Saturday, June 24, 2017

03.04.048 - சிவன் - கதவு - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்



2006-05-06
48) சிவன் - கதவு - சிலேடை - 1
-------------------------------------------------------------
செல்லும் வழிகாட்டும் செல்வர் சமயத்தில் (**1)
நல்லஇரு கூறாய் நமைக்காக்கும் சொல்லும்
ஒருசொல் தளைநீக்கும் மேலே ஒருகண்
இருக்கும் கதவெம் மிறை.



செல்வர் - 1) போவார்கள்; 2) திரு உடையவர்;
சமயம் - 1) காலம்; தருணம்; 2) மதம்; (சைவசமயம்);
ஒரு - 1) ஒன்று; 2) ஒப்பற்ற;
தளை - 1) தாழ்; 2) பந்தம்;
மேலே - 1) உயரத்தில்; மீது; 2) அதிகப்படி (extra);
கண் - 1) துவாரம்; 2) விழி;
இறை - கடவுள்; இறைவன்;



கதவு:
நம் செல்வதற்கு வழியைக் காட்டும், அதன் வழியே மக்கள் செல்வார்கள்; ஓரொருகால் இரண்டாகப் பிரிந்து அமையும், (Double door); நம்மைக் காக்கும், வெளியில் நிற்போர் தாம் இன்னார் என்று சொன்னவுடன் தாழ்ப்பாளை நீக்கும் (திறக்கும்); அதன்மீது சாவித்துளை / பார்க்கும் துளை (peephole) உண்டு.



சிவன்:
நாம் செல்வதற்கு நல்வழியைக் காட்டுகின்ற செல்வர் (வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான்); சைவசமயத்தில் (-அல்லது- காட்சிகொடுக்கும்போது சில நேரங்களில்) இரண்டு உருவங்களாகி அர்த்தநாரியாய்த் தோன்றுவார்; ஒப்பற்ற சொல்லான அவன் திருநாமத்தைச் சொன்னால் நம் பந்தங்களை நீக்குவான், கூடுதலாக ஒரு கண் உடையவன் - நெற்றிக்கண் உடையவன். எம் இறைவன்;



(**1 - சம்பந்தர் தேவாரம் - 1.80.5 -
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே.
);



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment