Tuesday, June 25, 2019

P.238 - எறும்பியூர் (திருவெறும்பூர்) - கடியாரும் மலர்தூவி

2014-06-08

P.238 - திருவெறும்பூர் (எறும்பியூர்)

----------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(பெரும்பாலும் - மாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் - என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.63.1 - "பைங்கோட்டு மலர்ப்புன்னை")

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

கடியாரும் மலர்தூவிக் கழல்போற்றும் சுரர்தங்கள்

மிடியாவும் துடைபெம்மான் விரிகொன்றை மலர்சூடி

இடியாரும் குரலேற்றன் எழிலாரும் எறும்பூரில்

அடியாருக் கருள்செய்வான் அலையாரும் முடியானே.


கடி ஆரும் மலர் தூவிக் கழல் போற்றும் சுரர்தங்கள் மிடி யாவும் துடை-பெம்மான் - மணம் மிகுந்த பூக்களைத் தூவித் திருவடியை வழிபட்ட தேவர்களது துன்பங்களையெல்லாம் தீர்த்த பெருமான்; (கடி வாசனை); (சுரர் - தேவர்); (மிடி - துன்பம்); (துடைத்தல் - அழித்தல்);

விரி-கொன்றை மலர் சூடி - விரிகின்ற கொன்றைமலரைச் சூடியவன்;

இடி ஆரும் குரல் ஏற்றன் - இடி போன்ற குரல் உடைய இடபத்தை வாகனமாக உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);

எழில் ஆரும் எறும்பூரில் அடியாருக்கு அருள்செய்வான் - அழகிய திருவெறும்பூரில் பக்தர்களுக்கு அருள்புரிபவன்;

அலை ஆரும் முடியானே - கங்கையைத் திருமுடிமேல் அணிந்தவன் (கங்காதரன்);


2)

கருதார்தம் புரமூன்றைக் கணையொன்றால் எரியீசன்

ஒருதூவெண் மதிசூடி உமைமங்கை இடமாக

எருதேறல் மகிழ்ஏந்தல் எழிலாரும் எறும்பூரில்

இருதாளைப் பணிவார்தம் இடர்தீர்க்கும் பெருமானே.


கருதார்தம் புரம்-மூன்றைக் கணை ஒன்றால் எரி-ஈசன் - பகைவர்களது முப்புரங்களை ஓர் அம்பால் எய்து எரித்த ஈசன்; (கருதார் - பகைவர்);

ஒரு தூ வெண்மதி சூடி - தூய வெண்பிறையைச் சூடியவன்;

உமைமங்கை இடம் ஆக எருது ஏறல் மகிழ்- ஏந்தல் - உமாதேவி இடப்பாகம் ஆக, இடபவாகனத்தில் ஏறுகின்ற தலைவன்; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்);

எழில் ஆரும் எறும்பூரில் இருதாளைப் பணிவார்தம் இடர் தீர்க்கும் பெருமானே - அழகிய திருவெறும்பூரில் இரு-திருவடிகளை வழிபடும் அன்பர்களது துன்பத்தைத் தீர்க்கும் பெருமான்;

("எழிலாரும் எறும்பூரில் பெருமான்", "இருதாளைப் பணிவார்தம் இடர்தீர்க்கும் பெருமான்" என்று தனித்தனி இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);


3)

நீலத்தை மிடறேற்றான் நிலவைத்தன் முடிவைத்த

கோலத்தன் அழிவில்லான் கொடியாரூர் அழிவில்லான்

ஏலப்பூங் குழலாள்கோன் எழிலாரும் எறும்பூரில்

சூலத்தன் அடிபோற்றத் துயரில்லை ஞாலத்தே.


நீலத்தை மிடறு ஏற்றான் - ஆலகாலத்தை நீலமணியாகக் கண்டத்தில் ஏற்றவன்;

நிலவைத் தன் முடி வைத்த கோலத்தன் - பிறையைச் சென்னிமேல் சூடியவன்;

அழிவில்லான் - அழிவு அற்றவன்;

கொடியார் ஊர் அழி-வில்லான் - கொடியவர்தம் முப்புரங்களை அழித்த வில்லினன்;

ஏலப் பூங்குழலாள் கோன் - மயிர்ச்சாந்து அணிந்த மென்மையான கூந்தலை உடைய உமைக்குக் கணவன்; (ஏலம் - மயிர்ச்சாந்து);

எழில் ஆரும் எறும்பூரில் சூலத்தன் அடிபோற்றத் துயர் இல்லை ஞாலத்தே - அழகிய திருவெறும்பூரில் சூலபாணியான சிவபெருமானது திருவடியை வழிபடும் அன்பர்களுக்கு இவ்வுலக வாழ்வில் துன்பங்கள் திரும்;


4)

சுமையாக விறகேந்தி விளையாடல் புரிசெல்வன்

அமைதேரின் மிசையேறி அரண்மூன்றுக் கழல்மூட்டி

இமையோர்கட் கிரங்கீசன் எழிலாரும் எறும்பூரில்

உமையோடும் உறைபெம்மான் எமையாளும் கமையானே.


சுமையாக விறகு ஏந்தி விளையாடல் புரி செல்வன் - விறகு விற்றுத் திருவிளையாடல் புரிந்த செல்வன்; (* திருவிளையாடற்புராணம் - விறகு விற்ற படலம் காண்க);

அமை-தேரின்மிசை ஏறி அரண் மூன்றுக்கு அழல் மூட்டி இமையோர்கட்கு இரங்கு ஈசன் - தேவர்கள் செய்த தேரின்மேல் ஏறி முப்புரங்களை எரித்துத் தேவர்களுக்கு அருள்புரிந்த ஈசன்;

எழில் ஆரும் எறும்பூரில் உமையோடும் உறை பெம்மான் - அழகிய திருவெறும்பூரில் உமாதேவியோடு உறைகின்ற பெருமான்;

எமை ஆளும் கமையான் - எம்மை ஆள்கின்ற அருள்வடிவினன்; (விடை - விடையான்; அதுபோல், கமை - கமையான்); (கமை - பொறுமை; அருள்; - க்ஷமா என்ற வடசொல்லின் தமிழ் வடிவம்); (அப்பர் தேவாரம் - 6.55.8 - "கமையாகி நின்ற கனலே போற்றி");


5)

போரேறு தனிலேறி புலித்தோலை அரைவீக்கி

ஓராறு சடையேற்றான் ஒருகோட்டை உடைமைந்தன்

ஈராறு கரன்தாதை எழிலாரும் எறும்பூரில்

சீரேறு பதம்போற்றச் செறுபாவம் சேராவே.


போர் ஏறுதனில் ஏறி - போர் செய்யும் இடபத்தை வாகனமாக உடையவன்; (ஏறி - ஏறியவன்);

புலித்தோலை அரை வீக்கி - அரையில் புலித்தோலைக் கட்டியவன்; (வீக்கி - வீக்கியவன்);

ஓர் ஆறு சடை ஏற்றான் - கங்கையைச் சடையில் ஏற்றவன்;

ஒரு கோட்டையுடை மைந்தன், ஈர் ஆறு கரன் தாதை - ஒரு தந்தத்தை உடைய மகனான கணபதிக்கும் பன்னிருகை முருகனுக்கும் தந்தை; (கோடு - தந்தம்); (தாதை - தந்தை);

எழில் ஆரும் எறும்பூரில் சீர் ஏறு பதம் போற்றச் செறு-பாவம் சேராவே - அழகிய திருவெறும்பூரில் அப்பெருமானது சீர் மிக்க திருவடியை வழிபட்டால் துன்புறுத்தும் தீவினைகள் தீரும்; (செறுதல் - வருத்துதல்);


6)

அலையூர்கள் அவைவேவ அரிகால்தீக் கணையேவச்

சிலையாக மலையேந்தி திருநீற்றன் மழவேற்றன்

இலையாரும் நுனைவேலன் எழிலாரும் எறும்பூரில்

நிலையாக உறைவான்தாள் நினைவார்க்கு வினைவீடே.


அலை-ஊர்கள் அவை வேவ - எங்கும் அலைந்த முப்புரங்கள் வெந்து அழியும்படி;

அரி கால் தீக் கணை ஏவச் - விஷ்ணு வாயு அக்கினி இம்மூவரும் ஒன்றாகச் சேர்ந்த அம்பை ஏவுவதற்கு; (கால் - வாயு);

சிலையாக மலை ஏந்தி - வில்லாக மேருமலையை ஏந்தியவன்; (சிலை - வில்);

திருநீற்றன் மழவேற்றன் - திருநீற்றைப் பூசியவன், இளைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;

இலை ஆரும் நுனை-வேலன் - இலை போன்ற நுனிகளை உடைய சூலத்தை ஏந்தியவன்;

எழில் ஆரும் எறும்பூரில் நிலையாக உறைவான் தாள் நினைவார்க்கு வினை வீடே - அழகிய திருவெறும்பூரில் நீங்காமல் என்றும் உறைகின்ற பெருமானது பாதத்தை நினையும் பக்தர்களது வினை நீங்கும்; (வினைவீடு - வினைநீக்கம்);


7)

ஒருமான்கை தனிலேந்தி உரகத்தைத் தலையேந்தி

அருநான்மா மறைபாடி அடலானை உரிமூடி

இருநான்கு வரைத்தோளன் எழிலாரும் எறும்பூரில்

பெருமான்தன் அடியார்க்குப் பெருங்காப்பாய் வருவானே.


ஏந்தி, பாடி, மூடி - ஏந்தியவன், பாடியவன், மூடியவன் என்ற பெயர்ச்சொற்கள்;

ஒரு மான் கைதனில் ஏந்தி - கையில் ஒரு மானை ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன்);

உரகத்தைத் தலை ஏந்தி - தலைமேல் பாம்பைத் தரித்தவன்; (உரகம் - பாம்பு);

அரு- நான்-மா-மறை பாடி - அரிய நால்வேதங்களைப் பாடி அருளியவன்; (பாடி - பாடியவன்);

அடல்-ஆனை-உரி மூடி - வலிய கொலை யானையின் தோலைப் போர்த்தவன்; (மூடி - மூடியவன்);

இருநான்கு வரைத்-தோளன் - மலை போன்ற எட்டுப்-புஜங்களை உடையவன்;

எழில் ஆரும் எறும்பூரில் பெருமான் - அழகிய திருவெறும்பூரில் உறைகின்ற பெருமான்;

தன் அடியார்க்குப் பெரும்-காப்பாய் வருவானே - எப்பெருமான் தன் அடியவர்களுக்கு பெரிய காவல் ஆவான்; (காப்பு - பாதுகாவல்);


8)

மடமாட்ட இலங்கைக்கோன் மலையாட்ட விரலூன்றிப்

படமாட்டா வலிதந்து பரவப்பின் பெயர்தந்தான்

இடுகாட்டில் நடமாடி எழிலாரும் எறும்பூரில்

நடுகாட்டி பதம்போற்ற நமையின்னல் நணுகாவே.


மடம் ஆட்ட இலங்கைக்கோன் மலை ஆட்ட விரல் ஊன்றிப் - அறியாமை ஆட்டுவிக்க அதனால் இலங்கை-மன்னன் கயிலைமலையை அசைத்துப் பெயர்க்க முயன்றபொழுது ஈசன் ஒரு திருப்பாத-விரலை ஊன்றி; (மடம் - அறியாமை); (ஆட்டுதல் - ஆடச்செய்தல் (இயக்குதல்); அசைத்தல்);

படமாட்டா வலி தந்து பரவப் பின் பெயர் தந்தான் - அவனுக்குப் பொறுக்கமுடியாத நோவைத் தந்து, பின் அவன் அழுது துதித்துப் பாடக் கேட்டு இரங்கி அவனுக்கு இராவணன் என்ற பெயரைத் தந்தான்; (பரவுதல் - துதித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.17.8 - "கொலைவாளொடு குணநாமமும் கொடுத்த ஏரார்தரும் இறைவர்க்கு");

இடுகாட்டில் நடம் ஆடி - சுடுகாட்டில் கூத்தாடுபவன்;

எழில் ஆரும் எறும்பூரில் நடு காட்டி - அழகிய திருவெறும்பூரில் பாரபட்சம் இன்மையைக் காட்டுபவன்; (நடு - நடுநிலை; நீதி); (நடு - முற்றியலுகரம். நடுக்காட்டி என்று வல்லொற்று மிகும். எதுகைநோக்கி இங்கே க் மிகாது வந்தது); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்" - சலம் - கோட்டம்; பட்சபாதம் - நடுநிலை திறம்புகை);

பதம் போற்ற நமை இன்னல் நணுகாவே - அப்பெருமானது திருவடியைப் போற்றினால் நம்மைத் துன்பங்கள் நெருங்கமாட்டா;


9)

கரியானும் கடிநாறும் கமலத்தில் உறைவானும்

தெரியாது மிகநேடித் திகைத்தேத்த முடிவில்லா

எரியாக எழுபெம்மான் எழிலாரும் எறும்பூரைப்

பிரியாதான் கழல்பேணும் பிரியத்தார் பெறுவாரே.


கரியானும் கடி நாறும் கமலத்தில் உறைவானும் - திருமாலும் வாசனை கமழும் தாமரையில் உறையும் பிரமனும்;

தெரியாது மிக நேடித் திகைத்து ஏத்த - மிகவும் தேடியும் அடிமுடி காணாமல் மனம் மயங்கித் துதிக்கும்படி; (நேடி - தேடி); (திகைத்தல் - மயங்குதல்);

முடிவு இல்லா எரியாக எழு-பெம்மான் - எல்லை இல்லாத ஜோதி வடிவில் உயர்ந்த பெருமான்;

எழில் ஆரும் எறும்பூரைப் பிரியாதான் - அழகிய திருவெறும்பூரை என்றும் நீங்காதவன்;

கழல் பேணும் பிரியத்தார் பெறுவாரே - அப்பெருமானது திருவடியைப் போற்றும் அன்பர்கள் அவன் அருளை (& நற்கதியை & விரும்பிய வரங்களை) அடைவார்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.93.9 - "பிரியராம் அடியவர்க் கணியராய்ப்");


10)

அணைவில்லார் தினந்தோறும் அலர்தூற்றித் திரிவாரோர்

துணையில்லார் உரைகொள்ளேல் சுடுநீற்றன் புரிநூலன்

இணையில்லான் பரமேட்டி எழிலாரும் எறும்பூரில்

புணைவல்லான் அடிபோற்ற வினையெல்லாம் பொடியாமே.


அணைவு-இல்லார் தினந்தோறும் அலர்தூற்றித் திரிவார் - ஈசனைச் சாராதவர்கள் நாள்தோறும் இகழ்ந்து பேசித் திரிவார்கள்; (அணைவு - சார்தல்; பொருந்துதல்); (அலர்தூற்றுதல் - இகழ்ந்து பேசுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.36.10 - "அணைவில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே");

ஓர் துணை இல்லார் உரை கொள்ளேல் - அவர்கள் ஒரு துணை இல்லாதவர்கள்; அவர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;

சுடுநீற்றன், புரிநூலன் - சுட்ட திருநீற்றைப் பூசியவன், முப்புரிநூலை அணிந்தவன்;

இணை-இல்லான், பரமேட்டி - ஒப்பற்றவன், பரமன்;

எழில் ஆரும் எறும்பூரில் புணை வல்லான் அடிபோற்ற வினையெல்லாம் பொடி ஆமே - அழகிய திருவெறும்பூரில் பிறவிக்கடலைக் கடப்பிக்கும் தெப்பம் ஆனவன், எல்லாம் வல்லவன், அப்பெருமானது திருவடியை வழிபட்டால் எல்லா வினைகளும் சாம்பலாகும்; (புணை - தெப்பம்); (வல்லான் - வல்லவன்); (திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.1 - "அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன்");


11)

காடில்லா உடைநாதன் கமலத்தான் தலையல்லால்

ஓடில்லான் பலிதேர உமைநல்லாள் ஒருகூறன்

ஈடில்லான் வரைவில்லான் எழிலாரும் எறும்பூரிற்

கேடில்லான் மலர்த்தாளை நாடில்வான் தருவானே.


காடு இல்லா-உடை நாதன் - சுடுகாடே இடமாக உடைய தலைவன்; (இல்லா - இல்லாக; கடைக்குறை விகாரம்);

கமலத்தான் தலை அல்லால் ஓடு இல்லான் பலி தேர - தாமரைமேல் இருக்கும் பிரமன் மண்டையோட்டைத் தவிரப் பிச்சையெடுக்க வேறு ஓடு இல்லாதவன்;

உமைநல்லாள் ஒரு கூறன் - உமாதேவியை ஒரு கூறாக உடையவன்;

ஈடு இல்லான் - ஒப்பற்றவன்;

வரைவில்லான் - 1. வரைவு இல்லான் (அளவற்றவன்); 2. வரை வில்லான் (மேருமலையை வில்லாக ஏந்தியவன்);

எழில் ஆரும் எறும்பூரில் கேடு இல்லான் - அழகிய திருவெறும்பூரில் உறைகின்ற அழிவற்றவன்;

மலர்த்தாளை நாடில் வான் தருவானே - அப்பெருமானது மலரடியை விரும்பி வழிபட்டால் வானுலகை அளிப்பான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment