2012-05-06
T.170 - எறும்பியூர் (திருவெறும்பூர்) - சினமலிந்து மாசடைந்து
--------------
(வண்ணவிருத்தம்;
தனன தந்த தான தந்த
தனன தந்த தான தந்த
தனன தந்த தான தந்த .. தனதான)
சின(ம்)ம லிந்து மாச டைந்து
..... சிதடர் தங்க ளோடு ழன்று
..... தெருவி லங்கு போல ஒன்றும் .. அறியாமல்
.. செடிமி குந்த தேபு ரிந்து
..... திரியும் இந்த வாழ்வி னின்று
..... தெருள டைந்து தாளி ரண்டை .. மறவாத
மனம டைந்து நாவில் உன்றன்
..... மண(ம்)மி குந்த பேர ணிந்து
..... மகிழ்வு பொங்க ஏழை பங்க .. அருளாயே
.. மறைமொ ழிந்த தேவ கொன்றை
..... மலரும் இண்டை போல்வி ளங்கு
..... மதியும் வெங்க ணாகம் ஒன்றும் .. அணிவோனே
முனம டைந்த தேவர் கெஞ்ச
..... முரணு கின்ற மூவ ரண்கள்
..... முடிய அம்பை ஏவு கின்ற .. சிலையானே
.. முதலை உண்ட பாலன் அன்று
..... முழுமை கொண்டு மீள அன்பர்
..... மொழிந யந்து வாழ்வு தந்த .. அவிநாசீ
தினமு வந்து பாடு தொண்டர்
..... செயல்வி ரும்பி வான்வ ணங்கு
..... திருவி ளங்க ஈயும் அன்ப .. மதுநாடித்
.. தெனன வென்று தேன்மு ரன்று
..... திரளு கின்ற சீரி லங்கு
..... திருவெ றும்பி யூர மர்ந்த .. பெருமானே.
பதம் பிரித்து:
சின(ம்) மலிந்து, மாசு அடைந்து,
..... சிதடர் தங்களோடு உழன்று,
..... தெருவிலங்கு போல ஒன்றும் அறியாமல்,
.. செடி மிகுந்ததே புரிந்து
..... திரியும் இந்த வாழ்வினின்று
..... தெருள் அடைந்து, தாள் இரண்டை மறவாத
மனம் அடைந்து, நாவில் உன்றன்
..... மண(ம்) மிகுந்த பேர் அணிந்து
..... மகிழ்வு பொங்க, ஏழை பங்க, அருளாயே;
.. மறை மொழிந்த தேவ; கொன்றை
..... மலரும், இண்டை போல் விளங்கு
..... மதியும், வெங்கண் நாகம் ஒன்றும் அணிவோனே;
முனம் அடைந்த தேவர் கெஞ்ச,
..... முரணுகின்ற மூவரண்கள்
..... முடிய அம்பை ஏவுகின்ற சிலையானே;
.. முதலை உண்ட பாலன் அன்று
..... முழுமை கொண்டு மீள, அன்பர்
..... மொழி நயந்து, வாழ்வு தந்த அவிநாசீ;
தினம் உவந்து பாடு தொண்டர்
..... செயல் விரும்பி, வான் வணங்கு
..... திரு விளங்க ஈயும் அன்ப; மது நாடித்
.. "தெனன" என்று தேன் முரன்று
..... திரளுகின்ற சீர் இலங்கு
..... திருவெறும்பியூர் அமர்ந்த பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
சின(ம்) மலிந்து, மாசு அடைந்து, சிதடர் தங்களோடு உழன்று தெருவிலங்கு போல ஒன்றும் அறியாமல் - கோபம் முதலிய மனஅழுக்குகள் மிகுந்து, ஒன்றும் அறியாமல் அறிவிலிகளோடு கூடி, ஒரு விலங்கேபோல் உழன்று; (சிதடன் - அறிவிலி);
செடி மிகுந்ததே புரிந்து திரியும் இந்த வாழ்வினின்று தெருள் அடைந்து - பாவங்களே செய்யும் இந்த வாழ்க்கையிலிருந்து தெளிவு அடைந்து; (செடி - பாவம்; தீமை); (வாழ்வினின்று - வாழ்க்கையிலிருந்து; நின்று - ஐந்தாம்வேற்றுமை உருபு); (தெருள் - தெளிவு);
தாள் இரண்டை மறவாத மனம் அடைந்து நாவில் உன்றன் மண(ம்) மிகுந்த பேர் அணிந்து மகிழ்வு பொங்க, ஏழை பங்க, அருளாயே - உன் திருவடிகளை மறவாத மனத்தைப் பெற்று, என் நாவில் உன் மணம் மிகுந்த திருநாமத்தைத் தரித்து இன்பம் பெருகுமாறு, உமைபங்கனே, அருள்வாயாக; (ஏழை - பெண்);
மறை மொழிந்த தேவ - வேதங்களைப் பாடியருளிய தேவனே;
கொன்றைமலரும், இண்டை போல் விளங்கு மதியும், வெங்கண் நாகம் ஒன்றும் அணிவோனே - கொன்றைமலர், இண்டை என்ற முடிமாலை போல் விளங்கும் பிறை, கொடிய பாம்பு இவற்றையெல்லாம் சூடியவனே; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (வெங்கண் - கொடுமை); (சம்பந்தர் தேவாரம் - 2.118.4 - "கங்கை திங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம் வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்");
முனம் அடைந்த தேவர் கெஞ்ச, முரணுகின்ற மூவரண்கள் முடிய அம்பை ஏவுகின்ற சிலையானே - முன்பு உன்னைச் சரண் அடைந்து தேவர்கள் இறைஞ்சவும், பகைத்த முப்புரங்கள் அழியும்படி அம்பை ஏவிய வில்லை ஏந்தியவனே; (முரண்தல் - பகைத்தல்); (அரண் - கோட்டை); (முடிதல் - அழிதல்); (சிலை - வில்);
முதலை உண்ட பாலன் அன்று முழுமை கொண்டு மீள, அன்பர் மொழி நயந்து, வாழ்வு தந்த அவிநாசீ - திருப்புக்கொளியூர் அவிநாசியில் சுந்தரர் பதிகம் பாடி வேண்டவும், அதற்கு மகிழ்ந்து, அவ்வூரில் சில ஆண்டுகள்முன் முதலை உண்ட சிறுவன் மீண்டும் உயிர்பெற்று வருமாறு அருள்புரிந்த அவிநாசியே (அழிவற்றவனே). (அவிநாசீ - அவிநாசியே என்ற விளி); (அவிநாசி - அழிவில்லாதவன்); (* திருப்புக்கொளியூர் அவிநாசியில் முதலை உண்ட சிறுவனைச் சுந்தரர் பதிகம் பாடி வரவழைத்ததைப் பெரியபுராணத்தில் காண்க);
தினம் உவந்து பாடு தொண்டர் செயல் விரும்பி வான் வணங்கு திரு விளங்க ஈயும் அன்ப - தினமும் மகிழ்ந்து பாடும் அன்பர்களின் செய்கையை விரும்பி, அவர்களுக்கு வானுலகும் வணங்கும் மேலான பதத்தை அளிக்கும் அன்பனே;
மது நாடித் "தெனன" என்று தேன் முரன்று திரளுகின்ற சீர் இலங்கு திருவெறும்பியூர் அமர்ந்த பெருமானே - பூக்களில் மது உண்ண விரும்பித், "தெனன" என்று வண்டுகள் ரீங்காரம் செய்து கூடும் (சோலை சூழ்ந்த) அழகிய திருவெறும்பியூர் (திருவெறும்பூர்) மலைமேல் விரும்பி உறையும் பெருமானே. (தேன் - வண்டு); (சீர் - அழகு; பெருமை); (அமர்தல் - விரும்புதல்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
அற்புதமான் வ்ண்ணம்! - விஸ் கோபால்.
ReplyDeleteThanks.
Delete