Sunday, August 4, 2019

03.05.032 – இடைமருதூர் - இளமையில் இறையுனை - (வண்ணம்)

03.05.032 – இடைமருதூர் - இளமையில் இறையுனை - (வண்ணம்)

2007-04-11

3.5.32 - இளமையில் இறையுனை (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன .. தனதான )

(நிறைமதி முகமெனு மொளியாலே - திருப்புகழ் - சுவாமிமலை)


இளமையி லிறையுனை .. நினையாமல்

.. இழிவினை அனுதின .. மிகநாடி

அளவில தெனமிகு .. வினைதீர

.. அடிமலர் தொழுமனம் .. அருளாயே

வளையணி மலைமக .. ளொருகூறா

.. வடியுடை மழுவமர் .. கரவீரா

வளவயல் இடைமரு .. துறைவோனே

.. வளர்மதி நதிபுனை .. பெருமானே.


பதம் பிரித்து:

இளமையில் இறை உனை .. நினையாமல்,

.. இழிவினை அனுதினம் .. மிக நாடி,

அளவிலது என மிகு .. வினை தீர,

.. அடிமலர் தொழு மனம் .. அருளாயே;

வளை அணி மலைமகள் .. ஒரு கூறா;

.. வடியுடை மழு அமர் .. கர வீரா;

வள வயல் இடைமருது .. உறைவோனே;

.. வளர்மதி, நதி புனை .. பெருமானே.


இளமையில் இறைனை நினையாமல் - இளமையிலே இறைவனான உன்னைச் சிறிதும் எண்ணிப் போற்றுதலைச் செய்யாமல்; (இறை - 1. இறைவன்; 2. சிறிது); ("இறை" என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

இழிவினை அனுதினம் மிக நாடி - இழிந்தவற்றையே தினமும் மிகவும் விரும்பி;

அளவு இது எ மிகு வினை தீர - அளவற்றது என்னுமாறு மிகுந்த வினையெல்லாம் இனித் தீருமாறு;

அடிமலர் தொழு மனம் அருளாயே - உன் திருவடித்தாமரையை வழிபடும் மனத்தை எனக்கு அருள்வாயாக;

வளைணி மலைமகள் ரு கூறா - வளையல் அணிந்த உமையை ஒரு கூறாக உடையவனே;

வடியுடை மழுமர் கர வீரா - கூர்மையான மழுவைக் கையில் ஏந்திய வீரனே; (வடி - கூர்மை);

வள வயல் இடைமருது றைவோனே - வளம் மிக்க வயல் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்றவனே;

வளர் மதி, நதி புனை பெருமானே - பிறைச்சந்திரனையும் கங்கையையும் சூடிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment