Saturday, September 3, 2016

03.03-51 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
51) ஓடு
-----------
ஓடுநதி ஆடுமர வோடுபிறை சென்னிமிசை
சூடுமிறை கையினிலோர் ஓடு.



பதம் பிரித்து:
ஓடு நதி, ஆடும் அரவோடு பிறை சென்னி மிசை
சூடும் இறை கையினில் ஓர் ஓடு.


ஓடு நதி - ஓடுகின்ற நதி (வினைத்தொகை) - கங்கை;
ஆடும் அரவு - அசையும் பாம்பு;
சென்னி மிசை - தலையின் மேல்;
கையினில் ஓர் ஓடு - கையில் பிரமனது மண்டை ஓடு.



2009-02-19
52) தொக்கு
-------------------
தொக்குத் தொகுதொகு வென்றரன் ஆடமுழா
மிக்கிசைக்கும் பூதங்கள் தொக்கு.



பதம் பிரித்து:
தொக்குத் தொகுதொகு என்று, அரன் ஆட, முழா
மிக்கு இசைக்கும் பூதங்கள் தொக்கு.


தொக்குத் தொகுதொகு - தாள ஓசை ஒலிக்குறிப்பு;
முழா - முழவு - முரசு போன்ற வாத்தியங்கள்;
பூதங்கள் தொக்கு - பூதகணங்கள் எல்லாம் சேர்ந்து. (தொகுதல் - கூடுதல் - To assemble, collect, accumulate);



2009-02-24
53) விண்டு
---------------
விண்டுரைக்க ஒண்ணாத மெய்ச்சுடரின் எல்லையினைக்
கண்டு விடமுயன்றார் விண்டு.



விண்டு - 1) சொல்லி; 2) விஷ்ணு;
விள்ளுதல் - சொல்லுதல்



2009-02-26
54) போது
---------------
போதுபோக் காதுநெஞ்சே போற்றிப் புகழ்ந்துமறை
ஓதுசிவன் தாளிலிடு போது.



போது - 1) பொழுது; காலம்; 2) பூ;



55) தலை
------------
தலைமேல் மதியும் அலைசேர் நதியும்
இலகும் இறையே தலை.



தலை - 1) சிரம்; 2) தலைவன்; உயர்ந்தவன்; முதல்;
இலகுதல் - விளங்குதல் (To shine, glisten, glitter);
இறை - இறைவன்;



56) சிலை
------------
சிலையென்று சிந்தை மயங்குவார்க் கெட்டாத்
தலைவர்க்கு வெற்பே சிலை.



சிலை - 1) கல்லிற் செதுக்கிய உருவம்; 2) வில்;
சிந்தை மயங்குதல் - அறிவின் தெளிவின்மை;
வெற்பு - மலை;
* திரிபுரங்களை எரித்தபொழுது சிவன் ஒரு மலையை வில்லாக ஏந்தினான்;



57) புகல்
------------
புகலான முக்கண்ணன் பொன்னடியை நாவே
மிகவேநீ போற்றிப் புகல்.



புகல் - 1) சரண்; 2) சொல்; கூறு;



2009-02-28
58) அகல்
--------------
அகலாகச் சிந்தையை ஆக்கியன்பை ஏற்றும்
தகவிலார் தம்மை அகல்.



அகல் - 1) விளக்குத் தகழி (Hollow earthen lamp); 2) "நீங்கு" என்ற ஏவல் வினை; (அகல்தல் - நீங்குதல்);
தகவு இலார் - குணம் இல்லாதவர்கள்;



59) பொடி
--------------
பொடியணிந்த முக்கண்ணன் சேவடியைப் போற்றும்
அடியார் வினைஆம் பொடி



பொடி - திருநீறு; சாம்பல்;
பொடியாதல் - அழிதல்;



60) அறு
-----------
அறுமுகத்தன் தாதையை அன்பினால் போற்றிச்
செறுதீ வினையை அறு



அறு - 1) ஆறு; 2) அழி; நீக்கு;
தாதை - தந்தை;
செறு தீவினை - நம்மை வருத்துகின்ற தீய வினைகள்; (செறுதல் - வருத்துதல்);



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment