Saturday, June 24, 2017

03.04.049 - சிவன் - கதவு - சிலேடை - 2

 03.04 – சிவன் சிலேடைகள்


2006-05-08

3.4.49 - சிவன் - கதவு - சிலேடை - 2

-------------------------------------------------------------

ஒருநிலையில் உள்ளபொருள் உள்ளும் புறமும்

இருக்கும் இசைபாடும் சாதனமும் காட்டும்

வருவதும் போவதும் கண்டுநிற்கும் மஞ்சார்

கருமிடற் றண்ணல் கதவு.


சொற்பொருள்:

நிலை - 1. கதவின் நிலை (Door frame); / 2. மாறாத தன்மை;

சாதனம் - 1. கருவி; / 2. உருத்திராக்ஷம்;

மஞ்சு - மேகம்;

ஆர்தல் - ஒத்தல்;

மிடறு - கண்டம் (throat);


கதவு:

ஒரு நிலையில் உள்ள பொருள் - நிலையில் பொருத்தப்பெற்று இருக்கும்;

உள்ளும் புறமும் இருக்கும் - வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும்;

இசை பாடும் சாதனமும் காட்டும் - (வந்தவர்களது வருகையை அறிவிக்க) விதவிதமான ஒலிகளை இசையோடு எழுப்பும் கருவியும் அதில் இருக்கும் (Doorbell / chime);

வருவதும் போவதும் கண்டு நிற்கும் - (பலர்) வருவதையும் போவதையும் கண்டு நிற்கும்;

கதவு.


சிவன்:

ஒருநிலையில் உள்ள பொருள் - என்றும் மாறாமல், விருப்பு வெறுப்பு இன்றி இருக்கும் மெய்ப்பொருள்.

உள்ளும் புறமும் இருக்கும் - பிரபஞ்சத்தின் உள்ளும் இருப்பவன், அதனைக் கடந்தும் இருப்பவன்; (அப்பர் தேவாரம் - 6.68.5 - "மேலுலகுக்கு அப்பாலாய் இப்பாலானை");

இசை பாடும் - இசை பாடுவான்;

சாதனமும் காட்டும் - உருத்திராக்ஷம் அணிபவன்; (அப்பர் தேவாரம் - திருமுறை 6.61.3 - எவரேனும் தாமாக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி");

வருவதும் போவதும் கண்டுநிற்கும் - எல்லா உலகங்களும் உயிர்களும் தோன்றி மறைவதைக் கண்டு நிற்பவன்; (அதாவது ஊழிக்காலத்திலும் அழியாது இருப்பவன்);

மஞ்சு ஆர் கருமிடற்று அண்ணல் - மேகம் போன்ற கரிய கண்டத்தை உடைய தலைவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment