2014-12-28
P.265 - கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்)
–--------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
தண்ணாரும் புனல்தங்கும் சடையானைத் தடவரையன்
பெண்ணாரும் மேனியனைப் பிழைசெய்த மதனையெரி
கண்ணாரும் நெற்றியனைக் கன்றாப்பூர் நடுதறியைப்
பண்ணாரும் தமிழ்பாடிப் பணிவார்க்குப் பயமிலையே.
தண் ஆரும் புனல் தங்கும் சடையானைத் - குளிர்ச்சி பொருந்திய கங்கை தங்கிய சடையை உடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையார் அவர்போலும்");
தடவரையன் பெண் ஆரும் மேனியனைப் - மலைமகளை ஒரு பாகமாக உடையவனை; (தடவரை - பெரிய மலை);
பிழை செய்த மதனை எரி கண் ஆரும் நெற்றியனைக் - குற்றம் செய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணனை;
கன்றாப்பூர் நடுதறியைப் - கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை; (* நடுதறியப்பன் - கன்றாப்பூரில் ஈசன் திருநாமம்);
பண் ஆரும் தமிழ் பாடிப் பணிவார்க்குப் பயம் இலையே - இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகள் பாடி வழிபடும் பக்தர்களுக்கு அவன் அபயம் அளிப்பான்;
2)
மினலேந்து முகிலனைய மெல்லிடையாள் பங்கினனை
அனலேந்திக் கணங்களிசை ஆர்க்கநடம் ஆடிதனைக்
கனலேந்து கையானைக் கன்றாப்பூர் நடுதறியைப்
புனலேந்து சடையானைப் புகழ்வார்க்குத் துயரிலையே.
மினல் ஏந்து முகில் அனைய மெல்லிடையாள் பங்கினனை - மின்னலைத் தாங்கும் மேகம் போல் நிறமும் மெல்லிய இடையும் உடைய உமையம்மையை ஒரு பங்காக உடையவனை; (மினல் - மின்னல் - இடைக்குறை);
அனல் ஏந்திக் கணங்கள் இசை ஆர்க்க நடம் ஆடிதனைக் - கொள்ளித்தீயை ஏந்திப் பூதகணங்கள் இசை பாடக் கூத்து ஆடுபவனை; (ஆர்க்க - ஒலிக்க); (ஆடி - ஆடுபவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.98.7 - "பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்தாடல்");
கனல் ஏந்து கையானைக் - கையில் நெருப்பை ஏந்தியவனை;
கன்றாப்பூர் நடுதறியைப் - கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை;
புனல் ஏந்து சடையானைப் புகழ்வார்க்குத் துயர் இலையே - கங்கையைச் சடையில் தரித்தவனைத் துதிக்கும் பக்தர்களுக்குத் துயரம் இல்லை;
3)
மறைநாலின் பொருளானை வார்சடைமேல் வளர்கின்ற
பிறையானைப் பிறவாத பெருமானை நஞ்சுண்டு
கறையாரும் மிடற்றானைக் கன்றாப்பூர் நடுதறியை
மறவாது தினமேத்த வல்லார்கள் நல்லாரே.
மறைநாலின் பொருளானை - நால்வேதப்பொருள் ஆனவனை;
வார்சடைமேல் வளர்கின்ற பிறையானைப் - நீள்சடையின்மீது வரும் பிறையைச் சூடியவனை; (வார்தல் - நீள்தல்); (பெரியபுராணம் - 12.29.220 - "சென்னி வளர்வெண் பிறையணிந்த சிவனார்")
பிறவாத பெருமானை - பிறப்பு இல்லாத கடவுளை;
நஞ்சு உண்டு கறை ஆரும் மிடற்றானைக் - ஆலகாலத்தை உண்டு கரிய நிறத்தை ஏற்ற கண்டத்தை உடையவனை; (மிடறு - கண்டம்);
கன்றாப்பூர் நடுதறியை - திருக்கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;
மறவாது தினம் ஏத்த வல்லார்கள் நல்லாரே - தினமும் எண்ணித் துதிப்பவர்கள் நல்லவரே. (அப்பர் தேவாரம் - 6.61.1 - "வைகல் மறவாது வாழ்த்தி யேத்தி");
4)
அண்டத்துக் கிப்பாலாய் அப்பாலும் ஆயவனை
முண்டத்தில் நீற்றானை முந்நீரின் நஞ்சத்தைக்
கண்டத்தில் ஏற்றானைக் கன்றாப்பூர் நடுதறியைக்
கண்டத்த அருளென்று கைதொழுவார் கவலாரே.
அண்டத்துக்கு இப்பாலாய் அப்பாலும் ஆயவனை - இப்பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் இருப்பவனை; (அப்பர் தேவாரம் - 6.4.3 - "அண்டத்துக்கு அப்பாலாய் இப்பாலானே அவனாகில் அதிகை வீரட்டனாமே");
முண்டத்தில் நீற்றானை - நெற்றியில் திருநீற்றைப் பூசியவனை; (முண்டம் - நெற்றி);
முந்நீரின் நஞ்சத்தைக் கண்டத்தில் ஏற்றானைக் - கடல்விஷத்தைக் கண்டத்தில் அணிந்தவனை; (முந்நீர் - கடல்);
கன்றாப்பூர் நடுதறியைக் கண்டு "அத்த அருள்" என்று கைதொழுவார் கவலாரே - திருக்கன்றாப்பூரில் நடுதறியப்பனைத் தரிசித்துத், "தந்தையே அருள்வாயாக" என்று கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்குக் கவலை இல்லை; (அத்தன் - தந்தை); (கவல்தல் - மனம்வருந்துதல்; கவலார் - கவலைப்படார்; மனம்வருந்தார்);
5)
பொங்கரவைத் தாராகப் புனைந்தானைப் போர்செய்த
வெங்கரியின் உரிபோர்த்த விகிர்தனைவெண் திரைமல்கு
கங்கையடை சடையானைக் கன்றாப்பூர் நடுதறியை
மங்கையிடம் மகிழ்வானை வாழ்த்தஅறும் வல்வினையே.
பொங்கு-அரவைத் தாராகப் புனைந்தானைப் - சீறும் பாம்பை மாலையாக அணீந்தவனை; (தார் - மாலை);
போர்செய்த வெங்கரியின் உரி போர்த்த விகிர்தனை - போரிட்ட கொடிய யானையின் தோலைப் போர்த்த மாறுபட்ட செயலினனை; (கரி - யானை); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);
வெண்-திரை மல்கு கங்கை அடை சடையானைக் - வெண்மையான அலை மிகுந்த கங்கையை அடைத்த சடையை உடையவனை; (அப்பர் தேவாரம் - 4.111.9 - "வெண்டிரைக் கங்கை விகிர்தா என் விண்ணப்பம்");
கன்றாப்பூர் நடுதறியை - திருக்கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;
மங்கை இடம் மகிழ்வானை - உமையை இடப்பாகமாக விரும்பியவனை;
வாழ்த்த அறும் வல்வினையே - வாழ்த்தி வழிபட்டால் வலிய வினைகள் தீரும்;
6)
பலதேவர் திரளாகப் பணிந்தேத்த அவர்க்கிரங்கிச்
சிலையாவோர் மலையேந்தித் திரிபுரங்கள் செற்றானைக்
கலையேந்து கையானைக் கன்றாப்பூர் நடுதறியை
மலர்தூவி வழிபடுவார் வல்வினைகள் மாயுமன்றே.
பல தேவர் திரளாகப் பணிந்து ஏத்த, அவர்க்கு இரங்கிச் சிலையா ஓர் மலை ஏந்தித் திரிபுரங்கள் செற்றானைக் - தேவரெல்லாம் கூடி வணங்கித் துதிக்க, அவர்களுக்கு இரங்கி, வில்லாக ஒப்பற்ற மேருமலையை ஏந்தி, முப்புரங்களை எரித்து அழித்தவனை; (சிலை - வில்); (ஓர் - ஒப்பற்ற); (செறுதல் - அழித்தல்);
கலை ஏந்து கையானைக் - கையில் மானை ஏந்தியவனை; (கலை - மான்);
கன்றாப்பூர் நடுதறியை - திருக்கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;
மலர் தூவி வழிபடுவார் வல்வினைகள் மாயுமன்றே - மலர்களைத் தூவி வழிபாடு செய்யும் பக்தர்களது வலிய வினையெல்லாம் அழியும்; (அப்பர் தேவாரம் - 4.39.4 - "வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயுமன்றே");
7)
ஏலமலர்க் குழலாளுக் கிடப்பாகம் ஈந்தானைச்
சீலமிகு பாலனிடம் சீற்றமொடு வந்தடைந்த
காலனுயிர் காலவுதை கன்றாப்பூர் நடுதறியை
நீலமணி மிடற்றானை நினையவினை நெருங்காவே.
ஏல-மலர்க்-குழலாளுக்கு இடப்பாகம் ஈந்தானைச் - மயிர்ச்சாந்து அணிந்த, நறுமலர்களைச் சூடிய கூந்தலையுடைய உமாதேவிக்கு தன் திருமேனியில் இடப்பாகத்தைத் தந்தவனை; (ஏலம் - மயிர்ச்சாந்து); (குழல் - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.107.3 - "ஏல மலர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளி");
சீல(ம்)மிகு பாலனிடம் சீற்றமொடு வந்தடைந்த காலன் உயிர் கால உதை - சிவபக்தியில் சிறந்த மார்க்கண்டேயரிடம் சீறி வந்தடைந்த காலன் தன் உயிரைக் கக்குமாறு அவனை உதைத்த; (கால்தல் - கக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.31.4 - "காலனுயிர் காலவொரு காலால் கடந்தவன்");
கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;
நீலமணி மிடற்றானை - நீலகண்டனை;
நினைய வினை நெருங்காவே - மறவாமல் எண்ணி வணங்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா; (சம்பந்தர் தேவாரம் - 1.116.1 - "நாம் அடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்");
8)
பொல்லாத இராவணனைப் பொருப்பின்கீழ் நசுக்கியருள்
வல்லானை நால்வர்க்கு மறைப்பொருளை விரித்துரைக்கக்
கல்லாலின் புடையமர்ந்த கன்றாப்பூர் நடுதறியைச்
சொல்லாலும் செயலாலும் தொழுவார்க்குத் துயரிலையே.
பொல்லாத இராவணனைப் பொருப்பின்கீழ் நசுக்கியருள் வல்லானை - கொடியவனான இராவணனைக் கயிலைமலையின் அடியில் நசுக்கியருளிய, ஆற்றல் உடையவனை; (பொருப்பு - மலை); (வல்லான் - சர்வவல்லமை உடையவன்);
நால்வர்க்கு மறைப்பொருளை விரித்து-உரைக்கக் கல்லாலின் புடை அமர்ந்த - சனகாதியர் நால்வர்க்கு வேதத்தின் பொருளை உபதேசிக்கக் கல்லாலமரத்தின்கீழ் இருந்த;
கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;
சொல்லாலும் செயலாலும் தொழுவார்க்குத் துயர் இலையே - மனம், வாக்கு, காயம் இவை மூன்றாலும் வழிபடுபவர்களுக்குத் துயரம் இல்லை; (மனம் என்பது குறிப்பால் பெறப்பெற்றது);
9)
படந்திகழும் பாம்பணையான் பன்றியுருக் கொண்டுநிலம்
இடந்துசென்றும் அயன்விசும்பில் ஏறியும்கா ணாவண்ணம்
கடந்துநின்ற சோதியனைக் கன்றாப்பூர் நடுதறியை
மடந்தையொன்று மேனியனை வாழ்த்தஅறும் வல்வினையே.
படம் திகழும் பாம்பு-அணையான் பன்றி உருக்கொண்டு நிலம் இடந்துசென்றும் - படம் உடைய பாம்பைப் படுக்கையாக உடைய திருமால் ஒரு பன்றி உருவில் நிலத்தை அகழ்ந்துசென்றும்; (அணை - படுக்கை); (இடத்தல் - தோண்டுதல்);
அயன் விசும்பில் ஏறியும் - பிரமன் வானில் பறந்து உயர்ந்தும்; (விசும்பு - ஆகாயம்);
காணாவண்ணம் கடந்து நின்ற சோதியனைக் - அவர்களால் அடைய இயலாதபடி எல்லையின்றி நின்ற ஒளிப்பிழம்பை;
கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;
மடந்தை ஒன்று மேனியனை - உமாதேவி ஒன்றுகின்ற திருமேனி உடையவனை; (ஒன்றுதல் - ஒன்றாகப் பொருந்துதல்);
வாழ்த்த அறும் வல்வினையே - வாழ்த்தினால் வலிய வினைகளெல்லாம் தீரும்;
10)
புதியவழி எனச்சொல்லிப் புன்னெறிகட் கழைக்கின்ற
மதியிலிகள் வஞ்சத்தில் மயங்கேன்மின் வார்சடைமேல்
கதிர்மதியம் புனைந்தானைக் கன்றாப்பூர் நடுதறியைப்
பதியையடி பணிகின்ற பத்தர்க்குப் பயமிலையே.
புதிய வழி எனச் சொல்லிப் புன்னெறிகட்கு அழைக்கின்ற மதியிலிகள் வஞ்சத்தில் மயங்கேன்மின் - புது மார்க்கம் என்று சொல்லிச் சிறுநெறிகளுக்குக் கூப்பிடுகின்ற அறிவீனர்களது வஞ்சத்தில் நீங்கள் மயங்கவேண்டா; (மயங்கேன்மின் - மயங்கேல்+மின்); (மின் - முன்னிலைப் பன்மை விகுதி);
வார்சடைமேல் கதிர்-மதியம் புனைந்தானைக் - னீள்சடைமேல் ஒளி திகழும் சந்திரனை அணிந்தவனை; (வார்தல் - நீள்தல்); (கதிர் - ஒளி; கிரணம்);
கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;
பதியை அடி பணிகின்ற பத்தர்க்குப் பயம் இலையே - தலைவனான சிவபெருமானை வணங்கும் பக்தர்களுக்கு அவன் அபயம் அளிப்பான்;
11)
கவினாரும் பொழில்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியை
அவிர்வேணி உடையானை அன்போடு தமிழ்பாடிச்
செவியாரச் சீர்கேட்கும் சிந்தையர்க்குப் புவிமீது
தவியாத நிலைதன்னைத் தந்தருள்வான் சங்கரனே.
கவின் ஆரும் பொழில் சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியை - அழகிய சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை; (கவின் - அழகு);
அவிர்-வேணி உடையானை - பிரகாசிக்கும் சடை உடையவனை; (அவிர்தல் - பிரகாசித்தல்); (வேணி - சடை); (உடையான் - உடையவன்; சுவாமி);
அன்போடு தமிழ் பாடிச் - பக்தியோடு தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி;
செவியாரச் சீர் கேட்கும் சிந்தையர்க்குப் - காதார அவன் புகழைக் கேட்கின்ற மனம் உடையவர்களுக்கு;
புவிமீது தவியாத நிலைதன்னைத் தந்தருள்வான் சங்கரனே - இம்மண்மேல் தவிக்கின்ற நிலையை நீக்கிப், பிறவா நிலையைத் தந்து, சிவலோகம் அருள்வான் சங்கரனாகிய சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment