Saturday, September 3, 2016

03.03-91 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
91) உடை
--------------
உடைதலையில் உண்பலி ஏற்கின்ற முக்கட்
கடவுளுக்குத் தோலே உடை.



உடைதலை - உடைந்த கபாலம்;
முக்கட் கடவுள் - முக்கண்ணன் ஆகிய சிவன்;
தோலே உடை - தோலே ஆடை ஆகும்;



2009-06-22
92) செல்
--------------
செல்லரித்த ஏடாகித் தேகம் விழுமுன்னே
தில்லைச்சிற் றம்பலம் செல்.



செல் - 1) கறையான்; 2) போ;



93) நேர்
-----------
நேர்வழிச் செல்லாத நீசருக் கெட்டாத
வார்சடையா னுக்குண்டோ நேர்!



பதம் பிரித்து:
நேர்வழிச் செல்லாத நீசருக்கு எட்டாத
வார்சடையானுக்கு உண்டோ நேர்!


நேர் வழி - சரியான பாதை;
வார் சடையான் - நீண்ட சடையை உடைய சிவன்;
உண்டோ நேர் - இணை உண்டா? (நேர் - ஒப்பு);



94) பார்
-----------
பார்வணங்கும் முக்கட் பரன்புரியும் ஆடலைச்
சீர்மிகுசிற் றம்பலம்போய்ப் பார்.



பார் - 1) உலகத்தவர்கள்; 2) காண்;
முக்கட் பரன் - முக்கண் உடைய பரம்பொருளான சிவபெருமான்;
சீர் - செல்வம்; நன்மை; அழகு;



95) ஆர்
-----------
ஆரமுதாய் அன்பர்க்குத் தித்திக்கும் ஐயனுக்குக்
காரடை கண்டற்கொப் பார்?



பதம் பிரித்து:
ஆரமுது ஆய் அன்பர்க்குத் தித்திக்கும் ஐயனுக்குக்,
கார் அடை கண்டற்கு ஒப்பு ஆர்?


ஆர் - 1) அரிய; 2) யார்;
ஆரமுதாய் - ஆர் அமுது ஆய் - அரிய அமுது ஆகி;
கார் அடை கண்டற்கு - கருமை அடைந்த கழுத்தை உடையவனுக்கு; (கண்டற்கு - கண்டன் + கு - கண்டனுக்கு);
ஒப்பு ஆர் - யார் சமம்?



96) பலி (updated 2015-03-16)
------------
பலியிடம் யாசித்தான் பன்றியாய்த் தேடு
புலியதளற் கோட்டிற் பலி.



பதம் பிரித்து:
பலியிடம் யாசித்தான் பன்றி ஆய்த் தேடு
புலி அதளற்கு ஓட்டில் பலி.


பலி - 1) மஹாபலி சக்கரவர்த்தி; 2) பிச்சை;
பலியிடம் யாசித்தான் பன்றி ஆய்த் தேடு - மஹாபலியிடம் சென்று மண் இரந்த திருமால் பன்றி ஆகித் தேடிய;
புலியதளற்கு - புலி+அதளன்+கு - புலித்தோல் அணிந்த சிவபெருமானுக்கு; (அதள் - தோல்);
(அப்பர் தேவாரம் - 4.80.2 - "பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன்");
ஓட்டில் பலி - பிரமனது மண்டையோட்டில் பிச்சை;



97) கலி
------------
கலிமதுரை ஆலவாய் கண்டு தொழுதால்
நலியாதே நம்மைக் கலி.



கலி - 1) ஒலி; ஆரவாரம்; 2) துன்பம்; தரித்திரம்;
மதுரை ஆலவாய் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை; (3.108.11 - "கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு" - கூடல் ஆலவாய் - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை);
நலியாது - துன்புறுத்தாது; வருத்தாது;



98) மாடு (updated 2015-01-20)
-------
மாடுவரு கூற்றுதைத்து மாணிக் கருளரன்சீர்
பாடுமடி யார்க்குவரும் மாடு.



பதம் பிரித்து:
மாடு வரு-கூற்று உதைத்து மாணிக்கு அருள் அரன் சீர்
பாடும் அடியார்க்கு வரும் மாடு.


மாடு - 1) பக்கம்; அருகு; 2) செல்வம்;
கூற்று - யமன்;
மாணி - மார்க்கண்டேயர்;
சீர் - புகழ்;



99) காய்
------------
காய்விடம்உண் கண்டனைப் போற்றார் கனியிருப்பப்
போய்க்கவர்வார் கைக்கின்ற காய்.



காய் விடம் - எரிக்கும்/அழிக்கும் ஆலகால விஷம்; (காய்தல் - எரித்தல்/அழித்தல்);
கைக்கின்ற காய் - கசக்கின்ற காய்;



100) பற்று
--------------
பற்றுவிட வேண்டினெஞ்சே பால்வெண் மதிசூடும்
கொற்றவன் தாளிணையைப் பற்று.



பதம் பிரித்து:
பற்று விடவேண்டில் நெஞ்சே, பால் வெண் மதி சூடும்
கொற்றவன் தாள் இணையைப் பற்று.


பற்று - 1) அபிமானம் (attachment); 2) பிடி (to grasp; to hold);
பால் வெண்மதி - பால்போலும் வெண்ணிறத்தை உடைய திங்கள்;
கொற்றவன் - அரசன்;
தாள் இணை - இரு திருவடிகள்;



101) கேள்
---------------
கேளிது நெஞ்சமே கீற்றுமதி சூடிஎண்
தோளிறையை அன்றியுண்டோ கேள்?



பதம் பிரித்து:
கேள் இது, நெஞ்சமே; கீற்று-மதி சூடி, எண்-
தோள் இறையை அன்றி உண்டோ கேள்?
கேள் - 1) செவியால் கேட்பது; 2) உறவு;   இறை - இறைவன்;



102) புகார்
---------------
புகார்ச்சாய்க்காட் டீசனன்பர் போற்றியுய்வர்; நெஞ்சு
நெகார்போல் கருப்பைப் புகார்.



பதம் பிரித்து:
புகார்ச் சாய்க்காட்டு ஈசன் அன்பர் போற்றி உய்வர்; நெஞ்சு
நெகார்போல் கருப்பைப் புகார்.


புகார் - 1) காவிரிப்பூம் பட்டினம் என்ற ஊர்; 2) புகமாட்டார்;
சாய்க்காடு - பூம்புகார் நகரில் உள்ள திருச்சாய்க்காடு என்ற தலம்;
நெஞ்சு நெகார் - மனம் உருகாதவர்; (நெகுதல் - இளகுதல்; உருகுதல்; கரைதல்)
கருப்பைப் புகுதல் - கர்ப்பப்பையில் புகுதல் - மீண்டும் பிறவி அடைதல்;


(சம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர் ... தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே")
திருவாசகம் - அச்சப் பத்து - 7 - "தகைவிலாப் பழியும் அஞ்சேன் .... அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே")



2009-07-01
103) தாழ்
--------------
தாழ்அப்பர் தண்தமிழ்கேட் டீசன் திறந்தான்காச்
சூழ்அம் மறைக்காட்டில் தாழ்.



பதம் பிரித்து:
தாழ் அப்பர் தண்தமிழ் கேட்டு ஈசன் திறந்தான் காச்
சூழ் அம் மறைக்காட்டில் தாழ்.


* திருமறைக்காட்டில் மறைக்கதவம் தாழ் திறக்க வேண்டித் திருநாவுக்கரசர் பாடியதைச் சுட்டியது.


தாழ் - 1) தாழ்தல் - வணங்குதல்; 2) தாழ்ப்பாள்;
அப்பர் - திருநாவுக்கரசர்;
தண் தமிழ் - குளிர்ந்த தமிழாகிய தேவாரம்;
கா - சோலை;
அம் - அழகு;
காச் சூழ் அம் மறைக்காடு - சோலைகள் சூழ்ந்த அழகிய வேதாரண்யம்;
(இலக்கணக் குறிப்பு - ஓரெழுத்துச் சொல் பின் வல்லொற்று மிகும்)



2009-07-02
104) கரு
-----------
கருநஞ்சை உண்டமுக் கண்ணனைப் போற்றி
இருபுகாய் இன்னோர் கரு.



கரு - 1) கரிய; 2) கருப்பம்; பிறவி;
முக்கண்ணனைப் போற்றி இரு - சிவபெருமானை வணங்கி வாழ்;
புகாய் இன்னோர் கரு - இனி ஒரு பிறவியில் புக மாட்டாய்;



2009-07-02
105) விடாய்
-----------------
விடாய்மிகும் நெஞ்சுதந்து, வேணியனே, கேடு
படாஉன்தாள் எண்ண விடாய்.



விடாய் - 1) தாகம்; ஆசை; 2) விடமாட்டாய்;
வேணியன் - சடையினன்;
கேடுபடா - அழிவற்ற;


(அப்பர் தேவாரம் - 4.112.4 - "நின்னையெப் போது நினையவொட் டாய்நீ..." - இறைவனே! உன்னை எப்போதும் நினைத்திருக்குமாறு செய்ய நீ இசைகின்றாய் அல்லை.)
(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.7 - "சட்டோ நினைக்க மனத்தமுதாம் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை...")



106) கா
-------------
காவினைசெய் ஈசனுக்குக் கைவினை செய்துவளர்,
பூவினை நல்குகிற கா.



கா - 1) காத்தல்; (Preservation, protection; பாதுகாப்பு); 2) நந்தவனம்; சோலை;
கா வினை செய் ஈசனுக்கு - காக்கும் தொழிலைச் செய்யும் சிவபெருமானுக்கு;
கைவினை செய்து - கிரியைகளாகிய சிவப்பணிகளைச் செய்து;
வளர் பூவினை நல்குகிற கா - மலர்களை அளிக்கும் நந்தவனத்தை வளர்ப்பாயாக;
(சம்பந்தர் தேவாரம் - 1.116.2: "காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்...." - நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு ....)



107) தீ
-----------
தீவினையைத் தீர்க்கும் சிவனார் கரத்திலும்
தீநெற்றிக் கண்ணிலும் தீ.



தீ - 1) தீமை; (தீ வினை - பாவம்); 2) நெருப்பு;



108) போர்
---------------
போர்விடையான் பொற்றாள் தொழநீறாம் ஈசனருட்
பார்வையினால் நம்பாவப் போர்.



பதம் பிரித்து:
போர்விடையான் பொற்றாள் தொழ, நீறு ஆம், ஈசன் அருட்
பார்வையினால், நம் பாவப் போர்.
போர் - 1) சண்டை (battle; war); 2) குவியல் (Heap; accumulation);
போர்விடை - போர்செய்யும் தன்மையுடைய இடபம்; வீரம் மிகுந்த எருது;
நீறாம் - நீறு ஆம் - சாம்பல் ஆகும்;
(திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.16 - "திண்போர் விடையான்");
(அப்பர் தேவாரம் - 5.47.7 - "மூக்கு வாய்செவி ... ஆப்பை அவிழ்த்து அருள் நோக்குவான்...")



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

1 comment: