Saturday, September 3, 2016

03.03-81 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
81) அளி
-------------
அளியென் றிரக்கின் அரன்அருள்வான்; என்றும்
களிக்கநெஞ்சே ஈசற் களி.



பதம் பிரித்து:
"அளி" என்று இரக்கின் அரன் அருள்வான்; என்றும்
களிக்க, நெஞ்சே, ஈசற்கு அளி.


அளி - 1) அளித்தல் - கொடுத்தல்; காத்தல்; 2) அளிதல் - குழைதல்; கனிதல்; பிரியமாயிருத்தல்;
அளி என்று இரக்கின் - அருள்புரியாய் என்று வேண்டினால்;
ஈசற்கு அளி - ஈசனுக்கு அன்புசெய்;



82) நிழல்
-------------
நிழல்போல நின்றருள்வான் நெஞ்சமே சேர்வாய்
மழவிடையான் பாத நிழல்.



நிழல் - 1) சாயை (Shade, shadow); 2) தானம் (Place);
மழ - இளமை;
நிழல்போல நின்றருள்வான் - (அடியவரை அவர்தம்) நிழலைப் போலப் பிரியாமல் இருந்து காத்தருள்வான்; (-- அல்லது -- சுட்டெரிக்கும் வினை நம்மைத் தாக்காமல் அதைத் தடுக்கும் நிழல் போல நம்மைக் காப்பான்);
நெஞ்சமே சேர்வாய் மழவிடையான் பாத நிழல் - (அதனால்) மனமே, இளைய ஏற்றின்மீது வரும் சிவபெருமான் திருவடித் தலத்தை அடைவாய்.


(11.32.9 - கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - "மாயவன் .... தாயவன் தன்பொற் கழலென் தலைமறை நன்னிழலே." - வெயிலைத் தடுத்துத் தலையைக் காக்கின்ற நிழல் போல, வினையைத் தடுத்துக் காக்கும் காப்பு );



83) ஏறு
-----------
ஏறுடையான் மார்பில்வெண் ணீறுடையான், ஏழையொரு
கூறுடையான், வானவர் ஏறு.



பதம் பிரித்து:
ஏறு உடையான்; மார்பில் வெண்ணீறு உடையான்; ஏழை ஒரு
கூறு உடையான்; வானவர் ஏறு.


ஏறு - 1) எருது; 2) ஆண்சிங்கம்;
இடப வாகனனும், மார்பில் வெண் திருநீறு பூசியவனும் உமை ஒரு பங்கினனும் ஆன சிவபெருமான். தேவர்களுக்குத் தலைமை உடைய ஆண்சிங்கம் போன்றவன்;
அப்பர் தேவாரம் -6.47.1 - "திருவேஎன் செல்வமே ... ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே".



84) அன்று
---------------
அன்றுமதில் மூன்றெரித்த அண்ணலடி போற்றாமல்
சென்றதினம் நல்லதினம் அன்று.



அன்று - 1) அந்நாள் (That day, then); 2) அல்லாமை (Reciprocal negation or difference, negation of identity);
அன்று மதில் மூன்று எரித்த அண்ணல் அடி போற்றாமல் சென்ற தினம் - முன்னர் முப்புரங்களை எரித்த ஈசனுடைய திருவடியை வழிபடாது கழித்த நாள்;
நல்லதினம் அன்று - நல்ல நாள் ஆகாது;
(சுந்தரர் தேவாரம் - 7.48.2 -
"இட்டன் உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்டநாள் கெட்ட நாள் இவை என்றலால் கருதேன் .......")



85) இணை
----------------
இணையில்லா இன்பம்வந் தெய்திட நெஞ்சே
அணைவாய் அரன்தாள் இணை.



இணை - 1) ஒப்பு; 2) இரட்டை (pair);
இன்பம் வந்து எய்திட - இன்பம் நம்மை வந்து சேர்ந்திட;
அணைதல் - சார்தல் (To approach, come near);
தாள் இணை - இரு திருவடிகள்;



2009-06-09
86) மெய்
-------------
மெய்ப்பொருளாம் வெள்விடையான் கோயில் தனைவலம்
செய்தேத்தப் பெற்றாய்இம் மெய்.



மெய் - 1) உண்மை; 2) உடல்;
வெள் விடையான் - வெள்ளை எருதின் மேல் வரும் சிவபெருமான்;
(அப்பர் தேவாரம் - 4.9.8 - திருஅங்கமாலை -
"ஆக்கை யால்பயன்என் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றிஎன் னாதஇவ் வாக்கை யால்பயன்என்.")



2009-06-10
87) களை
-------------
களைபொலியத் திங்களணி கண்ணுதலான் அன்பால்
தளையாம் வினையைக் களை.



களை - 1) அழகு; 2) "நீக்கு" என்ற ஏவல் வினை; (களைதல் - நீக்குதல்);
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
தளை - கட்டு; பந்தம்; விலங்கு;



2009-06-12
88) புரி
----------
புரிசடைப் புண்ணியன் பொற்றாள் இணைக்குப்
பிரியமாய்த் தொண்டு புரி.



புரி சடை - திரண்டு சுருண்ட சடை (tangled, matted locks); (புரிதல் - To be twisted; to curl; முறுக்குக்கொள்ளுதல்.);
பொற்றாள் - பொன்னடி;
தொண்டு புரி - பணி செய்;



2009-06-16
89) செலவு
---------------
செலவுவர வென்றுசிவன் சேவடிபோற் றார்க்குப்
பலனற்ற வாழ்க்கைச் செலவு.



பதம் பிரித்து:
செலவு வரவு என்று, சிவன் சேவடி போற்றார்க்குப்
பலன் அற்ற வாழ்க்கைச் செலவு.


செலவு வரவு - 1) போவதும் வருவதும் - இறப்பும் பிறப்பும்; 2) வருவாய், பணவிரயம் (income and expense);
வாழ்க்கைச் செலவு - வாழ்க்கைப் பயணம்; (செலவு - பயணம் (journey));
பலன் - பயன்;


(அப்பர் தேவாரம் - 6.95.6 -
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
.. தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
.. உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
.. அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
.. பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
)



2009-06-21
90) வழி
---------------
வழிகண்ணீ ரோடு மகாதேவன் தாளை
வழிபடலே உய்யும் வழி.



வழிகண்ணீர் - வினைத்தொகை - வழிகின்ற கண்ணீர்;
உய்யும் வழி - நற்கதி பெறும் உபாயம்;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment