Wednesday, August 25, 2021

P.267 - சிக்கல் - தக்கன் வேள்வியில்

2014-12-28

P.267 - சிக்கல்

-----------------------

(வஞ்சித்துறை - மா விளம் - வாய்பாடு) (திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")

(சம்பந்தர் தேவாரம் - 3.40.1 - "கல்லால் நீழல்")


1)

தக்கன் வேள்வியில்

துக்கம் செய்தவன்

நக்கன் சிக்கலைப்

புக்குப் போற்றுமே.


தக்கன் செய்த வேள்வியை அழித்தவனும் திகம்பரனுமான சிவபெருமான் உறையும் சிக்கலை அடைந்து போற்றுங்கள்; (நக்கன் - திகம்பரன்); (புக்கு - புகுந்து);


2)

அல்லில் ஆடுவான்

கொல்லை ஏறமர்

செல்வன் சிக்கலைச்

சொல்லி உய்ம்மினே.


இருளில் கூத்தாடுபவனும் இடபவாகனம் உடைய செல்வனுமான சிவபெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்; (அல் - இருள்); (கொல்லை ஏறு - கொல்லேறு - போர்செய்யவல்ல எருது);


3)

காவ லார்புரம்

வேவ நக்கமா

தேவன் சிக்கலிற்

கோவைக் கூறுமே.


காவல் ஆர் புரம் - காவல் பொருந்திய முப்புரங்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.100.6 - "கடியரண் மூன்றும்");

வேவ நக்க மாதேவன் - வெந்து அழியச் சிரித்த மகாதேவன்; (நகுதல் - சிரித்தல்);

சிக்கலிற் கோவைக் கூறுமே - சிக்கலில் உறையும் தலைவனைப் புகழுங்கள்; (கோ - தலைவன்);


4)

தையல் பங்கமர்

செய்யன் சிக்கலில்

ஐயன் தாள்தொழ

உய்யல் திண்ணமே.


தையல் பங்கு அமர் செய்யன் - உமாதேவியை ஒரு பங்காக விரும்பும் செம்மேனிப் பெருமான்;

சிக்கலில் ஐயன் - சிக்கலில் உறையும் தலைவன்;

தாள் தொழ உய்யல் திண்ணமே - அவனது திருவடியைத் தொழுதால் உய்தி நிச்சயம்;


5)

கொக்கின் தூவலார்

செக்கர் அஞ்சடைச்

சிக்க லானடி

துக்கம் நீக்குமே.


கொக்கிறகை அணிந்த அழகிய செஞ்சடையை உடைய, சிக்கலில் உறையும் பெருமான் திருவடி நம் துக்கத்தைப் போக்கும்; (தூவல் - இறகு); (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்கு வடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (செக்கர் - சிவப்பு); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);


6)

கண்ணில் தீயினன்

விண்ணி னார்தொழும்

அண்ணல் சிக்கலை

நண்ணல் நன்மையே.


தீ உமிழும் நெற்றிக்கண்ணனும், தேவர் தொழும் தலைவனுமான சிவபெருமான் உறையும் சிக்கலை அடைந்தால் நன்மை கிட்டும்; (நண்ணல் - நண்ணுதல் - அடைதல்);


7)

வாசப் பூவினால்

தேசன் சிக்கலில்

ஈசன் தாள்தொழ

நாசம் பாவமே.


("தேசன், சிக்கலில் ஈசன் தாள் வாசப் பூவினால் தொழப் பாவம் நாசமே" - என்று இயைக்க).

ஒளிவடிவினனும் சிக்கலில் உறைபவனுமான ஈசனது திருவடியை மணம் மிக்க பூக்கள் தூவி வணங்கினால் நம் பாவங்கள் அழியும்; (தேசன் - ஒளியுருவினன்);


8)

மலையெ டுத்தவன்

அலற ஊன்றிய

தலைவன் சிக்கலை

வலம்வந் துய்ம்மினே.


கயிலையைப் பெயர்த்த இராவணனை அவன் அலறும்படி ஒரு திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கிய சிவபெருமான் உறையும் சிக்கலை வலம்செய்து உய்யுங்கள்;


9)

அரிய யன்தொழும்

பெரியன் ஆலமர்

குரவன் சிக்கலை

உரைசெய் துய்ம்மினே.


அரி அயன் தொழும் பெரியன் - திருமாலும் பிரமனும் வணங்கும் பெரியவன்;

ஆல் அமர் குரவன் - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;

சிக்கலை உரைசெய்துய்ம்மினே - அப்பெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்;


10)

சைவன் தாள்தொழாக்

கையர் சொல்விடும்

மெய்யன் சிக்கலை

எய்தி உய்ம்மினே.


சைவன் தாள் தொழாக் கையர் சொல் விடும் - சிவபெருமான் திருவடியைத் தொழாத கீழோர்களது (வஞ்சகர்களது) சொற்களை மதியாமல் நீங்குங்கள்; (சைவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று); (கையர் - கீழோர்; வஞ்சகர்);

மெய்யன் சிக்கலை எய்தி உய்ம்மினே - மெய்ப்பொருளாக உள்ள சிவபெருமானது சிக்கலை அடைந்து உய்யுங்கள்;


11)

நிகரி லான்பொழில்

திகழும் சிக்கலில்

பகவன் தாள்தொழ

மிகவும் நன்மையே.


நிகர் இலான் - ஒப்பற்றவனும்;

பொழில் திகழும் சிக்கலில் பகவன் - சோலை சூழ்ந்த சிக்கலில் உறைகின்ற பகவானுமான;

தாள் தொழ மிகவும் நன்மையே - சிவபெருமானது திருவடியைத் தொழுதால் பேரின்பம் கிட்டும்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment