Friday, June 21, 2019

04.65 - வலிதாயம் (பாடி) - பிறையன் பேதை பிரியா

04.65 - வலிதாயம் (பாடி) - பிறையன் பேதை பிரியா

2014-06-01

வலிதாயம் (பாடி)

(சென்னைப் புறநகரில் பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயில்)

----------------------------------

(ஆசிரிய இணைக்குறட்டுறை. யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க.)

(சம்பந்தர் தேவாரம் - 1.56.1 - காரார் கொன்றை கலந்த முடியினர்)


1)

பிறையன் பேதை பிரியாப் பெருமையன்

மறையன் மேய வலிதாயம்

நறையம் போதொடு நாடி வணங்கிடப்

பறையும் பாவம் பழிகளே.


பிறையன், பேதை பிரியாப் பெருமையன் - சந்திரசேகரன், உமையொரு பங்கன்;

மறையன் மேய வலிதாயம் - வேதமுதல்வன் உறையும் திருவலிதாயத்தை;

நறை-அம்-போதொடு நாடி வணங்கிடப் - அழகிய வாசமலர்களால் விரும்பி வழிபட்டால்; (நறை - தேன்; வாசனை); (அம் - அழகு); (போது - பூ);

பறையும் பாவம் பழிகளே - பாவங்கள் பழிகள் எல்லாம் அழியும்; (பறைதல் - அழிதல்);


2)

பித்தன் பேய்க்கணம் சூழ நடம்புரி

மத்தன் மேய வலிதாயம்

சித்தம் ஒன்றித் திருவடி போற்றிடும்

பத்தர் வல்வினை பாறுமே.


பித்தன் - பேரன்பு உடையவன்;

பேய்க்கணம் சூழ நடம் புரி மத்தன் மேய வலிதாயம் - பூதகணங்கள் சூழத் திருநடம் செய்பவனும் ஊமத்தமலரை அணிந்தவனுமான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தில்;

சித்தம் ஒன்றித் திருவடி போற்றிடும் - மனம் ஒன்றித் திருவடியை வணங்கும்;

பத்தர் வல்வினை பாறுமே - பக்தர்களது வலிய வினைகள் அழியும்; (பாறுதல் - அழிதல்);


3)

அண்ணல் ஆறணி வேணியன் ஆரழல்

வண்ணன் மேய வலிதாயம்

நண்ணி நாண்மலர் தூவி வலஞ்செயல்

மண்ணில் வாரா வழிதானே.


அண்ணல், ஆறு அணி வேணியன் - தலைவன், கங்கைச்சடையன்;

ஆர்-அழல் வண்ணன் மேய வலிதாயம் - தீவண்ணன் உறையும் திருவலிதாயத்தை;

நண்ணி நாண்மலர் தூவி வலஞ்செயல் - அடைந்து புதிய மலர்களைத் தூவி வலம்வருதல்;

மண்ணில் வாரா வழிதானே - பிறவாநிலையைப் பெறும் உபாயம்;


4)

பொறிய ராவணி புண்ணியன் கையில்மான்

மறியன் மேய வலிதாயம்

வெறியி லங்கு மலரிட்டு வேண்டுவார்

உறுவி னைத்தொடர் ஓயுமே.


பொறி-அரா அணி புண்ணியன் - புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்த புண்ணியமுர்த்தி; (பொறி - பாம்பின் படத்தில் உள்ள புள்ளிகள்);

கையில் மான்மறியன் மேய வலிதாயம் - மான்கன்றைக் கையில் ஏந்தியவன் உறையும் திருவலிதாயத்தை;

வெறி இலங்கு மலர் இட்டு வேண்டுவார் - வாசனை கமழும் பூக்களைத் தூவி இறைஞ்சும் அடியவர்களது; (வெறி - வாசனை);

உறு-வினைத்தொடர் ஓயுமே - மிகுந்த பழவினைப் பந்தமானது அழியும்;


5)

ஆனஞ் சாடும் அடிகள் விடையேறி

வானன் மேய வலிதாயம்

தேனன் மாமலர் சேவடித் தூவிட

ஈன மாயின இல்லையே.


ஆன்-அஞ்சு ஆடும் அடிகள் - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்பெறும் இறைவன்; (ஆன் அஞ்சு - பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய் முதலிய ஐந்து பொருள்கள்);

விடையேறி - இடபவாகனன்;

வானன் மேய வலிதாயம் - சிவலோகன் உறையும் திருவலிதாயத்தில்; (அப்பர் தேவாரம் - 5.4.2 - "வானனைம் மதி சூடிய");

தேன்-நன் மா-மலர் சேவடித் தூவிட- தேனும் வாசனையும் பொருந்திய சிறந்த அழகிய பூக்களைச் சிவந்த திருவடியில் தூவி வழிபட்டால்;

ஈனமாயின இல்லையே - குறைகள் (/ குற்றங்கள்) தீரும்;


6)

நதியன் வேணியில் நாகம் நறுங்கொன்றை

மதியன் மேய வலிதாயம்

புதிய பூவொடு போற்றிசெய் வாரருள்

நிதியர் ஆவது நேருமே.


நதியன் வேணியில் நாகம் நறுங்கொன்றை மதியன் மேய வலிதாயம் - கங்காதரன் சடையில் பாம்பு, வாசமலர்க்கொன்றை, பிறைச்சந்திரன் இவற்றைச் சூடிய பெருமான் உறையும் திருவலிதாயத்தை; (வேணியில் - இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது);

புதிய பூவொடு போற்றிசெய்வார் - அன்று பூத்த பூக்களால் வழிபடும் பக்தர்கள்;

அருள் நிதியர் ஆவது நேரும் - அருள்நிதியைப் பெற்றவர்கள் ஆவது நிகழும்; (நேர்தல் - நிகழ்தல்);


7)

உரகத் தாரினன் என்றும் ஒளிப்பிலா

வரதன் மேய வலிதாயம்

பரவிப் பாடிப் பணிந்தெழு பத்தரை

விரவி டாவல் வினைகளே.


உரகத் தாரினன் - பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு); (தார் - மாலை);

என்றும் ஒளிப்பு இலா வரதன் மேய வலிதாயம் - எப்பொழுதும் வஞ்சனையின்றி வரங்களை வாரி வழங்கும் பெருமான் உறையும் திருவலிதாயத்தை;

பரவிப் பாடிப் பணிந்தெழு பத்தரை - போற்றித் துதித்து வணங்கும் பக்தர்களை;

விரவிடா வல்வினைகளே - வல்வினைகள் நெருங்கமாட்டா; (விரவுதல் - அடைதல்);


8)

அஞ்சொ டஞ்சு தலையை அடர்த்தருள்

மஞ்சன் மேய வலிதாயம்

நெஞ்சில் அன்பொடு போற்றி நினைந்திட

வஞ்ச வல்வினை மாயுமே.


அஞ்சொடு அஞ்சு தலையை அடர்த்து அருள் - பத்துத்தலைகளை உடைய இராவணனை நசுக்கி அருள்செய்த; (அடர்த்தல் - நசுக்குதல்);

மஞ்சன் மேய வலிதாயம் - வீரனான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தை; (மஞ்சன் - மைந்தன் - வீரன்);

நெஞ்சில் அன்பொடு போற்றி நினைந்திட - மனத்தில் பக்தியோடு தியானித்தால்;

வஞ்ச வல்வினை மாயுமே - தீய வலிய வினைகள் அழியும்;


9)

அன்னம் பன்றி அறிவொணாச் சோதியாம்

மன்னன் மேய வலிதாயம்

உன்னி ஏத்திடும் உள்ளம் உடையவர்

முன்னை வல்வினை முஞ்சுமே.


அன்னம் பன்றி அறிவு ஒணாச் சோதியாம் - பிரமன் திருமால் இவர்களால் அறிய இயலாத ஜோதி ஆன;

மன்னன் மேய வலிதாயம் - தலைவன் உறையும் திருவலிதாயத்தை;

உன்னி ஏத்திடும் உள்ளம் உடையவர் - தியானிக்கும் நெஞ்சு உடைய பக்தர்களது; (உன்னுதல் - தியானித்தல்; எண்ணுதல்);

முன்னை வல்வினை முஞ்சுமே - பழவினை அழியும்; (முஞ்சுதல் - சாதல்); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - 8.4 - அடி 19 - "அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்");


10)

கள்ளம் பேசும் கயவர்சொல் நீங்குமின்

வள்ளல் மேய வலிதாயம்

உள்ளம் ஒன்றி உகந்துரை செய்திட

விள்ளும் தொல்லை வினைகளே.


கள்ளம் பேசும் கயவர் சொல் நீங்குமின் - வஞ்சனை பேசும் தீயவர்களது சொற்களை நீங்குங்கள்;

வள்ளல் மேய வலிதாயம் - வள்ளலான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தை;

உள்ளம் ஒன்றி உகந்து உரை செய்திட - மனம் ஒன்றி மகிழ்ந்து துதித்தால்; (உகத்தல் - விரும்புதல்);

விள்ளும் தொல்லை வினைகளே - பழவினைகள் நீங்கும்; (விள்ளுதல் - நீங்குதல்); (தொல்லை - பழைய);


11)

ஐயன் தேவர்க் கருள்புரி கண்டத்தில்

மையன் மேய வலிதாயம்

நையும் நெஞ்சொடு நாளும் தொழுதெழ

வெய்ய வல்வினை வீடுமே.


ஐயன் - தலைவன்;

தேவர்க்கு அருள்புரி கண்டத்தில் மையன் மேய வலிதாயம் - தேவருக்கு அருள்புரிந்த நீலகண்டன் உறையும் திருவலிதாயத்தை;

நையும் நெஞ்சொடு நாளும் தொழுதெழ - மனம் உருகித் தினமும் வழிபட்டால்;

வெய்ய வல்வினை வீடுமே - கொடிய வினைகள் அழியும்; (வெய்ய - கொடிய); (வீடுதல் - விடுதல்; அழிதல்);


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

ஆசிரிய இணைக்குறட்டுறை. 1, 3-ஆம் அடிகள் - அளவடி. 2, 4-ஆம் அடிகள்: சிந்தடி.

அடி 1 & 3 : தான தானன தானன தானன

அடி 2 & 4 : தான தானன தானானா

ஒவ்வோர் அடியிலும்:

  • 2-ஆம் சீர் நேரசையில் தொடங்கும்.

  • 2, 3, 4-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும்.

  • அடியின் ஈற்றுச்சீரைத் தவிர மற்றச் சீர்களில் விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரலாம். அப்படி அங்கு மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.

அதாவது:

  • 1, 3-ஆம் அடிகள் - திருக்குறுந்தொகை அமைப்பு; 2, 3, 4-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும். நேரசையில் தொடங்கில் அடிக்குப் 11 எழுத்து / நிரையசையில் தொடங்கில் அடிக்குப் 12 எழுத்து.

  • 2, 4-ஆம் அடிகள் - அதே போல் - 2, 3-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும். நேரசையில் தொடங்கில் அடிக்கு 8 எழுத்து / நிரையசையில் தொடங்கில் அடிக்கு 9 எழுத்து.


உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 1.56.1 -

காரார் கொன்றை கலந்த முடியினர்

சீரார் சிந்தை செலச்செய்தார்

பாரார் நாளும் பரவிய பாற்றுறை

ஆரா ராதி முதல்வரே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment