்; (இறவு -இறப்பு); (பிறவு - பிறப்பு);
இணையிலி - ஒப்பற்றவன்;
இடுகானில் பறை ஒலிதர ஆடும் - சுடுகாட்டில் பறைகள் ஒலிக்கக் கூத்து ஆடும்; (தருதல் - ஒரு துணைவினை);
பசுபதி பதி என்பர் - பசுபதி உறையும் தலம் ஆவது;
பறவைகள் பயில்-சோலைப் பந்தணைநல்லூரே - பறவைகள் ஒலிக்கின்ற சோலை திகழும் பந்தணைநல்லூர்; (பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்);
7)
இனியவன் எருதேறும் இறையவன் மறைபாடும்
தனியவன் வரம்யாவும் தருபவன் அலைமோதும்
பனியணி சடையேந்தல் பசுபதி பதியென்பர்
பனிமதி தொடுசோலைப் பந்தணை நல்லூரே.
மறை பாடும் தனியவன் - வேதங்கள் பாடும் ஒப்பற்றவன்; (தனி - ஒப்பின்மை);
அலைமோதும் பனி அணி சடை-ஏந்தல் - அலைமோது கங்கையைச் சடையில் அணிந்த பெருமான்; (பனி - நீர்); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);
பனி-மதி தொடு-சோலைப் பந்தணைநல்லூரே - குளிர்ச்சி பொருந்திய சந்திரன் தீண்டும் சோலை திகழும் பந்தணைநல்லூர்; (பனிமதி - குளிர்ச்சி);
8)
நிசியன வணமேனி நிசிசரன் முடிபத்தும்
நசிவுற விரலூன்றி நனியருள் புரிபெம்மான்
பசியெனப் பலிதேரும் பசுபதி பதியென்பர்
பசியதண் பொழிலாரும் பந்தணை நல்லூரே.
நிசி அன வண மேனி நிசிசரன் முடி பத்தும் - இருளைப் போன்ற கரிய நிறத்து அரக்கனான இராவணனின் பத்துத்தலைகளும்; (நிசி - இரவு; இருள்); (நிசிசரன் - இரவில் திரிபவன் - அசுரன்; அரக்கன்); (அப்பர் தேவாரம் - 5.65.11 - "மைக்கடுத்த நிறத்தரக்கன் வரை புக்கெடுத்தலும்");
நசிவுற விரல் ஊன்றி நனி அருள்புரி பெம்மான் - நெரிவுற ஒரு விரலை ஊன்றிப் பின் பேரருள் செய்த பெருமான்; (நசிவு - நெரிவு - Bruise, contusion); (நனி - மிகவும்);
பசி எனப் பலிதேரும் - பசி என்று சொல்லிப் பிச்சையெடுக்கும்; (பலி - பிச்சை);
பசுபதி பதி என்பர் - பசுபதி உறையும் தலம் ஆவது;
பசிய தண் பொழில் ஆரும் பந்தணைநல்லூரே - பசுமையான குளிர்ந்த சோலைகள் பொருந்திய பந்தணைநல்லூர்;
9)
மண்ணகழ் அரிவேதன் மலரடி முடிகாணார்
கண்ணமர் நுதலெந்தை கழலிணை தொழுமன்பர்
பண்ணிய வினைதீர்க்கும் பசுபதி பதியென்பர்
பண்ணிசை மிகுசோலைப் பந்தணை நல்லூரே.
மண் அகழ் அரி வேதன் மலரடி முடி காணார் - நிலத்தை அகழ்ந்த திருமாலும் பிரமனும் மலர்ப்பாதத்தையும் திருமுடியையும் காணமாட்டார்கள்;
கண் அமர் நுதல் எந்தை - நெற்றிக்கண் திகழும் எம் தந்தை;
கழலிணை தொழும் அன்பர் பண்ணிய வினை தீர்க்கும் - இரு-திருவடிகளை வணங்கும் பக்தர்கள் செய்த வினையைத் தீர்க்கும்;
பசுபதி பதி என்பர் - பசுபதி உறையும் தலம் ஆவது;
பண் இசை மிகு சோலைப் பந்தணைநல்லூரே - வண்டுகள் முரல்வதால் பண் இசை மிகுந்த பொழில் சூழ்ந்த பந்தணைநல்லூர்;
10)
நுழைவிலர் பலபொய்கள் நுவல்பவர் உரைநம்பேல்
மழையன மணிகண்டன் மலரடி மறவாதார்
பழவினைத் தொடர்நீக்கும் பசுபதி பதியென்பர்
பழமலி பொழில்சூழ்ந்த பந்தணை நல்லூரே.
நுழைவு-இலர், பல பொய்கள் நுவல்பவர், உரை நம்பேல் - நுண்ணறிவு இல்லாதவர்களும் பல பொய்கள் சொல்பவர்களும் பேசும் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (நுழைவு - நுட்பவறிவு); (நுவல்தல் - சொல்லுதல்); (நம்பேல் - நம்ப வேண்டா);
மழை அன மணிகண்டன் மலரடி மறவாதார் பழவினைத்தொடர் நீக்கும் - மேகம் போன்ற நீலமணி திகழும் கண்டத்தை உடையவன் மலர்ப்பாதத்தை ஏந்நாளும் வணங்கும் அன்பர்களது பழவினைத்தொடரை நீக்கும்;
பசுபதி பதி என்பர் - பசுபதி உறையும் தலம் ஆவது;
பழம் மலி பொழில் சூழ்ந்த பந்தணைநல்லூரே - பழங்கள் மிகுந்த சோலை சூழ்ந்த பந்தணைநல்லூர்;
11)
கடிமலர் பலதூவிக் கசிவொடு தமிழ்பாடி
அடியிணை தொழுவாரை அமர்சிவ புரமேற்றும்
படியென அருள்கையன் பசுபதி பதியென்பர்
படியுறு பசிதீர்செய்ப் பந்தணை நல்லூரே.
கடிமலர் பல தூவிக் கசிவொடு தமிழ் பாடி - வாசமலர்கள் பல தூவி உருகிச் செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (கடி - வாசனை);
அடியிணை தொழுவாரை அமர் சிவபுரம் ஏற்றும் படி என அருள்-கையன் - இரு திருவடிக்ஃளை வழிபட்டாரை விரும்பிய சிவலோகத்திற்கு ஏற்றுகின்ற படி போல அருள்கின்ற திருக்கையை உடைய; (அமர்தல் - விரும்புதல்);
பசுபதி பதி என்பர் - பசுபதி உறைகின்ற இடம் என்பர்;
படி உறுபசி தீர்-செய்ப் பந்தணைநல்லூரே - உலகின் பசியைத் தீர்க்கும் வயல் சூழ்ந்த திருப்பந்தணைநல்லூர்; (படி - பூமி); (உறுபசி - உற்ற பசி; மிக்க பசி); (செய் - வயல்);
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment