2014-12-28
P.266 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்)
(நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)
-----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.81.1 - "சிட்டனைச் சிவனை");
(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.50.1 - "விரும்புந் திங்களும்");
1)
பண்ட ரங்கனைப் பார்வதி பங்கனை
அண்டர் அண்டனை அன்பின் உருவனைக்
கொண்டற் கண்டனைக் கொண்டீச் சரவனைத்
தொண்ட ராய்த்தொழு வார்க்கிலை துன்பமே.
பண்டரங்கனைப் - பாண்டரங்கக் கூத்தனை; (பண்டரங்கன் - பாண்டரங்கக் கூத்தாடுவோன்); (பாண்டரங்கம் - கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்த போது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது);
பார்வதி பங்கனை - உமைபங்கனை;
அண்டர-அண்டனை - தேவதேவனை;
அன்பின் உருவனைக் - அன்பே வடிவானவனை;
கொண்டற் கண்டனைக் - மேகம் போன்ற நிறம் திகழும் கண்டத்தை உடையவனை; (கொண்டல் - மேகம்); (திருக்கோவையார் - 23.10 - "திண்டோட்கொண்டற் கண்டன்");
கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
தொண்டராய்த் தொழுவார்க்கு இலை துன்பமே - தொண்டர்களாகி வணங்குபவர்களுக்குத் துன்பம் இல்லை;
2)
சூல னைப்புலித் தோலனை முப்புரி
நூல னைப்பத்து நூறு பெயரனைக்
கோல வார்சடைக் கொண்டீச் சரவனை
ஏலு மாறு வணங்குவார்க் கின்பமே.
சூலனைப், புலித்தோலனை, முப்புரி நூலனைப் - சூலபாணியைப், புலித்தோல் ஆடை அணிந்தவனை, பூணூல் திகழும் மார்பினனை;
பத்து நூறு பெயரனை - ஆயிரம் திருநாமங்கள் உடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.56.11 - "பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரனை");
கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
ஏலுமாறு வணங்குவார்க்கு இன்பமே - இயன்றவகையில் (/ பொருந்துமாறு) வணங்கும் பக்தர்களுக்கு இன்பமே; (அப்பர் தேவாரம் - 5.43.9 - "காலமான கழிவதன் முன்னமே ஏலுமாறு வணங்கிநின்று ஏத்துமின்");
3)
மன்றில் ஆடியை மாதவர் நெஞ்சினில்
நின்ற சோதியை நெற்றியிற் கண்ணனைக்
குன்ற வில்லியைக் கொண்டீச் சரவனைச்
சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே.
மன்றில் ஆடியை - அம்பலக் கூத்தனை;
மாதவர் நெஞ்சினில் நின்ற சோதியை - பெரும்-தவத்தோர் நெஞ்சில் குடிகொண்ட ஜோதிவடிவினனை;
நெற்றியில் கண்ணனைக் - நெற்றிக்கண் உடையவனை;
குன்ற-வில்லியைக் - மேருமலையை வில்லாக ஏந்தியவனை;
கொண்டீச்சரவனைச் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே - சென்று வழிபட்டால் தீவினை நீங்கும்;
4)
பெற்றம் ஏறும் பிரானைப் பெருவிடம்
துற்ற கண்டனைத் தூமதி சூடியைக்
குற்றம் இல்லியைக் கொண்டீச் சரவனைப்
பற்றி னார்தம் பழவினை பாறுமே.
பெற்றம் ஏறும் பிரானைப் - இடபவாகனனை; (பெற்றம் - இடபம்);
பெருவிடம் துற்ற கண்டனைத் - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை; (துற்றுதல் - உண்ணுதல்);
தூமதி சூடியைக் - வெண்மையான சந்திரனைச் சூடியவனை;
குற்றம் இல்லியைக் - மாசற்றவனை;
கொண்டீச்சரவனைப் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
பற்றினார்தம் பழவினை பாறுமே - சரணடைந்த பக்தர்களது பழைய வினை அழியும்; (பாறுதல் - அழிதல்);
5)
போதை இட்டடி போற்றிய வானவர்
வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக்
கோதை பங்கனைக் கொண்டீச் சரவனை
வேத னைத்தொழ வீடும் வினைகளே.
போதை இட்டு அடி போற்றிய வானவர் வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக் - பூக்களைத் தூவி வழிபட்ட தேவர்களது துன்பத்தை தீர்த்த, மேருவில் ஏந்தியவனை; (போது - மலர்); (வாதை - துன்பம்); (வரை - மலை); (சிலை - வில்);
கோதை பங்கனைக் - உமைபங்கனை; (கோதை - பெண்);
கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
வேதனைத் - வேதநாயகனை;
தொழ வீடும் வினைகளே - வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);
6)
நாறு கூவிளம் நாகம் இளமதி
ஏறு செஞ்சடை ஏந்தலை மேனியிற்
கூறு பெண்ணனைக் கொண்டீச் சரவனைக்
கூறு வாரைக் குறுகா வினைகளே.
நாறு கூவிளம் நாகம் இளமதி ஏறு செஞ்சடை ஏந்தலை - மணம் கமழும் வில்வம், பாம்பு, பிறை இவற்றையெல்லாம் சிவந்த சடையின்மேல் அணிகின்ற தலைவனை; (கூவிளம் - வில்வம்); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);
மேனியில் கூறு பெண்ணனைக் - திருமேனியில் ஒரு பாதி பெண் ஆனவனை;
கொண்டீச்சரவனைக் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
கூறுவாரைக் குறுகா வினைகளே - துதிக்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா; (குறுகுதல் - அணுகுதல்);
7)
அமரர் கோனை அடிதொழு மாணிக்கா
நமனைச் செற்றருள் நம்பனை மஞ்ஞையூர்
குமரன் தாதையைக் கொண்டீச் சரவனை
விமல னைத்தொழ வீடும் வினைகளே.
அமரர் கோனை - தேவர்கள் தலைவனை;
அடிதொழு மாணிக்கா நமனைச் செற்றருள் நம்பனை - வணங்கிய மார்க்கண்டேயரைக் காப்பதற்காகக் காலனை உதைத்த நம்பனை; (மாணிக்கா - மாணிக்காக - மார்க்கண்டேயருக்காக); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);
மஞ்ஞை ஊர் குமரன் தாதையைக் - மயில்மேல் ஏறும் முருகனுக்குத் தந்தையை; (மஞ்ஞை - மயில்); (ஊர்தல் - ஏறுதல்); (தாதை - தந்தை);
கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
விமலனைத் தொழ வீடும் வினைகளே - தூயனை வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);
8)
இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன்
முடிபத் திற்றிட ஊன்றிய மூர்த்தியைக்
கொடிமேல் ஏற்றனைக் கொண்டீச் சரவனை
அடிக ளைத்தொழும் அன்பருக் கின்பமே.
இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன் - இடிபோலப் பெருமுழக்கம் செய்து அழகிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய; (சம்பந்தர் தேவாரம் - 1.112.8 - "எழின்மலை எடுத்த வல்லிராவணன்றன் முழுவலி அடக்கிய முதல்வனகர்");
முடி பத்து இற்றிட ஊன்றிய மூர்த்தியைக் - பத்துத்தலைகளும் நசுங்கும்படி திருப்பாதவிரலை ஊன்றிய பெருமானை; (இறுதல் - அழிதல்);
கொடிமேல் ஏற்றனை - இடபச்-சின்னம் திகழும் கொடியை உடையவனை;
கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
அடிகளைத் தொழும் அன்பருக்கு இன்பமே. - இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு இன்பமே; (அடிகள் - கடவுள்);
9)
அரவின் மேல்துயில் அச்சுதன் நான்முகன்
பரவ நின்ற பரஞ்சுட ரைக்கொன்றை
குரவம் சூடிய கொண்டீச் சரவனை
விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே
அரவின்மேல் துயில் அச்சுதன் நான்முகன் பரவ நின்ற பரஞ்சுடரைக் - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடிப்) போற்றுமாறு ஓங்கிய மேலான ஜோதியை; (பரவுதல் - துதித்தல்);
கொன்றை குரவம் சூடிய - கொன்றைமலரையும் குராமலரையும் சூடிய;
கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே - அடையும் பக்தர்களது கொடியவினை அழியும்; (விரவுதல் - அன்பு கலந்து ஒன்றாதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.94.5 - "பரவுவாரையும் உடையார் ... விரவுவாரையும் உடையார்");
10)
அல்லி ருக்கும் அகத்தினர் பொய்ம்மொழி
புல்லர் புன்னெறி அல்லற் புகுத்துமால்
கொல்லை ஏற்றனைக் கொண்டீச் சரவனைச்
சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே.
அல் இருக்கும் அகத்தினர் - வஞ்சமும் அறியாமையும் நிறைந்த மனத்தை உடையவர்கள்; (அல் - இருள்; அறியாமை; மயக்கம்); (அகம் - மனம்);
பொய்ம்மொழி புல்லர் புன்னெறி - பொய்களையே உரைக்கும் கீழோர்களது சிறுநெறிகள்;
அல்லல் புகுத்துமால் - துன்பத்தில் சேர்க்கும்; (அல்லல் - துன்பம்); (ஆல் - அசைச்சொல்);
கொல்லை ஏற்றனைக் - இடபவாகனனை; (கொல்லை ஏறு - 1. "கொல்லேறு" என்பது ஐகாரச் சாரியை பெற்று , "கொல்லை ஏறு" என நின்றது. 2. கொல்லை - முல்லைநிலக்காடு; முல்லை நிலத்துக்குரிய இடபம். முல்லைக்குத் திருமால் தெய்வமாதலால் திருமாலை ஏறாக உடையவன் என்றும் அமையும்);
கொண்டீச்சரவனைச் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே - துதிப்பவர்களது பழவினைகள் தீரும்;
11)
ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை
நாட்டம் மூன்றுடை யானை நகையினாற்
கோட்டை மூன்றெரி கொண்டீச் சரவனைப்
பாட்டி னால்தொழு வார்வினை பாறுமே.
ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்குத் திரியும் ஒப்பற்றவனை;
நாட்டம் மூன்று உடையானை - முக்கண்ணனை; (நாட்டம் - கண்);
நகையினால் கோட்டை மூன்று எரி - சிரிப்பினால் முப்புரங்களை எரித்த; (நகை - சிரிப்பு);
கொண்டீச்சரவனைப் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;
பாட்டினால் தொழுவார் வினை பாறுமே - துதிகள் பாடி வழிபடுவார்களது வினைகள் அழியும்; (பாறுதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.5 - "வேற்காடு பாட்டினாற் பணிந்தேத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment