Thursday, April 3, 2025

P.383 - ஆரூர் (திருவாரூர்) - எதிர்வெங் கரியின்

2017-03-25

P.383 - ஆரூர் (திருவாரூர்)

---------------------------------

(12 பாடல்கள்)

(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

எதிர்வெங் கரியின் னுரிமூடி

முதிரா முலையாள் ஒருபாகன்

மதில்கள் புடைசூழ் மணியாரூர்ப்

பதியெம் மிறையைத் துதிநாவே.


எதிர்-வெங்-கரியின் உரி மூடி - எதிர்த்துப் போர்செய்த கொடிய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவன்; (உரி - தோல்); (கரியின்னுரி - சந்தம் கருதி னகர ஒற்று விரித்தல் விகாரம்);

முதிரா முலையாள் ஒரு பாகன் - என்றும் இளமுலையை உடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; (முதிர்தல் - இளமைத்தன்மை நீங்கி முற்றுதல்); (நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - 11.39 - அடி - 5-6 - "முதிராத செப்பொத்த கொங்கைத் திருநுதலி");

மதில்கள் புடைசூழ் மணி ஆரூர்ப்-பதி எம் இறையைத் துதி நாவே - மதில்களால் சூழப்பெற்ற அழகிய திருவாரூர்த் தலத்தில் எழுந்தருளிய எம் இறைவனை, நாக்கே, நீ துதிப்பாயாக; (மணி - அழகு); (பதி - 1. தலம்; 2. தலைவன்); (ஆரூர்ப்-பதி - 1. திருவாரூர்த் தலம்; 2. திருவாரூர்ப் பெருமான்);


2)

தூநான் மறையின் பொருளானான்

ஊனார் தலையிற் பலிகொள்வான்

வானார் மதில்சூழ் மணியாரூர்

மானார் கரனைத் துதிநாவே.


தூ-நான்மறையின் பொருள் ஆனான் - தூய நால்வேதங்களின் பொருளாக விளங்குபவன்;

ஊன் ஆர் தலையில் பலிகொள்வான் - மாமிசம் பொருந்திய பிரமன் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன்; (பலி - பிச்சை);

வான் ஆர் மதில்சூழ் மணி ஆரூர் மான் ஆர் கரனைத் துதி நாவே - வானளாவிய மதில்களால் சூழப்பெற்ற அழகிய திருவாரூரில் உறைகின்றவனும் கையில் மானை ஏந்தியவனுமான சிவபெருமானை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (கரன் - கரத்தை உடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "நலம் மலிதரு கரன்");


3)

குழையோர் செவியன் சடைதன்னிற்

சுழலார் நதியன் சுடுநீற்றன்

மழையார் மிடறன் மணியாரூர்

உழையார் கரனைத் துதிநாவே.


குழை ஓர் செவியன் - ஒரு காதில் குழையை அணிந்தவன்;

சடைதன்னில் சுழல் ஆர் நதியன் - சடையில் சுழல்கள் மிக்க கங்கையை உடையவன்;

சுடுநீற்றன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன்;

மழை ஆர் மிடறன் - மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");

மணி ஆரூர் உழை ஆர் கரனைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்றவனும் கையில் மானை ஏந்தியவனுமான சிவபெருமானை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (உழை - மான்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "உழையார் கரவா");


4)

அழலும் துடியும் வடியார்ந்த

மழுவும் உடையான் மணிகண்டன்

மழவெள் விடையன் மணியாரூர்

அழகன் கழலைத் துதிநாவே.


அழலும் துடியும் வடி ஆர்ந்த மழுவும் உடையான் - கையில் தீயையும் உடுக்கையையும் கூர்மையான மழுவாயுதத்தையும் ஏந்தியவன்; (துடி - உடுக்கை என்ற பறைவகை); (வடி - கூர்மை); (மழுவும்முடையான் - மகர ஒற்று விரித்தல் விகாரம்);

மணிகண்டன் - நீலகண்டன்;

மழ-வெள்-விடையன் - இளைய வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடையவன்;

மணி ஆரூர் அழகன் கழலைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்றவனும் சுந்தரனுமான சிவபெருமான் திருவடியை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


5)

பதிகம் பலவும் பகர்வார்க்கு

நிதியம் தருவான் நதியோடு

மதியார் சடையன் மணியாரூர்

அதிபன் கழலைத் துதிநாவே.


பதிகம் பலவும் பகர்வார்க்கு - பல பதிகங்களைப் பாடித் தொழும் அடியவர்களுக்கு; (பகர்தல் - இங்கே, பாடுதல் என்ற பொருளில்); (சம்பந்தர் தேவாரம் - 1.88.9 - "பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே");

நிதியம் தருவான் - பொன்னும் பொருளும் அளிப்பவன்; (நிதியம் - நிதி; பொன்); (சம்பந்தர், அப்பர், சுந்தரர் வரலாறுகளைக் காண்க);

நதியோடு மதிர் சடையன் - கங்கையையும் சந்திரனையும் சடையில் அணிந்தவன்; கங்கை ஓடுகின்ற, திங்கள் பொருந்துகின்ற சடையை உடையவன் என்றும் பொருள்காணல் ஆம்; (நதி - ஆறு - கங்கை); ("நிதியம் தரு வான் நதி" என்று வினைத்தொகையாக இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம் - "பொன் தருகின்ற, கங்கையோடு"; வான் நதி - கங்கை);

அதிபன் - தலைவன்; (அப்பர் தேவாரம் - 5.32.9 – "பூந்துருத்திந் நகர்க்கதிபன்");

கழலைத் துதி நாவே - அந்தச் சிவபெருமான் திருவடியை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


6)

தலைவா எனவான் தொழுதேவன்

அலையார் சடைமேல் அரவத்தான்

மலையான் மருகன் மணியாரூர்

நிலையா னவனைத் துதிநாவே.


தலைவா என வான் தொழு தேவன் - "தலைவனே" என்று தேவர்கள் வழிபடுகின்ற தேவன்; (வான் - வானுலகம்; தேவர்கள்);

அலை ஆர் சடைமேல் அரவத்தான் - கங்கையைத் தாங்கிய சடைமேல் பாம்பை அணிந்தவன்;

மலையான் மருகன் - இமவானுக்கு மருமகன்; (அப்பர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய் நீயே");

மணி ஆரூர் நிலை ஆனவனைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் நிலைத்து உறைகின்ற சிவபெருமானை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


7)

களபம் மெனவெண் பொடிபூசி

ஒளிரும் புரிநூல் திகழ்மார்பன்

வளரும் பிறையான் மணியாரூர்

வளையார் கரனைத் துதிநாவே.


களபம் என வெண் பொடிபூசி - சந்தனச்-சாந்து போல வெண்திருநீற்றைப் பூசியவன்; (களபம் - கலவைச்சாந்து); (களபம்மென – மகர ஒற்று விரித்தல் விகாரம்);

ஒளிரும் புரிநூல் திகழ்மார்பன் - பிரகாசிக்கின்ற முப்புரிநூலை மார்பில் அணிந்தவன்;

வளரும் பிறையான் - இளம்பிறையை அணிந்தவன்;

மணி ஆரூர் வளை ஆர் கரனைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்றவனும், கையில் வளையல் அணிந்தவனுமான (அர்த்தநாரீஸ்வரனான) சிவபெருமானை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


8)

மயலால் திருமா மலைபேர்த்தான்

துயரே படவோர் விரல்வைத்தார்

வயலார் வளமார் மணியாரூர்ப்

பயில்வார் கழலைத் துதிநாவே.


மயலால் திரு-மா-மலை பேர்த்தான் துயரே பட ஓர் விரல் வைத்தார் - தன் வலிமையை எண்ணிச் செருக்கிக் கயிலைமலையைப் பேர்க்க முயன்ற இராவணன் மிக வருந்தும்படி ஒரு விரலை ஊன்றியவர்; (மயல் - அறியாமை); (பேர்த்தல் - இடத்தல்);

வயல் ஆர் வளம் ஆர் மணி ஆரூர்ப் பயில்வார் கழலைத் துதி நாவே - வயல்கள் நிறைந்த வளம் மிக்க அழகிய திருவாரூரில் உறைகின்ற சிவபெருமானாரின் திருவடியை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (பயில்தல் - தங்குதல்);


9)

கரியான் பிரமன் தொழநின்ற

எரியான் எழுதா மறையோதி

வரியார் உரியான் மணியாரூர்ப்

பெரியான் கழலைத் துதிநாவே.


கரியான் பிரமன் தொழ நின்ற எரியான் - திருமாலும் பிரமனும் தொழும்படி ஓங்கிய தீப்பிழம்பானவன்;

எழுதா-மறை ஓதி - எழுதாத மறையான வேதங்களைப் பாடியருளியவன்;

வரி ஆர் உரியான் - வரிகள் பொருந்திய தோலை (புலித்தோலை) அணிந்தவன்; (உரி - தோல்);

மணி ஆரூர்ப் பெரியான் கழலைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்ற பெரியவனான சிவபெருமான் திருவடியை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


10)

உய்யும் வழியொன் றறியார்சொல்

பொய்யைப் பொருளா மதியேன்மின்

மையார் மிடறன் மணியாரூர்ச்

செய்யான் தொழுவார்க் கருள்வானே.


உய்யும் வழியொன்று அறியார் சொல் பொய்யைப் பொருளா மதியேன்மின் - உய்யும் நெறியை அறியாதவர்கள் சொல்லும் பொய்களை நீங்கள் பொருளாக மதிக்கவேண்டா; (பொருளா - பொருளாக; பொருள் - தத்துவம்; மெய்ப்பொருள்); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

மை ஆர் மிடறன் - கண்டத்தில் கருமையை உடையவன்; (மை - கறுப்பு);

மணி ஆரூர்ச் செய்யான் தொழுவார்க்கு அருள்வானே - அழகிய திருவாரூரில் உறைகின்ற செம்மேனியனான சிவபெருமான் தொழும் அடியவர்களுக்கு அருள்செய்பவன்; அருள்வான்; (செய்யான் - செய்யவன் - சிவந்த நிறம் உடையவன்);


11)

தக்கன் தலையன் றறுதேவா

முக்கட் பரமா ஒருபங்கில்

மைக்கண் ணியினாய் மணியாரூர்ச்

சொக்கா எனவெந் துயர்வீடே.


தக்கன் தலை அன்று அறு தேவா - இகழ்ந்த தக்கனது தலையை முன்பு (அவன் அவவேள்வி செய்த நாளில்) அறுத்த தேவனே; (அறுத்தல் - அரிதல் - வெட்டுதல்); (திருவாசகம் - திருச்சாழல் - 8.12.5 - "தக்கனையும் எச்சனையும் தலையறுத்து");

முக்கட் பரமா - நெற்றிக்கண்ணுடைய பரமனே;

ஒரு பங்கில் மைக்கண்ணியினாய் - திருமேனியில் ஒரு பாகமாகக், கரிய மை அணிந்த கண்ணையுடைய உமையை உடையவனே; (மை - கருமை; கண்ணுக்கிடும் அஞ்சனம்);

மணி ஆரூர்ச் சொக்கா என வெந்-துயர் வீடே - அழகிய திருவாரூரில் உறைகின்ற அழகனே என்று தொழும் அடியவர்களுடைய கொடிய துன்பங்கள் எல்லாம் நீங்கும்; (சொக்கன் - அழகன்); (எனவெந்துயர் - 1. என வெம் துயர்; 2. என எம் துயர்); (வெம்மை - கடுமை); (வீடு - விடுதல்; நீக்கம்; முடிவு); (அப்பர் தேவாரம் - 6.87.2 - "பூதகணம் ஆட ஆடும் சொக்கன்காண்");


12)

மலைவெஞ் சிலையால் மதிலெய்தாய்

மலரம் பினனைப் பொடிசெய்தாய்

வலமார் விடையாய் மணியாரூர்த்

தலைவா எனவல் வினைசாய்வே.


மலை வெஞ்-சிலையால் மதில் எய்தாய் - மேருமலையைக் கொடிய வில்லாக ஏந்தி முப்புரங்களை எய்தவனே; (சிலை வில்); (மதில் - கோட்டை);

மலர்-அம்பினனைப் பொடி செய்தாய் - மலர்க்கணையை ஏவும் மன்மதனைச் சாம்பலாக்கியவனே;

வலம் ஆர் விடையாய் - வெற்றி பொருந்திய விடையை ஊர்தியாக உடையவனே; (வலம் - வலிமை; வெற்றி); (பெரியபுராணம் - "வென்றி விடையார் மதிச்சடையார்");

மணி ஆரூர்த் தலைவா என வல்வினை சாய்வே - அழகிய திருவாரூரில் உறைகின்ற தலைவனே" என்று தொழும் அடியவர்களுடைய வலிய வினைகள் எல்லாம் அழியும்; (சாய்தல் - அழிதல்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "கரக்கோயிலைத் தங் கையால் தொழுவார் வினை சாயுமே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.382 - பூவனூர் - நரியுலாவு கானகத்தில்

2017-03-17

P.382 - பூவனூர்

---------------------------------

(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா - அரையடிச் சந்தம்);

(சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்")

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடங்கள்;


1)

நரியு லாவு கான கத்தில் .. நட்டம் ஆடி மகிழு(ம்) நம்பர்

எரிவி டத்தைக் கண்டி ரிந்த .. இமைய வர்க்குப் பரிந்த பண்பர்

கரிய வெற்புப் போல வந்த .. கரியின் ஈர உரிவை போர்த்தார்

புரிவெண் ணூலர் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


நரி உலாவு கானகத்தில் நட்டம் ஆடி மகிழும் நம்பர் - நரிகள் திரியும் சுடுகாட்டில் திருநடம் செய்து மகிழும் கடவுள்; (நம்பர் - விரும்பத்தக்கவர் - சிவன் திருநாமம்);

எரி-விடத்தைக் கண்டு இரிந்த இமையவர்க்குப் பரிந்த பண்பர் - அனைத்தையும் சுட்டெரித்த ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களுக்கு இரங்கிய குணமுடையவர்; (இரிதல் - அஞ்சி ஓடுதல்);

கரிய வெற்புப் போல வந்த கரியின் ஈர-உரிவை போர்த்தார் - பெரிய கரிய மலை போல வந்த யானையின் ஈரத்தோலைப் போர்வையாகப் போர்த்தவர்;

புரி-வெண்ணூலர் உறையும் ஊர் ஆம் - வெண்மையான முப்புரிநூல் அணிந்த பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


2)

பனித யங்கு கயிலை வெற்பில் .. பயிலு(ம்) நாதர் கமல பாதர்

மனிதர் தேவர் மலர்கள் தூவி .. வாழ்த்து கின்ற மணிமி டற்றர்

வனிதை பங்கர் கொன்றை கங்கை .. மதிபு னைந்தார் மறைகள் ஓதும்

புனிதர் மேவி உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


பனி தயங்கு கயிலை வெற்பில் பயிலும் நாதர் - பனி விளங்கும் கயிலைமலையின்மேல் வீற்றிருக்கும் தலைவர்; (தயங்குதல் - ஒளிவிடுதல்; தெளிவாயிருத்தல்);

கமல-பாதர் - தாமரைமலர் போன்ற திருவடியை உடையவர்;

மனிதர் தேவர் மலர்கள் தூவி வாழ்த்துகின்ற மணி-மிடற்றர் - மனிதர்களும் தேவர்களும் பூக்கள் தூவி வணங்குகின்ற நீலகண்டர்; (மிடறு - கண்டம்);

வனிதை பங்கர் - பெண்ணொரு பாகர்;

கொன்றை கங்கை மதி புனைந்தார் - கொன்றைமலர், கங்கைநதி, திங்கள் இவற்றை அணிந்தவர்;

மறைகள் ஓதும் புனிதர் மேவி உறையும் ஊர் ஆம் - வேதங்கள் ஓதுகின்ற தூயர் விரும்பி உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


3)

பாதம் ஏத்து சுரர்க்கி ரங்கிப் .. படுவி டத்தை அமுது செய்தார்

சீத கங்கை சடையில் ஏற்றார் .. திருவெண் ணீறு பூசு மார்பர்

வேத கீதர் விடைய தேறி .. வீதி தன்னில் பலிதி ரிந்த

பூத நாதர் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


பாதம் ஏத்து சுரர்க்கு இரங்கிப் படு-விடத்தை அமுது செய்தார் - திருவடியை வணங்கிய தேவர்களுக்கு இரங்கிக் கொடிய நஞ்சை உண்டவர்;

சீத-கங்கை சடையில் ஏற்றார் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவர்; (சீதம் - குளிர்ச்சி);

திருவெண்ணீறு பூசு மார்பர் - வெண்ணீற்றை மார்பில் பூசியவர்;

வேத-கீதர் - வேதம் ஓதுபவர்;

விடையது ஏறி வீதி-தன்னில் பலி திரிந்த - இடபத்தின்மேல் ஏறிச்சென்று தெருவில் பிச்சைக்கு உழலும்; (பலி - பிச்சை); (சம்பந்தர் தேவாரம் - 1.48.3 – "வெண்டலையினோடு பலிதிரிந்து");

பூத-நாதர் உறையும் ஊர் ஆம் - பூத-நாயகரான பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


4)

அடியில் அங்குப் பூவி டாமல் .. அம்பு விட்ட காம வேளை

நொடியில் அங்கம் இல்லி யாக .. நோக்கு கண்ணர் தீயின் வண்ணர்

வடியி லங்கு மழுவை மானை .. வன்னி தன்னை ஏந்து கையர்

பொடியி லங்கு மார்பர் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


அடியில் அங்குப் பூ இடாமல், அம்பு விட்ட காமவேளை - திருவடியில் பூவைத் தூவாமல், கணையை எய்த மன்மதனை; (அங்கு - அசைச்சொல்)

நொடியில் அங்கம் இல்லியாக நோக்கு கண்ணர் - ஒரு நொடியளவில் உடலற்றவனாகப் பார்த்த நெற்றிக்கண்ணர்; (அங்கம் - உடம்பு);

தீயின் வண்ணர் - நெருப்புப் போன்ற செம்மேனியர்;

வடி இலங்கு மழுவை, மானை, வன்னி-தன்னை ஏந்து கையர் - கூர்மை பொருந்திய மழுவையும் மானையும் தீயையும் கையில் ஏந்தியவர்; (வடி கூர்மை); (வன்னி - தீ);

பொடி இலங்கு மார்பர் ஊர் ஆம் - மார்பில் திருநீற்றைப் பூசிய பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


5)

அறிவின் வண்ணர் நால்வர் கேட்க .. ஆல நீழல் அறமு ரைத்தார்

மறியை ஏந்து கையர் செய்யர் .. மாமி டற்றில் மையர் ஐயர்

வெறிகொள் கொன்றை விளங்கு கின்ற .. வேணி மீது மதியும் வைத்தார்

பொறிகொள் நாக நாணர் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


அறிவின் வண்ணர் - ஞானமே உரு ஆனவர்;

நால்வர் கேட்க ஆலநீழல் அறம் உரைத்தார் - சனகாதியர்கள் கேட்கக் கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.48.1 - "நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழல் மேவி அருமறை சொன்னதென்னே");

மறியை ஏந்து கையர் - மான்கன்றைக் கையில் ஏந்தியவர்; (மறி - கன்று);

செய்யர் - செம்மேனியர்; (செய் - செம்மை; சிவப்பு);

மா-மிடற்றில் மையர் - அழகிய கண்டத்தில் கருமையை ஏற்றவர்; (மிடறு - கண்டம்); (மை - கருமை);

ஐயர் - தலைவர்;

வெறிகொள் கொன்றை விளங்குகின்ற வேணிமீது மதியும் வைத்தார் - மணம் கமழும் கொன்றைமலர் திகழும் சடையின்மேல் சந்திரனையும் அணிந்தவர்; (வெறி - வாசனை); (வேணி - சடை);

பொறிகொள் நாக-நாணர் ஊர் ஆம் - புள்ளிகளை உடைய நாகத்தை அரைநாணாகக் கட்டிய பெருமானார் உறையும் பதி ஆவது; (பொறி - புள்ளி);

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


6)

நாத நாத அருள்க என்று .. நம்பி வந்த உம்பர் வாழ

ஓத நஞ்சை உண்ட கண்டர் .. ஓம்பு கின்ற தொண்டர் நெஞ்சர்

மாத ணைந்த வாம பாகர் .. மணங்க மழ்ந்த கொன்றை மௌவற்

போத ணிந்த சடையர் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


"நாத! நாத! அருள்க" என்று நம்பி வந்த உம்பர் வாழ ஓத நஞ்சை உண்ட கண்டர் - "நாதா! நாதா! காத்தருளாய்" என்று சரணடைந்த தேவர்கள் வாழும்படி கடல்விஷத்தை உண்ட நீலகண்டர்; (நம்புதல் நம்பிக்கை வைத்தல்); (உம்பர் - தேவர்);

ஓம்புகின்ற தொண்டர் நெஞ்சர் - விரும்பி வழிபடும் தொண்டர்களின் நெஞ்சில் உறைபவர்;

மாது அணைந்த வாம-பாகர் - உமையைத் தம் திருமேனியின் இடப்பக்கம் உடையவர்; (வாமம் - இடப்பக்கம்);

மணம் கமழ்ந்த கொன்றை மௌவல்-போது அணிந்த சடையர் ஊர் ஆம் - மணம் வீசும் கொன்றைமலரையும் முல்லை/மல்லிகை மலரையும் சடையில் அணிந்த பெருமானார் உறையும் பதி ஆவது; (மௌவல் - முல்லை; மல்லிகை);

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


7)

மலைம கட்கு நேயர் தூயர் .. மார்பில் நூலர் சடையி னுள்ளே

அலைம லிந்த ஆறு தாங்கி .. அரணம் மூன்றை நக்கெ ரித்தார்

தலைம லிந்த மாலை பூண்டார் .. தமிழ்வ ளர்த்த மதுரை தன்னில்

புலவ ரானார் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


மலைமகட்கு நேயர் - பார்வதிக்கு அன்புடையவர்; (மலைமகள் + கு = மலைமகட்கு);

தூயர் - புனிதர்;

மார்பில் நூலர் - மார்பில் பூணூல் தாங்கியவர்;

சடையினுள்ளே அலை மலிந்த ஆறு தாங்கி - சடையினுள் அலை மிகுந்த கங்கையைத் தாங்கியவர்; (தாங்கி - தாங்கியவர்; வினையெச்சமாகக் கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்);

அரணம் மூன்றை நக்கு எரித்தார் - முப்புரங்களைச் சிரித்து எரித்தவர்; (அரணம் - கோட்டை); (நகுதல் - சிரித்தல்)

தலை மலிந்த மாலை பூண்டார் - மண்டையோடுகளால் ஆன மாலையை அணிந்தவர்; (சுந்தரர் தேவாரம் - 7.4.1 - "தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே");

தமிழ் வளர்த்த மதுரை-தன்னில் புலவர் ஆனார் உறையும் ஊர் ஆம் - தமிழை வளர்த்த மதுரையில் தமிழ்ச்சங்கப் புலவர் ஆன பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


8)

உரமி லங்கு தோள்க ளாலே .. உயர்பொ ருப்பைப் பேர்த்த மூடன்

சிர(ம்)நெ ரித்த கயிலை நாதர் .. திருந்தி ஏத்தும் அரக்க னுக்கு

வரம ளித்த பரம வள்ளல் .. வரைவ ளைத்துக் கணைதொ டுத்துப்

புரமெ ரித்த ஒருவர் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


உரம் இலங்கு தோள்களாலே உயர்-பொருப்பைப் பேர்த்த மூடன் சிரம் நெரித்த கயிலை நாதர் - வலிமை மிக்க புஜங்களால் உயர்ந்த கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த அறிவிலியான தசமுகனின் சிரங்களை நசுக்கிய கயிலை-இறைவர்; (உரம் - வலிமை; பலம்); (பொருப்பு - மலை); (மூடன் - அறிவிலி);

திருந்தி ஏத்தும் அரக்கனுக்கு வரம் அளித்த பரம வள்ளல் - பின் மனம் திருந்திப் போற்றிய அந்த அரக்கனுக்கு மிகுந்த வரங்கள் (நீண்ட ஆயுள், சந்திரஹாஸம் என்ற வாள், இராவணன் என்ற பெயர் இவற்றையெல்லாம்) கொடுத்த பெருவள்ளல்;

வரை வளைத்துக் கணை தொடுத்துப் புரம் எரித்த ஒருவர் ஊர் ஆம் - மேருமலையை வில்லாக வளைத்து அம்பு தொடுத்து முப்புரங்களை எரித்த ஒப்பற்ற பெருமானார் உறையும் பதி ஆவது; (வரை - மலை); (ஒருவர் - ஒப்பற்றவர்);

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


9)

அலையின் மீது துயிலு(ம்) மாலும் .. அயனு(ம்) நேட நின்ற சோதி

இலையை இட்டு வாழ்த்தி னாலும் .. இன்ப வானம் ஏற்றும் ஈசர்

அலியும் ஆணும் பெண்ணும் ஆனார் .. அரவும் அக்கும் ஆர மாகப்

பொலியு(ம்) மார்பர் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


அலையின் மீது துயிலும் மாலும் அயனும் நேட நின்ற சோதி - பாற்கடல்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் தேடுமாறு உயர்ந்த சோதி; (நேடுதல் - தேடுதல்);

இலையை இட்டு வாழ்த்தினாலும் இன்ப வானம் ஏற்றும் ஈசர் - அடியவர்கள் இலையையே தூவி வழிபட்டாலும் அவர்களை இன்பம் மிக்க சிவலோகத்திற்கு உயர்த்தும் இறைவர்;

அலியும் ஆணும் பெண்ணும் ஆனார் - ஆண், பெண், அலி ஆனவர்; (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.5 - "ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள்");

அரவும் அக்கும் ஆரமாகப் பொலியு(ம்) மார்பர் - பாம்பையும் எலும்பையும் மாலையாக மார்பில் அணிந்தவர்; (அக்கு - எலும்பு); (ஆரம் - மாலை);

உறையும் ஊர் ஆம் - அந்தப் பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


10)

கறுப்பை நெஞ்சிற் கரந்த வம்பர் .. கக்கு பொய்கள் கருத வேண்டா

வெறுப்பு கோபம் விட்ட நல்லார் .. விரும்பி ஏத்தப் பிறவி நோயை

அறுக்கும் ஈசர் பாவ நாசர் .. அன்பர் செய்த பிழைகள் எல்லாம்

பொறுக்கும் ஏந்தல் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


கறுப்பை நெஞ்சில் கரந்த வம்பர் கக்கு பொய்கள் கருத வேண்டா - வஞ்சத்தை நெஞ்சில் மறைத்து வைத்திருக்கும் வீணர்கள் கக்குகின்ற பொய்களை நீங்கள் மதிக்கவேண்டா; (கறுப்பு - குற்றம்; கறை); (கரத்தல் - ஒளித்தல்); (வம்பர் - வீணர்கள்; துஷ்டர்கள்);

வெறுப்பு கோபம் விட்ட நல்லார் விரும்பி ஏத்தப் பிறவிநோயை அறுக்கும் ஈசர் - விருப்பு வெறுப்பு சினம் இவற்றையெல்லாம் நீங்கிய நல்லவர்கள் விரும்பி வணங்க, அவர்களது பிறவிப்பிணியைத் தீர்க்கும் இறைவர்;

பாவநாசர் - பாவங்களை அழிப்பவர்;

அன்பர் செய்த பிழைகள் எல்லாம் பொறுக்கும் ஏந்தல் உறையும் ஊர் ஆம் - அடியவர்கள் செய்த பிழைகளைப் பொறுத்து அருளும் பெருமானார் உறையும் பதி ஆவது; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவர்);

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


11)

பன்னி நாளும் பரவு கின்ற .. பத்தர் தங்கள் பாவ(ம்) மாய்ப்பார்

வன்னி கொன்றை குரவ(ம்) மத்தம் .. மலர ணிந்த சடையி லங்கு

சென்னி மீது சீறு நாகம் .. திங்கள் ஒன்று சேர வைத்தார்

பொன்னின் வண்ணர் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


பன்னி நாளும் பரவுகின்ற பத்தர்-தங்கள் பாவம் மாய்ப்பார் - தினமும் போற்றிப் பாடுகின்ற பக்தர்களுடைய பாவங்களை அழிப்பவர்; (பன்னுதல் - பாடுதல்); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);

வன்னி கொன்றை குரவம் மத்தம் மலர் அணிந்த சடை இலங்கு சென்னி மீது - வன்னி இலை, கொன்றைமலர், குரவமலர், ஊமத்தமலர் இவற்றை அணிந்த சடை விளங்கும் திருமுடிமேல்;

சீறு நாகம் திங்கள் ஒன்று சேர வைத்தார் - சீறுகின்ற நாகப்பாம்பையும் சந்திரனையும் ஒன்றாகச் சேர்ந்து வாழவைத்தவர்;

பொன்னின் வண்ணர் உறையும் ஊர் ஆம் - பொன் போன்ற நிறம் உடைய திருமேனியரான பெருமானார் உறையும் பதி ஆவது; (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே");

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா தான தானா தான தானா - என்ற சந்தம்.

  • ஒற்றைப்படைச் சீர்களில் - (அதாவது 1-3-5-7-ஆம் சீர்களில்) - தான என்பது தனன என்றும் வரலாம்.

  • தான – குறில் / குறில்+ஒற்று என்ற அமைப்பில் முடியும் மாச்சீர்;

  • தானா - தேமாச்சீர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.197 - காழி - மாலதாகி ஓயாமல்

2017-03-16

T.197 - காழி - மாலதாகி ஓயாமல்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான)

(காதி மோதி - திருப்புகழ் - பொது)


மால தாகி ஓயாமல் ஈனத் .. துழலாமல்

.. வார மாகி நாடோறும் ஓதற் .. கருளாயே

ஏல(ம்) நாறு காரோதி மாதைப் .. பிரியாதாய்

.. ஏற தேறும் ஓர்நாத நீரைப் .. புனைவோனே

கோல மாக நீறேறு மார்பிற் .. புரிநூலா

.. கோதி லாத பேர்ஓரு(ம்) மாணிக் .. கரணான

கால கால காமாரி காதிற் .. குழையானே

.. காத லாளர் சீர்பாடு காழிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

மாலது ஆகி, ஓயாமல் ஈனத்து .. உழலாமல்,

.. வாரம் ஆகி நாள்தோறும் ஓதற்கு .. அருளாயே;

ஏல(ம்) நாறு கார்-ஓதி மாதைப் .. பிரியாதாய்;

.. ஏறது ஏறும் ஓர் நாத; நீரைப் .. புனைவோனே;

கோலமாக நீறு ஏறு மார்பிற் .. புரிநூலா;

.. கோது இலாத பேர் ஓரு(ம்) மாணிக்கு .. அரண் ஆன

காலகால; காமாரி; காதிற் .. குழையானே;

.. காதலாளர் சீர் பாடு காழிப் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

மால்அது ஆகி ஓயாமல் ஈனத்து உழலாமல் - மயக்கத்தால் (அறியாமையால்) நான் எப்போதும் இழிவிலேயே உழலாமல்; (மால் - மயக்கம்; அறியாமை; அது - பகுதிப்பொருள் விகுதி); (ஈனம் - இழிவு);

வாரம் ஆகி நாள்தோறும் ஓதற்கு அருளாயே - அன்போடு தினமும் உன்னை ஓதி வழிபட அருள்வாயாக; (வாரம் - அன்பு);

ஏலம் நாறு கார்-ஓதி மாதைப் பிரியாதாய் - மயிர்ச்சாந்தின் மணம் கமழும் கரிய கூந்தலை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே; (ஏலம் - மயிர்ச்சாந்து); (கார் - கரிய); (ஓதி - கூந்தல்);

ஏறது ஏறும் ஓர் நாத – இடபத்தை வாகனமாக உடைய, ஒப்பற்ற தலைவனே;

நீரைப் புனைவோனே - கங்கையைச் சடையில் அணிந்தவனே;

கோலமாக நீறு ஏறு மார்பில் புரிநூலா - அழகாகத் திருநீறு திகழும் மார்பில் முப்புரிநூல் அணிந்தவனே; (கோலம் - அழகு; அலங்காரம்);

கோது இலாத பேர் ஓரும் மாணிக்கு அரண் ஆன காலகால - குற்றமற்ற திருநாமத்தைத் தியானித்த மார்க்கண்டேயருக்குக் காப்பு ஆகிக் காலனுக்குக் காலன் ஆனவனே; (கோது - குற்றம்); (ஓர்தல் - தியானித்தல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); ("கோது இலாத" என்ற சொற்றொடரைத் திருநாமம், மார்க்கண்டேயர் என்ற இரண்டிற்கும் அடையாகக் கொண்டு பொருள்கொள்ளலாம்); (சம்பந்தர் தேவாரம் - 1.90.11 - "நேர்-இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே");

காமாரி - மன்மதனை எரித்தவனே; (காமாரி - இங்கே, அண்மைவிளியாக வந்தது);

காதில் குழையானே - காதில் குழை அணிந்தவனே;

காதலாளர் சீர் பாடு காழிப் பெருமானே - பக்தர்கள் உன் புகழைப் பாடுகின்ற சீகாழியில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------