Monday, July 28, 2025

V.051 - தீயா நீடு மான் - மாலைமாற்று

2018-03-15

V.051 - தீயா நீடு மான் - மாலைமாற்று

---------------------------------

(குறள்வெண்செந்துறை) (மாலைமாற்று - Palindrome)


தீயா நீடு மானாவாய் மாதுவாமா

மாவாது மாய்வானா மாடு நீயாதீ.


பதம் பிரித்து:

தீயா நீடு மான் ஆவாய்; மாது வாமா;

மா வாது மாய் வானா; மாடு நீ, ஆதீ.


தீயா நீடு மான் ஆவாய் - ஜோதியாகி உயர்ந்த தலைவன் ஆனவனே; (தீயா - தீயாகி; "தீயா = தீயனே = தீயை ஏந்தியவனே" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (நீடுதல் - நீளுதல்); (மான் - பெரியோன்);

மாது வாமா - இடப்பக்கம் பெண் ஆனவனே; (வாமம் - இடப்பக்கம்);

"… நீடு மான் ஆவாய் மாது வாமா" - "ஆவாய்" என்பதை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, "நீடு மான் ஆவாய், ஆவாய் மாது, வாமா" என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்; (வாமன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று); (அப்பர் தேவாரம் - 6.22.2 - "பெண்ணானை ஆணானைப் பேடியானை"); (அப்பர் தேவாரம் - 4.37.2 - "நெய்த்தானம் என்னும் செறிபொழிற் கோயில் மேய வாமனை");

மா வாது மாய் வானா - (அரி பிரமன் செய்த) பெரிய வாதினை முற்றுவித்த வானனே; (வானன் - பரமாகாசம் எனப்படும் சிவலோகத்துள்ளான்; ஆகாயத்தை வடிவாகக் கொண்டவன் என்றும் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 5.4.2 - "வானனைம் மதி சூடிய மைந்தனைத்"); (அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்");

மாடு நீ, ஆதீ - ஆதியே, நீயே செல்வம்! (மாடு - செல்வம்); (அப்பர் தேவாரம் - 4.63.3 - "நின் பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே"); (திருவாசகம் - அதிசயப் பத்து - 8.26.1 - "வைப்பு மாடென்று");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.050 - ஆள் ஆகு - மாலைமாற்று

2018-03-06

V.050 - ஆள் ஆகு - மாலைமாற்று

---------------------------------

(குறள்வெண்செந்துறை) (மாலைமாற்று - Palindrome)


கேளா யாதி யோரை பேணு தாயனா

னாய தாணு பேரை யோதி யாளாகே.


பதம் பிரித்து:

கேளாய்; ஆதி, ஓர் ஐ, பேணு தாய் அனான்

ஆய தாணு பேரை ஓதி ஆள் ஆகே.


(மனமே! என் சொல்லை) நீ கேட்பாயாக; ஆதியும், ஒப்பற்ற தலைவனும், நம்மைப் பேணுகின்ற தாய் போன்றவனும் ஆன தாணுவின் திருநாமத்தை ஓதி அப்பெருமானுக்குத் தொண்டன் ஆவாயாக;


ஓர் - ஒப்பற்ற;

– தலைவன்;

பேணுதல் - பாதுகாத்தல்; போற்றுதல்;

அனான் - அன்னான் - அன்னவன் - ஒத்தவன்;

தாணு - சிவன் திருநாமங்களுள் ஒன்று - (தாணு = நிலையானது; மலை; தூண்);

ஆள் - தொண்டன்; அடிமை;

ஆகுதல் - ஆதல்;

- ஈற்றசை;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.426 - நாவலூர் - மல்லாரெண் தோளனை

2018-03-05

P.426 - நாவலூர்

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்காய் கூவிளம் கூவிளம் கூவிளம் - வாய்பாடு;

கட்டளை அடிகள். திருக்குறுந்தொகை போல் 2-3-4 சீர்களிடையே வெண்டளை அமையும். விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 2.16.1 - "அயிலாரும் அம்பதனால்")

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;


1)

மல்லாரெண் தோளனை மேரு மலையென்னும்

வில்லானைத் தாள்தொழு பத்தர் வினைதீர்க்கும்

நல்லானை நான்மறை நாவனை நாவலூர்

வல்லானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே.


மல் ஆர் எண்-தோளனை - வலிமை மிக்க எட்டுப் புஜங்கள் உடையவனை; (மல் - வலிமை); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்);

மேருமலை என்னும் வில்லானைத் - மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

தாள் தொழு பத்தர் வினை தீர்க்கும் நல்லானை - தன் திருவடியை வழிபடும் பக்தர்களது வினைகளைத் தீர்க்கும் நல்லவனை;

நான்மறை நாவனை - நான்கு வேதங்களையும் பாடியருளியவனை;

நாவலூர் வல்லானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே - திருநாவலூரில் உறைகின்ற வல்லவனை, என் பேதைமனமே, தினமும் வாழ்த்துவாயாக;


2)

மறையாரும் நாவனை நஞ்சை மகிழ்ந்துண்டு

கறையாரும் கண்டனைக் கண்ணிற் கனலானை

நறையாரும் கொன்றையந் தாரனை நாவலூர்

உறைவானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே.


மறை ஆரும் நாவனை - வேதங்களைப் பாடியருளியவனை;

நஞ்சை மகிழ்ந்து உண்டு கறை ஆரும் கண்டனைக் - ஆலகாலத்தை விரும்பி உண்டு கறை அணிந்த நீலகண்டனை;

கண்ணில் கனலானை - தீயை உமிழும் நெற்றிக்கண் உடையவனை;

நறை ஆரும் கொன்றையந் தாரனை - மணம் கமழும் கொன்றைமாலையை அணிந்தவனை;

நாவலூர் உறைவானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே - திருநாவலூரில் உறைகின்ற பெருமானை, என் பேதைமனமே, தினமும் வாழ்த்துவாயாக;


3)

இட(ம்)மாது பங்கெனக் காட்டும் எழிலானைப்

படமாடு பாம்பணி கோனைப் படுகாட்டில்

நடமாடு செம்பொற் கழலனை நாவலூர்

இடமாக நின்றானை எண்ணு மடநெஞ்சே.


இடம் மாது பங்கு எனக் காட்டும் எழிலானைப் - இடப்பக்கம் உமையை ஒரு பங்காகக் காட்டும் அழகனை;

படம் ஆடு பாம்பு அணி கோனைப் - நாகப்பாம்பை அணிகின்ற அரசனை; (படம் - பாம்பின் படம்);

படுகாட்டில் நடம் ஆடு செம்பொற்-கழலனை - சுடுகாட்டில் கூத்தாடும் அழகிய சிவந்த கழல் அணிந்த திருவடி உடையவனை; (படுகாடு - சுடுகாடு);

நாவலூர் இடமாக நின்றானை எண்ணு மடநெஞ்சே - திருநாவலூரில் நீங்காமல் உறைகின்ற பெருமானை, என் பேதைமனமே, எண்ணுவாயாக;


4)

எரியோர்கை ஏந்தியைப் பிச்சை இடுமென்று

திரிவானை முப்புரம் செற்ற சிலையானை

நரியாரும் காட்டினிற் கூத்தனை நாவலூர்

பிரியாத ஈசனைப் பேணு மடநெஞ்சே.


எரி ஓர் கை ஏந்தியைப் - ஒரு கையில் நெருப்பை ஏந்தியவனை;

"பிச்சை இடும்" என்று திரிவானை - "பிச்சை இடுங்கள்" என்று திரிபவனை;

முப்புரம் செற்ற சிலையானை - முப்புரங்களை அழித்த வில்லை ஏந்தியவனை; ( செறுதல் - அழித்தல்); (சிலை - வில்);

நரி ஆரும் காட்டினில் கூத்தனை - நரிகள் உலவும் சுடுகாட்டில் கூத்து ஆடுபவனை;

நாவலூர் பிரியாத ஈசனைப் பேணு மடநெஞ்சே - திருநாவலூரில் நீங்காமல் உறைகின்ற பெருமானை, என் பேதைமனமே, போற்றுவாயாக;


5)

ஆரூரர் தம்மையொர் ஆவணத் தாலாண்டு

பேரூர்முன் பித்தன் எனச்சொல் பெருமானை

நாரூறும் நெஞ்சினர்க் கன்பனை நாவலூர்க்

காரூரும் கண்டனைக் காதல்செய் நன்னெஞ்சே.


ஆரூரர்தம்மை ஒர் ஆவணத்தால் ஆண்டு - சுந்தரமூர்த்தி நாயனாரை ஓர் அடிமைப்பத்திரத்தைக் காட்டி ஆட்கொண்டு; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்); (ஆவணம் - உரிமைப்பத்திரம்);

பேர் ஊர்முன் பித்தன் எனச் சொல் பெருமானை - ஊரார்கள்முன் தன் பெயரைப் பித்தன் என்று சொன்ன பெருமானை;

நார் ஊறும் நெஞ்சினர்க்கு அன்பனை - அன்பு ஊறும் மனம் உடையவர்களுக்கு அன்பு உடையவனை; (நார் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.41.11 - "நார் மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்");

நாவலூர்க் கார் ஊரும் கண்டனைக் காதல்செய் நன்னெஞ்சே - திருநாவலூரில் உறைகின்ற நீலகண்டனை, என் நல்ல மனமே, அன்புசெய்வாயாக; (கார் - கருமை);


6)

மேகத்தின் வண்ணம் மிடற்றில் உடையானை

ஆகத்தில் நீறணி ஆரழல் அன்னானை

நாகத்தார் மார்பனை நாவலூர் நாதனைப்

பாகத்தோர் மாதுடை யானைப் பணிநெஞ்சே.


மேகத்தின் வண்ணம் மிடற்றில் உடையானை - மேகத்தின் நிறத்தைக் கண்டத்தில் உடையவனை; (மிடறு - கண்டம்);

ஆகத்தில் நீறு அணி ஆர் அழல் அன்னானை - திருமேனியில் திருநீற்றை அணிந்த அரிய தீப் போன்றவனை; (ஆகம் - உடல்); (அழல் - நெருப்பு);

நாகத்தார் மார்பனை - பாம்பை மார்பில் மாலையாகப் பூண்டவனை; (தார் - மாலை);

நாவலூர் நாதனைப் - திருநாவலூரில் உறைகின்ற தலைவனை;

பாகத்து ஓர் மாது உடையானைப் பணி நெஞ்சே - உமையை ஒரு பாகத்தில் உடையவனை, மனமே, வழிபடுவாயாக;


7)

வஞ்சஞ்செய் ஐம்புலன் வென்றவர் மார்க்கண்டர்

அஞ்சும்போ தாருயிர் காத்தருள் அண்ணலை

நஞ்சுண்ட கண்டனை நாவலூர் நாதனைத்

தஞ்சென்று சார்ந்து தமியறு நன்னெஞ்சே.


வஞ்சம் செய் ஐம்புலன் வென்றவர் - வஞ்சனை செய்யும் ஐந்து புலன்களையும் வென்றவரான;

மார்க்கண்டர் அஞ்சும்போது ஆர்-உயிர் காத்து அருள் அண்ணலை - மார்க்கண்டேயர் (காலன் வரவால்) அஞ்சியபொழுது, (காலனை உதைத்து) மார்க்கண்டேயரது அரிய உயிரைக் காத்து அருளிய பெருமானை;

நஞ்சு உண்ட கண்டனை - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை;

நாவலூர் நாதனைத் - திருநாவலூரில் உறைகின்ற தலைவனை;

தஞ்சு என்று சார்ந்து தமி அறு நன்னெஞ்சே - தஞ்சம் அடைந்து, நல்ல மனமே, உன் கதியின்மை தீர்வாயாக; (தமி - தனிமை; கதியின்மை); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்; நீக்குதல்);


8)

வரைவீச வந்தவன் வாய்கள் அழவூன்று

விரலானை ஆனை உரித்த விறலானை

நரையாரும் ஏற்றனை நாவலூர் நாதனைத்

திரையாரும் ஆற்றனைச் சிந்தி மடநெஞ்சே.


வரை வீச வந்தவன் வாய்கள் அழ ஊன்று விரலானை - கயிலைமலையை எறிய வந்த இராவணனது பத்து-வாய்களும் அழும்படி ஒரு விரலை ஊன்றியவனை;

ஆனை உரித்த விறலானை - எதிர்த்துப் போர்செய்த யானையின் தோலை உரித்த வீரனை; (விறல் - வலிமை; ஆற்றல்; வீரம்);

நரை ஆரும் ஏற்றனை - வெண்ணிறம் உடைய இடபத்தை வாகனமாக உடையவனை; (நரை - வெண்மை);

நாவலூர் நாதனைத் - திருநாவலூரில் உறைகின்ற தலைவனை;

திரை ஆரும் ஆற்றனைச் சிந்தி மடநெஞ்சே - அலை மிக்க கங்கையைச் சடையில் உடைய பெருமானைப், பேதைமனமே, சிந்திப்பாயாக; (திரை - அலை);


9)

அக்கால(ம்) மாலயன் நேட அழலாகி

மிக்கானை மேவலர் முப்புரம் வெந்திட

நக்கானை ஆவணத் தோடணி நாவலூர்ப்

புக்கானை நாள்தொறும் போற்றிப் புகழ்நெஞ்சே.


அக்காலம் மால் அயன் நேட அழல் ஆகி மிக்கானை - முற்காலத்தில் திருமாலும் பிரமனும் தேடும்படி எல்லையற்ற ஜோதியாகி நீண்டவனை; (நேடுதல் - தேடுதல்); (அழல் - தீ);

மேவலர் முப்புரம் வெந்திட நக்கானை - பகைத்த அசுரர்களது முப்புரங்களும் எரிந்து அழியும்படி சிரித்தவனை; (மேவலர் - பகைவர்); (நகுதல் - சிரித்தல்);

ஆவணத்தோடு அணி நாவலூர்ப் புக்கானை - (சுந்தரரை அடிமை என்று ஆட்கொள்ள) ஓர் உரிமைப்பத்திரத்தோடு அழகிய திருநாவலூரின்கண் வந்தடைந்தவனை; (ஆவணம் - உரிமைப்பத்திரம்);

நாள்தொறும் போற்றிப் புகழ் நெஞ்சே - தினமும் போற்றித் துதி மனமே;


10)

அஞ்சாது பொய்யுரை அற்பர்க் கருளானைப்

பஞ்சாரும் மெல்லடிப் பாவையோர் பங்கனை

நஞ்சாரும் கண்டனை நாவலூர் நாதனைத்

துஞ்சாத சோதியை நித்தல் துதிநெஞ்சே.


அஞ்சாது பொய் உரை அற்பர்க்கு அருளானைப் - கூசாமல் பொய்களையே பேசும் ஈனர்களுக்கு அருள் இல்லாதவனை;

பஞ்சு ஆரும் மெல்லடிப் பாவை ஓர் பங்கனை - பஞ்சு போன்ற மென்மையான பாதத்தை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனை; (ஆர்தல் - ஒத்தல்);

நஞ்சு ஆரும் கண்டனை - ஆலகாலத்தை உண்ட (/அணிந்த) நீலகண்டனை; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);

நாவலூர் நாதனைத் - திருநாவலூரில் உறைகின்ற தலைவனை;

துஞ்சாத சோதியை நித்தல் துதி நெஞ்சே - இறப்பு இல்லாதவனும் ஒளிவடிவினனுமான சிவபெருமானைத் தினமும், மனமே, துதிப்பாயாக; (துஞ்சுதல் - இறத்தல்); (நித்தல் - தினமும்);


11)

கண்ணாரும் நெற்றிக் கடவுளைக் கார்க்குழற்

பெண்ணாரும் பாகனைப் பேணிற் பெருந்துன்பம்

நண்ணாமை தந்தருள் நாவலூர் நாதனைப்

பண்ணாரும் நற்றமிழ் பாடிப் பணிநெஞ்சே.


கண் ஆரும் நெற்றிக் கடவுளைக் - நெற்றிக்கண்ணனை;

கார்க்குழல் பெண் ஆரும் பாகனைப் - மேகம் போன்ற கரிய கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனை; (கார் - மேகம்; கார்க்குழல் – உவமைத்தொகை - மேகம் போன்ற கரிய கூந்தல்);

பேணில் பெரும்-துன்பம் நண்ணாமை தந்து-அருள் நாவலூர் நாதனைப் - போற்றிடும் அன்பர்களுக்குப் பிறவிப்பிணியாகிய பெரிய துன்பத்தைத் தீர்த்தருளும் திருநாவலூர்ப் பெருமானை; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்);

பண் ஆரும் நற்றமிழ் பாடிப் பணி நெஞ்சே - பண் பொருந்திய நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடி, மனமே, வழிபடுவாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, July 15, 2025

P.425 - செங்கோடு (திருச்செங்கோடு) - பூவினால் நறுந்தூபத்தால்

2018-02-28

P.425 - செங்கோடு (திருச்செங்கோடு)

(தேவாரத்தில் - கொடிமாடச் செங்குன்றூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


முற்குறிப்பு - இப்பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கூறப்பெறுகின்றது.


1)

பூவினால் நறுந்தூ பத்தால் .. புனலினால் புரைதீர் செஞ்சொற்

பாவினால் போற்றும் அன்பர் .. பழவினை தீர்க்கும் பண்பன்

ஏவினால் முப்பு ரங்கள் .. எய்தவன் ஏற தேறி

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பூவினால், றுந்-தூபத்தால், புனலினால், - பூக்களாலும் நறும்புகையினாலும், நீராலும்;

புரை தீர் செஞ்சொல் பாவினால் போற்றும் அன்பர் பழவினை தீர்க்கும் பண்பன் - குற்றமற்ற செந்தமிழ்ப் பாமாலைகளாலும் வழிபடும் அடியவர்களது பழைய வினைகளைத் தீர்க்கின்ற பண்பு உடையவன்; (புரை - குற்றம்);

ஏவினால் முப்புரங்கள் எய்தவன் - ஓர் அம்பினால் முப்புரங்களை எய்தவன்; (ஏ – அம்பு);

து ஏறி - இடபவாகனன்; (ஏறு - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி);

தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சேண் - உயரம்; ஆகாயம்);


2)

கல்வியின் பயன றிந்து .. கற்றவர் போற்றும் ஈசன்

சொல்விர(வு) இன்த மிழ்ப்பாச் .. சொல்லிய தொண்டர் தம்மை

வல்வினை தொடரா வண்ணம் .. மகிழ்ந்தருள் செய்ம்மா தேவன்

செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


கல்வியின் பயன் அறிந்து கற்றவர் போற்றும் ஈசன் - ;

சொல் விரவு இன்-தமிழ்ப்-பாச் சொல்லிய தொண்டர்-தம்மை - செஞ்சொற்கள் பொருந்திய இனிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வழிபடும் தொண்டர்களை;

வல்வினை தொடரா-வண்ணம் மகிழ்ந்துஅருள் செய்ம் மாதேவன் - வலிய வினைகள் தொடராதபடி இன்னருள் செய்யும் மகாதேவன்; (செய்ம்மாதேவன் - புணர்ச்சியில் மகரஒற்று மிகும்);

செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


3)

வாயினில் நூலைக் கொண்டு .. வலையொரு சிலந்தி பின்ன

மாயிரு ஞாலம் ஆளும் .. மன்னவன் ஆக்கும் எந்தை

தாயினும் நல்லன் கையில் .. தழல்மழு சூலம் ஏந்தி

சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வாயினில் நூலைக் கொண்டு வலை ஒரு சிலந்தி பின்ன(திருவானைக்காவில்) ஒரு சிலந்தி தன் வாய்நூலால் வலை பின்னி ஈசனை வழிபடவும்;

மாயிருஞாலம் ஆளும் மன்னவன் ஆக்கும் எந்தை - இந்தப் பெரிய நிலவுலகை ஆளும் சோழமன்னன் ஆக்கிய எம் தந்தை; (அப்பர் தேவாரம் - 4.56.1 - "மாயிரு ஞாலமெல்லா(ம்) மலரடி வணங்கும்"); (* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

தாயினும் நல்லன் - தாயைவிட நல்லவன்;

கையில் தழல் மழு சூலம் ஏந்தி - கையில் தீ, மழு, சூலாயுதம் இவற்றையெல்லாம் ஏந்தியவன்;

சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


4)

வருந்திய வானோர் வந்து .. மலரடி வாழ்த்த நஞ்சை

அருந்திய கண்டன் நால்வர்க்(கு) .. அருமறை விரிக்க ஆல்கீழ்

இருந்தவன் ஓடொன் றேந்தி .. இரந்தவன் இமவான் பெற்ற

திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வருந்திய வானோர் வந்து மலரடி வாழ்த்த நஞ்சை அருந்திய கண்டன் - வருந்தி வந்து திருவடியை வழிபட்ட தேவர்கள் உய்ய ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;

நால்வர்க்கு அருமறை விரிக்க ஆல்கீழ் இருந்தவன் - சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்தவன்;

ஓடு ஒன்று ஏந்தி இரந்தவன் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்றவன்;

இமவான் பெற்ற திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் பெண்ணான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


5)

மலைதனை ஒருவில் லாக்கி .. மாற்றலர் புர(ம்)மூன் றெய்தான்

தலைமலி மாலை தன்னைத் .. தலைக்கணி தலைவன் ஆர்க்கும்

அலைமலி கங்கை தன்னை .. அஞ்சடை அடைத்த அண்ணல்

சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


மலைதனை ஒரு வில் ஆக்கி, மாற்றலர் புரம்-மூன்று எய்தான் - மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (மாற்றலர் - பகைவர்);

தலை மலி மாலைதன்னைத் தலைக்கு அணி தலைவன் - தலைக்குத் தலைமாலை அணிந்த தலைவன்;

ஆர்க்கும் அலை மலி கங்கைதன்னை அஞ்சடை அடைத்த அண்ணல் - ஒலிக்கின்ற அலைகள் மிக்க கங்கையை அழகிய சடையில் அடைத்த அண்ணல்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);

சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை); (திருப்புகழ் - திருத்தணிகை - "கலைமடவார்தம் .. .. சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்");


6)

வாவியார் பங்க யம்போல் .. மலர்விழி மாலிட் டேத்த

ஓவிலா வென்றி ஆழி .. உகந்தருள் பெம்மான் கொக்கின்

தூவியார் சென்னித் தூயன் .. சுரும்பினம் அமரும் ஓதித்

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வாவி ஆர் பங்கயம்போல் மலர்விழி மால் இட்டு ஏத்த - குளத்தில் திகழும் தாமரைப்பூப் போலத் தன் மலர்க்கண்ணை இடந்து பூவாகத் திருவடியில் இட்டுத் திருமால் வழிபாடு செய்ய;

ஓவு இலா வென்றி ஆழி உகந்துஅருள் பெம்மான் - நீங்குதல் இல்லாத வெற்றியுடைய சக்கராயுதத்தை அருளிய பெருமான்; (ஓவு - நீங்குதல்; முடிதல்); (வென்றி - வெற்றி); (சம்பந்தர் தேவாரம் - 3.116.5 - "ஓவிலாதிடுங் கரணமே");

கொக்கின் தூவி ஆர் சென்னித் தூயன் - கொக்கின் இறகைத் திருமுடிமேல் சூடிய தூயவன்; (தூவி - இறகு); (கொக்கிறகு - ஒரு பூ; குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

சுரும்பு-இனம் அமரும் ஓதித் தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (ஓதி - பெண்களின் கூந்தல்; ஓதித் தேவி - ஓதியை உடைய தேவி); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின"); (பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 12.28.669 - "தெள்ளு நீர்விழித் தெரிவையார்")


7)

வில்விச யனுக்கு நல்க .. வேடனாய்ச் சென்ற வேந்தன்

வெல்விடை யான்வன் தொண்டர் .. வேண்டவும் ஆரூர் தன்னில்

நெல்விசும்(பு) அணாவத் தந்த .. நீர்மையன் மலையான் பெற்ற

செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வில்விசயனுக்கு நல்க வேடனாய்ச் சென்ற வேந்தன் - வில்வித்தையில் சிறந்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்வதற்கு ஒரு வேடன் உருவில் சென்ற வேந்தன்;

வெல்விடையான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

வன்தொண்டர் வேண்டவும் ஆரூர் தன்னில் நெல் விசும்பு அணாவத் தந்த நீர்மையன் - வன்தொண்டர் (சுந்தரர்) வேண்டியபடி திருவாரூரில் வானளாவ நெல்லைத் தந்தருளியவன்; (அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்); (நீர்மை - தன்மை; சௌலப்பியம்); (* சுந்தரருக்குக் குண்டையூரில் நெல்மலை அளித்துப் பின் அவர் வேண்டியபடி ஈசன் அந்த நெல்மலையைத் திருவாரூரில் ஈந்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

மலையான் பெற்ற செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் மகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


8)

போயிரு வரையி டந்தான் .. பொன்முடி பத்த டர்த்து

வாயிரும் புகழைப் பாட .. வாளொடு நாளும் ஈந்தான்

ஆயிரம் பெயர்கள் உள்ளான் .. அரையினிற் புலியின் தோலன்

சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


போய் இரு-வரை இடந்தான் பொன்முடி பத்து அடர்த்து - சென்று பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கி; (இருமை - பெருமை); (இடத்தல் - பெயர்த்தல்);

வாய் இரும்-புகழைப் பாட, வாளொடு நாளும் ஈந்தான் - (பின் இராவணனது) வாய்கள் ஈசனது பெரும்புகழைப் பாடவும் கேட்டு இரங்கி, அவனுக்கு வாளும் நீண்ட ஆயுளும் கொடுத்தவன்;

ஆயிரம் பெயர்கள் உள்ளான் - ஆயிரம் திருநாமங்கள் உடையவன்;

அரையினில் புலியின் தோலன் - அரையில் புலித்தோலைக் கட்டியவன்;

சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


9)

பெருந்தொடர் வாது செய்த .. பிரமனு(ம்) மாலு(ம்) நேட

அருந்தழல் ஆனான் போற்றி .. அடைமணி வாச கர்க்குக்

குருந்தமர் குரவன் ஆனான் .. கொடியன மென்ம ருங்குல்

திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பெரும்-தொடர்-வாது செய்த பிரமனும் மாலும் நேட அரும் தழல் ஆனான் - தொடர்ந்து மிகவும் வாது செய்த பிரமனும் திருமாலும் தேடுமாறு, அவர்களால் அறிவதற்கு அரிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்);

போற்றி அடை மணிவாசகர்க்குக் குருந்து அமர் குரவன் ஆனான் - வணங்கி அடைந்த மாணிக்கவாசகருக்குக் குருந்தமரத்தின்கீழ்க் குரு ஆனவன்; (குரவன் - குரு);

கொடி அன மென் மருங்குல் திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - கொடி போன்ற மெல்லிய இடையை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (அன – அன்ன – ஒத்த); (மருங்குல் - இடை);


10)

பலபல பொய்கள் சொல்லிப் .. படுகுழித் தள்ளப் பார்க்கும்

கலதிகட் கெட்டா எந்தை .. கண்ணுதல் கழலை வாழ்த்தி

வலம்வரும் அன்பர்க் கின்பம் .. மல்கிட அருளும் வள்ளல்

சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பலபல பொய்கள் சொல்லிப், டுகுழித் தள்ளப் பார்க்கும் கலதிகட்கு எட்டா எந்தை கண்ணுதல் - பல பொய்களைச் சொல்லிப், (புன்னெறி என்ற) படுகுழியில் மக்களைத் தள்ள முயல்கின்ற தீயோருக்கு எட்டாதவன் நெற்றிக்கண்ணனான எம் தந்தை; (கலதி - தீக்குணம் உடையவன்);

கழலை வாழ்த்தி வலம்வரும் அன்பர்க்கு இன்பம் மல்கிட அருளும் வள்ளல் - திருவடியைப் போற்றிப் பிரதட்சிணம் செய்து வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் பொங்குமாறு அருள்கின்ற வள்ளல் அவன்;

சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை);


11)

நாவினால் அஞ்செ ழுத்தை .. நாள்தொறும் நவிலும் அன்பர்

தீவினை ஆன தீர்த்துத் .. திருவருள் செய்யும் தேவன்

சேவினை விரும்பி ஏறி .. செங்கயல் அன்ன கண்ணி

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


நாவினால் அஞ்செழுத்தை நாள்தொறும் நவிலும் அன்பர் தீவினை ஆன தீர்த்துத் திருவருள் செய்யும் தேவன் - தங்கள் நாக்கால் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் அடியவர்களது பாவங்களையெல்லாம் தீர்த்து இன்னருள் செய்யும் இறைவன்; (நவில்தல் - சொல்லுதல்);

சேவினை விரும்பி ஏறி - இடபவாகனத்தை விரும்பியவன்; (ஏறி - ஏறுபவன்);

செங்கயல் அன்ன கண்ணி தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - செங்கயல்மீன் போன்ற கண்களை உடையவளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.424 - நணா (பவானி) - விற்படை ஏந்தி

2018-02-28

P.424 - நணா (பவானி)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


1)

விற்படை ஏந்திச் சென்று விசயனுக் கருள்செய் வேடர்

கற்சிலை கையில் ஏந்திக் கடியரண் மூன்றும் எய்தார்

பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் புலியின் தோலர்

நற்புனற் பொன்னிப் பாங்கர் நணாவுறை நாத னாரே.


விற்படை ஏந்திச் சென்று விசயனுக்கு அருள்செய் வேடர் - வேடன் உருவில் வில்லை ஏந்திப் போய் அர்ஜுனனுக்கு அருளியவர்; (படை - ஆயுதம்);

கற்சிலை கையில் ஏந்திக் கடி-அரண் மூன்றும் எய்தார் - மலையை வில்லாக ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களையும் எய்தவர்; (கல் - மலை); (சிலை - வில்); (கடி - காவல்);

பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் - பொன் போன்ற அழகிய சடையின்மேல் சந்திரனைச் சூடியவர்;

புலியின் தோலர் - புலித்தோலை ஆடையாக அணிந்தவர்;

நற்புனற்-பொன்னிப் பாங்கர் நணா உறை நாதனாரே - நல்ல நீர் மிக்க காவிரியின் பக்கத்தில் திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


2)

குறும்புசெய் நெஞ்ச னாகிக் குறுகிய மதன தாகம்

வெறும்பொடி ஆகு மாறு விழித்தருள் நெற்றிக் கண்ணர்

உறும்பிணி நீக்கி அன்பர்க் குறுதுணை ஆகி நிற்பார்

நறும்பொழில் புடைய ணிந்த நணாவுறை நாத னாரே.


குறும்பு செய் நெஞ்சனாகிக் குறுகிய மதனது ஆகம் வெறும்-பொடி ஆகுமாறு விழித்தருள் நெற்றிக்கண்ணர் - மலர்க்கணையை எய்து விஷமம் செய்ய வந்தடைந்த மன்மதனது உடல் முற்றும் எரிந்து வெறும்-சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவர்; (வெறுமை - கலப்பின்மை);

உறும் பிணி நீக்கி அன்பர்க்கு உறுதுணை ஆகி நிற்பார் - உற்ற பிணியைத் தீர்த்து அடியவர்களுக்கு நல்ல துணை ஆவார்;

நறும்-பொழில் புடை அணிந்த நணா உறை நாதனாரே - வாசமலர்ச் சோலை சூழ்ந்த திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


3)

புதியவர் ஆயின் சாலப் புராதனர் மலர்கள் தூவித்

துதிசெயும் அன்பர்க் கன்பர் சுடலையில் ஆடும் பாதர்

மதியுடன் நாகப் பாம்பு வாழ்சடை உடையார் பொன்னி

நதியுடன் பவானி கூடும் நணாவுறை நாத னாரே.


புதியவர், ஆயின் சாலப் புராதனர் - புதியவர், ஆனால் மிகப் பழையவர்;

மலர்கள் தூவித் துதிசெயும் அன்பர்க்கு அன்பர் - பூக்கள் தூவி வழிபடும் பக்தர்களுக்கு அன்பர்;

சுடலையில் ஆடும் பாதர் - சுடுகாட்டில் கூத்தாடும் திருப்பாதம் உடையவர்;

மதியுடன் நாகப்பாம்பு வாழ்சடை உடையார் - சந்திரனோடு நாகப்பாம்பும் வாழும் சடையை உடையவர்;

பொன்னி-நதியுடன் பவானி கூடும் நணா உறை நாதனாரே - காவிரியாறும் பவானி-நதியும் சங்கமிக்கும் திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


4)

ஆரியம் தமிழ்கொண் டேத்தி அடியிணை போற்றி னார்கள்

கோரிய வரங்க ளெல்லாம் கொடுத்தருள் செய்யும் வள்ளல்

ஏரியல் ஆலின் கீழே இருந்தறம் சொன்ன மூர்த்தி

நாரியைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.


ஆரியம் தமிழ்கொண்டு ஏத்தி அடியிணை போற்றினார்கள் கோரிய வரங்களெல்லாம் கொடுத்து அருள்செய்யும் வள்ளல் - வேதமந்திரங்களாலும் தேவாரம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளாலும் போற்றி இரு-திருவடிகளை வழிபட்டவர்கள் வேண்டிய எல்லா வரங்களையும் அளிக்கும் வள்ளல்;

ஏர் இயல் ஆலின் கீழே இருந்து அறம் சொன்ன மூர்த்தி - அழகிய கல்லால-மரத்தின்கீழ் இருந்து வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (ஏர் - அழகு; எழுச்சி);

நாரியைப் பங்கு உகந்து, நணா உறை நாதனாரே - உமையை ஒரு பாகமாக விரும்பித், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


5)

அஞ்செழுத் தோது மாணி ஆருயிர் தன்னைக் காத்து

வெஞ்சினக் கூற்று தைத்த விரைகமழ் கமல பாதர்

அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அருள்பு ரிந்து

நஞ்சினை உண்ட கண்டர் நணாவுறை நாத னாரே.


அஞ்செழுத்து ஓது மாணி ஆருயிர் தன்னைக் காத்து - திருவைந்தெழுத்தை ஓதிய மார்க்கண்டேயரது அரிய உயிரைக் காத்து;

வெஞ்சினக் கூற்று உதைத்த விரைகமழ் கமல-பாதர் - கொடிய சினம் மிக்க நமனை மணம் கமழும் தாமரை போன்ற பாதத்தால் உதைத்தவர்;

அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அருள்புரிந்து - பயந்த தேவர்கள் உய்யும்படி அமுதத்தை அவர்களுக்கு அருள்புரிந்து;

நஞ்சினை உண்ட கண்டர் நணா உறை நாதனாரே - விடத்தை உண்ட நீலகண்டர், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


6)

தரையினில் ஆழி கீறிச் சலந்தரன் தனைத்த டிந்தார்

அரையினில் அரவ நாணர் அழகிய திங்கள் கொன்றை

திரைமத மத்தம் நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர்

நரைவிடைப் பாகர் நன்னீர் நணாவுறை நாத னாரே.


தரையினில் ஆழி கீறிச் சலந்தரன்தனைத் தடிந்தார் - நிலத்தில் ஒரு சக்கரத்தைக் வரைந்து அதுகொண்டு சலந்தரனை அழித்தவர்;

அரையினில் அரவ-நாணர் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர்;

அழகிய திங்கள், கொன்றை, திரை, மதமத்தம், நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர் - அழகிய சந்திரன், கொன்றைமலர், கங்கை, ஊமத்தமலர், பாம்பு இவற்றைச் செஞ்சடையில் செஞ்சடையில் அணிந்த செல்வர்; (திரை - அலை; நதி);

நரைவிடைப் பாகர் நன்னீர் நணா உறை நாதனாரே - வெள்ளை-இடபத்தை ஊர்தியாக உடையவர், நல்ல நீர் மிக்க திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்; (நரை - வெண்மை);


7)

செங்கையில் ஓடொன் றேந்திச் சில்பலிக் குழலும் செல்வர்

கங்குலிற் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர்

சங்கரர் சீறும் பாம்பைத் தாரெனப் பூண்ட மார்பர்

நங்கையைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.


செங்கையில் ஓடு-ஒன்று ஏந்திச் சில்பலிக்கு உழலும் செல்வர் - சிவந்த கரத்தில் பிரமனது மண்டையோட்டை ஏந்திச் சிறிய அளவில் இடும் உணவை ஏற்கத் திரியும் செல்வர்; (சுந்தரர் தேவாரம் - 7.45.5 - "சென்றவன் சில்பலிக்கென்று தெருவிடை");

கங்குலில் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர் - இருளில் பூதகணங்கள் சூழச் சுடுகாட்டில் கூத்தாடுபவர்;

சங்கரர் - நன்மையைச் செய்பவர்;

சீறும் பாம்பைத் தார் எனப் பூண்ட மார்பர் - சீறும் நாகத்தை மாலையாக மார்பில் அணிந்தவர்;

நங்கையைப் பங்கு உகந்து, நணா உறை நாதனாரே - உமையை ஒரு பாகமாக விரும்பித், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


8)

முக்கணர் மலையைப் பத்து முடியுடை அரக்கன் பேர்த்த

அக்கணம் விரலொன் றூன்றி அடர்த்தழ வைத்த ஈசர்

மிக்கிகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர்

நக்கெயில் மூன்றெ ரித்து நணாவுறை நாத னாரே.


முக்கணர் மலையைப் பத்து-முடியுடை அரக்கன் பேர்த்த அக்கணம் விரல்-ஒன்று ஊன்றி அடர்த்து அழவைத்த ஈசர் - முக்கண்ணரான சிவபெருமானார் உறையும் கயிலைமலையைப் பத்துத்தலை அரக்கனான இராவணன் பெயர்த்த அச்சமயத்தில் பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஈசனார்;

மிக்கு இகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர் - செருக்குற்றுச் சிவனாரை இகழ்ந்த தக்கன் செய்த அவவேள்வியை அழித்த வீரர்; (மிகுதல் - செருக்குறுதல்);

நக்கு எயில் மூன்று எரித்து, நணா உறை நாதனாரே - சிரித்து முப்புரங்களை எரித்துத், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


9)

ஆனிரை மேய்த்தான் பூமேல் அயனிவர் மண்ண கழ்ந்தும்

வானிலு யர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி

மானிகர் நோக்கி பங்கர் மார்பினில் நூலர் என்றும்

ஞானியர் நெஞ்சை நீங்கார் நணாவுறை நாத னாரே.


ஆனிரை மேய்த்தான், பூமேல் அயன் இவர் மண் அகழ்ந்தும் வானில் உயர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி - (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்கூட்டத்தை மேய்த்த திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் நிலத்தை அகழ்ந்தும் வானில் பறந்து சென்றும் அடிமுடி தேடி வாடும்படி எல்லையின்றி ஓங்கிய ஒளித்தூண் ஆனவர்; (ஆனிரை - ஆன் நிரை - பசுக்கூட்டம்); (நேடுதல் - தேடுதல்);

மான் நிகர் நோக்கி பங்கர் - மான் போன்ற மருண்ட பார்வையையுடைய உமையைப் பங்கில் உடையவர்;

மார்பினில் நூலர் - மார்பில் பூணூல் அணிந்தவர்;

என்றும் ஞானியர் நெஞ்சை நீங்கார், நணா உறை நாதனாரே - எப்பொழுதும் ஞானியர் நெஞ்சில் நிலைத்தவர், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


10)

புன்னெறி வீணர் சொல்லும் பொய்களில் மதிம யங்கேல்

முன்னறி வாளர் சென்று முத்திய டைந்த அந்தச்

செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார் கட்கு

நன்னெறி காட்டும் நம்பர் நணாவுறை நாத னாரே.


புன்னெறி வீணர் சொல்லும் பொய்களில் மதி மயங்கேல் - சிறுநெறிகளில் செல்லும் வீணர்கள் சொல்லும் பொய்களைக் கேட்டு மயங்கவேண்டா; (வீணர் - பயனற்றோர்);

முன் அறிவாளர் சென்று முத்தி அடைந்த அந்தச் செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார்கட்கு - ஞானம் மிக்க முன்னோர் சென்று முக்தி பெற்றதான சிறந்த வேதநெறியைக் கருதிச், "சிவசிவ" என்று சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு;

நன்னெறி காட்டும் நம்பர் நணா உறை நாதனாரே - நற்கதி கொடுக்கும் பெருமானார், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்; (அப்பர் தேவாரம் - 5.90.2 - "நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே");


11)

பெண்ணினார் ஒருபால் போற்றிப் பெருந்துயர் தீரீர் என்ற

விண்ணினார்க் கிரங்கி அன்று வியன்புரம் மூன்றை நாசம்

பண்ணினார் உள்நெ கிழ்ந்து பண்ணினார் தமிழ்கள் பாடி

நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நணாவுறை நாத னாரே.


பெண்ணினார் ஒருபால் - உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக உடையவர்;

போற்றிப், "பெருந்-துயர் தீரீர்" என்ற விண்ணினார்க்கு இரங்கி அன்று வியன்-புரம்-மூன்றை நாசம் பண்ணினார் - "பெருந்-துன்பத்தைத் தீர்த்து அருளுங்கள்" என்று போற்றி வணங்கிய தேவர்களுக்கு இரங்கி முன்பு பெரிய முப்புரங்களையும் அழித்தவர்; (வியன் - பெருமை);

உள் நெகிழ்ந்து பண்ணின் ஆர் தமிழ்கள் பாடி நண்ணினார் வினைகள் தீர்ப்பார் - மனம் உருகிப் பண்கள் பொருந்திய தேவாரப் பாடல்கள் பாடித் திருவடியைச் சரணடைந்தவர்களது வினைகளைத் தீர்ப்பவர்;

நணா உறை நாதனாரே - திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------