Saturday, June 17, 2017

03.04.040 - சிவன் - எட்டு (8) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-22

3.4.40 - சிவன் - எட்டு (8) - சிலேடை

-------------------------------------------------------------

விளங்குலகு கூறுமிரண் டாறங்கம் என்றே

உளநிலைமாற் றிக்காணில் உம்பர் அளவற்ற

ஒன்றினைக் காட்டும் உருஅஞ்சும் மூன்றுமாம்

என்றுமழி வில்சிவன் எட்டு.


சொற்பொருள்:

விளங்குதல் - திகழ்தல்;

உலகு - 1. உலகம் (உலகத்தினர்) / 2. பூமி;

கூறு - பாகம்;

கூறுதல் - சொல்லுதல்;

அங்கம் - 1. உறுப்பு; / 2. வேதாங்கம் (சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்ற ஆறு அங்கங்கள்);

என்றே - 1. என்று + (அசை); / 2. என் + தே (தெய்வம்);

உள – உள்ள – 1. இருக்கின்ற; / 2. உள்ளத்தின்;

உளநிலை - 1. இருக்கும் நிலை; / 2. உள்ளத்தின் நிலை;

காண்தல் - 1. பார்த்தல்; / 2. ஆராய்தல்; வணங்குதல்;

உம்பர் - 1. மேலிடம்; / 2. வானுலகம் (சிவலோகம்);

காட்டுதல் - 1. காண்பித்தல்; அறிவித்தல்; / 2. உண்டாக்குதல்;

அளவற்ற ஒன்று - அனந்தம்; எல்லையற்றது; (infinity);

உரு - வடிவம்;

அழிவில் - அழிவு இல் - அழிவில்லாத;

எட்டு - எட்டு என்ற எண்;


எட்டு (8):

விளங்கு லகு கூறும் இரண்டு ஆறு அங்கம் என்றே - உலகம், இரண்டும் ஆறும் (எட்டின்) உறுப்பு என்று சொல்லும்; (2+6=8).

உள நிலை மாற்றிக் காணில் உம்பர் அளவு அற்ற ஒன்றினைக் காட்டும் உரு - அது இருக்கும் நிலையை மாற்றிப் பார்த்தால் (8 என்ற குறியைப் பக்கவாட்டில் வைத்து நோக்கினால் = ∞ ) அது (கணிதத்தில் infinity என்ற) மேல்-எல்லை இல்லாத பேரெண்ணைக் குறிக்கும் வடிவம் ஆகும்.

அஞ்சும் மூன்றும் ஆம் - ஐந்தையும் மூன்றையும் கூட்டினால் கிட்டும் எண்; (5 + 3 = 8).

எட்டு - எட்டு என்ற எண்;


சிவன்:

விளங்கு லகு - இந்தப் பூமி (ஆவான்).

கூறும் இரண்டு - (திருமேனியில்) இரண்டு கூறு;

ஆறு அங்கம் - ஆறங்கம் (ஆவான்). (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.55.1 - "ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி");

என் தே - என் தெய்வம்.

உள நிலை மாற்றிக் காணில் உம்பர் அளவு அற்ற ஒன்றினைக் காட்டும் - உள்ளத்தின் நிலையை மாற்றி (எப்பொழுதும் அலைகின்ற மனத்தை ஒருமைப்படுத்தி) அவனைத் தியானித்து வணங்கினால், சிவலோகத்தையும் அளவற்ற ஒன்றான பேரின்பத்தையும் அருள்வான்;

உரு அஞ்சும் மூன்றும் ஆம் - அட்டமூர்த்தம் உடையவன்; ("பஞ்சபூதங்களும் மும்மூர்த்திகளும் அவனது வடிவம் ஆகும்" - என்றும் பொருள்கொள்ளக்கூடும்). (அட்டமூர்த்தம் - ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா);

என்றும் அழிவு-இல் சிவன் - என்றும் அழிவில்லாத சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment