Monday, November 6, 2023

V.034 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

2015-12-25

V.034 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

-----------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா - சந்தம்)

( Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)


முற்குறிப்புகள்:

* சந்தம் கெடாத இடங்களில், படிப்போர் வசதி கருதிப், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

* "லிங்கம்" என்பது தமிழ் இலக்கணப்படி "இலிங்கம்" என்று வரும்; ஆயினும், மூலப்பாடலின் சந்த-அமைப்பை ஒட்டி இம்மொழிபெயர்ப்பிலும் "லிங்கம்" என்றே கையாளப்பட்டுள்ளது.


1)

நான்முகன் நாரணன் வான்தொழு லிங்கம்

ஊனமி லாஒளி யாய்த்திகழ் லிங்கம்

வான்பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


நான்முகன் நாரணன் வான் தொழு லிங்கம் - பிரமன், விஷ்ணு, தேவர்கள், எல்லாரும் வணங்கும் லிங்கம்; (நான்முகன் - பிரமன்); (நாரணன் - விஷ்ணு); (வான் - தேவர்); (லிங்கம் - சிவபெருமானின் அருவுருவம்);

ஊனம் இலா ஒளியாய்த் திகழ் லிங்கம் - குற்றமற்ற ஜோதியாகித் திகழும் லிங்கம்; (ஊனம் - குறைவு; குற்றம்);

வான்-பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம் - பெரும்பிணியை (= பிறவிப்பிணியை) நீக்கி அருள்புரியும் லிங்கம்; (வான் - பெரிய);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - 1. (என்) நா நிதம் ஏத்தும் அதே சிவ லிங்கம்; 2. நாம் நிதம் ஏத்தும் அதே சிவலிங்கம்;

(நாநிதம் - 1. நா + நிதம்; 2. நாம் + நிதம்; இவ்விடத்தில் புணர்ச்சியில் முதற்சொல்லின் ஈற்றிலுள்ள ம் கெடும்); (நா - நாக்கு); (நிதம் - நித்தம் - தினமும்; எப்போதும்; அனவரதமும்); (சதா - எப்பொழுதும்);


2)

பன்முனி வான்அடி வாழ்த்திடு லிங்கம்

மன்மத னைப்பொடி ஆக்கிய லிங்கம்

முன்னம ரக்கனை ஊன்றிய லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


பன்முனி வான் அடி வாழ்த்திடு லிங்கம் - பல முனிவர்களூம் தேவர்களும் வணங்கும் லிங்கம்;

மன்மதனைப் பொடி ஆக்கிய லிங்கம் - காமனைச் சாம்பலாக்கிய லிங்கம்; (பொடி - சாம்பல்);

முன்னம் அரக்கனை ஊன்றிய லிங்கம் - முன்பு (தனது ஆணவத்தால் கயிலையைப் பெயர்த்த) இராவணனை நசுக்கி அவனது வலிமையையும் கர்வத்தையும் அழித்த லிங்கம்; (ஊன்றுதல் - அமுக்குதல்; நசுக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.74.10 - "திரண்ட திண்டோள் அரக்கனை ஊன்றி");

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


3)

கந்த(ம்)ம லிந்திடு பூச்சணி லிங்கம்

சிந்தைம யக்கைஅ றுத்தருள் லிங்கம்

அந்தரர் சித்தரெ லாம்பணி லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


கந்த(ம்) மலிந்திடு பூச்சு அணி லிங்கம் - வாசனை மிகுந்த கலவைச்சாந்து முதலியவற்றை அணிந்தருளும் லிங்கம்; (பூச்சு - smearing, anointing; தடவுதல்; பூசுதல்);

சிந்தை-மயக்கை அறுத்து அருள் லிங்கம் - மனமயக்கத்தைத் தீர்த்துத் தெளிவை அளித்து அருளும் லிங்கம்;

அந்தரர் சித்தரெலாம் பணி லிங்கம் - தேவர்கள், சித்தர்கள் முதலிய எல்லாரும் பணிகின்ற லிங்கம்; (அந்தரர் - தேவர்கள்);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


4)

பொன்மணி ஆகமி லங்கிடு லிங்கம்

பன்னக நாணைஅ ரைக்கணி லிங்கம்

முன்னொரு வேள்வித கர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


பொன் மணி ஆகம் இலங்கிடு லிங்கம் - 1. பொன்னும் மணியும் மேனியில் விளங்குகின்ற லிங்கம்; 2. பொன் போல் அழகிய மேனி விளங்குகின்ற லிங்கம்; (மணி - இரத்தினம்; அழகு); (ஆகம் - மேனி; மார்பு); (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே");

பன்னக நாணை அரைக்கு அணி லிங்கம் - பாம்பை அரைநாணாக அணிகின்ற; (பன்னகம் - பாம்பு);

முன் ஒரு வேள்வி தகர்த்து அருள் லிங்கம் - முன்பு (தக்கன் செய்த) ஒரு யாகத்தை அழித்தருளிய லிங்கம்;

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


5)

குங்கும சந்தனம் ஏற்றருள் லிங்கம்

பங்கய மாலை உகந்தருள் லிங்கம்

தங்கிய முன்வினை சாய்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


குங்கும சந்தனம் ஏற்றருள் லிங்கம் - குங்குமம் சந்தனம் முதலிவற்றை ஏற்றருளும் லிங்கம்;

பங்கய மாலை உகந்து அருள் லிங்கம் - தாமரைமாலையை விரும்பி ஏற்கின்ற லிங்கம்;

தங்கிய முன்வினை சாய்த்து அருள் லிங்கம் - எஞ்சியுள்ள வினையையெல்லாம் அழித்தருளும் லிங்கம்; (தங்குதல் - to remain; to exist); (சஞ்சிதம் - அனாதியாய் ஈட்டப்பட்டுள்ள கர்மத்தில் அனுபவித்துத் தீர்ந்ததுபோக எஞ்சியது); (சாய்த்தல் - கெடுத்தல்; அழித்தல்);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


6)

பல்லிமை யோர்கணம் முன்பணி லிங்கம்

நல்லுளம் அன்பொடு நாடிடு லிங்கம்

எல்லியொர் கோடிநி கர்த்தொளிர் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


பல்-இமையோர்-கணம் முன் பணி லிங்கம் - பல தேவர் கூட்டங்கள் வணங்குகின்ற லிங்கம்; (உம்மைத்தொகையாகக் கொண்டு, "பல தேவர்களும் பூதகணங்களும் வணங்குகின்ற லிங்கம்" என்றும் பொருள்கொள்ளலாம்);

நல்-உளம் அன்பொடு நாடிடு லிங்கம் - நல்ல உள்ளம் உடையோர் பக்தியோடு போற்றுகின்ற லிங்கம்;

எல்லி ஒர் கோடி நிகர்த்து ஒளிர் லிங்கம் - ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளிவீசுகின்ற லிங்கம்; (எல்லி - சூரியன்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


7)

எண்மல ரால்தொழு தேத்திடு லிங்கம்

எண்ணிலி அண்டமெ லாம்படை லிங்கம்

மண்ணினர் எண்கலி தீர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


எண்மலரால் தொழுது ஏத்திடும் லிங்கம் - அஷ்டபுஷ்பங்களால் வழிபாடு செய்யப்பெறுகின்ற லிங்கம்; (அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு); (அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி");

எண்ணிலி அண்டம்-எலாம் படை லிங்கம் - எண்ணற்ற அண்டசராசரங்களைப் படைக்கின்ற லிங்கம்; (எண்ணிலி - எண்ணற்ற);

மண்ணினர் எண்கலி தீர்த்துஅருள் லிங்கம் - மனிதர்களுடைய எட்டு வகையான தரித்திரங்களைத் தீர்த்து அருள்கின்ற லிங்கம்; (கலி - தரித்திரம்); (தமிழில் "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்" என்று 16 பேறுகளைக் குறிப்பிடுவதுபோல், வடமொழியில் "அஷ்டைசுவரியம்" - எண்வகைச் செல்வம் - என்பர்; அந்த எட்டுச் செல்வங்களின் இன்மை - அஷ்டதரித்திரம்); (அஷ்டலக்ஷ்மி - இந்த எட்டுச் செல்வங்களை அளிக்கும் லக்ஷ்மிகள் என்று கருதலாம்போல்);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


8)

வானவ ருங்குரு வுந்தொழு லிங்கம்

வானல ரால்அடி வாழ்த்திடு லிங்கம்

மானமி லங்கிய வான்பொருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


வானவரும் குருவும் தொழு லிங்கம் - தேவர்களும் தேவகுருவும் தொழுகின்ற லிங்கம்;

வான்-அலரால் அடி வாழ்த்திடு லிங்கம் - தேவலோகத்துப் புஷ்பங்களால் திருவடியைப் போற்றுகின்ற லிங்கம்; (அலர் - பூ);

மானம் இலங்கிய வான்-பொருள் லிங்கம் - மேன்மை விளங்கிய பரம்பொருள் லிங்கம்; (மானம் - உயர்வு; பெருமை); (வான் பொருள் - எட்டாத பொருள்) (திருவாசகம் - திருச்சாழல் - 10 - "தானந்தம் இல்லான் ... வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ");

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);



-- "நூற்பயன் (பலசுருதி)" -- (திருவாசகம் - சிவபுராணம் - ஈற்றடிகள்) --

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்கச், சிவலோகத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலைபெறுவர்.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

  • முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

  • வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

  • தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின / மெல்லின ஒற்றுகள் அலகிடப்படா.

  • ஐகாரக் குறுக்கம் நிகழும் இடங்களில் அது குறில் போல அலகிடப்படும்.

  • வடமொழிப் பாடல்களில் பொதுவாக எதுகை இராது. இந்தத் தமிழ்மொழிபெயர்ப்பில், தமிழில் எதுகையும் அமையப் பாடப்பெற்றுள்ளது.

-----------


No comments:

Post a Comment