2006-07-19
V.038 - உன்றன் அடியவற்கா (பிறிதுபடுபாட்டு - மிறைக்கவி)
-----------
(அறுசீர் & வெண்பா - ஒரே பாடல்)
முற்குறிப்பு: பிறிதுபடுபாட்டு என்பது ஒரே பாடலை வெவ்வேறு சீர், அடி அமைப்புகளாகப் பிரித்து நோக்கினால் இருவகைப்-பாடல் அமைப்புகளாகக் கருதுமாறு அமைவது.
இங்கே, இந்த ஒரே பாடலை வெண்பா என்றும் அறுசீர் விருத்தம் என்றும் நோக்குமாறு அமைந்தது.
1) ---- (வெண்பா) ----
உன்றன் அடியவற்கா ஓடிவந்த கூற்றையன்று
கொன்றாய் வணங்குமற்றார் கூறுமெந்தாய் - நன்றுசெய்வாய்
என்றே நடலையின்றி ஏத்துமென்றன் சொற்கிரங்காய்
இன்றென் துணையார் இயம்பு.
2) ---- (அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு) ----
உன்றன் அடிய வற்கா ஓடி வந்த கூற்றை
அன்று கொன்றாய்; வணங்கும் அற்றார் கூறும் எந்தாய்,
நன்று செய்வாய் என்றே, நடலை இன்றி ஏத்தும்
என்றன் சொற்(கு)இ ரங்காய், இன்(று)என் துணையார் இயம்பு.
உன்றன் அடியவற்கா ஓடி வந்த கூற்றை அன்று கொன்றாய் - உன் பக்தனான மார்க்கண்டேயனுக்காக (அவனைக் கொல்லக் கருதி) விரைந்து வந்தடைந்த காலனை அன்று உதைத்து அழித்தவனே; (அடியவற்கா - அடியவனுக்காக);
வணங்கும் அற்றார் கூறும் எந்தாய், நன்று செய்வாய் என்றே, - வணங்கும் அன்பர்கள், "நன்மை செய்பவன் நீ" என்று புகழும் எந்தையே; (அறுதல் - அன்புகொள்தல்; அற்றார் - அன்புடையவர்); ("நன்று செய்வாய் என்றே" - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்க நின்றது);
நன்று செய்வாய் என்றே, நடலை-இன்றி ஏத்தும் என்றன் சொற்(கு) இரங்காய் - நீ நன்மை செய்வாய் என்று வஞ்சனை இன்றி வாழ்த்தும் என் பாமாலைக்கு இரங்கி அருள்வாயாக; ( நடலை - பொய்; வஞ்சனை);
இன்(று) என் துணை யார் இயம்பு - (உன்னையல்லால்) இன்று என் துணை வேறு எவர் சொல்;
வி. சுப்பிரமணியன்
--------- ---------
No comments:
Post a Comment